Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
4. குணமாலையார் இலம்பகம் 6. கேமசரியார் இலம்பகம்
முதல் பக்கம் » சீவக சிந்தாமணி
5. பதுமையார் இலம்பகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
03:09

கதைச் சுருக்கம்: இவ்வாறு சுதஞ்சணனோடிருந்த சீவகன் நாடுகள் பலவற்றினுஞ் சென்று ஆங்காங்குள்ள காட்சிகளைக் காணவிரும்பினான். இவ்விருப்பத்தைச் சுதஞ்சணனுக்குக் கூறினன். அதுகேட்ட சுதஞ்சணன் சீவகனுக்கு நெறியின் இயல்பு கூறி மேலும் காமனுங் காமுறப்படும் இன்குரல் தருவதும், பாம்பு முதலியவற்றால் உண்டாகுந் தீங்குகளையும் நோய்களையும் தீர்ப்பதும், கருதிய உடம்பினைத் தருவதுமாகிய மூன்று மறைமொழிகளைச் செவியறிவுறுத்தனன். பின்னர்ச் சீவகனை இனிதினேந்திக்கொண்டு இழிந்து, நிலவுலகில் விடுத்துச் சென்றான். சீவகன் சுதஞ்சணன் கூறிய நெறிபற்றிச் சென்றனன். வழியில் கொலைத்தொழிலை மேற்கொண்டுழன்ற வேடனொருவனைக் கண்டு அவனுக்கு உறுதிமொழிகூறி நன்னெறிப்படுத்தனன். அப்பால் செல்லுங்கால் காட்டுத் தீயால் வளைப்புண்ட யானைத்திரளைக் காப்பாற்றினன். பின்னர் அரணபாதம் என்னும் மலையை எய்தி ஆண்டு அருகக்கடவுளை வணங்கினன். சாரணர்களைக் கண்டு வணங்கினன். பின்னர்ப் பல்லவ நாட்டிலுள்ள சந்திராபம் என்னும் நகரை அடைந்தனன். அந்நகரத்தரசனாகிய தனபதியோடும், அவன் மகனான உலோக பாலனோடும் கேண்மை கொண்டனன். அவ்வரசன் மகளாகிய பதுமை என்பாளைப் பாம்பு தீண்டியதாக, அவளுற்ற விட நோய் தீர்த்து அவளை மணந்தனன். அவளோடு இரண்டு திங்கள் இன்புற்று அந்நகரத்தே வதிந்தனன். பின்னரும் நாடுகாணும் வேட்கை மிகுதலாலே நள்ளிரவிற் பதுமையைப் பிரிந்து வேற்றுருக்கொண்டு அந்நகரத்தினின்றும் புறப்பட்டுச் சென்றனன்.
 
சீவகன் பிரிவால் பதுமை பெரிதும் வருந்தினள். தன் தோழிமாருள் ஒருத்தி தேற்ற ஒருவாறு தேறியிருந்தாள். தனபதி மன்னன் தன் மகள் துயரம் பொறானாய்ச் சீவகனைத் தேடிக்கொணர்தற்குச் சிலரை ஏவினான். அவர்கள் சீவகனையாண்டுந் தேடி ஓரிடத்தே கண்டு நின்போன்ற இளமையும் வடிவுமுடையான் ஓர் ஏந்தலை நீ யாண்டேனும் கண்டதுண்டோ? என்று வினவினர் அதுகேட்ட சீவகன், நண்பரீர்! நீயிர் தேடா நின்ற அக்காதலனை ஒன்பதாந் திங்களிலே காண்பீர்! இவ்வுண்மையை நும் மன்னனுக்குக் கூறுமின்! என்று கூறிவிடுத்தனன். அவரும் சென்று அரசனுக்கு அந்நிகழ்ச்சியினை அறிவுறுத்தனர். சீவகன் பின்னர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டு ஒரு திசையே செல்லா நின்றனன்.

1166. வீட்டருஞ் சிறையிற் றேவன்
விடுத்துயக் கொள்ளப் பட்ட
கோட்டமில் குணத்தி னான்போ
யென்செய்கின் றான்கொ லென்னிற்
கூட்டரக் கெறிந்த பஞ்சிற்
கூடிய பளிங்கிற் றோன்றுந்
தீட்டரும் படிவ மன்னான்
றிறங்கிளந் துரைத்து மன்றே.

பொருள் : வீடு அருஞ் சிறையில் தேவன் விடுத்து உயக்கொள்ளப்பட்ட - எல்லா வழியானும் விடுவித்தற்கரிய சிறையிலிருந்து சுதஞ்சணனால் விடுவித்து வாழ்விக்கப் பெற்ற; கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான் என்னின் - குற்றம் அற்ற பண்புடைய சீவகன் (அவனுடன்) சென்று என்ன செய்கிறான் என்றால்; கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் - செவ்வரக்கு ஊட்டிய பஞ்சினாலே; கூடிய பளிங்கில் தோன்றும் - அப் பளிங்கினிடத்தே தோன்றுகிற; தீட்ட அரும் படிவம் அன்னான் திறம் - எழுதற்கரிய படிவத்தைப் போன்ற சீவகனின் நிலையை; கிளந்து உரைத்தும் - முற்படச் சுதஞ்சணன் செயலையுரைத்துப் பின்னர் உரைப்போம்.
 
விளக்கம் : இந்நிலையினும் ஆசிரியனுக்குரைத்த மொழி தப்பாமையிற் சீவகனைக் கோட்டம் இல் குணத்தினான் என்றார்.  பிறவழிகளால் போக்குதற்கரிய சிறை என்பார் வீட்டருஞ்சிறை என்றார். விடுத்து - விடுவித்து. கோட்டம் - குற்றம், கூட்டு அரக்கெறிந்த பஞ்சு - செல்வரக்குக் கூட்டிய ஊட்டின பஞ்சு என மாற்றுக. பளிங்கைக் கூடிய பஞ்சாலே அப்பளிங்கிடத்தே தோன்றும் படிவத்தை ஒப்பான் - சீவகன். வண்தளிர் என்னும் (1225) செய்யுள்காறும் சுதஞ்சணன் செய்தி கூறப்படும். ( 1 )

1167. விலங்கிவில் லுமிழும் பூணான்
விழுச்சிறைப் பட்ட போழ்து
மலங்கலந் தாரி னான்வந்
தருஞ்சிறை விடுத்த போழ்தும்
புலம்பலு மகிழ்வு நெஞ்சிற்
பொலிதலு மின்றிப் பொன்னார்ந்
துலங்கலந் துயர்ந்த தோளா
னூழ்வினை யென்று விட்டான்.

பொருள் : விலங்கி வில் உமிழும் பூணான் - விட்டுவிட்டொளியைச் சிந்தும் அணிகலன்களையுடைய கட்டியங்காரனின்; விழுச் சிறைப்பட்ட போழ்தும் - சீரிய சிறையிலே அகப்பட்ட காலத்தும்; அலங்கல் அம் தாரினான் வந்து - அசையும் அழகிய மாலையை யுடைய சுதஞ்சணன் போந்து; அருஞ்சிறை விடுத்த போழ்தும் - அரிய சிறையிலிருந்து விடுவித்த காலத்தும்; பொன் ஆர்ந்து உலம் கலந்து உயர்ந்த தோளான் - பொன் அணி நிறைந்து, உருண்ட கல்லென இறுகி உயர்ந்த தோள்களையுடைய சீவகன்; புலம்பலும் மகிழ்வும் நெஞ்சிற் பொலிதலும் இன்றி - வருந்தலும் மகிழ்தலும் உள்ளத்திற் பொருந்துதலுமுண்டாகாமல்; ஊழ்வினை என்று விட்டான் - (இரண்டையும்) பழவினைப் பயன் என்றே கருதி நீக்கிவிட்டான்.

விளக்கம் : அன்னத்தைச் சிறை செய்த பயனாற் கிடைத்ததாகலின் சீரிய சிறை என்றார். பொலிதலும் : உம் இழிவு சிறப்பு. சாரணரும் பின்னர், சிறைப்பட்டனை போலும் (சீவக. 2890) என்றனர். இதனானும் சீவகனுடைய இன்பத்திற்களிக்காமலும் துன்பத்திற்றுளங்காமலும் இருத்தற்குக் காரணமான மெய்யுணர்ச்சி விதந்தோதப் பட்டமையுணர்க. விழுச்சிறை - இடும்பையுடைய சிறை எனினுமாம். விழுமம் சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையும்“ என்பது தொல்காப்பியம் (உரி. 57.) ( 2 )

1168. வானர முகள நாக மலர்துதைந் தொழுக வஞ்சித்
தேனிரைத் தெழுந்து திங்க ளிறாலெனச் சென்று மொய்க்குங்
கானம ரருவிக் குன்றிற் காய்கதிர் சுமந்தோர் திங்கண்
மேனிமிர்ந் தேறி யாங்குத் தேவன்வெற் பேறி னானே.

பொருள் : நாக மலர் துதைந்து ஒழுக - நாக மலர் தம்முள் நெருங்கித் தேன் வாரும்படி; வானரம் உகள - குரங்குகள் பாய்தலின்; தேன் அஞ்சி இரைத்து எழுந்து - வண்டுகள் அஞ்சி ஆரவாரித்து எழுந்து; திங்கள் இறால் எனச் சென்று மொய்க்கும் - திங்களைத் தேனடையென்று மயங்கிப் போய் மொய்க்கும் வளமுடைய; கான் அமர் அருவிக் குன்றில் - காடமைந்த, அருவி வீழும் வெள்ளி மலையிலே; காய்கதிர் சுமந்து ஓர் திங்கள் மேல் நிமிர்ந்து ஏறி யாங்கு - வெம்மையுறும் ஞாயிற்றைச் சுமந்து ஒரு திங்கள் மேலே நிமிர்ந்த ஏறினாற் போல; தேவன் வெற்பு ஏறினான் - சுதஞ்சணன் சீவகனைச் சுமந்து சந்திரோதய மலைமீது ஏறிச் சென்றான்.

விளக்கம் : ஒழுக என்பதற்குத் தேன் எனும் எழுவாயை வருவிக்க. நாகமலர் - சுரபுன்னைப்பூ. துதைந்து - நெருங்கி. இறால் - தேனடை. கான் - காடு. குன்று - ஈண்டு வெள்ளிமலை. சுதஞ்சணனுக்குத் திங்களும் சீவகனுக்கு ஞாயிறும் உவமைகள். ( 3 )

1169. திங்களைத் தெளித்திட் டன்ன
பாற்கடற் றிரைசெய் தெண்ணீர்
வெங்கள்விட் டலர்ந்த கண்ணி
விண்ணவ னுரிமை தன்னான்
மங்கல வகையி னாட்டி
மணியணி கலங்கள் சேர்த்திப்
பங்கய நெடுங்க ணானைப்
பவித்திர குமர னென்றான்.

பொருள் : வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் - விருப்பம் தரும் தேனைச் சொரிந்து மலர்ந்த மாலையணிந்த சுதஞ்சணன்; பங்கய நெடுங்கணானை - தாமரை மலரனைய கண்களையுடைய சீவகனை; திங்களைத் தெளித்திட் டன்ன பால் திரைசெய் கடல் தெள்நீர் - திங்களைக் கரைத்தாற் போன்ற அலையுடைய பாற்கடலிலிருந்து தெளிந்த நீரைக் கொண்டு வந்து; உரிமை தன்னால் மங்கல வகையின் ஆட்டி - உரிமைமகளிரைக் கொண்டு மங்கல விதிப்படி முழுக்காட்டி; மணி அணிகலங்கள் சேர்த்தி - மணிகளிழைத்த அணிகலங்களையும் பூட்டி; பவித்திரகுமரன் என்றான் - தூய மகன் என்ற பாராட்டினான்.

விளக்கம் : சிறைப் பாவம் நீங்கினதாற் பவித்திர குமரன் என்றான். விண்ணவன் - சுதஞ்சணன். உரிமை - மனைவிமார். நெடுங்கணானை - சீவகனை. பவித்திரம் - தூய்மை. ( 4 )

1170. பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும்
பின்னிய முத்த மாலைப் பிணையறாழ் குடையி னீழற்
கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழைவில் வீச
வின்னிசைக் கூத்து நோக்கி யிருந்தனன் றிலக மன்னான்.

பொருள் : பொன் அணி காம்பு செய்த பொழி கதிர்த் திங்கள்போலும் - பொன்னால் ஆக்கிய காம் பொன்றினைச் சேர்த்த, நிலவினைச் சொரியும் திங்களைப் போன்ற; முத்தமாலைப் பின்னியப் பிணையல் தாழ் குடையின் நீழல் - சல்லியும் தூக்குமாக முத்து மாலை பின்னப்பட்ட, மலர்மாலை யணிந்த குடையின் நீழலிலே; கன்னியர் கவரி வீச - கன்னிப் பெண்கள் கவரிகொண்டு வீச; கன மணிக்குழை வில் வீச - பெரிய மணிக்குழை ஒளிவிட; இன் இசைக் கூத்து நோக்கி - இனிய இசையுடன் கூடிய ஒரு நாடகத்தைப் பார்த்து; திலகம் அன்னான் இருந்தனன் - சீவகன் வீற்றிருந்தான்.

விளக்கம் : பொன் அணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள்: இல் பொருளுவமை. சல்லி பின்னிய முத்துமாலை எனக் கொள்க. பிணையல் - ஈண்டுத் தூங்கவிடப் பட்ட முத்தமாலை. இன்னிசைக்கூத்து - இனிய இ சையோடு கூடிய கூத்து. திலகமன்னான் : சீவகன். ( 5 )

1171. இருமலர்க் குவளை யுண்க ணிமைப்பிலாப் பயத்தைப் பெற்ற
வரிமலர்த் தாரி னான்ற னழகுகண் டளிய வென்னாத்
திருமலர்க் கோதை யைம்பாற் றேவியர் தொடர்பு கேட்ப
வெரிமணிப் பூணி னானு மின்னண மியம்பி னானே.

பொருள் : திருமலர்க் கோதை ஐம் பால் தேவியர் - அழகிய மலர்மாலை அணிந்த கூந்தலையுடைய மனைவியர்; இரு மலர்க் குவளை உண்கண் - கரிய குவளை மலரனைய எம் மைதீட்டிய கண்கள்; அரி மலர்த்தாரினான் தன் அழகு கண்டு - வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையினானுடைய அழகினைக் கண்டு; இமைப்பு இலாப் பயத்தைப் பெற்ற . - (இதுவரை) இமையாமல் இருந்த பயனைப் பெற்றன; அளிய என்னா - அளிக்கத் தக்கன என்று முகமன் உரைத்து; தொடர்பு கேட்ப - எங்ஙனம் நட்புண்டாயதென்று வினவ; எரி மணிப் பூணினானும் இன்னணம் இயம்பினான் - ஒளி விடும் மணிக்கலன்கள் அணிந்த சுதஞ்சணனும் இவ்வாறு கூறினான்.

விளக்கம் : இருமை. கருமை - நாய்ப் பிறப்பை மறையாமற் கூறலின் இன்னணம் என்றார். இருங்குவளைமலர் போன்ற உண்கண் என்க. வித்தியாதரர் ஆகலின் கண்ணிமையாதிருந்தன. இதுகாறும் அவை வாளா இமையாதிருந்தன. இமையாமல் நோக்கி மகிழ்தற்குரிய இவன் அழகினை அவை இப்பொழுது இடையறாது நுகர்தலின் இமையாமையின் பயனையும் இப்பொழுது எய்தின என்றவாறு. தொடர்பு - நட்பு. பூணினான் : சுதஞ்சணன். ( 6 )

வேறு

1172. பிணிக்குலத் தகவயிற் பிறந்த நோய்கெடுத்
தணித்தகை யுடம்பெனக் கருளி நோக்கினான்
கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன்
மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினான்.

பொருள் : மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான் - மாணிக்கக் கலத்தில் ஏந்திய அமிர்தம் போன்ற தகவினானான சுதஞ்சணன்; கணிப்பு அருங்குணத் தொகைக் காளை - அளவிடற்கரிய பண்பினையுடைய சீவகன்; பிணிக் குலத்து அகவையின் பிறந்த நோய் கெடுத்து - (நான்) நோய்த் திரளையுடைய விலங்குத் தொகுதியின் அகத்திலே பிறந்த நோயை நீக்கி; அணித்தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான் என்றனன் - அழகினைத் தன்னிடத்தே அடக்கிய தெய்வ வுடம்பை எனக்கு நல்கி இந்நிலையிலேயே பார்த்தான் என்றனன்.

விளக்கம் : பிணிக்குலம் - நோய்த்திரள்; எனவே, விலங்காயிற்று. அந் நோய்க் கெல்லாம் அகம் என்றது நாயை; எரிநீரவே நரகம் அந்நரகத் துன்பத் - தொருநீரவே விலங்கு தாமுடைய துன்பம் (சீவக. 2777) என்பர் மேலும். மணிக்கலத்து அமிர்தென்றார், வடிவிற்குத் தக்க கலங்காத குணம் உண்டாதலின். ( 7 )

1173. கடற்சுற வுயரிய காளை யன்னவ
னடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில
மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாங்
கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார்.

பொருள் : கடல் சுறவு உயரிய காளை அன்னவன் - கடலில் வாழும் சுறாமீனைக் கொடியிற்கொண்ட காமனைப் போன்றவனுக்குற்ற; அடற்கு அரும்பகை கெடுத்து - வெல்லுதற்கரிய பகையைக் கெடுத்து; அகன்ற நீள் நிலம் மடத் தகையவளொடும் வதுவை நாட்டி - பரப்புடைய பெருநிலமாகிய மங்கையை மணம் புரிவித்து; நாம் கொடுக்குவம் என - நாம் கொடுப்போம் என்று; தெய்வ மகளிர் கூறினார் - அவன் மனைவியராகிய தெய்வ மடந்தையர் செப்பினர்.

விளக்கம் : மடத்தகையவளொடும் : ஒடு : இரண்டன் பொருளில் மூன்றன் உருபு வந்ததால் உருபு மயக்கம். உம் : அசை; நிலமகளொடு திருமகளும் என எச்சவும்மையுமாம். ( 8 )

1174. செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக்
கிருநில மியைவதற் கெண்ணல் வேண்டுமோ
திருநிலக் கிழமையுந் தேவர் தேயமுந்
தருநிலத் தெமக்கெனிற் றருகுந் தன்மையீர்.

பொருள் : திருநிலக் கிழமையும் தேவர் தேயமும் நிலத்து எமக்குத் தாரும் எனின் - இன்ப நிலத்துரிமையையும் வானவர் உலகையும் இந்நிலத்தே எமக்குத் தாரும் என்றால்; தருகும் தன்மையீர்! - கொடுக்கும் இயல்புடையீர்!, செருநிலத்து அவன் உயிர் செகுத்து - போர்க் களத்திலே என் எதிரியின் உயிரைப் போக்கி; எனக்கு இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ? - எனக்குப் பெருநிலம் பொருந்துமாறு செய்யச் சிந்தனை செய்யவும் வேண்டுமோ?

(விளக்கம்.) அவனுயிர் செகுத்தல் எளிதென்றான். செகுத்து : செகுப்பேன் என்று தன்மை யொருமை வினைமுற்றாகக் கொள்வதும் பொருந்தும். மற்று : அசை. தாரும் என்பது தரும் எனவும், தரும் என்பது தருகும் எனவும் விகாரமுற்றன. ( 9 )

1175. மண்மிசைக் கிடந்தன மலையுங் கானமு
நண்ணுதற் கரியன நாடும் பொய்கையுங்
கண்மனங் குளிர்ப்பன வாறுங் காண்பதற்
கெண்ணமொன் றுளதெனக் கிலங்கு பூணினாய்.

பொருள் : இலங்கு பூணினாய்! - விளங்கும் அணிகலனுடையாய்!; மண்மிசைக் கிடந்தன - நிலவுலகிலே பரவிக் கிடந்தனவாகிய; நண்ணுதற்கு அரியன - நெருங்குதற்கு இயலாதனவாகிய; மலையும் கானமும் - மலைகளையும் காடுகளையும்; நாடும் பொய்கையும் - நாடுகளையும் பொய்கைகளையும்; கண் மனம் குளிர்ப்பன ஆறும் - கண்ணும் மனமும் குளிர்வனவாகிய ஆறுகளையும்; காண்பதற்கு எண்ணம் ஒன்று எனக்கு உளது - பார்ப்பதற்கு நினைவு ஒன்று எனக்கு உண்டு.

விளக்கம் : மண் - நிலவுலகம். மண்மிசைக் கிடந்தனவாகிய மலையும் கானமும் நாடும் பொய்கையும் ஆறும் என மாறுக. ( 10 )

1176. ஊற்றுநீர்க் கூவலு ளுறையு மீனனார்
வேற்றுநாட தன்சுவை விடுத்தன் மேயினார்
போற்றுநீ போவல்யா னென்று கூறினாற்
காற்றின தமைதியங் கறியக் கூறினான்.

பொருள் : ஊற்று நீர்க் கூவலுள் உறையுள் மீன் அனார் - ஊறும் நீரையுடைய கிணற்றிலே வாழும் மீன் போன்றவர்கள்; வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார் - பிறநாடுகளைக் காணும் இனிமையை விடுத்தவராவார்; நீ போற்று - இவ்விடத்தே நீ பேணி யிரு; யான் போவல் - நான் நாடுகாணச் செல்வேன்; என்று கூறினாற்கு - என்றுரைத்த சீவகனை நோக்கி; ஆற்றினது அமைதி அங்கு அறியக் கூறினான் - நெறியினது நிலைமையை அங்குத் தெரியும்படி கூறினான்.

விளக்கம் : சுதஞ்சணன் உடன்வாரா வண்ணம், போற்று என்றான். கிணற்றில் வாழும் மீன் அந்நீரினுஞ் சிறந்த வேறு நீர் இல்லையென்று அதனையே பெரிது மதித்திருப்பது போலத் தம் ஊரையே மதித்திருப்பார் என்பது. வேற்றுநாடதன்சுவை என்றது பிறநாட்டைக் காணுங்கால் உண்டாகும் இன்பத்தினை. ஆற்றினதமைதி - வழியினது இயல்பு. ( 11 )

வேறு

1177. இம்மலைக் கிரண்டு காத மிறந்தபி னிருண்டு தோன்று
மம்மலை யரண பாத மென்பதன் றாள்வாய்த் தோன்றுந்
தம்வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல்
வெம்மையி னகன்று போந்து விழைவறத் துறந்து விட்டார்.

பொருள் : இம் மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் - இம் மலையிலிருந்து இரண்டு காதம் கடந்த பிறகு; இருண்டு தோன்றும் அம் மலை அரணபாதம் என்ப - இருண்டு காணப்படும் அம் மலையை அரணபாதம் என்பர்; அதன் தாள் வாய் - அதன் அடி மலையிலே; தோன்றும் தம் வினை கழுவுகின்றார் சாரணர் - பிறப்புக்குக் காரணமான தம் இருவினையையும் போக்குகின்றவராகிய சாரணர்; வெம்மையின் தரணிகாவல் அகன்று போந்து - தாம் வீட்டை விரும்புதலின் உலகக் காவலைத் துறந்து வந்து; விழைவு அறத் துறந்துவிட்டார் - பின்னர்ப் பற்றறத் துறந்துவிட்டவர்கள்.

விளக்கம் : அரண பாதம் - அருகன் கோயிலுள்ள மலை இம்மலை என்றது அவர்களிருக்கும் சந்திரோதயம் என்னு மலையை. காதம் - ஓர் அளவு. என்ப என்பதன் ஈற்றகரம் கெட்டு அதன் என்னுஞ் சுட்டோடு கூடி என்பதன் எனப் புணர்ந்து நின்றது. பிறத்தற்கு ஏதுவான தம்முடைய வினை என்க. தோன்றுகின்ற இருவினையையும் என்பர் நச்சினார்க்கினியர். தரணிகாவல் வெம்மையின் அகன்று போந்து என்பதற்கு - காவற்றொழில் வெம்மையுடைமையால் அகன்று போந்து எனினுமாம். விழைவு - அவாவுமாம். ( 12 )

1178. சிந்தையிற் பருதி யன்னார் சேவடி யிறைஞ்ச லோடும்
வெந்திற லியக்கி தோன்றி விருந்தெதிர் கொண்டு பேணித்
தந்தவ ளமிர்த மூட்ட வுண்டவட் பிரிந்த காலைச்
சந்துடைச் சாரல் சேறி தரணிமேற் றிலக மன்னாய்.

பொருள் : தரணிமேல் திலகம் அன்னாய் - நிலவுலகில் திலகம்போலச் சிறப்புற்றோனே!; சிந்தையின் பருதி அன்னார் சேவடி இறைஞ்சலோடும் - மலங்களைப் போக்கும் மனத்தாலே ஞாயிறு போல்வாருடைய சிவந்த அடிகளை வணங்கின அளவிலே; வெம்திறல் இயக்கி தோன்றி - பேராற்றலுடைய இயக்கி எதிர்ப்பட்டு; அவள் எதிர்கொண்டு அமிர்தம் தந்து பேணி ஊட்ட உண்டு - அவள் நின்னை வரவேற்று அமிர்தத்தைத்தந்து ஓம்பி விருந்தூட்ட உண்டு; அவள் பிரிந்த காலை - அவளைப் பிரிந்த அளவிலே; சந்துடைச் சாரல் சேறி - சந்தன மரங்கள் நிறைந்த அம் மலையின் சாரலிலே செல்வாயாக.

விளக்கம் : அமிர்தந் தந்து பேணி ஊட்ட என மாறுக. அமிர்தம் - ஈண்டு உணவிற்கு ஆகுபெயர். சந்து - சந்தனமரம். ( 13 )

வேறு

1179. அங்குநின் றகன்றபி னையைங் காவதம்.
வெங்களி விடுமத வேழப் பேரினந்
தங்கிய காடது தனிச்செல் வாரிலை
கங்கையின் கரையது கடலிற் றோன்றுமே.

பொருள் : அங்கு நின்று அகன்ற பின் - அங்கிருந்து சென்ற பின்பு; ஐ ஐங்காவதம் வெம்களி விடும் மதவேழப் பேரினம் தங்கிய காடு - இருபத்தைங்காதவழி வெவ்விய களிப்பினாலே சொரியும் மதமுடைய களிற்றுப் பெருந்திரள் தங்கிய காடு உளது; கங்கையின் கரையது கடலின் தோன்றும் - கங்கையின் கரையிலுள்ளதாகிய அது கடல்போலத் தோன்றும்; அது தனிச் செல்வார் இலை - அக் காட்டிலே தனியே செல்பவர் இலர்.

விளக்கம் : அக் காட்டிலே சிறப்பாக யானைத் திரளை மட்டுமே கூறினான் சீவகன் அறஞ் செய்தலை நோக்கி; பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான் (சீவக. 1237) என்பர் பின்னர். கடல்போல் தோன்றல காடு இறந்தோரே (அகநா. 1-19) என்றார் பிறரும். ( 14 )

1180. புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை.
வனமது வாளென வாளை பாய்வன
மனமகிழ் பெருந்தடம் வலத்திட் டேகுதி
யினமலர்த் தாரினா யிரண்டு காதமே

பொருள் : இனம் மலர்த்தாரினாய் - இன மலர்களால் ஆன மாலையினை உடையாய்!; புனல் எரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை - நீரிலே எரிதவழ்ந்தாற்போல மலர்ந்த தாமரையை உடையவும்; வாள்என வாளை பாய்வன - வாள்போல வாளைகள் பாய்வனவும் ஆன; மனம் மகிழ் பெருந்தடம் - உள்ளக்களிப்பையூட்டும் பெரிய பொய்கைகளை; வலத்து இட்டு - வலப்பக்கத்தே விடுத்து; வனமது இரண்டு காவதம் ஏகுதி - அக்காட்டிலே இரு காவதம் செல்வாயாக.

விளக்கம் : எனவே அக்காட்டின்கண் வாளைபாயும் தாமரைப் பெருந்தடம் உண்மையும் கூறினனாயிற்று. வேற்று நாட்டதன் சுவையே விரும்பிப்போதலின், தாமரைத் தடத்தெழிலை விதந்தோதினான். ( 15 )

1181. காந்திய மணியொடு வயிரம் பொன்கலந்
தேந்தனின் றோளென விரண்டு குன்றுபோய்ப்
பூந்துகின் மகளிரிற் பொலிந்து போர்த்ததோர்
பேந்தரு பேய்வனம் பெரிய காண்டியே.

(இதன்பொருள்.) காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து - ஒளி செய்யும் மணிகளுடன் வயிரமும் பொன்னும் கொண்டு; ஏந்தல் நின்தோள் என இரண்டு குன்று போய் - ஏந்திய நின்தோள்களைப் போன்ற இரண்டு குன்றுகள் வளரப் பெற்று; பூந்துகில் மகளிரின் பொலிந்து போர்த்தது - பூந்துகில் அணிந்த மகளிரைப் போலப் பேய்கள் பொலிந்து மனத்தை மறைக்கு மியல்புடையதாகிய; ஓர் பெரிய பேந்தரு பேய்வனம் காண்டியே - ஒரு பேரச்சந்தரும் பேய்வனத்தைக் காண்பாயாக.

விளக்கம் : குன்றுபோய் என்புழிப் போகல் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த போய் என்னும் எச்சம் வளர்ந்து என்னும் பொருள் தந்து பின்னும் செயப்பாட்டுவினை எச்சப்பொருள் பயந்து நின்றது. பேம் - அச்சம்.

பேநாம் உரும் என வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள(தொல். உரி. 69)  ( 16 )

1182. இளவெயின் மணிவரை யெறித்திட் டன்னதோ
ரளவரு குங்குமத் தகன்ற மார்பினாய்
களவினி னணிநலங் கவர்ந்த கள்வவென்
றுளர்மணிக் கொம்பனா ருருகி நைபவே.

பொருள் : இளவெயில் மணிவரை எறித்திட் டன்னது - காலை வெயில் மணிவரையிலே வீசியது போன்றதாகிய; ஓர் அளவறு குங்குமத்து அகன்ற மார்பினாய்! - ஒப்பற்ற மிகுதியான குங்குமம் கலந்த பரந்த மார்பினையுடையாய்!; களவினின் அணிநலம் கவர்ந்த கள்வ என்று - களவினிலே அழகையும் நலன்களையும் கவர்ந்த கள்வனே என்று கூறி; உளர் மணிக்கொம்பனார் உருகி நைபவே - அசையும் மணிக்கொடி போன்ற அப் பேய் மகளிர் நின்னைக் கண்டு உருகி வருந்துவார்கள்.

விளக்கம் : மார்பினாய் என்னுந்துணையும் சுதஞ்சணன் சீவகனை விளித்ததாகக் கொள்ளினும் அமையும். அப்பேய்கள் அழகிய மகளிர் உருக்கொண்டு நின்னை இங்ஙனம் மயக்கும் என்பது தோன்ற மணிக் கொம்பனார் என்றான். நைப : பலர் அறிசொல். (17 )

1183. பழங்குழைந் தனையதோர் மெலிவிற் பையென
முழங்கழல் வேட்கையின் முறுகி யூர்தரத்
தழும்பத மிதுவெனச் சார்ந்து புல்லலும்
பிழிந்துயி ருண்டிடும் பேய்க ளாபவே.

பொருள் : முழங்கு அழல் வேட்கையின் - பொங்கும் தீயனைய வேட்கையினாலே; பழம் குழைந்தனையதோர் மெலிவின் - பழங்குழைந்தாற் போன்ற மேனி மெலிவுடன்; பையென முறுகி ஊர்தர - மெல்ல மிகவும் அருகில் நெருங்கினவுடனே; தழும்பதம் இது எனச் சார்ந்து புல்லலும் - தழுவும் காலம் இது என எண்ணித் தழுவியவுடனே; பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆப - உயிரைப் பிழிந்து பருகும் பேய்களாய் விடுவர். (ஆகையால், அப் பேய் மகளிரைத் தழுவற்க.)

விளக்கம் : முறுகி என்றற்கு மிக்கு எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர்; வேட்கையின் முறுகி என இயைத்து முதிர்ந்து எனலுமாம். தழுவும்; தழும் என ஈற்றுயிர் மெய்கெட்டு நின்றது. செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமாகலின். ( 18 )

வேறு

1184. கண்டபேய் நகரி னீங்கிக் காவதங் கடந்து தோன்றும்
வெண்டலைப் புணரி வீசிக் கிடந்தபொற் றீவிற் றாகிக்
கொண்டுலப் பரிய செந்நெல் கொடிக்கரும் புடுத்த வேலி
நுண்டுகி னுழைந்த வல்குற் பவளமொத் தினியதொன்றே.

பொருள் : கண்ட பேய் நகரின் நீக்கிக் காவதம் கடந்து - காணப்பட்ட அப் பேய் நகரினின்றும் நீங்கிக் காவதம் கடந்த அளவிலே; கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடிக் கரும்பு உடுத்த வேலி - அறுத்துத் தொலைத்தற்கரிய செந்நெல்லை, ஒழுங்கினையுடைய கரும்பு சூழ்ந்த வேலி; அல்குல் நுண்துகில் நுழைந்த பவளம் ஒத்து - அல்குலிலே நுண்ணிய துகிலினுள் நுழைந்து கிடந்த பவள மேகலையையும் ஒப்ப; வெண்தலைப் புணரி வீசிக் கிடந்த பொன் தீவிற்று ஆகி - வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த கிடந்த பொற்றீவின் தன்மையுடையதாய்; இனியது ஒன்று தோன்றும் - இனியதொரு நாடு தோன்றும்.

விளக்கம் : கடந்து - கடப்ப : எச்சத்திரிபு. கொடி - ஒழுங்கு. தீவிற்றாகி - தீவின் தன்மைத்தாய் என்க. கொண்டுலப்பரிய என் புழிக்கொண்டு என்பதனைக்கொள எனத் திரிந்துக்கொள்க. தீவிற்றாகி மேலும் அதன்கண் வேலி அல்குற் பவளம் ஒத்தலான் காண்டற்கினியதொன்று என்பது கருத்து. ( 19 )

1185. படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேய மென்னுந்
தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாட்
டிடைநெறி யசைவு தீர விருந்தவ ணேக லுற்றாற்
கடநெறி கடத்தற் கின்னாக் கல்லத ரத்த முண்டே.

பொருள் : படுமழை பருவம் பொய்யா - பெய்யும் மழை காலம் தவறாத; பல்லவ தேயம் என்னும் - பல்லவ நாடு என்னும் பெயரையுடைய; தடம் மலர்க்குவளைப் பட்டம் தழுவியயாணர் நன்னாட்டு - பெரிய குவளை மலர்களையுடைய குளங்கள் பொருந்திய, புது வருவாயுமுடைய அழகிய நாட்டிலே; இடைநெறி அசைவு தீர இருந்து - வழி வருத்தம் நீங்க ஒரு திங்கள் தங்கி; அவண் ஏகல் உற்றால் - அங்கிருந்து மேற்செல்லத் தொடங்கினால்; கடம் நெறி கடத்தற்கு இன்னாக் கல்அதர் அத்தம் உண்டு - காட்டு வழி கடந்து போதற்குப் பொல்லாததொரு கல்வழி உண்டு.

விளக்கம் : பல்லவ தேயத்தில் அசைவு தீர இருந்து என்றதனாற் பதுமையைக் கொள்ளுதலுங் கூறினானாயிற்று. ( 20 )

வேறு

1186. நுதிகொண்டன வெம்பர னுண்ணிலைவேல்
பதிகொண்டு பரந்தன போன்றுளவால்
விதிகண்டவ ரல்லது மீதுசெலார்
வதிகொண்டதொர் வெவ்வழல் வாய்சொலின்வேம்.

பொருள் : வதி கொண்டது ஒர் வெவ்வழல் சொலின் வாய்வேம் - அவ்வழி கொண்டதாகிய ஒப்பற்ற கொடிய அனலைக் கூறின் வாயும் வேகும்; நுதி கொண்டன வெம்பரல் - கூர்மைமையைக் கொண்டனவாகிய கொடிய பரல்கள்; நுண் இலை வேல் பதி கொண்டு பரந்தன போன்று உள - நுண்ணிய இலை முகமுடைய வேல்கள் பதித்தல் கொண்டு பரவின போன்றுள்ளன; விதி கண்டவர் அல்லது மீது செலார் - ஊழ்வினை முற்றி இறத்தற்குரியவர் அல்லது மற்றவர் அவ்வழி செலார்.

விளக்கம் : விதியைப் புறங்கண்ட தபோதனர் மேலேயெழப் பறந்து போவதல்லது வேறு போகார் என்றும் உரைக்கலாம் என்பர் நச்சினார்க்கினியர். ( 21 )

1187. குழவிப்பிடி குஞ்சர மாழ்குமெனத்
தழுவிச்சுடு வெவ்வழ றாங்குவன
கெழுவிப்பெடை யைக்கிளர் சேவறழீஇத்
தொழுதிச்சிற கிற்றுய ராற்றுவன.

பொருள் : குழவிப்பிடி மாழ்கும் என - குழவியையுடைய பிடிகள் மயங்கும் என்றும் கருதி; குஞ்சரம் தழுவி - களிறுகள் அவற்றைத் தழுவி வெப்பத்தைத் தாங்குவன; கிளர் சேவல் பெடையைத் தழீஇ - ஊக்கமுறுஞ் சேவல்கள் தம் பெடையைத் தழுவி; தொழுதிச் சிறகால் துயர் ஆற்றுவன - தம் திரட்சியுறு சிறகினாலே காத்துத் துயரைத் தணிப்பன.

(விளக்கம்.) தழீஇ : சொல்லிசை அளபெடை. குழவி - கன்று, இளமையுமாம். பிடி - பெண்யானை. குஞ்சரம் - ஈண்டுக் களிறு என்னும் பொருட்டு; மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே என்றார் கலியினும் (11-12-13.) ( 22 )

1188. கலையின் பிணை கன்றிடு மென்றுகசிந்
திலையின்னிழ லவ்வயி னின்மையினா
னிலையின்னிழ றானது நின்றுகொடுத்
துலையும்வெயி னின்றுரு கும்முரவோய்

பொருள் : உரவோய்! - அறிஞனே!; இலையின் நிழல் அவ்வயின் இன்மையினான் - இலையுடைய நிழல் அங்கேயில்லாததால்; இன்பிணை கன்றிடும் என்று கசிந்து - தன் இனிய பிணைமான் வருந்தும் என்று மனம் வருந்தி; அது நிலையின் நிழல் நின்று கொடுத்து - அக்கலை தான் நின்று தன்னிலையிற் பிறந்த நிழலை அதற்குக் கொடுத்து; உலையும் வெயில் நின்று உருகும் - வாட்டும் வெயிலில் நின்று உருகும்.

விளக்கம் : வெயில் நின்று உருகும் என்பதை முற்பாட்டிற் குஞ்சரத்திற்கும் சேவலுக்கும் இயைக்க. கலை - ஆண்மான். இன்பிணை - இனிய பெண்மான். கன்றுதல் - வருந்துதல். அவ்வயின் - அப்பாலையின்கண். அக்காட்டில் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே என்றார் கலியினும் (11-16-7) ( 23 )

1189. கடநாக மதங்கலந் துக்கநிலத்
துடைநாணென மின்னென வொண்மணியம்
படநாக மழன்று பதைத்துவரு
மடனாமய லார்மனம் வைப்பதுவே.

பொருள் : கடநாகம் மதம் கலந்து உக்க நிலத்து - மத யானைகளின் மதம் வெம்மை மிகுதியாலே சிறு நீருடனே கலந்து சொரிந்த நிலத்திலே; ஒண்மணி அம் படநாகம் - ஒளிவிடும் மணியையுடைய அழகிய படமுறும் நாகம்; உடை நாண் என மின் என - (ஈரமாக நினைத்து வந்து வீழ்ந்து) முறுக்குவிட்ட கயிறெனவும் மின்கொடி எனவும்; அழன்று பதைத்து வரும் - வெந்து பதைத்துப் போகும்; அயலார் மனம் வைப்பது மடன் ஆம் - (ஆகையால்) விதிகண்டவரல்லது மற்றவர் அந் நெறி செல்லக் கருதுதல் அறியாமையாம்.

விளக்கம் : மதங்கள் கலந்த நிலத்து என்றும் பாடம். ஆகையால், நீயும் அவ்வழி செல்லாதே என்றானாயிற்று. நச்சினார்க்கினியர் 1186 முதல் நான்கு பாட்டையும் ஒரு தொடராக்கி, விதி கண்டவரல்லது மீது செலார் என்பதை இறுதியிற் கூட்டுவர். கடநாகம் - மதயானை; காட்டியானையுமாம். உடைநாண் : வினைத்தொகை; முறுக்குடைந்த கயிறு என்க. அயலார் : விதிகாணாதார். ( 24 )

1190. நெறியிற்றளர் வார்தம நெஞ்சுருகிப்
பொறியிற்றளர் வார்புரி வார்சடையா
ரறிமற்றவர் தாபத ரவ்வழியார்
கறைமுற்றிய காமரு வேலவனே.

பொருள் : கறை முற்றிய காமரு வேலவனே! - குருதிக்கறை முற்றிய விருப்பூட்டும் வேலவனே!; நெறியின் தளர்வார் - நன்னெறியிலிருந்து விலகியவரும்; தம் நெஞ்சு உருகிப் பொறியின் தளர்வார் - தம் உள்ளம் நெகிழ்ந்து ஐம்பொறிகளினாலே தளர்வாரும், புரிவார் சடையார் - முறுக்கின நீண்டசடையுடைய வரும் (ஆகிய); அவர் தாபதர் அவ்வழியார் - அவர் முனிவராகி அந்நெறியிலே உளர்; அவர் அறி - அவர்களைக் கண்டு அவர் தன்மையை அறிந்து செல்.

விளக்கம் : நெறி - நல்லொழுக்கம். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி. அறி : ஏவல் வினை : கறை - நஞ்சுமாம். வேலவன் : சீவகன். நெறியிற்றளர்வாரும், பொறியிற்றளர்வாரும், புரிவார் சடையாராகி அவரே தாபதரா யவ்வழியிருப்பார் அறி என வினை முடிவுசெய்க. ( 25 )

1191. குலைவாழை பழுத்த கொழும்பழனு
நிலைமாத்தன தேமுறு தீங்கனியும்
பலவீன்றன முள்ளுடை யள்ளமிர்து
மலையாற்றயல் யாவு மடுத்துளவே.

பொருள் : குலைவாழை பழுத்த கொழும் பழனும் - குலையையுடைய வாழைகளிற் பழுத்த வளமிகு பழங்களும்; நிலை மாத்தன தேம் உறு தீ கனியும் - நிலையான மாவினிடமுள்ள தேன் பொருந்திய இனிய கனிகளும்; முள் உடை பலவு ஈன்றன அள் அமிர்தும் - முள்ளுடைய பலவின் கனியிலுள்ள செறிந்த அமிர்தும்; யாவும் - பிறவும்; மலை யாற்றயல் மடுத்து உள - மலைக்கும் யாற்றிற்கும் நடுவே நெருங்கியுள்ளன.

விளக்கம் : எனவே ஆண்டுள்ள தாபதர் அவற்றை உணவாகக் கொள்வர் என்க. பழன் - பழம் : மகரத்திற்கு னகரம் போலி. மாத்தன - மாமரத்திலுள்ளன. தேம் - இனிமை. தீங்கனி என்புழி தீம் வாளா பெயர் மாத்திரையாய் நின்றது. அள் - செறிவு. அமிர்து - ஈண்டுக் கனிக்கு உவமவாகுபெயர். ( 26 )

1192. வளம்பைம்பொனும் வாளொளி நீண்மணியு
மொளிர்கின்றன வோசனை நீணிலமுந்
தளர்வொன்றிலர் தாபதர் தாம்விழையுங்
குளிர்கொண்டதொர் சித்திர கூடமதே

பொருள் : வளர் பைம்பொனும் வாள்ஒளி நீள் மணியும் - மிகுகின்ற புதிய பொன்னும் பேரொளியுறு பெருமணிகளும்; ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும் - இவற்றின் ஒளி பரவிய ஓர் யோசனை அளவான பெரும் பரப்புறு நிலமும்; தாபதர் தளர்வு ஒன்றிலர் தாம் விழையும் - தாபதர்கள் தளர்ச்சி யிலராய் விழைவு கொள்கின்ற; ஓர் குளிர் கொண்டது - ஒரே வகையான குளிர்ச்சியுடையது; அது சித்திரகூடம் - அம்மலை சித்திரகூட மெனப்படும்.

விளக்கம் : வாள் ஒளி : ஒருபொருட் பன்மொழி. நிலமும் ; உம் : முற்றும்மை. தாம் வளையும் என்பதூஉம் பாடம் சித்திர கூடத்திற்கும் யாற்றிற்கும் இடையே பலவகை யினிய கனிகள் கிடைப்பதாலும் அந்நிலம் ஓரோசனை அளவும் தண்மை நிலவுவதாலும் தாபதர் தளர்விலராய் இருப்பர்.  (27 )

1193. முழவின்னிசை மூரி முழங்கருவி
கழையின்றிறுணி சந்தோடு கல்லெனவீர்த்
திழியும்வயி ரத்தொடி னம்மணிகொண்
டழியும்புன லஞ்சன மாநதியே

பொருள் : முழவு இன் இசை முழங்கு மூரி அருவி - முழவென இனிய இசையுடன் முழங்கும் பேரருவியானது; கழையின் துணி சந்தோடு ஈர்த்து வயிரத்தொடு இனம் மணி கொண்டு - மூங்கிலின் துண்டுகளையும் சந்தனக் கட்டைகளையும் இழுத்துக் கொண்டு, வயிரத்தையும் பல இன மணிகளையும் கொண்டு; கல்லென இழியும் புனல் - கல்லெனும் ஒலியுடன் வீழும் நீரினால்; அஞ்சன மாநதி அழியும் - அஞ்சனமாநதி யெனும் ஆறு மிகப் பெருகும்.

விளக்கம் : மூரி - பெருமை. கழையின் துணி - முங்கிற்றுண்டு. சந்து - சந்தனமரம். கல்லென : ஒலிக்குறிப்பு. அழியும் - பெருகும்.
( 28 )

1194. இதுபள்ளி யிடம்பனி மால்வரைதா
னதுதெள்ளறல் யாறுவை தேமரமாக்
கதிதள்ளி யிராது கடைப்பிடிநீ
மதிதள்ளி யிடும்வழை சூழ்பொழிலே

பொருள் : இது பள்ளி - இது அத்தாபதர் வாழும் பள்ளி; இடம் பனி மால்வரை - இப் பள்ளியின் இடப்பக்கம் அந்தக்குளிர்ந்த பெரிய சித்திர கூடமலை; அது தெள் அறல் யாறு - வலப்பக்கம் உள்ள அது தெளிந்த நீரையுடைய யாறு (அஞ்சன மாநதி); உவை தேமர மா - முன்னும் பின்னும் உள்ளவை இனிய மாமரமும்; வழை சூழ் பொழில் - சுரபுன்னை சூழும் பொழிலுமாகும்; மதி தள்ளியிடும் - இவை அறிவை (இன்பத்தினாலே) நீக்கிவிடும்; நீ கதி தள்ளி இராது கடைப்பிடி - நீ செலவைத் தவிர்ந்திராமல் செயலைக் கடைப்பிடித்துச் செல்.

விளக்கம் : இது பள்ளியென ஓரிடத்தைக் காட்டிக்கூறி, அது முதலாக மற்றவற்றைச் சுட்டிக் காட்டினான். உவை யென்றான் ஒழிந்த இரு பக்கத்தையும். பள்ளி : தாபதர் உறையுமிடம். ( 29 )

வேறு

1195. வருந்து நீர்மையம் மாதவர் பள்ளியுட்
குருந்த மேறிய கூரரும் பார்முல்லை
பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார்
மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே.

பொருள் : வருந்தும் நீர்மை அம் மாதவர் பள்ளியுள் - தவத்தால் வருந்தும் இயல்புடைய அத்தாபதர் வாழும் பள்ளியிலே; குருந்தம் ஏறிய கூர் அரும்பு ஆர் முல்லை - குருந்த மரத்தில் ஏறிய கூரிய அரும்புகள் நிறைந்த முல்லைக்கொடி; பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார் - தம் மனம் விரும்பிய கணவரைத் தழுவிய திருவனையாரின்; மருங்கு போன்று அணி - வடிவம் போல ஒப்பித்த; மாக் கவின் கொண்டது - பேரழகினைக் கொண்டது.

விளக்கம் : அம் முல்லைவனம் மகளிர் வடிவை நினைப்பூட்டித் தாபதர் பள்ளியினின்றும் போகவிடும் என்பது குறிப்பு. ( 30 )

1196. குரவ நீடிய கொன்றையங் கானின்வாய்
வரகு வாளிற் றொலைச்சுநர் பாடலி
னரவ வண்டொடு தேனினம் யாழ்செயும்
பரவை மாநிலம் பன்னிரு காதமே.

பொருள் : குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய் - குரவ மரங்கள் நிறைந்த அழகிய கொன்றைக் காட்டினிடத்தே; வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின் - வரகை அரிவாளால் அறுப்பவர் பாடுதலின்; (அம் மிடற்றுப் பாடலுக் கேற்ப) அரவவண்டொடு தேனினம் யாழ் செயும் - ஒலிக்கும் வண்டும் தேனும் யாழிசைக்கின்ற; பரவை மாநிலம் பன்னிரு காதம் - பரப்பு மிகுந்த வரகு விளைநிலம் பன்னிரு காத வழியுடையது.

(விளக்கம்.) வரகு - ஒரு கூலம். வாள் - அரிவாள். தேன் - ஒருவகை வண்டு. யாழ்செயும் - யாழிசைபோல முரலும். ( 31 )

1197. ஆங்க வெல்லை யிகந்தடு தேறலும்
பூங்கட் பொற்குட முந்நிறைத் தீண்டிய
வேங்கு கம்பலத் தின்னிசை சூழ்வயற்
றாங்கு சீர்த்தக்க நாட்டணி காண்டியே.

பொருள் : ஆங்கு அவ் எல்லை இகந்து - அந்தக் காட்டின் எல்லையைக் கடந்துபோய்; அடு தேறலும் பூங்கள் பொற்குடமும் நிறைத்து - காய்ச்சிய நறவினையும் மலரிலிருந்தெடுத்த கள்ளையும் பொற்குடங்க ளெல்லாவற்றினும் நிறைத்து; ஈண்டிய ஏங்கு கம்பலத்து இன் இசை - செறிந்த தேங்கிய ஆரவாரத்துடன் எழுப்பும் இனிய இசை; சூழ் வயல் - சூழ்ந்த வயலினையும்; தாங்கு சீர் - ஏந்திய புகழையும் உடைய; தக்க நாட்டு அணி காண்டி - தக்க நாட்டின் அழகைக் காண்பாயாக.

விளக்கம் : இன்னிசை யீண்டிய ஏங்கு கம்பலத்தைச் சூழ்வயல் என மொழிமாற்றிப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். கம்பலம் : கம்பலை என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. ஏங்குதல் - ஒலித்தல். ஏங்கிய மிடறு (சிலப். 3. 51) என்றார் பிறரும். ( 32 )

வேறு

1198. பாளைவாய்க் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டு
நீள்கழைக் கரும்பி னெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி
வாளைவா யுறைப்ப நக்கி வராலொடு மறலு மென்ப
காளைநீ கடந்து செல்லுங் காமரு கவின்கொ ணாடே.

பொருள் : காளை! நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடு - காளையே! நீ காட்டைக் கடந்து செல்லும் விருப்பூட்டும் அழகுறு நாடு; கமுகின் நெற்றிப் பாளைவாய்ப் படுபழம் விண்டு உதிர - கமுகின் உச்சியிலே பாளையின்கண் உண்டாகிய பழம் விண்டு உதிர்தலால்; நீள் கழைக் கரும்பின் நெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி - நீண்ட கழையாகிய கரும்பின் உச்சியிலே முதிர்ந்த தேனடையைக் கீண்டு; வாளை வாய் உறைப்ப நக்கி - (குளத்திலுள்ள) வாளையின் வாயிலே தேன் துளி துளிக்க அதனை நக்கி; வராலொடு மறலும் - வராலுடன் மாறுபடும்.

விளக்கம் : நெய் - தேன். என்ப : அசை. வராலொடு வாளை தேன் துளியை நக்கி மாறுபடும் என்றுரைப்பர் நச்சினார்க்கினியர்.  கமுகின் நெற்றிப் பாளைவாய்ப் படுபழம் என மாற்றுக. கழைக் கரும்பு - கோலாகிய கரும்பு; ஒருவகைக் கரும்பெனலுமாம். தொடையல் - தேனிறால். உறைப்ப - துளியாக விழ. கவின் - அழகு. ( 33 )

வேறு

1199. அங்கதன் றனதிடங் கடந்து போம்வழிப்
பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்துரா
யங்கநாட் டரிவையர் கூந்த னாறித்தே
னெங்குமொய்த் திழிவதோர் யாறு தோன்றுமே

பொருள் : அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழி - அவ்விடத்தில் அந்த நாட்டின் இடத்தைக் கடந்து செல்லும்போது; பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்து உராய் - மிகுதியான அழகிய சண்பக மலரைப் போர்த்துப் பரவி; அங்கு அந்நாட்டு அரிவையர் கூந்தல் நாறி - அங்குள்ள அந்நாட்டின் மகளிருடைய கூந்தல் போல மணங் கமழ்ந்து; தேன் எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றும் - வண்டுகள் எங்கும் மொய்க்கப்பட்டுச் செல்லும் ஒரு யாறு காணப்படும்.

விளக்கம் : அதனிடங் கடந்து எனவே கேமசரியை மணப்பதூஉங் குறிப்பித்தானாயிற்று. பொங்குதல் - மிகுதல். போது போர்த்துப் பரந்து அந்நாட்டரிவையர் கூந்தல் போன்று நாறித் தேன் மொய்க்கப்பட்டு இழிவதோர் யாறென்க. ( 34 )

1200. மின்னுடைய மணிபல வரன்றி மேதகு
தன்னுடைய நலம்பகிர்ந் துலக மூட்டலிற்
பொன்னுடைக் கலையல்குற் கணிகைப் பூம்புனன்
மன்னுடை வேலினாய் வல்லை நீந்தினால

பொருள் : மன் உடை வேலினாய் - அரசர் கெடுதற்குக் காரணமாகிய வேலையுடையவனே!; மின்னுடை மணி பல வரன்றி - ஒளியினையுடைய மணிகள் பலவற்றையும் அரித்து; மேதகு தன்னுடை நலம் பகிர்ந்து - மேம்பட்ட தன்னுடைய நலத்தைப் பங்கிட்டு; உலகம் ஊட்டலின் - உலகினை உண்பித்தலின்; பொன்னுடைக் கலை அல்குல் கணிகைப் பூம்புனல் - பொன்னாலான மேகலை யணிந்த அல்குலையுடைய கணிகை போன்ற பூம்புனலை; வல்லை நீந்தினால் - விரைய நீந்திச் சென்றால்.

விளக்கம் : இப் பாட்டுக் குளகம். நலம் - இன்பம். கணிகைப்பூம்புனல் - கணிகைத் தன்மையையுடைய அழகிய நீர். மன் - மன்னர். வல்லை - விரைவில். ( 35 )

1201. யானைவெண் மருப்பினா லியற்றி யாவது
மானமாக் கவரிவெண் மயிரின் வேய்ந்தன
தேனெயூன் கிழங்குகாய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பைசூழ் காடு தோன்றுமே

பொருள் : யானை வெண் மருப்பினால் யாவதும் இயற்றி - யானையின் வெள்ளிய மருப்பினால் கால்வளை முதலிய எல்லாவற்றையும் அமைத்து; மான மாக்கவரி வெண் மயிரின் வேய்ந்தன - மானமுறும் விலங்காகிய கவரியின் வெண்மையான மயிரினால் வேய்ந்தனவாகிய; தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய - தேன் முதலிய இவ்வுணவுப் பொருள்களைச் செறித்த; கானவர் குரம்பை சூழ்காடு தோன்றும் - வேடர் குடில்கள் சூழ்ந்த காடு தோன்றும்.

விளக்கம் : வேய்ந்த குரம்பை, செற்றிய குரம்பை எனக் கூட்டுக. மானமா - கவரிமான். மயிர்நீப்பினும் வாழ வியல்புடையதுபற்றிக் கவரிமானை மானமா என்ப. குரம்பை - சிறுகுடில். ( 36 )

1202. கடுந்துடிக் குரலொடு கடையுங் கட்குர
னெடுங்கைமான் குரன்மணி யருவி நீள்குர
லடும்புலிக் குரலொடு மயங்கி யஞ்சிய
விடும்பைமான் குரல்விளி யெங்கு மிக்கவே.

பொருள் : கடுந் துடிக் குரலொடு கடையும் கள் குரல் - விரையும் துடி யொலியுடன், கள் அரிக்குங் குரலும்; நெடுங் கை மான்குரல் - நீண்ட கையையுடைய யானையின் குரலும்; மணி அருவி நீள் குரல் - மணி யரித்து வரும் அருவி வீழ்குரலும்; அடும் புலிக் குரலொடு அஞ்சி மயங்கிய - கொல்லும் புலி முழக்கிற்கு அஞ்சி மயங்கிய; இடும்பை மான் குரல் - துன்புற்ற மான் குரலும்; விளி - சீழ்க்கையும்; எங்கும் மிக்க - அக் காடெங்கும் மிக்கன.

விளக்கம் : கடு : கடியென்னும் உரிச்சொல்லின் திரிபு. புலிக் குரலொடு : உருபு மயக்கம். விளி : நாவின் நுனியை மடித்தெழுப்பும் ஒலி. ( 37 )

1203. பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக்
கன்னிய மகளிரிற் காண்டற் கரியன
நன்மணி புரித்தன வாவி நான்குள
கன்னவி றோளினாய் காட்டு வாயவே.

பொருள் : கல் நவில் தோளினாய் - கல்லெனக் கூறுந் தோளுடையாய்!; காட்டு வாய - அக் காட்டிடத்துள்ளன வாகிய; பொன் அணி திகிரி அம் செல்வம் பொற்பு உடைக் கன்னி மகளிரின் - பொன்னால் அணிந்த ஆழியை யுடைய மன்னர் பெருமானின் அழகுறு கன்னிப் பெண்களைப் போல; காண்டற்கு அரியன - பிறராற் காண வியலாத; நல்மணி புரித்தன - நல்ல மணிகள் நிறைத்தனவாகிய; வாவி நான்கு உள - குளங்கள் நான்கு உள்ளன.

(விளக்கம்.) காட்டு வாய வாவி என்க. கன்னிய : அ : அசை. பூரித்தன என்பது, புரித்தன என விகாரமுற்றது. ( 38 )

1204. அருங்கலச் சேயித ழார்ந்த வாவியொன்
றிரும்பெரி பொன்செயு மிரத நீரதொன்
றொருங்குநோய் தீர்ப்பதொன் றமிர்த மல்லதொன்
றரும்பவிழ் குவளைநீர் வாவி யாகுமே.

பொருள் : அருங்கலச் சேயிதழ் ஆர்ந்த வாவி ஒன்று - அரிய சிவந்த இதழையுடைய பொற்றாமரை நிறைந்த குளம் ஒன்று; இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று - இரும்பை ஒளிவிடும் பொன்னாக மாற்றும் இரத நீருடைய குளம் ஒன்று; நோய் ஒருங்கு தீர்ப்பது ஒன்று - எல்லா நோயையும் நீக்குங்குளம் ஒன்று; ஒன்று அல்லது அமிர்தம் - மற்றொரு குளம் அமிர்தம் போன்றது; அரும்பு அவிழ்குவளை நீர் வாவி ஆகும் - (அது) அரும்பு மலர்ந்த குவளையையுடைய நீர் நிறைந்த குளமாகும்.

விளக்கம் : அமிர்தம் அல்லது ஒன்று என்பதை நச்சுப் பொய்கை என்றும் உண்பதற்குரியது குவளைநீர் வாவியாகும் என்றும் ஏகாரம் எதிர்மறைப் பொருளதென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். வாவி நான்குள என்பதனால் ஐந்தாவது குளம் ஒன்று காணுமாறில்லை. எனவே, இங்ஙனங் கொள்ளாமல், நீர் வாவி அமிர்தம் அல்லது ஒன்று எனக்கொண்டு நீர் வாவியே நச்சுப் பொய்கை எனக் கொள்வதும் பொருத்தமுடைத்து. ஏ : ஈற்றசை. ( 39 )

1205. கையடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பையுடை யாக்கையர் பாவ மூர்த்திய
ரையெனத் தோன்றுவர் தோன்றி யாளழித்
துய்வகை யரிதென வுடலங் கொள்பவே.

பொருள் : காட்டுள் வாழ்பவர் - (அவற்றைக் காத்துக்) காட்டில் வாழ்கின்றவர்கள்; கை அடு சிலையினர் - கையிலே கொல்லும் வில்லினர்; பையுடை யாக்கையர் - பை அணிந்த மெய்யினர்; பாவமூர்த்தியர் - பாவமான உருவத்தினர்; ஐயெனத் தோன்றுவர் - விரையத் தோன்றுவர்; தோன்றி உய்வகை அரிது என - அங்ஙனந் தோன்றிப் பிழைத்தல் அரிது என்று கூறி; ஆள் அழித்து உடலம் கொள்ப - (அவ்வாவிகளை விரும்பி அணுகிய) ஆட்களை அழித்து உடலைக் கொண்டு செல்வர்.

விளக்கம் : வாவிகளை அணுகியவரைப் பாவமூர்த்தியர் எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். பையுள் உடை யாக்கையர் என்பது விகாரப்பட்டது எனினும் ஆம். பையுள் - துன்பம். ஐ எனத் தோன்றுவர் என்பதற்கு இவர் வடிவு அழகு என்று நினைக்கும்படி தோன்றுவர் எனவும் பொருள் கூறலாம். ( 40 )

1206. அண்ணன்மே லரிவையர் கண்ணின் மொய்த்தவண்
மண்ணின்மேன் மாந்தர்கண் மொய்க்கும் வாவியை
யெண்ணமொன் றின்றியே யிடத்திட் டேகினாற்
றுண்ணெனச் சிலையவர் தொழுது காண்பவே

பொருள் : அண்ணல்மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து - அண்ணலாகிய நின்மேல் அரிவையர் கண்கள் மொய்க்குமாறு போல நெருங்கி; மண்ணின் மேல் மாந்தர்கள் அவண் மொய்க்கும் வாவியை - நிலவுலகிலுள்ள மக்கள் அவ்விடத்தை மொய்க்கும் அக் குளங்களை; இடத்து இட்டு எண்ணம் ஒன்று இன்றியே ஏகினால் - இடப்பக்கத்தே விட்டு அவற்றைக் கொள்ள வேண்டுமென்னும் நினைவு சிறிதும் இல்லாமலே போனால்; சிலையவர் துண் எனத் தொழுது காண்ப - அச் சிலைவர் துணுக்கென மொய்த்துத் தொழுது காண்பார்கள்.

விளக்கம் : நல்வினையுடையோரெனத் தொழுது காண்பர் என்பர் நச்சினார்க்கினியர். ஆகவே, அவ்வாவிகட்கு இடமே செல்க என்றான். ( 41 )

1207. பாடல்வண் டியாழ்செயும் பசும்பொற் கிண்கிணித்
தோடலர் கோதைமின் றுளும்பு மேகலை
யாடிய கூத்தித னசைந்த சாயல்போன்
றூடுபோக் கினியதங் கோரைங் காதமே.

பொருள் : பாடல் வண்டு யாழ் செயும் அங்கு ஓர் ஐங்காதம் - பாடலையுடைய வண்டுகள் யாழென ஒலிக்கும் அவ்விடத்தே ஐங்காத வழியளவும்; பசும்பொன் கிண்கிணி - பசும்பொன்னாலான கிண்கிணியும்; தோடு அலர் கோதை - இதழ்விரிந்த மலர்க் கோதையும்; மின் துளும்பும் மேகலை - ஒளி ததும்பும் மேகலையும் உடைய; ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல்போல் - ஆடிய கூத்தியினுடைய இளைத்த தோற்றம் போல; ஊடுபோக்கு இனியது - இடையே செல்வதற்கு இயனிமையைத் தருவதாக இருக்கும்.

விளக்கம் : அகப்பட்டார் நீங்குதல் அரிதாய் இருக்கும் என்பர் நச்சினார்க்கினியர். ( 42 )

1208. கோதைவீழ்ந் ததுவென முல்லை கத்திகைப்
போதுவேய்ந் தினமலர் பொழிந்து கற்புடை
மாதரார் மனமெனக் கிடந்த செந்நெறி
தாதின்மே னடந்ததோர் தன்மைத் தென்பவே

பொருள் : கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகைப்போது வேய்ந்து - (மற்றும்) மாலை வீழ்ந்தது என்னும்படி முல்லை மலரும் குருக்கத்தி மலரும் அணிந்து; இனமலர் பொழிந்து - மற்றைய இனமலர்கள் தேனைப் பொழிந்து; கற்புடை மாதரார் மனம் எனக் கிடந்த செந்நெறி - கற்புடைய மகளிர் மனம் போலக் கிடந்த செவ்விய நெறி; தாதின்மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்ப - (நிலத்தின் அன்றி) மகரந்தப் பொடியின் மேல் நடந்ததாகிய ஒரு தன்மையுடையது என்பர்.

விளக்கம் : கோதை - மலர்மாலை. கத்திகைப்போது - குருக்கத்திமலர். கற்புடை மாதரார்மனம் நெறிக்குத் தூய்மைக்குவமை என்க. செந்நெறி - செவ்விய வழி. தாது - பூந்துகள். ( 43 )

1209. மணியியற் பாலிகை யனைய மாச்சுனை
யணிமணி நீண்மல ரணிந்த தாயிடை
யிணைமலர்ப் படலிகை போலு மீர்ம்பொழில்
கணையுமிழ் சிலையினாய் கண்டு சேறியே.

பொருள் : மணி இயல் பாலிகை அனைய மாச்சுனை - மணிகளிழைத்த பாலிகை போன்ற பெரிய சுனையின்; அணிமணி நீள்மலர் அணிந்தது ஆயிடை - அழகிய மணிபோலும் நீண்ட மலர்களாலே அணியப்பட்டதாகிய அவ் வழியையும்; இணைமலர்ப் படலிகை போலும் ஈர்ம்பொழில் - ஒத்த மலர்களையுடைய பூந்தட்டுப் போலும் குளிர்ந்த பொழிலையும்; கணை உமிழ் சிலையினாய்! - அம்பை உமிழும் வில்லுடையாய்!; கண்டு சேறியே - பார்த்துச் செல்வாயாக!

விளக்கம் : இடை - வழி. கண்டு சேறி என்றான் ஓன்றையும் நுகரலாகாது என்பதற்கு. பாலிகை - வட்டவடிவிற்றாகியதொரு தட்டு. மா - பெருமை. அணி மணி - அழகிய மணி. படலிகை - மலரிட்டு வைக்கும் பெட்டி. ஈர்ம்பொழில் - குளிர்ந்த சோலை. ( 44 )

1210. இலைப்பொலி பூண்முலை யெரிபொன் மேகலைக்
குலத்தலை மகளிர்தங் கற்பிற் றிண்ணிய
வலைத்துவீ ழருவிக ளார்க்குஞ் சோலைசூழ்
வலத்தது வனகிரி மதியிற் றோன்றுமே.

பொருள் : இலைப்பொலி பூண்முலை எரி பொன் மேகலை - இலை வடிவமான அணிகளால் விளக்கமுறும் முலையினையும், ஒளிரும் பொன் மேகலையையும் உடைய; குலத்தலை மகளிர்தம் கற்பின் திண்ணிய - நற்குலப் பெண்டிரின் கற்பைப்போலத் திண்மையுடைய; அலைத்துவீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ் வனகிரி - பொன் மணி முதலியவற்றை அலைத்து வீழும் அருவிகள் ஒலிக்கும், சோலைகள் சூழ்ந்த வனகிரி; வலத்தது - வலப்பக்கத்தே உள்ளது; மதியின் தோன்றும் - (அருவியாலும் குளிர்ச்சியாலும்) திங்களைப்போலத் தோன்றும்.

விளக்கம் : திண்ணிய வனகிரி, அருவிகள் ஆர்க்கும் வனகிரி, சோலைசூழ் வனகிரி எனத் தனித்தனியே கூட்டுக. ( 45 )

1211. கரியவன் றிருமுடி கவிழ்த்த சேவடிப்
பெரியவன் றிருமொழி பிறழ்த லின்றியே
மரியவ ருறைதலின் மதன கீதமே
திரிதரப் பிறந்ததோர் சிலம்பிற் றென்பவே.

பொருள் : கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடிப் பெரியவன் - இந்திரன் தன் திருமுடியைச் சாய்த்து வணங்கிய சிவந்த அடிகளையுடைய அருகப் பெருமான்; திருமொழி பிறழ்தல் இன்றியே - கூறிய அருகாகமத்திற் கூறியவை தவறுதல் இல்லாமலே; மரியவர் உறைதலின் - அதிலே பொருந்திய முனிவர்கள் வாழ்தலாலே; மதனகீதமே திரிதர - காமனது பாட்டொன்றுமே அவ்விடத்தில் இல்லாமல்; பிறந்தது ஓர் சிலம்பிற்று என்ப - பிற ஓசைகள் யாவும் உண்டாகிய ஒப்பற்ற பக்கமலையினை உடையது அவ்வனகிரி என்பர்.

விளக்கம் : சிலம்பு - பக்கமலை. வானோர் இறைவனும் வணங்கும் சேவடியையுடைய பெரியவன்; அவன், அருகன் என்க. திருமொழி - ஆகமம். மரியவர் என்பது மருவியர் என்பதன் விகாரம், மதனகீதம் - காமத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் இசைகள். திரிதருதல் - பிறழ்தல். ஈண்டு நீங்க என்னும் பொருட்டாய் நின்றது. சிலம்பிற்று - ஓசையையுடையது. ( 46 )

1212. ஏற்றரு மணிவரை யிறந்து போனபின்
மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமே
போற்பல கவர்களும் பட்ட தாயிடை
யாற்றல்சால் செந்நெறி யறியக் கூறுவாம்.

பொருள் : ஏற்று அரு மணிவரை இறந்து போனபின் - ஏறுமிடம் அரிய அம் மலையைக் கடந்து சென்ற பிறகு; மால்தரும் மணநெறி மகளிர் நெஞ்சமேபோல் - மயக்கந்தரும் கல்வி நெறியுடைய பரத்தையரின் உள்ளமேபோல; பல கவர்களும் பட்டது - வழியானது பல கிளைகளையும் உடையது (ஆதலின்); ஆயிடை ஆற்றல்சால் செந்நெறி அறியக் கூறுவாம் - அவ்வழியிடத்துச் செல்லுதல் அமைந்த செவ்விய வழியை அறியுமாறு கூறுவோம்.

விளக்கம் : மாற்ற அரு நெஞ்சம் எனக் கொண்டு, வசப்படுத்தமுடியாத உள்ளம் என்பர் நச்சினார்க்கினியர். கவர்ப்பு என்பது கவர் என ஆனது விகாரம். ( 47 )

1213. சுரும்புசூழ் குவளையோர் சுனையுண் டச்சுனை
மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டவண்
விரும்பிவண் டிமிர்வதோர் வேங்கை வேங்கையின்
மருங்கிலோர் செந்நெறி வகுக்கப் பட்டதே.

பொருள் : சுரும்புசூழ் குவளை ஓர் சுனை உண்டு - வண்டுகள் சூழும் குவளைகளையுடைய ஒரு சுனை உளது; அச் சுனை, மருங்கில் ஓர் மணிச் சிலாவட்டம் உண்டு - அச் சுனையின் அருகிலே ஒரு வட்டப் பாறை உளது; அவண் வண்டு விரும்பி இமிர்வது ஓர் வேங்கை - அங்கே வண்டுகள் விரும்பி முரல்வதாகிய ஒரு வேங்கைமரம் உளது; அவ் வேங்கையின் மருங்கில் ஓர் செந்நெறி வகுக்கப்பட்டது - அவ் வேங்கையின் அருகில் உள்ள செவ்விய நெறியே நான் முன்னர் உரைக்கப்பட்டது.

விளக்கம் : ஓர் சுரும்புசூழ் குவளைச் சுனையுண்டு என மாறுக. குவளைச்சுனை - குவளை மலரையுடைய சுனை. சிலவாட்டம் - வட்டப்பாறை. இமிர்வது - முரல்வதற்கு இடமானது. அவ்வேங்கையின் மருங்கில் என்க ( 48 )

வேறு

1214. கைம் மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம்
மொய்ம் மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வைம் மலர்த்து இலங்கும் வெள்வேல் மத்திம தேயம் ஆளும்
கொய்ம் மலர்த் தாரினானைக் கண்ணுறு குணம் அது என்றான்.

பொருள் : மொய்ம்மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப! - நெருங்கிய குவளை மலர்க் கண்ணியை உடைய தோளனே!; கைம்மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம் - கையை விரித்தாற் போன்ற காந்தளின் மணமுறு மலர் கமழும் கானம்; முழுதும் நீ நீந்தி - முழுவதையும் நீ கடந்து சென்று; வை மலர்த்து இலங்கு வெள்வேல் மத்திம தேயம் ஆளும் - கூர்மைமிக்கு விளங்கும் வேலையுடைய, மத்திம நாட்டைக் காக்கும்; கொய்ம்மலர்த் தாரினானை - கொய்த மலர் மாலையுடைய மன்னனை; கண்உறு! - காண்பாயாக!; அது குணம் என்றான் - அது நினக்கு ஊழால் அமையக் கூடியது என்று சுதஞ்சணன் இயம்பினான்.

விளக்கம் : கடிமலர் - மணமுடைய மலர். மொய்ம்மலர் - செறிந்த மலர். மொய்ம்ப : விளி. மொய்ம்பு - தோள்; வலிமையுமாம், கண்ணுறு என்பது ஏவல் வினை. அது குணம் என மாறுக. குணம் - பண்பு. ( 49 )

1215. மண்ணகங் காவன் மன்னன் மாதரம் பாவை மாசி
லொண்ணுதன் மகளைத் தந்தீங் குறைகென வொழுகு நாளுள்
வெண்மதி யிழந்த மீன்போற் புல்லென வெய்தி நின்ற
வண்ணனின் றோழ ரெல்லா மவ்வழி யடைய ரென்றான்.

பொருள் : மண் அகம் காவல் மன்னன் மாதர் அம் பாவை மாசு இல் ஒண் நுதல் மகளை - (அந் நாட்டிலே) நிலவுலகின் காவலானாகிய வேந்தன், காதலை யூட்டும், அழகிய பாவை போன்ற, குற்றம் அற்ற, ஒள்ளிய நெற்றியளாகிய தன் மகளை; தந்து ஈங்கு உறைக என - நினக்குக் கொடுத்து, ஈங்கே யிருப்பாயாக என்று கூறுதலால்; ஒழுகும் நாளுள் - நீயும் அங்கே உறையும்போது; வெண்மதி இழந்த மீன்போல் - வெண் திங்களை யிழந்த விண்மீக்ளைப்போல; புல் எனவு எய்தி நின்ற - பொலிவிழந்து வருத்தம் அடைந்து நின்ற; அண்ணல் நின் தோழர் எல்லாம் - அண்ணலாகிய நின் தோழர்கள் யாவரும்; அவ்வழி அடைவர் என்றான் - அவ்விடத்தே வந்து நின்னைச் சேர்வர் என்றான்.

விளக்கம் : மன்னன் என்றது தடமித்தனை. மாதர் - காதல். பாவை : ஆகுபெயர்; கனகமாலை. வருத்தம் எய்தி நின்ற என வருவித்தோதுக. தோழர் அண்ணல், விளி. அண்ணலும் நின்தோழரும் எனக் கொண்டு நந்தட்டனும் நின் தோழரும் என்பர் நச்சினார்க்கினியர். ( 50 )

வேறு

1216. நெட்டிடை நெறிகளு நிகரில் கானமு
முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமு
நட்புடை யிடங்களு நாடும் பொய்கையு
முட்பட வுரைத்தன னுறுதி நோக்கினான்.

பொருள் : நெட்டிடை நெறிகளும் - நீண்ட இடத்தையுடைய வழிகளும்; நிகர் இல் கானமும் - ஒப்பற்ற காடுகளும்; முட்டு உடை முடுக்கரும் - போக்கற்ற அருவழிகளும்; மொய்கொள் குன்றமும் - நெருங்கிய குன்றுகளும்; நட்பு உடை இடங்களும் - உறவு கொள்ளும் இடங்களும்; நாடும் - நாடுகளும்; பொய்கையும் - பொய்கைகளும்; உட்பட உரைத்தனன் - பிறவும் அடங்க (முதலிற்) கூறியவனாகி; உறுதி நோக்கினான் - பின்னர் அவனுக்கு நன்மை தரும் மந்திரங்களைக் கூற நினைந்தான்.

விளக்கம் : முட்டுடை முடுக்கர் - நல்லதோரு வழிபோற்றோன்றி நடந்திடின் நன்றிதேறாப் புல்லர்தம் நட்புப்போலப் போய் அறத்தேய்வதாகிய வழியையுடைய சந்து. உறுதி - மந்திரம்; ஆகுபெயர். ( 51 )

1217. செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பிய
மல்லலங் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திர மூன்றுங் கொள்கெனச்
சொல்லின னவற்றது தொழிலுந் தோன்றவே.

பொருள் : செல்கதி மந்திரம் செவியில் செப்பிய மல்லல் அம் குமரனை - நற்கதியிற் சேரும் மந்திரத்தைத் தன் காதில் ஓதிய, ஆற்றல் உறும் அழகிய சீவகனை; வாழ நாட்டவே வல்லவன் - வாழ நிறுத்த வன்மையுடைய சுதங்சணன்; மந்திரம் மூன்றும் கொள்க என - இம் மந்திரம் மூன்றையும் குறிக்கொள்க என்று; அவற்றது தொழிலும் தோன்றச் சொல்லினன் - அவற்றின் தந்திரமும் விளங்கக் கூறினன்.

விளக்கம் : செல்கதி மந்திரம் செவியிற் செப்பிய மல்லங்குமரனை என்றது சீவகன் சுதஞ்சணனுக்குச் செய்த உதவியைத் தேவர் நமக்கு நினைவூட்டியபடியாம். வழிநாட்டுதலாவது - இன்புற்றமர்ந்து வாழும்படி நிலைநிறுத்துதல். ( 52 )

1218. கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காமுறப்
படுங்குர றருமிது பாம்பு மல்லவுங்
கடுந்திற னோய்களுங் கெடுக்கும் வேண்டிய
வுடம்பிது தருமென வுணரக் கூறினான்.

பொருள் : கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காம் உறப்படும் குரல் தரும் இது - விரைந்து தொடுக்கப்படுவதும் ஆண் பெண்களில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியை உண்டாக்குவதும் ஆகிய அம்பினையுடைய காமனும் விரும்பும் குரலைத் தருவதும் இம்மந்திரம்; பாம்பும் அல்லவும் கடுந்திறல் நோய்ளும் கெடுக்கும் (இது) - பாம்பின் நஞ்சையும், ஒழிந்த மண்டலி முதலியவற்றின் நஞ்சினையும், காற்று நீர் நெருப்பு முதலியவற்றையும், நோய்களையும் கெடுக்கும் இம் மந்திரம்; வேண்டிய உடம்பு தரும் இது - வேண்டிய உடம்பைத் தருவது இம் மந்திரம்; என உணரக் கூறினான் - என்று விளங்க அறியுமாறு உரைத்தான்.

விளக்கம் : கவர்கணை - ஒருவர் நெஞ்சினை ஒருவர் கவர்தற்குக் காரணமான மலரம்பு. காமனும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. இது - இம்மந்திரம். இது என்னும் சுட்டினைப் பாம்புடனேயும் ஒட்டுக. அல்லவும் - பாம்பல்லாத ஏனைய நஞ்சுடையனவும். கடுந்திறல் நோய் என்றது மனித முயற்சியாற் றடுக்கவொண்ணாத காற்று இடி முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களை. ( 53 )

வேறு

1219. கந்தடு களிறு கொல்லுங்
கருவரை யுழுவை யன்னான்
மந்திர மூன்று மோதி
வானவிற் புரையும் பைந்தா
ரிந்திரன் றன்னை நோக்கி
யியக்கியர் குழாத்தை நோக்கிச்
சிந்தையிற் செல்வ லென்றான்
றேவனுஞ் செலவு நேர்ந்தான்.

பொருள் : கந்து அடு களிறு கொல்லும் - கட்டுத் தறியை முறிக்குங் களிற்றைக் கொல்லுகின்ற; கருவரை உழுவை அன்னான் - கரிய வரிகளையுடைய புலியைப் போன்ற சீவகன்; மந்திரம் மூன்றும் ஓதி - மந்திரம் மூன்றையும் கற்றுக்கொண்டு; வானவில் புரையும் பைந்தார் இந்திரன் தன்னை நோக்கி - வானவில்லைப் போன்ற புதிய மாலையணிந்த இந்திரன் போன்ற சுதஞ்சணனைப் பார்த்து; இயக்கியர் குழாத்தை நோக்கி - (அவன் மனைவியரான) இயக்கியரின் கூட்டத்தைப் பார்த்து; சிந்தையின் செல்வன் என்றான் - என் விருப்பப்படி ஏகுவேன் என்றான்; தேவனும் செலவு நேர்ந்தான் - சுதஞ்சணனும் அவன் போவதற்கு ஒருப்பட்டான்.

விளக்கம் : தூர கமனமும் கலைகளில் ஒன்றாதலின், சிந்தையிற் செல்வன் என்பதனால் அக் கலைவல்லவனென்பது பெற்றாம். செல்வமிகுதியால் இந்திரன் உவமையானான். ( 54 )

1220. மனைப்பெருங் கிழத்தி மாசின்
மலைமக டன்னை யான்சென்
றெனைத்தொரு மதியி னாங்கெர்
லெய்துவ தென்று நெஞ்சி
னினைத்தலுந் தோழ னக்கு
நிழலுமிழ்ந் திலங்கு செம்பொற்
பனைத்திரண் டனைய தோளாய்
பன்னிரு மதியி னென்றான்.

பொருள் : மனைப் பெருங் கிழத்தி மாசு இல் மலைமகள் தன்னை - பெருமை தங்கிய இல்லக் கிழத்தியாகிய குற்றம் அற்ற தத்தையை; எனைத்து ஒரு மதியின் யான் சென்று எய்துவது ஆம் என்று - எவ்வளவினதாகிய ஒரு திங்களிலே நான் சென்று கூடும் இயல்பு உண்டாகுமோ என்று; நெஞ்சில் நினைத்தலும் - உள்ளத்தில் எண்ணியவுடனே; தோழன் நக்கு - சுதஞ்சணன் நகைத்து; நிழில் உமிழ்ந்து இலங்கு செம்பொன் பனை திரண்டனைய தோளாய் - ஒளி வீசி விளங்கும், பொன்னணி புனைந்த, பனை திரண்டாற் போன்ற தோளனே!; பன்னிரு மதியின் என்றான் - நீ அவளைக் கூடுவது பன்னிரண்டாந் திங்களில் என்றான்.

விளக்கம் : கொல் : அசை. பன்னிரு மதியின் : இன் : சாரியை; ஏழனுருபு என்றும் புறனடையாற் கொள்கவென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும் அவர், வெள்ளிமலையிற் றோன்றி வந்த மனைப்பெருங்கிழத்தி தன்னை, மாசில்லாத மகள்தன்னை எனப் பிரித்துக் கூட்டித் தத்தையையும் குணமாலையையுங் கொள்க என்பர். சீவகன் பன்னிரு மதிக்குள்ளே இராசமா புரத்தே சென்று குணமாலையை எய்தினானேனும் மனக்கவற்சி யின்றி நிலைபெற இருந்து எய்தாமையின் அதனைத் தேவன் கூறானாயினான் என்றும், இனித் தத்தையையே நினைந்தானென்னிற் குணமாலையை வரைந்ததற்கு நிகழ்ந்த ஊடல் தீர்த்துப் புணராமையின், அவளையே நினைந்தான் என்க என்றும் நச்சினார்க்கினியரே கூறுவதாலும், முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள் (1626) எனப் பின்னரும் தத்தையையே நினைந்தான் என வருவதாலும் அங்ஙனம் பிரித்துக்கூட்டி இருவராக்கிக் கூறுதலிற் பயனின் றென்க. மனைப் பெருங்கிழத்தியைக் குணமாலையெனக் கூறுவதும் பொருத்தமின்று, பெருங்கிழத்தி தத்தையே ஆதலான். ( 55 )

1221. ஆறிரு மதியி னெய்தி யரட்டனை யடர்த்து மற்றுன்
வீறுயர் முடியுஞ் சூடி விழுநிலக் கிழமை பூண்டு
சாறயர்ந் திறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று
கூறினன் கதிர்கள் பொங்குங் குளிர்மணி முடியினானே.

பொருள் : ஆறிரு மதியின் எய்தி - பன்னிரண்டாந் திங்களிலே இராசமாபுரமடைந்து; அரட்டனை அடர்த்து - கட்டியங்காரனைக் கொன்று; மற்ற உன் வீறுயர் முடியும் சூடி - பிறகு, உனக்குத் தொன்றுதொட்டு வந்த சிறப்புற்றுயர்ந்த முடியையும் புனைந்து; விழுநிலக் கிழமை பூண்டு - விழுமிய நிலவுரிமையைக் கொண்டு; சாறு அயர்ந்து - விழாக் கொண்டாடி; இறைவன் பேணி - அருகப் பெருமானை வழிபட்டு; சார்பு அறுத்து உய்தி என்று - பிறப்பைக் கெடுத்து வீடு பெறுவை என்று; கதிர்கள் பொங்கும் குளிர்மணி முடியினான் கூறினன் - ஒளி வீசும் தண்ணிய மணிமுடியுடைய சுதஞ்சணன் உரைத்தான்.

விளக்கம் :உரிமை மகளிர் முன் கூறினானாதலின் வெளிப்படையானவற்றை விளம்பினான். ( 56 )

1222. சொற்றிறற் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
விற்றிறற் குருசிற் கெல்லாம் வேறுவே றுரைப்பக் கேட்டே
சுற்றிய தோழி மாரை விடுத்தனன் றொழுது நின்றான்
கற்பக மரமுஞ் செம்பொன் மாரியுங் கடிந்த கையான்.

பொருள் : சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் - சொல்வன்மையும் சூழ்ச்சியும் மிகுந்த சுதஞ்சணன்; வில்திறல் குருசிற்கு - வில் வன்மையுடைய சீவகனுக்கு; எல்லாம் சுருங்கநாடி - வேண்டுவன யாவற்றையும் சுருக்கமாக ஆராய்ந்து; வேறு வேறு உரைப்பக் கேட்டு - தனித் தனியே தெளிவாக உரை விளம்பக் கேட்டு; கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான் - கற்பக மரத்தையும் செம்பொன் பெய்யும் முகிலையும் மாற்றிய வண்மையுறுங் கையினனாகிய சீவகன்; சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான் - சுற்றிலும் உள்ள தோழியரைப் போகவிட்டுச் சுதஞ்சணனைத் தொழுது நின்றான்.

விளக்கம் : மறைமொழி கற்பித்ததனால் ஆசானாகக்கொண்டு தொழுதான், வழிபடு தெய்வத்தைத் தொழுதான் என்றுங் கூறலாம் என்பர். நச்சினார்க்கினியர் மறைபொருளல்லாதவற்றை வேறாக நாடி அங்ஙனஞ் சுருங்கக் கூறிப் பின்பு மறைபொருளாகியவற்றை வேறாகக் கொண்டிருந்து கூற என்று மொழிமாற்றிக் கூறுவர். மற்றும், சுதஞ்சண்ணைத் தொழுது, சுற்றிலுமுள்ள தோழியரை விடுத்துநின்றான் என்றம் மாற்றிக் கூறுவர். அவ்வாறு பிரிப்பதாற் போதப் பயனின்றென்க. ( 57 )

வேறு

1223. சேட்டிளஞ் செங்கயல் காப்பச் செய்துவிற்
பூட்டிமேல் வைத்தன புருவப் பூமக
டீட்டிருந் திருநுதற் றிலக மேயென
மோட்டிருங் கதிர்திரை முளைத்த தென்பவே.

பொருள் : சேடு இளஞ் செங்கயல் காப்பச் செய்து - பெருமையும் இளமையுமுடைய செங்கயல்களைக் காக்கச் செய்து; வில்பூட்டி மேல் வைத்த அன புருவப் பூமகள் - வில்லைப் பூட்டி மேலே வைத்தாற் போலும் புருவத்தினையுடைய நிலமகளின்; தீட்டு இருந்திருநுதல் திலகமே என - தீட்டப் பெற்ற அழகிய நெற்றியிலிட்ட திலகம்போல; மோடு இருங்கதிர் திரை முளைத்தது - பெருமையுடைய பெரிய ஞாயிறு கடலில் தோன்றியது.

விளக்கம் : சேடு - பெருமை. கயல் என்றது கண்களை. பூமகள் - நிலமகள். மோட்டிருங்கதிர் - பெருமையுடைய பெரிய ஞாயிற்றுமண்டிலம். திரை - கடல் : ஆகுபெயர். ( 58 )

வேறு

1224. அழல்பொதிந்த நீளெஃகி னலர்தார்
மார்பற் கிம்மலைமேற்
கழல்பொதிந்த சேவடியாற் கடக்க
லாகா தெனவெண்ணிக்
குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தி
னீங்கிக் கொண்டேந்தி
நிழல்பொதிந்த நீண்முடியா னினைப்பிற்
போகி நிலத்திழிந்தான்

பொருள் : நிழல் பொதிந்த நீள்முடியான் - ஒளி பதிந்த நீண்ட முடியுடைய சுதஞ்சணன்; அழல் பொதிந்த நீள் எஃகின் அலர்தார் மார்பற்கு - அழலிலே தங்கிய நீண்ட வேலேந்திய, மலர்மாலை யணிந்த மார்பனுக்கு; கழல் பொதிந்த சேவடியால் - கழல் அணிந்த சேவடியினாலே; இம் மலைமேல் கடக்கலாகாது என எண்ணி - இம் மலைமீது செல்ல வியலாது என நினைத்து; குழல் பொதிந்த தீ சொல்லார் குழாத்தின் நீங்கி - குழலின் இசை தங்கிய இனிய மொழியாரின் திரளினிற்றும் நீங்கி; ஏந்திக் கொண்டு நினைப்பின் போகி நிலத்து இழிந்தான் - சீவகனை ஏந்தியவாறு நினைவின்படி சென்று நிலமிசை இறங்கினான்.

விளக்கம் : அழல் - நஞ்சுமாம். எஃகு - வேல். மார்பற்கு - சீவகனுக்கு. கழல் பொதிந்த - வீரக்கழல் கட்டிய, குழல் : ஆகுபெயர்; இசை. நிழல் - ஒளி. முடியான் : சுதஞ்சணன். தீஞ்சொல்லார் : மங்கையர். ( 59 )

1225. வண்டளிர்ச் சந்தனமும் வழையு
மாவும் வான்றீண்டி
விண்டொழுகு தீங்கனிகள் பலவு
மார்ந்த வியன்சோலை
மண்கருதும் வேலானை மறித்துங்
காண்க வெனப்புல்லிக்
கொண்டெழுந்தான் வானவனுங் குருசி
றானே செலவயர்ந்தான்

பொருள் : வண் தளிர்ச் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி - வளவிய தளிரையுடைய சந்தனமும் சுரபுன்னையும் மாவும் வானைத் தொட்டு; விண்டு ஒழுகு தீ கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை - விரிந்து தேன் ஒழுகும் இனிய பழங்கள் பலவும் நிறைந்த பெரிய பொழிலிலே; மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என - உலகை நினைக்கும் வேலேந்திய சீவகனைத் திரும்பவும் காண்பேனாக என்று கூறி; வானவனும் புல்லிக் கொண்டு எழுந்தான் - சுதஞ்சணன் தழுவிக்கொண்டு சென்றான்; குருசில் தானே செலவு அயர்ந்தான் - சீவகனும் தானே செல்லுதற்குப் புறப்பட்டான்.

விளக்கம் : பின்னர் முடிசூட்டவும், வீடுபெற்றபடி காண்டற்கும் வருதல் குறித்து, மறித்தும் காண்க என்றான். ஈண்டு, மண் கருதும் வேலான் என்றவாறு. பின்னும், மண்கொண்ட வேலான் (சீவக. 2353) என்பர். இதற்குமுன் சீவகன் தனியே போகாமையின், தானே செலவயர்ந்தான் என ஆசிரியர் நொந்துரைத்தார். ( 60 )

1226. வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டி னமென்னுந்
தாளொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணி
நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக்
கோளுழுவை யன்னாற்குக் குன்ற முந்நின் றழுதனவே.

பொருள் : இனம் என்னும் தாள் ஒழிய - தோழராகிய கால் அங்கே நிற்கவும்; வாள் உழலை பாய்ந்த - வாட்படையாகிய தடைமரத்தை நீங்கி; இளைய வளநாகு இட்டு - இளமையும் வளப்பமும் உடைய தத்தை குணமாலையென்னும் நாகுகளைப் பிரிந்து; போர் ஏறு தனியே போந்தது என எண்ணி - சீவகனாகிய போருக்குரிய ஏறு தனியே வந்தது என்று நினைந்து; நீள் அருவிக் கண்ணீர் வீழ்த்து அலறி - நீண்ட அருவியாகிய கண்ணீரை விட்டுக் கதறி; வண்ணம் கரிந்து உருகி - மேனி கருகி அசும்பு வீழ்தலின்; கோள் உழுவை அன்னாற்குக் குன்றமும் நின்று அழுதன - கொல்லும் புலியன்னானுக்கு மலைகளும் நின்றழுதன.

விளக்கம் : ஆசிரியர் தம் குறிப்பை மலைமீதேற்றினார். தோழர் நால்வரும் இவனுக்குக் கால்போறலின் தாள் என்றார். புலிக்குத் தன் காடும் பிறகாடும் ஒக்கும் என்று உழுவை யன்னான் என்றார். ( 61 )

1227. மிக்கார்தங் கேட்டின்கண் மேன்மை
யில்லாச் சிறியார்போ
னக்காங்கே யெயிறுடைந்த நறவ
முல்லை நாள்வேங்கை
தக்கார்போற் கைம்மறித்த காந்த
ளந்தோ தகாதெனவே
தொக்கார்போற் பன்மாவு மயிலுந்
தோன்றித் துளங்கினவே.

பொருள் : மிக்கார்தம் கேட்டின்கண் மேன்மையில்லாச் சிறியார்போல் - பெரியோருக்குக் கெடுதி நேர்ந்தபோது உயர்வு கருதாத கீழ்மக்கள் நகுதல் போல; நறவம் முல்லை நாள் வேங்கை நக்கு ஆங்கே எயிறு உடைந்த - தேனுடைய முல்லைகள் அக்காலத்துக்குரிய வேங்கை மரத்தின்கண்ணே நின்று நகைத்து அப்பொழுதே எயிற்றின் தன்மை கெட்டன; தக்கார்போல் காந்தள் அந்தோ! தகாது எனவே கை மறித்த - அது கண்டு நன் மக்களைப் போலக் காந்தள், அந்தோ! இது தகாது என்று கைகவித்து விலக்கின; தொக்கார்போல் பல் மாவும் மயிலும் தோன்றித் துளங்கின - (அவ்வளவிலே) சுற்றத்தாரைப் போலே பலவகை விலங்குகளும் மயில்களும் கண்டு நடுங்கின.

(விளக்கம்.) மிக்கார் -அறிவு மிக்க சான்றோர். சிறியார் போன்று நகைத்து அப்பொழுதே அத்தீவினையின் பயனாகப் பல்லுடைபட்டன என்றும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. தக்கார் - தகவுடையோர். தொக்கார் - சுற்றத்தினர். ( 62 )

1228. கொல்லை யகடணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
முல்லை முறுவலித்து நகுதிர் போலு மினிநும்மைப்
பல்லை யுகுத்திடுவ மென்று பைம்போ தலர்சிந்தித்
தொல்லை நிறங்கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே.

பொருள் : முல்லை! கொல்லை அகடு அடைந்து - முல்லைகளே! நீங்கள் கொல்லையின் நடுவைச் சேர்ந்து; குறும்பு சேர்ந்து - வேங்கையாகிய அரணை அடைந்து; தமியாரை முறுவலித்து நகுதிர்போலும் - தனித்தவர்களை முறுவல் செய்து இகழுதிர் போலும்!; இனி நும்மைப் பல்லை உகுத்திடுவம் என்று - இங்ஙனம் இகழும் நும்மை இனிமேற் பல்லை உடைத்திடுவோம் என்றுரைத்து; பைம் போது அலர் சிந்தி - புதிய போதினும் அலரினும் உள்ள தேனைத் துளித்து; தொல்லை நிறம் கருகிப் பாய்ந்து - பழைமையான தம் நிறம் கருகி அம்முல்லை மலர்களிலே பாய்ந்து; தும்பி துகைத்தன - வண்டுகள் சிதைத்தன.

விளக்கம் : போது : அலரும் முகை. இம் மூன்று செய்யுட்களினும் இயற்கை நிகழ்ச்சிகளைச் சீவகன் நிலையுடன் குறித்துக் கூறினார் தற்குறிப்பேற்றங் கருதி. தும்பி ஆர்ந்து என்றும் பாடம். ( 63 )

1229. தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தறொடே லெம்மில்
பீடேந் தரிவையரிற் பெயர்கென் றூடு மடவார்போற்
கோடேந்து குஞ்சரங்க டெருட்டக் கூடா பிடிநிற்குங்
காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலிற் கழலானே.

பொருள் : தோடு ஏந்து பூங்கோதை வேண்டேம் - இதழ் கொண்ட இம் மலர்க் கோதைகளை யாம் விரும்பிலேம்; கூந்தல் தொடேல் - (ஆதலின்) எங் கூந்தலைத் தொடாதே; எம் இல் - (நீ வழி தவறினை) இது எம் இல்லம்; பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க - சிறப்புற்ற பரத்தையர் இல்லத்தை அடைக; என்று ஊடும் மடவார்போல் - என்றுரைத்துப் பிணங்கும் மங்கையரைப் போல; கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட - கொம்புகளையுடைய களிறுகள் தெளிவிக்கவும்; பிடிகூடா நிற்கும் - பிடிகள் தெளியாமற் பிணங்கி நிற்கின்ற, காடு ஏந்து பூஞ் சாரல் - காடுகள் பொருந்திய அழகிய சாரலை; கழலான் காலின் கடந்தான் - கழலணிந்த சீவகன் காலாலே கடந்தான்.

விளக்கம் : இதற்குமுன் காலால் நடந்தறியான் என்பது தோன்றக், காலிற் கடந்தான் என்றார். பூங்கோதை வேண்டேம் என்றது, கையுறைமறுத்தல் என்னும் ஓர் அகத்துறையை நினைப்பிக்கின்றது. குஞ்சரங்கள் என்னும் பொதுப்பெயர் ஈண்டுப் பெண்ணொழித்து நின்றது. கூடா : என்பது விகுதி குன்றிய எதிர்மறை வினையெச்சம் : கூடாமல் என்பது பொருள். ( 64 )

வேறு

1230. காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பா
னாழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான்
வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான்
மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே.

பொருள் : காழகம் ஊட்டப்பட்ட காரிருள் துணியும் ஒப்பான் - கருமை ஊட்டப்பட்டதோர் இருளின் துண்டமும் போன்றவன்; ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கியுள்ளான் - ஆழமான வளையில் உள்ள உடும்பைப் பிடித்திழுத்தலால் மார்பு ஒடுங்கியவன்; வாழ் மயிர்க்கரடி ஒப்பான் - மயிர் வாழ்தலாற் கரடி போன்றவன்; வாய்க்கு இலை அறிதல் இல்லான் - வாய்க்கு வெற்றிலை கண்டறியாதவன்; மேழகக் குரலினான்- ஆட்டின் குரல்போலும் குரலினன் (ஆகிய); ஓர் வேட்டுவன் தலைப்பட்டான் - ஒரு வேடன் எதிர்ப்பட்டான்.

விளக்கம் : வாண்மயிர் எனவும், ஏழகம் எனவும் பாடம். காழகம் - கருமை. இருட்டுணி - இருளினது துண்டு. வாய்க்கிலை : வெற்றிலை. வாய்க்கு + இலை = வாய்க்கிலை. வாய்க்குத் தகுதியுடைய இலை. எனவே வெற்றிலையை யுணர்த்தியது. மேழகம் - ஆட்டுக்கிடாய். ( 65 )

1231.கொடிமுதிர் கிழங்கு தீந்தேன்
கொழுந்தடி நறவொ டேந்திப்
பிடிமுதிர் முலையி னாடன்
றழைத்துகிற் பெண்ணி னோடுந்
தொடுமரைத் தோலன் வில்லன்
மரவுரி யுடையன் றோன்ற
வடிநுனை வேலி னான்கண்
டெம்மலை யுறைவ தென்றான்.

பொருள் : கொடிமுதிர் கிழங்கு தீந் தேன் கொழுந்தடி நறவொடு ஏந்தி - கொடியில் முற்றிய கிழங்கும் இனிய தேனும் கொழுத்த ஊனும் கள்ளும் ஏந்தி; பிடிமுதிர் முலையினாள் தழைத் துகில் தன் பெண்ணினோடும் - பிடி போன்ற நடையினாளும் முதிர்ந்த முலையினாளும் தழையாடையுடையவளும் ஆகிய தன் மனைவியுடன்; தொடு மரைத்தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற - புனைந்த மான்தோலுடனும் வில்லுடனும் மரவுரியுடனும் காணப்பட; வடிநுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான் - கூரிய முனையுடைய வேலனாகிய சீவகன் கண்டு, நீ எம்மலையில் வாழ்பவன் என்று வினவினான்.

விளக்கம் : கொழுந்தடி - கொழுவிய ஊன். நறவு - கள். முதிர்முலையினாள் : வினைத்தொகை. பெண், ஈண்டு மனைவி என்னும் பொருள்பட நின்றது. தோலன் - செருப்பினன், மான் தோலால் செய்த செருப்பு என்க. மரவுரியாகிய உடையினையுடையன் என்க. வேலினான் : சீவகன். ( 66 )

1232. மாலைவெள் ளருவி சூடி
மற்றிதா தோன்று கின்ற
சோலைசூழ் வரையி னெற்றிச்
சூழ்கிளி சுமக்க லாற்றா
மாலையந் தினைகள் காய்க்கும்
வண்புன மதற்குத் தென்மேன்
மூலையங் குவட்டுள் வாழுங்
குறவருட் டலைவ னென்றான்

பொருள் : மாலைவெள் அருவி சூடி இதா தோன்றுகின்ற - மாலைபோல வெள்ளிய அருவியை அணிந்த இதோ காண்குறுகின்ற; சோலைசூழ் வரையின் நெற்றி - சோலை சூழ்ந்த மலையின் உச்சியிலே; சூழ்கிளி சுமக்கல் ஆற்றா மாலை அம் தினைகள் காய்க்கும் வண்புனம் - சூழ்ந்து வரும் கிளிகள் சுமக்க இயலாத, மாலை போல அழகிய தினைகள் விளைந்திருக்கும், வளமுறு புனம் ஒன்று உண்டு; அதற்குத் தென்மேல் மூலை - அப் புனத்திற்குத் தென் மேலே மூலையிலே உள்ள; அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் - அழகிய மலையுச்சியிலே வாழும் வேடர்களுக்குத் தலைவன் யான் என்று அவ் வேடன் விளம்பினான்.

விளக்கம் : மற்று : அசை. இதா : திசைச்சொல். இதா - மரூஉமுடிபுமாம். நெற்றி - உச்சி. மாலையந்தினைகள் - ஒழுங்குபட்ட தினைக்கதிர்கள் எனினுமாம். வண்புனம் - வளப்பமுடைய கொல்லை. தென்மேல் மூலை - தென்மேற்காகிய கோணம். ( 67 )

1233. ஊழினீ ருண்ப தென்னென்
றுரைத்தலு முவந்து நோக்கி
மோழலம் பன்றி யோடு
முளவுமாக் காதி யட்ட
போழ்நிணப் புழுக்க றேனெய்
பொழிந்துகப் பெய்து மாந்தித்
தோழயாம் பெரிது முண்டுந்
தொண்டிக்க ளிதனை யென்றான்.

பொருள் : ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் - முறைமையால் நீர் உண்பது யாது என்று வினவினானாக; உவந்து நோக்கி - விரும்பிப் பார்த்து; தோழ! - தோழனே!; மோழல் அம் பன்றியோடு முளவுமாக் காதி அட்ட போழ் நிணப் புழுக்கல் - ஆண் பன்றியுடன் எய்ப்பன்றியையும் கொன்று சமைத்த அரிந்த ஊனாகிய புழுக்கலை; தேன் நெய் பொழிந்து உகப்பெய்து மாந்தி - தேனாகிய நெய்யை மிகவும் வார்த்துத்தின்று; தொண்டிக்கள் இதனை யாம் பெரிதும் உண்டும் என்றான் - (பின்னர்) நெல்லாற் சமைத்த கள்ளாகிய இதனையாம் மிகுதியும் பருகுவோம் என்று வேடன் விளம்பினான்.

விளக்கம் : ஊழ் - முறைமை. மோழலம் பன்னி - ஆண்பன்றி. முழவுமா - எய்ப்பன்றி : முள்ளம்பன்றி. காதி - கொன்று. போழ்நிணப்புழுக்கல் : வினைத்தொகை. உகப்பெய்து - மிகப்பெய்து. தொண்டிக்கள் - நெல்லாலாக்கிய கள். ( 68 )

1234. ஊனொடு தேனுங் கள்ளு
முண்டுயிர் கொன்ற பாவத்
தீனராய்ப் பிறந்த திங்ங
னினியிவை யொழிமி னென்னக்
கானில்வாழ் குறவன் சொல்லுங்
தகள்ளொடூன் றேன்கை விட்டா
லேனையெம் முடம்பு வாட்ட
லெவன்பிழைத் துங்கொ லென்றான்.

பொருள் : ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து - (முற்பிறப்பில்) ஊனையும் தேனையும் கள்ளையும் உண்டு உயிரையும் கொன்ற தீவினையால்; இங்ஙன் ஈனராய்ப் பிறந்தது - இவ்விடத்திலே இழிந்த வேடராய்ப் பிறக்க நேர்ந்தது; இனி இவை ஒழிமின் என்ன - இனி இவற்றைக் கைவிடுங்கள் என்று கூற; கானில்வாழ் குறவன் சொல்லும் - காட்டு வாழ்வுடைய வேடன் விளம்புகிறான்; கள்ளொடு ஊன் கைவிட்டால் எவன் பிழைத்தும் - கள்ளையும் ஊனையும் நீக்கினால் எவ்வாறு உயிர் வாழ்வோம்; எம் உடம்பு வாட்டல் ஏனை (வாட்டுக) என்றான் - (ஆகையால்) எம் உடம்பை வாட்டற்க; மற்றோர் உடம்பை வாட்டுக என்றான்.

விளக்கம் : ஈனர் - இழித்தவர்; வேட்டுவர் என்றவாறு. இவை - ஊன் உண்ணல் தேன் கள் உண்ணல் உயிர் கொல்லல் ஆகிய இத்தீயவற்றை. ஏனை என்பதற்கு மற்று எனப் பொருள் கொள்க. அவ்வுடம்பு வாட்டத்தினின்று எவ்வாறு தப்புவோம் என்றும் பொருள் கொள்ளலாம். ( 69 )

1235. ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைத னன்றோ
வூன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுரைத னன்றோ
வூன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்தி டென்ன
வூன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான்.

பொருள் : ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ? - ஊனைச் சுவை பார்த்து உடம்பைப் பெருக்கி நரகத்தில் வாழ்வது நல்லதோ?; ஊன் தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ? - ஊனைத் தின்னாமல் உடம்பை வருத்தி வானவராய் வாழ்வது நல்லதோ?, ஊன்றி இவ் இரண்டினுள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன - ஆராய்ந்து இந்த இரண்டின் உள்ளும் நல்லதை நீ கூறுக என்று வினவ; ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான் - ஊனைத் தின்னாமல் நீங்கி வானவனாவதே நன்மை என்று வேடன் சொன்னான்.

விளக்கம் : வீக்கி - பருக்கச்செய்து. தினாது - தின்னாது. ஊன்றி - கூர்ந்து பார்த்து. உறுதி - நல்லது. புத்தேள் - தேவர். ( 70 )

1236. உறுதிநீ யுணர்ந்து சொன்னா
யுயர்கதிச் சேறி யேடா
குறுகினா யின்ப வெள்ளங்
கிழங்குணக் காட்டு ளின்றே
யிறைவனூற் காட்சி கொல்லா
வொழுக்கொடூன் றுறத்தல் கண்டா
யிறுதிக்க ணின்பந் தூங்கு
மிருங்கனி யிவைகொ ளென்றான்.

பொருள் : நீ உறுதி உணர்ந்து சொன்னாய் - நீ நலம் தெரிந்து கூறினை; ஏடா, உயர்கதி சேறி - (ஆதலில்) ஏடா! நீ மேல் நிலை அடைவை: இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய் - அருகன் ஆகமத்திற் காணப்படுவன கொல்லா விரதமும் ஊனை நீக்கலும் ஆகும் காண்; காட்டுள் கிழங்கு உண இன்றே இன்ப வெள்ளம் குறுகினாய் - காட்டிலே கிழங்கினை உண்பதனால் இன்றே இன்பப் பெருக்கை அடைந்தாய்; இறுதிக்கண் இன்பம் தூங்கும் இருங்கனி இவை கொள் என்றான் - நினக்கு இறுதிக் காலத்தே இன்பம் செறியும் பெருங்கனி இவையே என்று கொள்வாய் என்று சீவகன் செப்பினான்.

விளக்கம் : ஏடா : முன்னிலை ஒருமை விளி. உயர்கதி - தேவகதி. சேறி - செல்வாய். தெளிவு பற்றி, இன்ப வெள்ளங் குறுகினாய் என்ற இறந்த காலத்தாற் கூறினான். காட்டுள் கிழங்குண இன்றே இன்பவெள்ளம் குறுகினாய் என மாறுக. இறைவனூல் - அருகாகமம். ( 71 )

1237. என்றலுந் தேனு மூனும் பிழியலு மிறுக நீக்கிச்
சென்றடி தொழுது செல்கென் றேம்பெய்நீள் குன்றமென்று
குன்றுறை குறவன் போகக் கூரெரி வளைக்கப் பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான்.

பொருள் : என்றலும் - என்றுரைத்தவுடன்; தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி - தேனையும் ஊனையும் கள்ளையும் முற்றும் துறந்து; சென்று அடிதொழுது - போய் அவன் அடியைத் தொழுது; தேன்பெய் என் நீள்குன்றம் செல்கு என்று - தேன்சொரியும் என்னுடைய பெருமலைக்குச் செல்வேன் என்றுரைத்து; குன்று உறை குறவன் போக - மலை வாழும் வேடன் சென்ற பிறகு; கூர் எரி வளைக்கப்பட்ட பஞ்சவர்போல நின்ற - (அரக்கு மாளிகையிற்) பெருந்தீயினால் வளைக்கப் பெற்ற தருமன் முதலான ஐவரையும் போலக் காட்டுத் தீயால் வளைப்புற்று நின்ற; பகட்டு இனம் பரிவு தீர்த்தான் - யானைத் திரளின் துன்பத்தை நீக்கினான்.

விளக்கம் : சுதஞ்சணன் மலைக்கும் அரணபாதத்திற்கும் நடுவே இவ்விரண்டறமும் செய்தான். மழையைப் பெய்வித்து யானைகளின் வருத்தத்தை நீக்கினான் என்பார் நச்சினார்க்கினியர். ( 72 )

வேறு

1238. இலங்கொளி மரகத மிடறி யின்மணி
கலந்துபொன் னசும்புகான் றொழுகி மானினஞ்
சிலம்புபாய் வருடையொ டுகளுஞ் சென்னிநீள்
விலங்கல்சென் றெய்தினான் விலங்கன் மார்பினான்.

பொருள் : இன்மணி கலந்து பொன் அசும்பு கான்று சிலம்பு ஒழுகி - இனிய மணிகள் பொன்னுடன் கலந்து ஊற்றுப் பெருகி மலைமீது பரந்து; மான் இனம் இலங்கு ஒளி மரகதம் இடறி -மான்திரள் விளங்கும் ஒளியையுடைய மரகத்தை இடறி; பாய் வருடையொடு உகளும் - பாயும் மலையாடுகளுடனே துள்ளித் திரிகின்ற; நீள் சென்னி விலங்கல் மார்பினான் சென்று எய்தினான் - நீண்ட முடியை உடைய அரணபாதம் என்னும் மலையை மலையனைய மார்பினான் சென்றடைந்தான்.

விளக்கம் : கான்று - கக்கி, பெருகி. அசும்பு - ஊற்று. மரகதம் - பச்சைமணி. இன்மணி - காட்சிக்கினிய மணி. சிலம்பு - மலை. வருடை - மலையாடு. சென்னி - உச்சி, விலங்கல் - மலை; ஈண்டு அரணபாதமலை. ( 73 )

1239. அந்தர வகடுதொட் டணவு நீள்புகழ்
வெந்தெரி பசும்பொனின் விழையும் வெல்லொளி
மந்திர வாய் மொழி மறுவின் மாதவ
ரிந்திரர் தொழுமடி யினிதி னெய்தினான்.

பொருள் : அந்தர அகடு தொட்டு - வானின் நடுவைத் தீண்டி; அணவு நீள்புகழ் - பொருந்தும் பெரும் புகழையும்; வெந்து எரி பசும் பொனின் - தீயில் வெந்து ஒளிரும் புதிய பொன்போல; விழையும் வெல்ஒளி - விரும்பத் தகும். பிற ஒளிகளை வெல்லும் ஒளியினையும்; மந்திர வாய்மொழி - மந்திரமாகிய வாய்மொழியினையுமுடைய; மறுஇல் மாதவர் - குற்றம் அற்ற முனிவரரின்; இந்திரர் தொழுமடி - வானவர் வணங்கும் அடியினை; இனிதின் எய்தினான் - வருந்தாமல் அடைந்தான்.

விளக்கம் : இச் செய்யுளால் மலையடிவாரத்தில் முனிவர்களை முதலில் வணங்கினான் என்றறிக. அந்தரம் - வானம். அகடு - நடுவிடம். அணவுதல் - வந்தெய்துதல். விழையும் : உவமவுருபு. மந்திரவாய் மொழி - மந்திரமாகிய வாய்மொழி என்க. மாதவர் - அருக சமயத்துறவியர். ( 74 )

வேறு

1240. முனிவரு முயன்று வான்கண்
மூப்பிகந் திரிய வின்பக்
கனிகவர் கணனு மேத்தக்
காதிகண் ணரிந்த காசி
றனிமுதிர் கடவுள் கோயி
றான்வலங் கொண்டு செல்வான்
குனிதிரை முளைத்த வெய்யோன்
குன்றுசூழ் வதனை யொத்தான்.

பொருள் : முனிவரும் வான்கண் மூப்பு இகந்து இரிய இன்பக் கனிகவர் கணனும் முயன்று ஏத்த - முனிவர்களும் வானிடத்துத் தமக்கு வரும் மூப்புக் கைவிட்டுக் கெடும்படி யாக, ஆங்கே இன்ப கனியை நுகரும் வானவரும் முயன்று வாழ்த்த; காதி கண் அரிந்த காசி இல் தனி முதிர் கடவுள் கோயில் - உபாதிகளைத் தன்னிடத்தே நில்லாதவாறு வேரறுத்த குற்றம் அற்ற அருகன் கோயிலை; வலம் கொண்டு செல்வான் - வலம் கொண்டு செல்கிற சீவகன்; குனிதிரை முளைத்த வெய்யோன் - உயர்ந்து தாழும் அலையுடைய கடலிலே தோன்றிய ஞாயிறு; குன்று சூழ்வதனை ஒத்தான் - மேருவைச் சூழுந்தன்மையை ஒத்தான்.

விளக்கம் : வான் - தேவருலகம். கணன் - கணம்; கூட்டம். காதி - ஞானாவரணீயம் முதலிய எட்டும்,. தனிமுதிர் கடவுள் - ஒப்பற்ற பழைய இறைவன் : அருகன். குன்று ஈண்டு மேரு. ( 75 )

1241. தண் கயம் குற்ற போதும்
தாழ்சினை இளிந்த வீயும்
வண் கொடிக் கொய்த பூவும்
வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித்
திண் புகழ் அறிவன் பாதம்
திருந்து கைத் தலத்தின் ஏற்றிப்
பண்பு கொள் குணம் கொள்
கீதம் பாணியில் பாடுகின்றான்.

பொருள் : தண்கயம் குற்ற போதும் - குளிர்ந்த குளத்திலே பறித்த போதினையும்; தாழ்சினை இளிந்த வீயும் - தாழ்ந்த கிளைகளில் இணுங்கின மலரையும்; வண்கொடி கொய்த பூவும் - செழுவிய கொடிகளிற் பறித்த பூவையும்; மட்டு வார்ந்து உயிர்ப்ப ஏந்தி - தேன் பிலிற்றிச் சிந்த எடுத்து; திண்புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி - திணிந்த புகழையுடைய அருகன் திருவடியை அழகிய கைகளால் இட்டு வணங்கி; பண்புகொள் குணம்கொள் கீதம் - இயல்பு கொண்ட குணங்களைத் தன்னிடத்தே கொண்ட இசையை; பாணியின் பாடுகின்றான் - தாளத்தோடே பாடுகின்றான்.

விளக்கம் : குற்றபோது - பறித்த மலர். இளிந்த வீ - இணுங்கின (பறித்த) மலர். மட்டு - தேன். அறிவன் - அருகக் கடவுள். பண்பு - இயல்பு. குணம் - இனிமைத்தன்மை என்க. கீதம் - இசை. பாணி - தாளம். ( 76 )

வேறு

1242. ஆதி வேதம் பயந்தோய்நீ யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ
நீதி நெறியை யுணர்ந்தோய்நீ நிகரில் காட்சிக் கிறையோய்நீ
நாத னென்னப் படுவோய்நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாத கமலந் தொழுவேங்கன் பசையாப் பவிழப் பணியாயே.

பொருள் : ஆதி வேதம் பயந்தோய் நீ! - முதல் மறையை நல்கினை நீ!; அலர்பெய் மாரி அமைந்தோய் நீ! - மலர் மாரியிலே பொருந்தினை நீ; நீதி நெறியை உணர்ந்தோய் நீ! - நன்னெறியை அறிந்தனை நீ!; நிகர்இல் காட்சிக்கு இறையோய் நீ - ஒப்பில்லாத அறிவுக்குத் தலைமையை நீ!; நாதன் என்னப்படுவோய் நீ!- தலைவனென்று கூறப்படுவோய் நீ!; உன் பாத கமலம் தொழுவேங்கள் - (இவ்வாறு) நின் திருவடித் தாமரையை வணங்குவேமுடைய; நவைசெய் பிறவிக் கடலகத்து - குற்றந்தரும் பிறவிக் கடலிலே; பசை யாப்பு அவிழப் பணியாய் - பற்றாகிய தொடர்ச்சி நீங்கும் படி திருவுள்ளம் பற்றுவாய்.

விளக்கம் : ஆதி வேதம் : கொலை முதலியன கூறாத மறை. ஆதிவேதம் என்றது, அருகாகமத்தை, வேதமுதல்வன் விளங்கொளி ஓதிய வேதத்தொளி என்றார் இளங்கோவடிகளாரும் (சிலப். 10. 189 - 90). நிகரில் காட்சி என்றது, நற் காட்சியை. நாதன் - இறைவன். நவை - துன்பம். பசையாப்பு - ஆசைத்தொடர்பு. ( 77 )

1243. இன்னாப் பிறவி யிகந்தோய்நீ
யிணையி லின்ப முடையோய்நீ
மன்னா வுலக மறுத்தோய்நீ
வரம்பில் காட்சிக் கிறையோய்நீ
பொன்னா ரிஞ்சிப் புகழ்வேந்தே
பொறியின் வேட்கைக் கடலழுந்தி
யொன்னா வினையி னுழல்வேங்க
ளுயப்போம் வண்ண முரையாயே.

பொருள் : பொன் ஆர் இஞ்சிப் புகழ் வேந்தே! - பொன்னாற்செய்த மதில் சூழ்ந்த இருப்பிடத்தில் உள்ள புகழ்மிகும் இறையே; இன்னாப் பிறவி இகந்தோய் நீ! - துன்பப் பிறவியைக் கடந்தனை நீ!; இணைஇல் இன்பம் உடையோய் நீ! - ஒப்பற்ற இன்பம் உடையை நீ!; மன்னா உலகம் மறுத்தோய் நீ - நிலையற்ற துறக்கத்தை வெறுத்தனை நீ!; வரம்புஇல் காட்சிக்கு இறையோய் நீ! - எல்லையற்ற காட்சிக்குத் தலைமையை நீ!; பொறியின் வேட்கைக் கடல் அழுந்தி - ஐம்பொறி வேட்கையாகிய கடலிலே முழுகி; ஒன்னா வினையின் உழல்வேங்கள் - பொருந்தாத தீவினையாலே வருந்தும் யாங்கள்; உயப்போம் வண்ணம் உரையாய் - வாழ்ந்துபோம் வகையை அருளிச் செய்வாய்.

விளக்கம் : இணையில் இன்பம் - அநந்த சுகம். மறுத்தல் - இன்பத்தைத் தவிர்த்தல். இன்னாப்பிறவி - துன்பத்திற்குக் காரணமான பிறப்பு. மன்னா உலகம் - நிலையுதலில்லாத உலகம். இதற்கு நிலைபேறுடைய சுவர்க்கம் என்று பொருள் கூறுவர். என்னை? அவர் உலகம் நிலையுடையது என்னும் கொள்கையுடையராகலான். இதனை மூவா முதலா உலகம் என்ற தொடருக்கு (1) ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் உரையானும் உணர்க. ( 78 )

1244. உலக மூன்று முடையோய்நீ
யொண்பொ னிஞ்சி யெயிலோய்நீ
திலக மாய திறலோய்நீ
தேவரேத்தப் படுவோய்நீ
யலகை யில்லாக் குணக்கடலே
யாரு மறியப் படாயாதி
கொலையி லாழி வலனுயர்த்த
குளிர்முக் குடையி னிழலோய்நீ.

பொருள் : அலகை இல்லாக் குணக் கடலே! - அளவில்லாத பண்புறு கடலே!; உலகம் மூன்றும் உடையோய் நீ! - மூவுலகையும் உடையை நீ; ஒண்பொன் இஞ்சி எயிலோய் நீ! - சிறந்த பொன்னெயிலுடையை நீ! - திலகம் ஆய திறலோய் நீ! - சிறப்புடைய வரம்பிலா ஆற்றலுடையாய் நீ!; தேவர் ஏத்தப் படுவோய் நீ! - வானவரால் வாழ்த்தப்படுவோய் நீ!; கொலைஇல் ஆழி வலன் உயர்த்த - கொலை செய்யாத அறவாழியை வெற்றிக்காக எடுத்த; குளிர்முக்குடையின் நிழலோய் நீ! - தண்ணிய முக்குடை நீழலில் உள்ளாய் நீ!; ஆரும் அறியப்படாய் ஆதி - நீ எல்லோராலும் அறியப்படுவாய் ஆகின்றாய்.

விளக்கம் : முக்குடை : சீவக. 139 அடிக்குறிப்பை நோக்குக. படாய் செய்யாய் என்னுஞ் சொல் செய்யென் கிளவியாய் நின்றது. இவை மூன்றும் தேவபாணிக் கொச்சக ஒருபோகு எனப்படும். இவற்றால் இறைவனைப் பாடினான். ( 79 )

வேறு

1245. அடியுலக மேதிதி யலர்மாரி தூவ
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரே
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று
கடிமதிலுங் கட்டழித்த காவலனீ யன்றே.

பொருள் : அடி உலகம் ஏத்தி அலர்மாரி தூவ - அடியை உலகம் போற்றி மலர்மழை பெய்ய; முடி உலகம் மூர்த்தி உற நிமிர்ந்தோன் யார்? - முடிந்த வுலகிலே இறைவனைக் காணும்படி முத்தியை அடைந்தவன் யாவன்!; முடி உலகம் மூர்த்தி உற நிமிர்ந்தோன் - மூன்று கடிமதிலும் கட்டழித்த காவலன் நீ அன்றே ! - காவலையுடைய மதிலையும் காவல் அழித்த காவலன் நீயே அன்றே?

விளக்கம் : உலகம் : ஆகுபெயர். அலர்மாரி - பூவாகிய மழை என்க. முடியுலகம் : வினைத்தொகை. நிமிர்ந்தவன் - முத்தியை அடைந்தவன். மூன்று கடிமதில் - காமம் வெகுளி மயக்கம் என்கின்ற மூவகை மதில். இவை வீடுபேற்றிற்குத் தடையாய் நிற்றலின் மதில் என்றார். ( 80 )

1246. முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றிற்
றரணிமேற் றந்தளித்த தத்துவன்றான் யாரே
தரணிமேற் றந்தளித்தான் றண்மதிபோ னேமி
யரணுலகிற் காய வறிவரனீ யன்றே.

பொருள் : முரண் அவிய வென்று - (மூன்று மதிலையும்) மாறுபாடு கெட வென்று; மூன்றின் - உலகம் மூன்றினையும்; தரணிமேல் தந்து அளித்த - அங்கம் பூர்வம் ஆதியென்கின்ற மூன்று ஆகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் உலகிலே தந்து வெளிப்படக் கூறிய; தத்துவன்தான் யார்?- உண்மைப் பொருளாவான் யார்தான்!; தரணிமேல் தந்து அளித்தான் - ; தண்மதிபோல் நேமி - குளிர்ந்த திங்கள்போலும் அறவாழியையுடைய; உலகிற்கு அரண் ஆய அறிவுவரன் நீ அன்றே - உலகிற்குக் காவலாக உள்ள அறிவுக்கு வரனாகவுள்ள நீயே அன்றோ?

விளக்கம் : அங்கம் முதலியன சைனாகமங்கள். முரண் - மாறுபாடு, மூன்றின் - ஆகமம் மூன்றானும்; அவையாவன: அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம் என்பன. தத்துவன் - உண்மைப் பொருளாயுள்ளவன். அறிவரன் - அறிவுக்கு வரனாயுள்ளவன். (81)

1247. தீராவினை தீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்து
வாராக் கதியுரைத்த வாமன்றான் யாரே
வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த
காரார்பூம் பிண்டிக் கடவுணீ யன்றே.

பொருள் : தீரா வினைதீர்த்து - நீங்காத வினையை நீக்கி; தீர்த்தம் தெரிந்து உய்த்து - ஆகமத்தை ஆராய்ந்தருளி; வாராக்கதி உரைத்த வாமன்தான் யார்? - மேல் வருதலில்லாத வீட்டினை உரைத்த வாமன் யார்தான்?; வாராக்கதி உரைத்த வாமன் - மலர்; ததைந்த காரார் பூம்பிண்டிக் கடவுள் நீ அன்றே?- மலர்கள் நிறைந்த, கார்காலத்தில் தழைக்கும் அழகிய அசோகின் நீழலின் அமர்ந்த கடவுளாகிய நீயே அன்றோ?

விளக்கம் : பா : முற்கூறியவை. கந்தருவ மார்க்கத்தால் இடை மடங்கின. இச் செய்யுள் மூன்றும் சாரணரைப் பாடியவை. சாரணரென்பார் அக் காலத்துத் திருக்கோயிலுக்கு வந்திருந்த முனிவர் என்பர். ( 82 )

வேறு

1248. அம்மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர்
பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின்
செம்மல்போய்ப் பல்லவ தேய நண்ணினான்.

பொருள் : அம்மலைச் சினகரம் வணங்கி - அரணபாதம் என்னும் அம் மலையிலுள்ள திருக்கோயிலை வணங்கி; பண்ணவர் பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னர் - ஆண்டுள்ள சாரணருடைய மலரனைய சிவந்த அடியைப் புகழ்ந்த பிறகு; வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின் - மலைத்தெய்வமான இயக்கி விருந்தளித்த பின்னர்; செம்மல்போய்ப் பல்லவ தேயம் நண்ணினான் - சீவகன் சாரலூடே சென்று பல்லவ நாட்டை அடைந்தான்.

விளக்கம் : அம்மலை என்றது அரணபாதம் என்னும் அம்மலையை அம்மலையை என்றவாறு. சினகரம் - அருகன்கோயில். பண்ணவர் - சாரணர். மலைத்தெய்வதம் - அம்மலையில் உறையும் இயக்கி. செம்மல் : சீவகன். தேயம் - நாடு. ( 83 )

1249. அரியலார்ந் தமர்த்தலி னனந்தர் நோக்குடைக்
கரியவாய் நெடியகட் கடைசி மங்கையர்
வரிவரால் பிறழ்வயற் குவளை கட்பவ
ரிருவரை வினாய்நகர் நெறியின் முன்னினான்.

பொருள் : அரியல் ஆர்ந்து அமர்த்தலின் - மதுவை உண்டு பொருதலின்; அனந்தர் நோக்கு உடை - மயங்கிய பார்வையுடைய; கரியவாய் நெடிய கண் கடைசி மங்கையர் - கொடிய வாயையும் நீண்ட கண்களையும் உடைய உழத்தியராகிய; வரிவரால் பிறழ்வயல் குவளை கட்பவர் இருவரை - வரியையுடைய வரால்கள் பிறழும் வயலிலே குவளையாகிய களையைப் பறிக்கும் இரு மங்கையரை; வினாய் நெறியின் நகர் முன்னினான் - வழிவினவி, அவ்வழியே சென்று பல்லவ நாட்டின் தலைநகரை நெருங்கினான்.

விளக்கம் : இருவரையும் தனித்தனியே வினவினான் கூறிய வழி சரியா என்று தெரிந்துகொள்ள. குவளையல்லது களையில்லை என்க. கட்பவர் - களைபவர். வினாய் - வினவி; கேட்டு. ( 84 )

1250. அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப்
பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக்
கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகை
பொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே.

பொருள் : அன்னமும் மகன்றிலும் அணிந்து - அன்னத்தையும் மகன்றிலையும் அணியாகக் கொண்டு; தாமரைப் பன்மலர்க் கிடங்குசூழ் - தாமரை முதலிய பல மலர்களையுடைய அகழி சூழ்ந்த; பசும்பொன் பாம்பு உரிக் கன்னி மூதெயில் - பைம்பொன்னால் இயற்றப்பட்ட ஆளோடிகளையுடைய அழிவற்ற பழம்புரிசை; கடல் உடுத்த காரிகை - கடலை ஆடையாக உடுத்த நிலமகள்; பொன் அணிந்த இருந்தெனப் பொலிந்து தோன்றும் - பூண் அணிந்திருந்தாற்போல அழகுடன் காணப்படும்

விளக்கம் : மகன்றில் : ஒருவகைப் பறவை; ஆணும் பெண்ணும் பிரிவில்லாதன; மருத நிலத்திற்குரியன. பாம்புரி - மதிலின் அடியில் உள்ளவை; ஆளோடிகள் என்றும் பெயர் பெறும். பொன் : கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது. மூதெயில் ... தோன்றுமே என வினைமுடிவு செய்க. ( 85 )

1251. அகிறரு கொழும்புகை மாடத் தாய்பொனின்
முகிறலை விலங்கிய மொய்கொ ணீள்கொடிப்
பகறலை விலங்குசந் திராபம் பான்மையி
னிகறலை விலங்குவேற் காளை யெய்தினான்.

பொருள் : அகில்தரு கொழும்புகை மாடத்து - அகில் உண்டாக்கின நல்ல புகையையுடைய மாடத்திலே; முகில்தலை விலங்கிய ஆய்பொனின் மொய்கொள் நீள்கொடி - முகில் அங்கு நின்றும் விலகற்குக் காரணமான, ஆய்ந்த பொன்னாலான நெருங்கிய நீண்ட கொடி; பகல்தலை விலங்கு சந்திராபம் - ஞாயிற்றையும் அதனிடத்தே சென்று விலக்கும் சந்திராபம் என்னும் நகரை; இகல்தலை விலங்கு வேல்களை பான்மையின் எய்தினான் - பகைவரைப் போரிலே விலக்கும் வேலேந்திய சீவகன் முறைப்படி அடைந்தான்.

விளக்கம் : முகில் இடத்தினின்றும் விலகுதற்குக் காரணமான நீள் கொடி என்க. பகல் - ஞாயிறு. சந்திராபம் - ஒருநகரம். காளை : சீவகன். ( 86 )

1252. மலரணி மணிக்குட மண்ணு நீரொடு
பலர்நலம் பழிச்சுபு பரவ வேகினா
னலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நக.
ருலகளந் தானென வுள்புக் கானரோ.

பொருள் : அலர் கதிர் கரும்பிளை மடுப்ப - எழுகின்ற கதிரையுடைய ஞாயிற்றைக் கரிய காக்கை வலமாக நெருங்க; ஆய்நகர் உலகு அளந்தான் என உள்புக்கான் - சந்திராப நகரைக் கண்டு உலகளந்தவனைப்போல உள்ளே சென்றவன்; மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு - மலரணிந்த, மணிகள் இழைத்த குடத்தில் உள்ள மண்ணும் நீரினால்; பலர் நலம்பழிச்சுபு பரவ ஏகினான் - பலரும் ஆட்டி இவனுடைய பண்பைப் புகழ்ந்தேத்தச் சென்றான்.

விளக்கம் : கரும்பிள்ளை - காக்கை. சீவகன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, மேற்கிருந்த காகம் ஞாயிற்றின் மேற்செல்லவே காகம் வலமாயிற்று. இந் நிமித்தத்தின் பயனால் மண்ணு நீரால் ஆட்டும் வரவேற்புக் கிடைத்தது. மழகளிற் றெருத்தில் தந்த மணிக்குடம் மண்ணு நீரால் - அழகனை மண்ணுப் பெய்தாங்கு (சீவக. 1345) என்பர் பின்னும். இனி நாட்டிற்கும் ஊரிற்கும் தனித்தனியே இரண்டு நிமித்தமாக்கி யுரைப்பாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். காகம் வலமாதல் நாட்டிலும், மண்ணு நீராட்டல் நகரினும் நிமித்தமெனக் கொள்ளல் வேண்டும் அவர் கருத்துப்படி. ( 87 )

வேறு

1253. சந்தனக் காவு சூழ்ந்து சண்பக மலர்ந்த சோலை
வந்துவீழ் மாலை நாற்றி மணியரங் கணிந்து வானத்
திந்திர குமரன் போல விறைமக னிருந்து காண
வந்தர மகளி ரன்னார் நாடக மியற்று கின்றார்.

பொருள் : சந்தனக் காவு சூழ்ந்து - சந்தனக் காவினைச் சூழ; சண்பகம் மலர்ந்த சோலை - சண்பகம் பூத்த பொழிலிலே; வந்துவீழ் மாலை நாற்றி - நிலத்தில் வந்து விழும் மாலைகளைத் தூக்கி; மணி அரங்கு அணிந்து - மணிகள் இழைத்த மேடையை அணிசெய்து; வானத்து இந்திர குமரன்போல இறைமகன் இருந்து காண - வானத்திலுள்ள இந்திரன் மகனான் சயந்தன் போல அரசன் மகன் அமர்ந்து காணுமாறு; அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார் - விண்ணவர் மகளிர் போன்றார் நாடகம் நடத்துகின்றனர்.

விளக்கம் : சீவகன் செல்லும்போது நகரில் நாடகம் நடைபெறுகிறதென்று கொள்க. சந்தனக்காவு - சந்தனச்சோலை. அரங்கு - கூத்தாடு மேடை. இந்திரகுமரன் - சயந்தன். இறைமகன் - உலோகபாலன். அந்தர மகளிரன்னார் - தேவமகளிரை ஒத்த கூத்தியர். காவு - சோலை. நாற்றி - தொங்கவிட்டு. இஃது பிறவினை. நான்று என்பது தன்வினை. இந்திரகுமரன் போல என்றதற்கு ஏற்ப, அந்தர மகளிரன்னார் என்றார். ( 88 )

1254. குழலெடுத் தியாத்து மட்டார்
கோதையிற் பொலிந்து மின்னு
மழலவிர் செம்பொற் பட்டங்
குண்டல மாரந் தாங்கி
நிழலவி ரல்குற் காசு
சிலம்பொடு சிலம்ப நீடோ
ளழகிகூத் தாடு கின்றா
ளரங்கின்மே லரம்பை யன்னாள்.

பொருள் : அரம்பை அன்னாள் நீள்தோள் அழகி - வானவர் மகள் போன்றாளாகிய நீண்ட தோளையுடைய அழகியொருத்தி; குழல் எடுத்து யாத்து - கூந்தலை எடுத்துக் கட்டி; மட்டு ஆர் கோதையின் பொலிந்து - தேன் நிறைந்த மலர்மாலையாலே அழகு பெற்று; மின்னும் அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி - நெருப்பென ஒளிரும் செம்பொன்னாலான பட்டமும் குண்டலமும் ஆரமும் அணிந்து; அல்குல் நிழல் அவிர்காசு சிலம்பொடு சிலம்ப - அல்குல் மேலணிந்த மேகலைக்காசுடன் சிலம்பும் ஒலிக்க; அரங்கின் மேல் கூத்து ஆடுகின்றாள் - அரங்கின் மீது கூத்தாடுகின்றாள்.

விளக்கம் : வாடிய வண்தளிர் அன்ன மேனி - ஆடியன் மகளிர் அமைதி கூறின் - நெறியின் நீங்கிய நெடிய ரல்லோர் - குறியிற் குறைந்த குறியர் அல்லோர் - பாற்கடல் இல்லாப் பருமை யில்லோர் என்னும் சூத்திரத்திற் கூறிய நிலைகளுடனே ஆசிரியன் இட்ட அழகு கிடத்தலின், அழகி யென்றார்- என்பர் நச்சினார்க்கினியர். ( 89 )

1255. தண்ணுமை முழவம் வீணை
குழலொடு குயிலத் தண்பூங்
கண்ணொடு புருவங் கைகால்
கலையல்கு னுசுப்புக் காம
ரொண்ணுதல் கொண்ட வாடற்
றொட்டிமை யுருவ நோக்கி
வெண்ணெய்தீ யுற்ற வண்ண
மாடவர் மெலிகின் றாரே

பொருள் : தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில - தண்ணுமையும் முழவமும் வீணையும் குழலும் ஒத்திசைக்க; தண்பூங் கண்ணொடு புருவம் கைகால் கலை அல்குல் நுசுப்புக் காமர் ஒண் நுதல் கொண்ட - தண்ணிய மலரனைய கண் முதலாக அழகிய ஒள்ளிய நுதலாள் கொண்ட; ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி - கூத்தின் ஒற்றுமையான வடிவைப் பார்த்து; வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றார் - வெண்ணெய் தீயிலே உற்றாற்போல ஆடவர்கள் மெலிகின்றனர்.

விளக்கம் : தண்ணுமை - குடமுழவு. முழவம் - மத்தளம். குழல் - வேய்ங்குழல். குயிலுதல் - ஈண்டு இசைத்தல். தொட்டிமை - ஒற்றுமை. ( 90 )

1256. பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றுங்
கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற
வோடரி நெடுங்க ணம்பா லுளங்கிழிந் துருவ வெய்யா
வீடமை பசும்பொற் சாந்த மிலயமா வாடு கின்றாள்.

பொருள் : பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும் - பாட்டுடன் பொருந்திய ஆடலும் இசைபொருந்திய வாச்சியமும் ஆகிய இம் மூன்றும்; கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற - கூடிப் பொருந்தி நின்று மெல்கிக் கலந்து இனிமை மிக; ஓடு அரி நெடுங்கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா - பரவிய செவ்வரி யுடைய நீண்ட கண்ணாகிய அம்பினால் உள்ளம் பிளந்து உருவுமாறு எய்து; ஈடு அமை பசும் பொன் சாந்தம் இலயம்ஆ ஆடுகின்றாள் - இடுதல் அமைந்த பசும்பொன் போன்ற சாந்தம் அழிய ஆடுகின்றாள்.

விளக்கம் : சாந்தம் என்பதைக் கூத்தாடுகின்றவள் பெயராக்கி அதற் கேற்பவும் உரைப்பார்கள். இலயம்ஆ - ஒன்றாக; அழிய. கூடுபு : வினையெச்சம். ஈடு : முதனிலை திரிந்த தொழிற் பெயர். ( 91 )

1257. வாணுதற் பட்ட மின்ன வார்குழை திருவில் வீசப்
பூண்முலை பிறழப் பொற்றோ டிடவயி னுடங்க வொல்கி
மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள்
காண்வரு குவளைக் கண்ணாற் காளைமே னோக்கி னாளே.

பொருள் : மாண் இழை - சிறந்த அணிகலனுடையாள்; வாள் நுதல் பட்டம் மின்ன - ஒள்ளிய நெற்றியிலே பட்டம் ஒளிபெற; வார் குழை திருவில் வீச - நீண்ட குழைகள் வானவில்லென ஒளிர; பொன் தோடு இடவயின் நுடங்க - இடப்பக்கத்தே பொன் தோடு அசைய; பூண் முலை பிறழ - முலை மிசைப் பூண்கள் பிறழ; ஒல்கி - அசைந்து; வளைக்கை தம்மால் - வளையணிந்த கைகளால்; வட்டணை போக்குகின்றாள் - வர்த்தனை செய்கின்றவள்; காண் வரு குவளைக் கண்ணால் - பார்த்தற்குரிய குவளையனைய கண்களால்; காளைமேல் நோக்கினாள் - சீவகனைப் பார்த்தாள்.

விளக்கம் : வர்த்தனை வட்டணை ஆயிற்று; தற்பவம். கைவட்டணையாவன : அப வேட்டிதம், உப வேட்டிதம், வியாவர்த்திதம், பரிவர்த்திதம்; இவை பிறைக்கையாம். தற்சனி முதலாப் பிடித்தல் அகம்வரின் - அத் தொழிலாகும் அப வேட்டிதமே தற்சனி முதலாக விடுத்தல் அகம்வர - உய்த்தல் ஆகும் உப வேட்டிதமே கனிட்ட முதலாப் பிடித்தல் அகம்வர - விடுத்தல் ஆகும் வியாவர்த்திதமே கனிட்ட முதலா விடுத்தல் புறம் வரப் - படுத்தல் ஆகும் பரிவர்த் திதமே ஆன்ற அபவேட் டிதமுப வேட்டிதம் - தோன்றும் வியாவர்த் திதத்தோடு மூன்றும் - பரிவர்த் திதமு மெனப்பகர்ந்தா ரித்தை - உரிமைப் பிறைக்கையா லூர். ( 92 )

1258. நோக்கினா ணெடுங்க ணென்னுங்
குடங்கையா னொண்டு கொண்டு
வாக்கமை யுருவின் மிக்கான்
வனப்பினைப் பருக விப்பா
லாக்கிய விலய நீங்கிற்
றணங்கனா ணெடுங்கண் பில்கி
வீக்குவார் முலையி னெற்றி
வெண்முத்தஞ் சொரிந்த வன்றே.

பொருள் : நோக்கினாள் நெடுங்கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு - பார்த்தவள் நீண்ட கண்களாகிய உள்ளங்கையாலே முகந்து கொண்டு; வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினைப் பருக - கவிகளாற் புகழ்தல் ஆகா வடிவிற் சிறந்தான் அழகினைப் பருகுதலாலே; இப்பால் ஆக்கிய இலயம் நீங்கிற்று - இவ்விடத்துக் கண் முதலியவற்றால் ஆக்கிய தாள அறுதிகள் நீங்கின; அணங்கனாள் நெடுங்கண் பில்கி - (மற்றும் இமையாமல் நோக்கியதனாற் கரித்து) தெய்வப் பெண் போன்ற அவளுடைய கண்கள் சிறு துவலையை வீசி; வார் வீக்கு முலையின் நெற்றி வெண்முத்தம் சொரிந்த - வாரினாற் கட்டப் பெற்ற முலை முகட்டிலே வெண் முத்தனைய நீர்த்துளியைச் சொரிந்தன.

விளக்கம் : இது பெருமை பற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு. (தொல். மெய்ப் - 7.) கண்கரித்த நீர் வீழ்தலின் அழுமையென்னும் மெய்ப்பாடாகாது. ( 93 )

1259. செருக்கய னெடுங்க ணாளத் திருமகன் காண்ட லங்சி
நெருக்கித்தன் முலையின் மின்னு  நிழன்மணி வடத்தை மாதர்
பொருக்குநூல் பரிந்து சிந்தாப் பூவெலாங் கரிந்து வாடத்
தரிக்கிலாள் காமச் செந்தீத் தலைக்கொளச் சாம்பி னாளே.

பொருள் : செரு கயல் நெடுங்கணாள் - பொருகின்ற கயலனைய நீண்ட கண்ணினாள்; அத் திருமகன் காண்டல் அஞ்சி - அந்த அரசகுமரன் கண்ணீரைப் பார்த்தற்கு அஞ்சி; தன் முலையின் மின்னும் நிழல் மணிவடத்தை நெருங்கி - தன் முலைகளினாலே ஒளிவிடும் முத்து வடத்தை நெருக்கி; பொருக்கு நூல் பரிந்து சிந்தா - அக் கண்ணீருக்கு ஒப்பாக நூலை அறுத்து முத்துக்களைச் சிந்தி; மாதர் பூ எலாம் கரிந்து வாட - அம் மாதர் மலரெலாம் கரிந்து வாடும்படி; காமச் செந்தீ தரிக்கிலாள் - காமத்தீயைப் பொறுக்க இயலாதவளாய்; தலைக்கொளச் சாம்பினாள் - தலைக்கொண்டு வருந்தினாள்.

விளக்கம் : பொருவுக்கு : பொருக்கு : விகாரம். பொரு - ஒப்பு. மாதர்பூ - விரும்புதற்குக் காரணமான மலர். செருக்கயல் நெடுங்கண் - ஒன்றனோடொன்று போர்புரியும் இணைக் கயல்மீனை ஒத்த நெடிய கண்கள். திருமகன் - உலோகபாலன், நிகழ் - ஒளி  ( 94)

1260. கன்னிமை கனிந்து முற்றிக்
காமுறக் கமழுங் காமத்
தின்னறுங் கனியைத் துய்ப்பா
னேந்தலே பிறர்க ளில்லை
பொன்னினா லுடையுங் கற்பென்
றுரைத்தவர் பொய்யைச் சொன்னா
ரின்னிசை யிவற்க லாலென்
னெஞ்சிட மில்லை யென்றாள்.

பொருள் : இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை - இனிய புகழையுடைய இவனுக்கன்றி என் உள்ளத்தில் இடம் இல்லை; கன்னிமை முற்றிக் கனிந்து காமுறக் கமழும் காமத்து - (ஆதலின்) கன்னித் தன்மையோடே முற்றிக் கனிந்து மணக்கும் காமமாகிய; இன் நறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே - இனிய பழத்தை நுகர்கின்றவன் இவ் வேந்தலே; பிறர்கள் இல்லை - வேறு இதற்கு உரியார் இல்லை; பொன்னினால் கற்பு உடையும் என்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார் - பொருளாற் கற்பு அழியும் என்று மொழிந்தவர் பொய்யைப் புகன்றனர்; என்றாள் - என்று நினைத்தாள்.

விளக்கம் : கன்னிமை - கன்னித்தன்மை. கனிதல் - முதிர்தல். ஏந்தலே - சீவகனே. பத்துப் பொன்னுக்குமேற் பதிவிரதை இல்லை என்பது ஒரு பழமொழி. இவற்கு - இச்சீவகனுக்கு. ( 95 )

1261. கருஞ்சிறைப் பறவை யூர்திக் காமரு காளை தான்கொ
லிருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொ
லரும்பெறற் குமர னென்றாங் கறிவயர் வுற்று நின்றா
டிருந்திழை யணங்கு மென்றோட் டேசிகப் பாவை யன்னாள்.

பொருள் : திருந்து இழை அணங்குமென் தோள் தேசிகப் பாவை அன்னாள் - செவ்விய அணிபுனைந்த அணங்கனையாளாகிய தேசிகப் பாவையாகிய அத்தகையினாள்; அரும் பெறற் குமரன் - அருமையாகக் கிடைத்த இக்குமரன்; கருஞ் சிறைப் பறவை ஊர்திக் காமரு காளை கொல்!- பெரிய சிறகுடைய மயில் ஊர்தியாகிய விருப்பூட்டும் முருக வேளோ?; இருஞ் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்தருங் குருசில் கொல்? - பெரிய சுறாமீனைக் கொடியில் ஏந்திய தோன்றலாகிய புகழற்கரிய காமனோ?; என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள் - என்றெண்ணி அறிவு வருத்தமுற்று நின்றாள்.

விளக்கம் : தேசிகப் பாவை : அவள் பெயர். அன்னாள் என்பது அவளுடைய கல்வி முதலியவற்றைச் சுட்டி நின்றது. பாவை யொப்பாள் என்று பாடமாயின் இவளுக்கு உவமை கூறியதாகும்; பெயராகாது. ( 96 )

1262. போதெனக் கிடந்த வாட்கண்
புடைபெயர்ந் திமைத்தல் செல்லா
தியாதிவள் கண்ட தென்றாங்
கரசனு மமர்ந்து நோக்கி
மீதுவண் டரற்றுங் கண்ணி
விடலையைத் தானுங் கண்டான்
காதலிற் களித்த துள்ளங்
காளையைக் கொணர்மி னென்றான்.

பொருள் : போது எனக் கிடந்த வாள்கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது - மலர் என அமைந்த ஒளிமிகு கண் பிறழ்ந்து இமைத்தல் இல்லை; இவள் கண்டது யாது என்று - இவள் பார்த்தது எது என்றெண்ணி; ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி - அவள் நோக்கின இடத்தே அரசகுமரனும் பொருந்திப் பார்த்து; மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையைத் தானும் கண்டான் - மேலே வண்டுகள் முரலும் கண்ணியணிந்த சீவகனை அவனும் பார்த்தான்; உள்ளம் காதலில் களித்தது - அப்போது அவன் மனம் விருப்பத்தாலே மகிழ்ந்தது; காளையைக் கொணர்மின் என்றான் - (உடனே) அக் குமரனை இங்கே கொண்டு வருக என்று பணியாட்களைப் பணித்தான்.

விளக்கம் : போது - பூ; ஈண்டுத் தாமரைப்பூ என்க. குவளைப்பூ என்னினும் பொருந்தும். இவள் - இக்கூத்தி. அரசன் : உலோகபாலன். அமர்ந்து - பொருந்தி. விடலை : சீவகன். காளையை - சீவகனை. இமைத்தல் செல்லாது இவள் கண்டது யாது என்று ஆய்ந்து அரசனும் அமர்ந்து நோக்கி விடலையைத் தானும் கண்டான் என வினை முடிவு செய்க. கண்ணி - மாலை. விடலை : இளைஞன். கண்ணியை யணிந்தவிடலை என்க. ( 97 )

வேறு

1263. கைவளர் கரும்புடைக் கடவு ளாமெனி
னெய்கணை சிலையினோ டிவன்க ணில்லையான்
மெய்வகை யியக்கருள் வேந்த னாகுமென்
றையமுற் றெவர்களு மமர்ந்து நோக்கினார்.

பொருள் : கை வளர் கரும்பு உடைக் கடவுளாம் எனின் - கையிலே வளரும் கரும்புடைய காமன் என்றால்; எய் கணை சிலையினோடு இவன்கண் இல்லை - எய்யும் மலரம்பும் கரும்பு வில்லும் இவனிடம் இல்லை; மெய்வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று - வடிவின் திறனை நோக்கின் இயக்கரின் அரசனாவான் என்று; எவர்களும் ஐயம் உற்று அமர்ந்து நோக்கினார் - எல்லோரும் ஐயம் உற்றுப் பொருந்தப் பார்த்தனர்.

விளக்கம் : கை என்பதற்கு ஒழுக்கம் எனப் பொருள் கொண்டு இல்வாழ்க்கை வளர்தற்குக் காரணமான கரும்பு என்பர் நச்சினார்க்கினியர். ( 98 )

வேறு

1264. மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்கு கின்ற
அந்தர குமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர் கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன் என்றான்.

பொருள் : மந்திரம் மறந்துமாநிலத்து வீழ்ந்து இயங்குகின்ற - வானிற் செல்லும் மறைமொழி மறந்து நிலமிசை விழுந்து உலவுகின்ற; அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி - வானுறுகுமரன் என்று அங்குள்ள எல்லோரும் பொருந்திப் பார்த்து; இந்திர திருவற்கு உய்த்தார்க்கு - இந்திரனைப்போன்ற செல்வமுடைய அரசகுமரனிடம் சேர்த்தவர்க்கு; இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி - அரசகுமரனும் எதிர்கொண்டு பேணி; மைந்தனை மகிழ்வ கூறி - அவன் மகிழுமாறு பேசி; மைத்துனத் தோழன் என்றான் - நீ என் விளையாட்டுத் தோழன் என்றுரைத்தான்.

விளக்கம் : அந்தரகுமரன் : வானவரில் ஒரு பிரிவு. இளவரசாதலின் அரசன் என்றும் (1262) இறைவன் என்றும் கூறினார்.  மந்திரம் - வான்வழிச் செல்லுதற்குரிய மறைமொழி. அந்தரகுமரன் - தேவகுமரன். அமர்ந்து - விரும்பி. இந்திரதிருவன் - இந்திரன்போன்று செல்வமிக்க உலோகபாலன். மைந்தனை - சீவகனை. மைத்துன முறைமையினையுடைய தோழன். மகிழ்வ - மகிழத்தக்க சொற்கள். இது வினையாலணையும் பெயர். ( 99 )

1265. போதவிழ் தெரிய லானும் பூங்கழற் காலி னானுங்
காதலி னொருவ ராகிக் கலந்துட னிருந்த போழ்தி
னூதுவண் டுடுத்த மாலை யுணர்வுபெற் றிலயந் தாங்கிப்
போதுகண் டனைய வாட்கட் புருவத்தாற் கலக்கு கின்றாள்.

பொருள் : போது அவிழ் தெரியலானும் - அரும்பு மலர்ந்த மாலையானான அவ்வரச குமரனும்; பூங் கழற் காலினானும் - அழகிய கழலணிந்த சீவகனும்; காதலின் ஒருவர் ஆகிக் கலந்து உடன் இருந்த போழ்தின் - காதலால் ஒருவரே போலாகி உளங்கலந்து ஒன்றாக அமர்ந்திருந்த போது; ஊது வண்டு உடுத்த மாலை - முரலும் வண்டுகள் மொய்த்த மாலை போல்வாளான தேசிகப் பாவை; உணர்வு பெற்று - (இனி இவனைப் பெற்றோம் என்று) தெளிவு கொண்டு; இயலம் தாங்கி - தாள அறுதிகளைத் திரும்பவும் ஒழுங்காகக் கொண்டு; போது கண்டனைய வாள்கண் புருவத்தால் கலக்குகின்றாள் - மலரைப் பார்த்தாலனைய ஒளிமிகு கண்ணாலும் புருவத்தாலும் அவையைக் கலக்கத் தொடங்கினாள்.

விளக்கம் : தெரியலான் - மாலையையுடையவன் : உலோகபாலன். காலினான் : சீவகன், அவையத்தோர் கண்கள் எல்லாம் அவள் அழகினைப் பருகலால் ஊது வண்டுடுத்த மாலை என்றார். இலயம் - தாளவறுதி. கண் புருவ முதலியவற்றாலியற்றும் அவிநயத்தழகாற் காண்போர் உளத்தைக் கலக்கினாள் என்பது கருத்து. ( 100 )

1266. தேனுகுக் கின்ற கண்ணித்
திருமக ளாட விப்பா
லூனுகுக் கின்ற வைவே
லொருமக னுருமிற் றோன்றி
வானுகுக் கின்ற மீன்போன்
மணிபரந் திமைக்கு மார்பிற்
கானுகுக் கின்ற பைந்தார்க்
காவலற் றொழுது சொன்னான்

பொருள் : தேன் உகுக்கின்ற கண்ணித் திருமகள் ஆட - தேனைச் சொரிகின்ற கண்ணி புனைந்த திருவனையாள் இங்ஙனம் ஆட; இப்பால் - இங்கு; ஊன் உகுக்கின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி - ஊனைச் சிந்தும் கூரிய வேலணிந்த ஒரு வீரன் இடியெனத் தோன்றி; வான் உகுக்கின்ற மீன்போல் மணி பரந்து இமைக்கும் மார்பில் - வானிலிருந்து சிந்திய மீன்களைப் போல மணிகள் பரவி ஒளிரும் மார்பிலே; கான் உகுக்கின்ற பைந்தார்க் காவலன் தொழுது சொன்னான் - மணங்கமழும் பைந்தாரணிந்த காவலனைத் தொழுது கூறினான்.

விளக்கம் : வந்த வீரன் கொணரும் செய்தி பதுமை யென்னும் அரசகுமரியைப் பாம்பு தீண்டிய தாதலின் உருமின் தோன்றி என்றார். இனி, உறுமிற் சொன்னான் எனக் கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர். ( 101 )

1267. கொய்தகைப் பொதியிற் சோலைக்
குழவிய முல்லை மௌவல்
செய்யசந் திமயச் சாரற்
கருப்புரக் கன்று தீம்பூக்
கைதரு மணியிற் றெண்ணீர்
மதுக்கலந் தூட்டி மாலை
பெய்தொளி மறைத்து நங்கை
பிறையென வளர்க்கின் றாளே.

பொருள் : கொய்தகைப் பொதியில் சோலை - கொய்யத் தகுந்த பொதியில் என்னும் சோலையிலே; குழவிய முல்லை மௌவல் செய்ய சந்து இமயச் சாரல் கருப்புரக் கன்னு தீம்பூ - குழவியாகிய முல்லையினையும், செம்முல்லையினையும், செவ்விய சந்தனக் கன்றினையும், இமயச் சாரலில் வளரும் கருப்புரக் கன்றினையும், தீம் பூவையும்; கை தரு மணியின் தெண்ணீர் மதுக் கலந்து ஊட்டி - வரிசையாகப் பதித்த சந்திரகாந்தக் கல்லினின்றுங்தோன்றிய தெளிந்த நீரைத் தேனைக் கலந்து ஊட்டி; மாலை பெய்து ஒளிமறைத்து - மாலையை மூட்டாகப் பெய்து கதிரொளியை மறைத்து; பிறை என நங்கை வளர்க்கின்றாள் - பிறை போலப் பதுமை வளர்க்கின்றனள்.

விளக்கம் : குழவிய : அ : அசை. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் - கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே (தொல். மரபு. 24.) இரண்டு மலையினும் இவன் ஆணை அறிவித்தற்குப் பொதியிற் சோலைக் குழவிய முல்லை எனவும் இமயச்சாரற் கருப்புக் கன்றினையுங்கூறினார். ( 102 )

1268. பவழங்கொள் கோடு நாட்டிப்
பைம்பொனால் வேலி கோலித்
தவழ்கதிர் முத்தம் பாய்த்தித்
தன்கையாற் றீண்டி நன்னாட்
புகழ்கொடி நங்கை தன்பேர்
பொறித்ததோர் கன்னி முல்லை
யகழ்கடற் றானை வேந்தே
யணியெயி றீன்ற தன்றே.

பொருள் : அகழ் கடல் தானே வேந்தே - கடலனைய சேனையையுடை அரசே!; பவழம் கொள் கோடு நாட்டி - பவழத்தைக் கொள் கொம்பாக நட்டு; பைம் பொனால் வேலி கோலி - புதிய பொன்னால் வேலி வளைத்து; தவழ் கதிர் முத்தம் பாய்த்தி - பரவும் ஒளியையுடைய முத்துக்களை மணலாகப் பரப்பி; தன் கையால் தீண்டி - தன் கையாலே தீண்டி; நல்நாள் - நல்ல நாளிலே; புகழ் கொடி நங்கை தன் பேர் - புகழ் பெற்ற கொடி போலும் நங்கையாகிய திலோத்தமையின் பெயரை; பொறித்தது ஓர் கன்னி முல்லையாகிய முல்லை - இட்டு வளர்த்ததாகிய ஒரு கன்னியாகிய முல்லை; அணி எயிறு ஈன்றது - அழகிய முறுவல்போல அரும்பியது.

விளக்கம் : திலோத்தமை : பதுமையின் நற்றாய். கோடு - ஈண்டுக் கொள்கொம்பு. பாய்த்தி - பரப்பி. நங்கை : பதுமையின் நற்றாயாகிய திலோத்தமை. கன்னிமுல்லை - இளமையுடைய முல்லைக்கொடி. எயிறுபோல அரும்பிற்று என்க. ( 103 )

1269. வலம்பலர் கோதை சிந்த மயிலென வொருத்தி யோடிக்
கொம்பலர் நங்கை பூத்தாள் பொலிகெனக் குனிந்த விற்கீ
ழம்பலர் கண்ணி யார நிதியறைந் தோகை போக்கிக்
கம்பலம் போர்த்த போலுங் கடிமலர்க் காவு புக்காள்.

பொருள் : வம்பு அலர் கோதை சிந்த ஒருத்தி மயில் என ஓடி - (அரும்பியது கண்டு) மணம் விரியும் மலர்மாலை சிந்த ஒரு பணிப் பெண் மயில்போல ஓடிவந்து; கொம்பு! பொலிக! அலர் நங்கை பூத்தாள் என - கொம்பனையாய்! வாழ்க! நங்கை அலர்ந்தாள் என்று சொல்ல; குனிந்த வில் கீழ் அம்பு அலர் கண்ணி - குனிந்த வில்லின்கீழ் அம்பு போல மலர்ந்த கண்களையுடைய பதுமை; நிதி ஆர அறைந்து - செல்வத் திரளை யாகும் நிறையக் கொள்ளுமாறு பறை அறைந்து; ஓகை போக்கி - மகிழ்ச்சியைப் பலரும் அறிய அறிவித்து; கம்பலம் போர்த்த போலும் கடி மலர்க் காவு புக்காள் - கம்பலத்தைப் போர்த்தாற் போலும் மணமலர் நிறைந்த பொழிலை யடைந்தாள்.

விளக்கம் : ஒகை : உவகை யென்றதன் மரூஉ. வம்பு - மணம். ஒருத்தி - ஒருபணிமகள். கொம்பு : ஆகுபெயர் : விளி. அலர் நங்கை என்றது முல்லைக்கொடியை. கண்ணி : பதுமை. கம்பலம் என்றது சித்திரைச் செய்கையுடைய வண்ணப் படாத்தை. சித்திர சய்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத்தோன்றிய உவவனம் என்றார் மணிமேகலையினும் (3. 161-9) நீ வளர்த்த முல்லைக்கொடி நின்முறுவல்போல அரும்பீன்றது. என்று சொல்லக்கேட்ட பதுமை ஓகைபோக்கி காவுபுக்காள் என வினைமுடிவு செய்க. ( 104 )

1270. நறவிரி சோலை யாடி
நாண்மலர்க் குரவம் பாவை
நிறையப்பூத் தணிந்து வண்டுந்
தேன்களு நிழன்று பாட
விறைவளைத் தோளி மற்றென்
றோழியீ தென்று சேர்ந்து
பெறலரும் பாவை கொள்வாள்
பெரியதோ ணீட்டி னாளே.

பொருள் : நறவு விரி சோலை ஆடி - (அடைந்தவள்) தேன் மலர்ந்த பொழிலிலே விளையாடி; நாள் மலர்க் குரவம் பாவை வண்டுந் தேன்களும் நிழன்று பாட நிறையப் பூத்து அணிந்து - நாள்மலரையுடைய குரவம் பாவையை வண்டும் தேனும் நிழல் செய்து பாட நிறைய மலர்ந்து அணிய; இறைவளைத் தோளி ஈது என் தோழி என்று - கீற்றுக்களையுடைய வளையணிந்த தோளினாள் இப் பாவை என் தோழி என்றுரைத்து; பெறல் அரும் பாவை கொள்வாள் சேர்ந்து - கிடைத்தற் கரிய குரா மலரைக் கொள்வதற்கு அதனைத் தழுவி; பெரிய தோள் நீட்டினாள் - பெரிய தோளை நீட்டினாள்.

விளக்கம் : பாவை - குராமரத்தின் மலர். இது பாவை போலிருக்கும். குரவத்திற்கு நாள்மலர் என்பது பெயரளவில் அடையாய் நின்றது. அணிந்து - அணிய : எச்சத்திரிபு. நிழன்று - நிழல் செய்து; ஏரோர்க்கு நிழன்ற கோலினை (சிறுபாண். 233) என்றார் பிறரும். நறா என்பது நற என நின்றது. குரா என்பது அங்ஙனம் ஈறு குறுகி அம்சாரியை பெற்று நின்றது. ( 105 )

1271. நங்கைதன் முகத்தை நோக்கி
நகைமதி யிதுவென் றெண்ணி
யங்குறை யரவு தீண்டி
யௌவையோ வென்ற போகக்
கொங்கலர் கோதை நங்கை
யடிகளோ வென்று கொம்பேர்
செங்கயற் கண்ணி தோழி
திருமகட் சென்று சேர்ந்தாள்.

பொருள் : அங்கு உறை அரவு - (அப்போது) அக்குரா மரத்தில் வாழும் பாம் பொன்று; நங்கை தன் முகத்தை நோக்கி - பதுமையின் முகத்தைப் பார்த்து; இது நகை மதி என்று எண்ணி - இது மறுவில்லாத ஒளியுறு திங்களென்று நினைத்து; தீண்டி - (முகத்திலே தீண்டாமற் கையிலே) தீண்டியதாக; ஒளவையோ! என்று போக - (பதுமை) அம்மாவோ! என்று செல்ல; கொங்கு அலர் கோதை! நங்கை அடிகளோ என்று - மணம் விரியும் மலர்மாலையாய்! திலோத்தமையார் வந்தாரோ என்று வினவி; கொம்பு ஏர் செங் கயல் கண்ணி தோழி - பூங்கொம்பை ஒக்கும் செவ்வரி பரந்த கயலனைய கண்ணியாளான தோழி திருமகள்; சென்று சேர்ந்தாள் - பதுமையினிடம் போய்ச் சேர்ந்தாள்.

விளக்கம் : பாம்பு தீண்டியவுடன் பதுமை, அம்மாவோ! என்று அலறி ஓடினாள். முல்லை மலர்ந்ததைப் பார்க்க வந்த பதுமை தன் நற்றாயையும் வரவேற்றாள் என்று கருதிய தோழி, நங்கை அடிகளோ? என்று வினவியவாறு வந்தாள். அங்குறை யரவு என்பதை அம் குறை அரவு எனப்பிரித்துக், குறையரவு என்பது காலம் நீட்டித்தலாற் பாம்பு குறைந்து, ஒரு கோழி யளவிற்குப் பறந்து செல்லும் என்று கூறி அதனைக் குக்குட சர்ப்பம் என்ப- என்று நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், அது அரிகுரற் கோழி நாமத் தரவவட் கடித்ததாக (சீவக. 1755) என்றதனாலும் உணர்க என்பர். மேலும் தடுத்ததனை வெட்டுதல் பாம்பிற் கியல்பாகலின், முகத்தை நோக்கின பாம்பு, அணுகின கையிலே தீண்டிற்று என்பர். ஏர் - ஒக்கும். ( 106 )

1272. அடிகளுக் கிறைஞ்சி யைய
னடிகளைத் தொழுது நங்கை
யடிகளைப் புல்லி யாரத்
தழுவிக்கொண் டௌவை மாரைத்
கொடியனா யென்னை நாளு
நினையெனத் தழுவிக் கொண்டு
மிடை மின்னி னிலத்தைச் சேர்ந்தாள்
வேந்தமற் றருளு கென்றான்.

பொருள் : கொடியனாய்! - கொடி போன்றவளே!, அடிகளுக்கு இறைஞ்சி - எந்தையாகிய தனபதி மன்னரைத் தொழுது; ஐயன் அடிகளைத் தொழுது - எம் தமையனாகிய உலோகபாலனுடைய அடிகளை வணங்கி; நங்கை அடிகளை ஆரப் புல்லி - நற்றாயை நன்றாகத் தழுவி; ஒளவைமாரைத் தழுவிக்கொண்டு - மற்றைத் தாயரையும் புல்லிக் கொண்டு; என்னை நாளும் நினை என - என்னை எப்போதும் நினைப்பாயாக என்று கூறி; தழுவிக் கொண்டு மிடை மின்னின் நிலத்தைச் சேர்ந்தாள் - மின்னொடு செறிந்த மின்னைப் போல நிலத்திலே சோர்ந்து விழுந்தாள்; வேந்த! அருளுக என்றான் - இளவரசே! அருள் செய்க என்று வந்த வீரன் கூறினான்.

விளக்கம் : பதுமை தன் தோழியை நோக்கித் தனக்காகத் தந்தை முதலியோரை வணங்கவும் தழுவவும் கேட்டுக் கொண்டு சோர்ந்து வீழ்ந்தாள். அடிகளுக்கு : உருபு மயக்கம். ( 107 )

1273. பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் பையு ளெய்திக்
கொதிநுனை வேலி னாயிங் கிருக்கெனக் குருசி லேகிக்
கதுமெனச் சென்று நோக்கிக் காய்சினங் கடிதற் கொத்த
மதிமிகுத் தவல நீக்கு மந்திரம் பலவுஞ் செய்தான்.

பொருள் : பதுமையைப் பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி - (இங்ஙனம்) பதுமையைப் பாம்பு தீண்டிய தென்றவுடன் வருத்தமுற்று; கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என - காய்ந்த கூரிய வேலினாய்! இங்கேயே இருப்பாயாக என்று கேட்டுக்கொண்டு; குருசில் ஏகி - உலோக பாலன் அரண்மனைக்குச் சென்று; கதும் எனச் சென்று நோக்கி - விரைந்து பதுமை யிருக்குமிடம் போய்ப் பார்த்து; காய் சினம் கடிதற்கு ஒத்த - நஞ்சின் கடுமையைப் போக்குதற்குரிய; மதி மிகுத்து - அறிவினால் நுனித் தறிந்து; அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான் - துன்பத்தை நீக்குதற்குரிய மந்திரத்தைக் கூறி மருந்துகள் பலவற்றையும் செய்தான்.

விளக்கம் : 1266 - முதல், 1273 - வரை எட்டுச் செய்யுட்களையும் ஒரு தொடராக்கிப் பதுமையைப் பாம்பு தீண்டிற்றென்றலும் பையுள் எய்திக் கொதிநுனை வேலினானை யிருக்கெனக் குருசில் ஏக (1273) என்பதனை முதற்கட் பெய்து, உலோகமா பாலன் போகின்ற போது, பாம்பு தீண்டியது எங்ஙனம்? என வினவினதற்கு, வந்தவீரன் கூறுகின்றானாகக் கொண்டு, கொய்தகைப் பொதியிற் சோலை (1267) முதலாகக் கூறும் செய்தியை அமைப்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனம் மாட்டுறுப்பாகக் கூறாது செவ்வனே கூறிற் பாம்பு கடித்தமை கடுகக் கூறிற்றாகாமை உணர்க என்று மேலும் அவர் காரணங் கூறுவர். நூலாசிரியர்க் கில்லாத கருத்தை இவர் புகுத்துகிறார் என்று கொள்ளுத லல்லது இது செவ்வன் உரையாகாது. கதை கூறும் முகத்தால் விரித்துக் கூறினார் என்று கூறுதலே சால்புடையதாகும். ( 108 )

1274. வள்ளறான் வல்லவெல்லா மாட்டினன் மற்று மாங்க
ணுள்ளவ ரொன்ற லாத செயச்செய வூறு கேளா
தள்ளிலைப் பூணி னாளுக் காவியுண் டில்லை யென்ன
வெள்ளெயிற் றரவு கான்ற வேகமிக் கிட்ட தன்றே

பொருள் : வள்ளல்தான் வல்ல எல்லாம் மாட்டினன் - உலோகபாலன் தான் கற்றுத் தேர்ந்த விஞ்சைகள் யாவற்றையும் செலுத்தினான்; மற்றும் ஆங்கண் உள்ளவர் ஒன்று அலாத ஊறு செயச் செய - மேலும் ஆங்கு உள்ளவர் எல்லோரும் பல வகையாக உறுவனவற்றைச் செய்யச் செய்ய; கேளாது - (அவற்றைக்) கேளாமல்; அள் இலைப் பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன - கூரிய இலை வடிவமான பூணுடையாளுக்கு உயிர் உண்டு இல்லை என்னும்படி; வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது - வெண்மையான பற்களையுடைய பாம்பு உகுத்த நஞ்சின் வேகம் மிகுந்தது.

விளக்கம் : ஊறு - நஞ்சிற்கு இடையூறான மந்திரமும் மருந்தும். வள்ளல் : உலோகபாலன். அள்இலைப் பூணினாளுக்கு - நெருங்கிய இலைத்தொழிலமைந்த அணிகலனுடைய பதுமைக்கு. ஆவி - உயிர். நஞ்சின் வேகம் மிக்கது என ஒருசொல் வருவித்துக்கொள்க. ( 109 )

1275. பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாக
நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மி னாடும்
வங்கமா நிதிய நல்கி மகட்டரு மணிசெய் மான்றே
ரெங்களுக் கிறைவ னென்றாங் கிடிமுர செருக்கி னானே.

பொருள் : பைங்கதிர் மதியம் என்று - புதிய கதிர்களையுடைய (மறுவில்லாத) திங்கள் என்று எண்ணி; பகை அடு வெகுளி நாகம் - (மறு வுற்ற திங்களாகிய) பகையைக் கெடுக்க எண்ணி வெகுண்ட நாகம்; நங்கையை ஈங்குச் செற்றது - பதுமையை இங்குக் கையிலே கடித்தது; மணி செய் மான் தேர் எங்களுக்கும் இறைவன் - மணிகளிழைத்த, குதிரை பூட்டிய தேரையுடைய எங்கள் அரசன் தனபதி; நாடும் வங்கம் ஆம் நிதியும் நல்கி மகள் தரும் - (நஞ்சைத் தீர்த்தவற்கு) நாடும் கலம் தந்த செல்வமும் கொடுத்துப் பதுமையையும் அளிப்பான்; நீர் தீர்த்துக்கொண்மின் - நஞ்சைப் போக்கும் ஆற்றலுடையீர் நீக்கி அவற்றை ஏற்றுக் கொண்மின்; என்று ஆங்கு இடிமுரசு எருக்கினான் - என்றுரைத்து அந் நகரெங்கும் இடியென முரசு அறைவித்தான்.

விளக்கம் : பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாகம் நங்கையைச் செற்றது என்பதற்கு மறுச்சேர் மதியாகிய பகையை அடுகின்ற வெகுளியையுடைய நாகம் இது நாம் தீண்டுமதன்றி மறுவிலாத தொரு மதியிருந்ததென்று எண்ணுதலாலே நங்கையைக் கையிலே கடித்தது எனப்பொருள் விரித்தனர் நச்சினார்க்கினியர். ( 110 )

1276. மண்டலி மற்றி தென்பா
ரிராசமா நாக மென்பார்
கொண்டது நாக மென்பார்
குறைவளி பித்தொ டையிற்
பிண்டித்துப் பெருகிற் றென்பார்
பெருநவை யறுக்கும் விஞ்சை
யெண்டவப் பலவுஞ் செய்தா
மெனறுகே ளாதி தென்பார்.

(இதன்பொருள்.) இது மண்டலி என்பார் - இவளைத் தீண்டிய இப் பாம்பு சீதமண்டலி என்பார்; இராசமா நாகம் என்பார் - இராசமா நாகம் என்னும் பாம்பே தீண்டியது என்பார்; கொண்டது நாகம் என்பார் - கடித்தது நாகப் பாம்பே என்பார்; குறைவளி பித்தொடு ஐயில் பிண்டித்துப் பெருகிற்று என்பார் - குறைவான வாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிடத் திரண்டு பெருகியது என்பார்; பெரு நவை அறுக்கும் விஞ்சை - பெருங்குற்றத்தைத் தீர்க்கும் மந்திரங்கள்; எண்தவப் பலவும் செய்தாம் - அளவின்றிப் பலவற்றையும் இயற்றினோம்; இது என்று கேளாது என்பார் - இதனை ஏன் என்று கேளாது என்பார்.

விளக்கம் : என்று என்பதைப், பெருநவை அறுக்கும் என்று என முன்னர்க் கொண்டு கூட்டுவர். ஏன்று எனப் பாடங் கொண்டு, ஏற்றுக் கொண்டு எனப்பொருள் கூறலும் ஒன்று. இராசமா மந்தம் என்றும் பாடம். ( 111 )

1277. சிரையைந்தும் விடுது மென்பார்
தீற்றுதுஞ் சிருங்கி யென்பார்
குரைபுன லிடுது மென்பார்
கொந்தழ லுறுத்து மென்பா
ரிரையென வருத்தக் கவ்வி
யென்புறக் கடித்த தென்பா
ருரையன்மி னுதிர நீங்கிற்
றுய்யல ணங்கை யென்பார்.

பொருள் : சிரை ஐந்தும் விடுதும் என்பார் - ஐந்து சிரைகளையும் விடுவோம் என்பார்; சிருங்கி தீற்றுதும் என்பார் - சிருங்கியைப் பூசுவோம் என்பார்; குரைபுனல் இடுதும் என்பார் - ஒலிக்கும் நீரில் இடுவோம் என்பார்; கொந்து அழல் உறுத்தும் என்பார் - அழற்றும் நெருப்பினாற் சுடுவோம் என்பார்; இரையென வருந்தக் கல்வி என்பு உறக் கடித்தது என்பார் - இரையென எண்ணி வருந்தும்படி பற்றி என்பிற்படும் படி கடித்தது என்பார்; உரையன்மின் - பேசாதீர்கள்!; உதிரம் நீங்கிற்று - இரத்தம் போய்விட்டது; நங்கை உய்யலள் என்பார் - இனி இவள் பிழையாள் என்பார்.

விளக்கம் : சிரை ஐந்து: கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று. சிருங்கி - ஒரு மருந்து; சுக்குமாம், சிங்கி எனப் பாடமாயின் கற்கடக சிங்கி என்க. புனலிலிடுதல்; உயிருண்மை யறிதற்கும் நஞ்சு நீங்கற்கும். அழலுறுத்தல் உயிருண்மை யறிதற்கு. ( 112 )

1278. கையொடு கண்டங் கோப்பார்
கனைசுட ருறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி யெல்லாத்
திசைதொறுந் தொழுது நிற்பா
ருய்வகை யின்றி யின்னே
யுலகுடன் கவிழு மென்பார்
மையலங் கோயின் மாக்கண்
மடைதிறந் திட்ட தொத்தார்.

பொருள் : கையொடு கண்டம் கோப்பார் - கையையும் கண்டத்தையும் தடைமரத்தைக் கோப்பார்; கனைசுடர் உறுப்பின் வைப்பார் - உறுப்புக்களிலே விளக்கெரிப்பார்; தெய்வதம் பரவி எல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்- தெய்வங்களைப் போற்றி எல்லாத் திக்கினும் வணங்கி நிற்பார்; உய்வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார் - இதனால் அரசன் பிழைக்க வழியின்றேல் உலகும் இன்னே கவிழும் என்பார்; மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார் - (இங்ஙனம்) மயக்கத்தையுடைய அரண்மனை மக்கள் ஆரவாரத்தினாலே மடைதிறந்த தன்மையை ஒத்திருந்தனர்.

விளக்கம் : மக்கட்குரிய மனன் இன்றி அறிவு கெட்டமையின், ஐயறிவுடையரென்று, மாக்கள் என்றார். ( 113 )

1279. வெந்தெரி செம்பொற் பூவும்
விளங்குபொன் னூலும் பெற்றார்
மந்திர மறையும் வல்லா
ரெழாயிரர் மறுவில் வாய்மை
யந்தரத் தறுவை வைப்பா
ரந்தண ரங்கை கொட்டிப்
பைந்தொடிப் பாவை யின்னே
பரிவொழிந் தெழுக வென்பார்.

பொருள் : வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார் - தீயில் வெந்து விளங்கும் பொன்மலரும் ஒளிரும் பொன்னூலும் பெற்றவர்களாய்; மந்திரம் மறையும் வல்லார் - மந்திரமும் மறையும் வல்லவர்களாய்; மறுஇல் வாய்மை அந்தரத்து அறுவை வைப்பார் - குற்றம் அற்ற மந்திரத்தாலே வானிலே ஆடையை நிறுவுவார்களாய் உள்ள; எழாயிரர் அந்தணர் - ஏழாயிரவராகிய அந்தணர்கள்; அங்கை கொட்டி - கையைத் தட்டி; பைந்தொடிப் பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார் - பைந்தொடி யணிந்த பாவையனையாள் இப்பொழுதே வருத்தம் நீங்கி எழுக என்பார்.

விளக்கம் : பொற்பூவும் பொற்பூணூலும் அத்தொழிற் றிறமுடையார் என்பதற்குப் பெற்ற சிறப்புக்கள் என்க. மந்திரமும் எனற்பால உம்மை தொக்கது. வாய்மை மந்திரத்திற்கு ஆகுபெயர். அறுவை - புடைவை. பாவை : பதுமை. ( 114 )

1280. பாம்பெழப் பாம்பு கொண்டாற் பகவற்கு மரிது தீர்த்த
றேம்பிழி கோதைக் கின்று பிறந்தநா டெளிமி னென்று
காம்பழி பிச்ச மாகக் கணியெடுத் துரைப்பக் கல்லென்
றூம்பழி குளத்திற் கண்ணீர் துகணிலத் திழிந்த தன்றே.

பொருள் : பாம்பு எழப் பாம்பு கொண்டால் பகவற்கும் தீர்த்தல் அரிது - இராகு என்னும் பாம்பு ஞாயிற்றை மறைக்கும் பொழுது பாம்பு தீண்டில் இறைவனுக்கும் அதனைத் தீர்த்தல் அருமை; தேன்பிழி கோதைக்குப் பிறந்த நாள் இன்று - தேன் பிழியும் கோதையாளுக்குப் பாம்பு எழப் பாம்பு கொண்டதும் இல்லை, பாம்பு தீண்டுகின்ற காலத்துப் பிறந்த நாம் இல்லை ; காம்பு அழிபிச்சமாகத் தெளிமின் என்று - உதய ஆரூடக் கவிப்புகளிற் கவிப்பாக ஆராய்ந்து தெளியுங்கோள் என்று; கணி எடுத்து உரைப்ப - கணிநூலை யெடுத்துக் கூறக்கேட்டு; கல்லென் தூம்புஅழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது - கல்லென்னும் ஒலியுடன் மடையுடைந்த குளம்போலக் கண்ணீரானது புழுதியையுடைய நிலமிசை பெருகிற்று.

விளக்கம் : இன்று : எதிர்மறை வினைக்குறிப்பு முற்று. பிச்சம் - பீலிக் குடை. காம்பு அழிபிச்சம் - காம்பு இல்லத பீலிக்குடை. ஞாயிற்றின் விமானம் பீலியாற் செய்யப்படுதலின், அதனைப் பீலியாற் செய்யப்படும் பிச்சம் என்றார். எனவே, ஞாயிறு நடுவே கவிப்பாக நின்றது என்றவாறாயிற்று. இதனாற் பயன் : அக் காலத்துத் தெய்வம் மாயோன் ஆதலின், அவன் கருடனுடனே உலகைப்பார்க்கின்றதால், அக்கருடன் பார்வையால் நஞ்சு நீங்குதலாம் என்பர் நச்சினார்க்கினியர். ( 115 )

1281. நங்கைக்கின் றிறத்த லில்லை
நரபதி நீயுங் கேண்மோ
கொங்கலர் கோங்கி னெற்றிக்
குவிமுகிழ் முகட்டி னங்கட்
டங்குதே னரவ யாழிற்
றானிருந் தாந்தை பாடு
மிங்குநம் மிடரைத் தீர்ப்பா
னிளையவ னுளன்மற் றென்றான்.

பொருள் : கொங்கு அலர் கோங்கின் நெற்றிக் குவிமுகிழ் முகட்டின் அங்கண் - மணம் பரவும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே; தேன் தங்கு அரவயாழின் தான் இருந்து ஆந்தை பாடும் - தேன்போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப்போல ஆந்தை அமர்ந்து பாடும்; நரபதி! நீயும் கேண்மோ - அரசனே! நீயும் கேட்பாயாக; இங்கு நம் இடரைத் தீர்ப்பான் இளையவன் உளன் - (இந் நிமித்தத்தை நோக்கின்) இங்கே நம் துன்பத்தை நீக்கும் இளைஞன் ஒருவன் இருக்கிறான்; இன்று நங்கைக்கு இறத்தல் இல்லை - இற்றை நாளில் பதுமைக்கு இறப்புக் கிடையாது.

விளக்கம் : மிதுன ராசியிலே தேன் அரவம் தங்கும் கொங்கு அலர் கோங்கின் நெற்றியில் அரும்பின் தலையில் ஆந்தை இருந்து பாடும் என்பர் நச்சினார்க்கினியர். யாழ் - மிதுனராசி. ( 116 )

1282. பன்மணிக் கடகஞ் சிந்தப்
பருப்புடைப் பவளத் தூண்மேன்
மன்னவன் சிறுவன் வண்கை
புடைத்துமா ழாந்து சொன்னா
னின்னுமொன் றுண்டு சூழ்ச்சி
யென்னொடங் கிருந்த நம்பி
தன்னைக்கூய்க் கொணர்மி னென்றான்
றரவந்தாங் கவனுங் கண்டான்.

பொருள் : பல்மணிக் கடகம் சிந்தப் பருப்பு உடைப்பவளத் தூண்மேல் - பல மணிகள் இழைத்த கடகம் சிந்தும்படி பருமையுடைய பவளத் தூணின்மேல்; மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து மாழாந்து சொன்னான் - அரசகுமரன் தன் வளமிகு கையினை மோதி மயங்கி ஒருமொழி யுரைத்தான்; இன்னும் சூழ்ச்சி ஒன்று உண்டு - இன்னும் ஒரு சூழ்ச்சியுள்ளது; என்னொடு அங்கு இருந்த நம்பி தன்னை - என்னுடன் நாடக அரங்கிலே இருந்த நம்பியை; கூய்க் கொணர்மின் என்றான் - கூவி அழைமின் என்றான்; தர அவனும் வந்து ஆங்குக் கண்டான் - அழைக்க, அவனும் வந்து அந் நிலையைக் கண்டான்.

விளக்கம் : மந்திரங்கூறுவோர் மருத்துவர் முதலியோர்பால் தனக் குண்டான சினத்தால் உலோகபாலன் தூணைப் புடைத்தான் என்பது கருத்து. பருப்பு - பருமை. மாழாந்து - கையறவானே மயங்கி என்க. சூழ்ச்சி இன்னும் ஒன்றுண்டு என மாறுக. சூழ்ச்சி - ஈண்டு நஞ்சினை அகற்றும் உபாயம். ( 117 )

1283. பறவைமா நாகம் வீழ்ந்து
பலவுடன் பதைப்ப போன்றுஞ்
சிறகுறப் பரப்பி மஞ்ஞை
செருக்குபு கிடந்த போன்றுங்
கறவைகன் றிழந்த போன்றுங்
கிடந்தழு கின்ற கண்ணா
ரிறைவளை யவரை நோக்கி
யென்கொடி துற்ற தென்றான்.

பொருள் : பறவை மாநாகம் பல வீழ்ந்து உடன் பதைப்ப போன்றும் - கோழிப் பாம்புகள் பல விழுந்து ஒருங்கே பதைப்பன போன்றும்; மஞ்ஞை சிறகு உறப் பரப்பி செருக்குபு கிடந்த போன்றும் - மயில்கள் சிறகுகளை நன்றாகப் பரப்பி மயங்கிக் கிடந்தன போன்றும்; கறவை கன்று இழந்த போன்றும் - கறவைப் பசுக்கள் கன்றை இழந்து கிடப்பன போன்றும்; கிடந்து அழுகின்ற கண்ணார் இறைவளையவரை நோக்கி - கிடந்து அழுங்கண்ணினராகிய மங்கையரைப் பார்த்து; உற்றது என் கொடிது என்றான் - இவரடைந்தது என்னே கொடிதாயிருந்தது என்றெண்ணினான்.

விளக்கம் : பறவை மாநாகம் : ஈண்டுப் பெண்பாலாகிய கூனும் குறளும். உவமேயப் பொருள்கள் : மயில் தோழியர்க்கும், கறவை செவிலியர்க்கும் உவமை. ( 118 )

1284. ஊறுகொள் சிங்கம் போல வுயக்கமோ டிருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்றுன்
வீறுயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி யின்னே
நாறுபூங் கொம்ப னாளை நோக்கென நம்பி சொன்னான்.

பொருள் : ஊறுகொள் சிங்கம்போல உயக்கமோடு இருந்த நம்பி கூறினான் - வருத்தமுற்ற சிங்கத்தைப்போல வருந்தியிருந்த உலோக பாலன் கூறினான்; கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து - வெற்றி வேந்தனாகிய வளமிகு செல்வ நிலத்திலே; உன் வீறு உயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி - உன்னுடைய சிறப்பு மிக்க புகழை நட்டு நட்பை விளைக்க வல்லாய்; நாறு பூங்கொம்பனாளை இன்னே நோக்கு என - மணமலர்க் கொடி போன்ற பதுமையை இப்போதே காண்பாயாக என்று சொல்ல; நம்பி சொன்னான் - சீவகன் கூறினான்.

விளக்கம் : விளைத்தி : படுத்தலோசையாக்குக என்பர் நச்சினார்க்கினியர். உயக்கம் - துன்பம். நம்பி இரண்டனுள் முன்னது உலோகபாலன்; பின்னது சீவகன், வேந்தன் : தனபதி. புகழ் - ஈண்டு விச்சைக்கு ஆகுபெயர். இவனால் அவர் கேண்மை வளர்தலின் விச்சையை வித்தாகவும் கேண்மையைப் பயிராகவும் உருவகித்தார். ( 119 )

1285. புற்றிடை வெகுளி நாகம்
போக்கறக் கொண்ட தேனு
மற்றிடை யூறு செய்வான்
வானவர் வலித்த தேனும்
பொற்றொடிக் கிறத்த லில்லை
புலம்புகொண் டழேற்க வென்றான்
கற்றடிப் படுத்த விஞ்சைக்
காமரு காம னன்னான்.

பொருள் : கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான் - கற்றுப் பழகிய விஞ்சையையுடைய விருப்பம் பொருந்திய சீவகன்; புற்றிடை வெகுளி நாகம் போக்கு அறக் கொண்ட தேனும் - புற்றிலுள்ள வெகுளியையுடைய நாகம் மீளாதபடி கடித்ததானாலும்; மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்த தேனும் - வேறு இடையூறு செய்வதற்கு விண்ணவர் சூழ்ந்த நிலையாயினும்; பொற்றொடிக்கு இறத்தல் இல்லை - நங்கைக்கு இறப்புக் கிடையாது; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - நீ வருத்தம் கொண்டு அழாதேகொள் என்றான்.

விளக்கம் : காமன் அன்னான் : சீவகனுக்கு ஒரு பெயர். போக்கு - மீட்சி, பொற்றொடிக்கு என்பது சுட்டுப்பொருட்டாய் நின்றது. அழேற்க - அழாதேகொள். ( 120 )

1286. பொழிந்துநஞ் சுகுத்த லச்ச
மிரைபெரு வெகுளி போகங்
கழிந்துமீ தாடல் காலம்
பிழைப்பென வெட்டி னாகும்
பிழிந்துயி ருண்ணுந் தட்ட
மதட்டமாம் பிளிற்றி னும்ப
ரொழிந்தெயி றூனஞ் செய்யுங்
கோளென மற்றுஞ் சொன்னான்.

பொருள் : நஞ்சு பொழிந்து உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம் கழிந்து மீதாடல் காலம் பிழைப்பு என - நஞ்சைப் பெய்து சிந்துதல், அச்சம், இரையெனக் கருதுதல், பெரிய வெகுளி, இன்பம், மனக்களி மிகுந்து நின்றாடுதல், எதிர்ப்படும் காலம், தனக்குப் பிறர் செய்த பிழையைக் கருதுதல் என்று; எட்டின் ஆகும் - எட்டுக் காரணத்தானே கடித்தல் உளதாகும்; உம்பர் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உயிர் பிழிந்து உண்ணும் - மேல்வாயிலே தட்டம் அதட்டம் என்னும் எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே பெய்யுமாயின் உயிரைப் பிழிந்து உண்ணும்; ஒழிந்த எயிறு ஊனம் செய்யும் - மற்றை எயிறுகளிலுண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலுமாயின் வருத்தம் உண்டாக்கும்; கோள் என மற்றும் சொன்னான் - அறிந்து கொள்ள வேண்டியவை என மேலும் அதனிலக் கணஞ் சில கூறினான்.

விளக்கம் : உகுத்தல் : தன்னாற் பொறுத்தல் அருமையினால், ஒன்றைக் கௌவி நஞ்சை உமிழ்தல். போகம் - பிணையுடன் இழைதல்; தட்டம் - மேல்வாய்ப்பல்; அதட்டம் - கீழ்வாய்ப்பல். கொள்ளுதல் : கோளென விகாரம். காலம் ஒழிந்த ஏழும் அகாலமாம். ( 121 )

1287. அந்தண னாறு மான்பா லவியினை யலர்ந்த காலை
நந்தியா வட்ட நாறு நகைமுடி யரச னாயிற்
றந்தியா முரைப்பிற் றாழைத் தடமலர் வணிக னாறும்
பந்தியாப் பழுப்பு நாறிற் சூத்திரன் பால தென்றான்.

பொருள் : யாம் தந்து உரைப்பின் - நாம் சித்தராரூடம் என்னும் நூலினை ஆராய்ந்துரைத்தால்; ஆன்பால் அவியினை நாறும் அந்தணன் - ஆவின்பாலினாற் செய்த சோறுபோல நாறுமாயின் அப் பாம்பு அந்தணன்பாலதாகும்; அலர்ந்த காலை நந்தியா வட்டம் நாறுமாயின் நகைமுடி அரசன் - அலர்ந்த காலத்தில் நந்தியாவட்டத்தைப்போல நாறுமாயின், அஃது ஒளி முடி அரசன்பாலதாகும்; தாழைநாறும் தடமலர் வணிகன் - தாழை மலர்போல நாறுமாயின் அஃது பெருமலரணிந்த வணிகன்பாலதாகும்; பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான் - மற்றொன்றுங் கூடாத அரிதாரம்போல நாறுமாயின் சூத்திரன்பாலது என்றான்.

விளக்கம் : ஆன்பால் போன்று மணமுடைய பாம்பு பார்ப்பனப் பாம்பு; நந்தியாவட்ட மலர்மணக்கும் பாம்பு அரசப்பாம்பு, தாழை மலர் மணக்கும் பாம்பு வணிகப்பாம்பு, அரிதாரம் மணக்கும் பாம்பு சூத்திரப் பாம்பு என்றான் என்க. ( 122 )

1288. கன்னியைக் கடித்த நாகங்
கன்னியே கன்னி நோக்க
மன்னதே யரசர் சாதி
மூன்றெயி றழுந்தி யாழ்ந்த
கொன்னுமா நாகங் கொண்டாற்
கொப்புளாம் விரலிற் றேய்த்தான்
மன்னிய தெண்மட் டாயின்
மண்டலிப் பால தென்றான்.
 
பொருள் : விரலின் தேய்த்தால் - கடித்த வாயை விரலால் தேய்த்தால்; கொன்னும் மாநாகம் கொண்டாற் கொப்புளாம் - அச்சந்தரும் பெருநாகந் தீண்டியதாயின் கொப்புள் கொள்ளும்; மன்னிய தெள்மட்டு ஆயின் மண்டலிப்பாலது - பொருந்திய தெளிவான தேன்போல நீர் வருமாயின் மண்டலிப் பகுதியாகும்; கன்னியைக் கடித்த நாகம் கன்னியே - (இது கொப்புள் கொள்வதால்) இவளைக் கடித்த பாம்பு கன்னியே; அரசர் சாதி - சாதியும் அரசர் சாதியே; அழுந்தி ஆழ்ந்த மூன்று எயிறு - தைத்து அழுந்தி ஆழ்ந்த பற்கள் யமதூதி ஒழிந்த காளி, காளாத்திரி, இயமன் என்னும் மூன்றுமே; கன்னி நோக்கம் - உதயமும் கன்னியே; அன்னதே - ஆதலின் இஃது இறத்தலில்லை.

விளக்கம் : குக்குட சர்ப்பமாதலின், அதற்குக் கேடில்லை யென்று கருதி, கன்னியே என்றான். இது கொப்புளங் கொள்ளலின் இவளைக் கடித்த பாம்பு கன்னியே என்பது கருத்து. சாதி அரசர்சாதி என்க. காளி காளாத்திரி யமன் யமதூதி என்னும் நான்கு நஞ்சுப் பற்களுள் யமதூதி ஒழிந்த மூன்று பற்களுமே அழுந்தியுள்ளன.  (123 )

1289. குன்றிரண் டனைய தோளான்
கொழுமலர்க் குவளைப் போதங்
கொன்றிரண் டுருவ மோதி
யுறக்கிடை மயில னாடன்
சென்றிருண் டமைந்த கோலச்
சிகழிகை யழுத்திச் செல்வ
னின்றிரண் டுருவ மோதி
நேர்முக நோக்கி னானே.

பொருள் : குன்று இரண்டு அனைய தோளான் செல்வன் - மலைகள் இரண்டு போன்ற தோளையுடைய சீவகனான செல்வன்; கொழுமலர்க் குவளைப் போது அங்கு ஒன்று இரண்டு உருவம் ஓதி - வளமிகு மலராகிய குவளையை அங்கே மூன்று உருவம் ஓதி; உறக்கு இடை மயிலனாள் தன் சென்று இருண்டு அமைந்த கோலச் சிகழிகை அழுத்தி - உறக்கத்திலுள்ள மயில் போன்றவளின் நீண்டு இருண்டு அமைந்த அழகிய மயிர் முடியிலே அழுத்தி; நின்று இரண்டு உருவம் ஓதி நேர்முகம் நோக்கினான் - பெயர்ந்து நின்று பின்னும் இரண்டு உருவம் ஓதி முகத்தை நேரே நோக்கினான்.

விளக்கம் : மலர்க்குவளை: மலர்: அடைமொழி. ஒன்றிரண்டு உம்மைத்தொகை. உருவம் : உரு என்பதன் திரிபு. உறப்பிடை: சாரியை இன்றி உருபேற்றது. முகம் - தியானம். இவன் ஐந்து உரு ஓதினமையின் இம் மந்திரம் பஞ்ச நமஸ்காரம். ( 124 )

1290. நெடுந்தகை நின்று நோக்க நீள்கடற் பிறந்த கோலக்
கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிரு ளுடைந்த தேபோ
லுடம்பிடை நஞ்சு நீங்கிற் றொண்டொடி யுருவ மார்ந்து
குடங்கையி னெடிய கண்ணாற் குமரன்மே னோக்கி னாளே.

பொருள் : நெடுந்தகை நின்று நோக்க - சீவகன் நின்று நோக்கின அளவிலே; நீள்கடல் பிறந்த கோலக் கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிருள் உடைந்ததேபோல் - பெருங் கடலிலே தோன்றிய அழகிய வெங்கதிரையுடைய ஞாயிறு எதிர்ப்படக்கரிய இருள் நீங்கியது போல; உடம்பிடை நஞ்சு நீங்கிற்று - உடம்பிலிருந்து நஞ்சு விலகியது; ஒண்தொடி உருவம் ஆர்ந்து - பின்னர் அக் கதிர் வளையாளின் உருவத்தைக் கண்ணால் அவன் நுகராநிற்க; குடங்கையின் நெடிய கண்ணால் குமரன்மேல் நோக்கினாள் - அவளும் உள்ளங்கை போன்ற நீண்ட கண்களாற் சீவகனை நோக்கினாள்.

விளக்கம் : ஆர்ந்து - ஆர; எச்சத் திரிபு. நெடுந்தகை : சீவகன்; நின்று மந்திரமோதி நோக்க என்பது கருத்து. நீள்கடற்பிறந்த கோலக்கடுங் கதிர்க்கனலி என்றது ஞாயிற்று மண்டிலத்தை. இவ்வுவமையடைகள் சீவகன் குடிப்பிறப்பு அழகு ஒளி முதலியவற்றை விளக்கி நின்றன. காரிருள், நஞ்சிற்குவமை. அப்பேரழகினை நோக்கற்கேற்ற கண்ணையுடையாள் என்பார் நெடிய கண்ணால் நோக்கினாள் என விதந்தார். ( 125 )

1291. நோக்கினா ணிறையு நாணு
மாமையுங் கவினு நொய்திற்
போக்கினாள் வளையும் போர்த்தாள்
பொன்னிறப் பசலை மூழ்கிற்
றாக்கினா ளநங்க னப்புத்
தூணியை யமரு ளானா
தோக்கிய முருக னெஃக
மோரிரண் டனைய கண்ணாள்.

பொருள் : நோக்கினான் நிறையும் நாணும் மாமையும் கவினும் வளையும் நொய்தில் போக்கினாள் - அவ்வாறு நோக்கியவள் தன் நிறையையும் நாணையும் நிறத்தையும் அழகையும் வளையையும் விரைவிலே போக்கினாள்; பொன்நிறப் பசலை போர்த்தாள் - பொன்னிறமான பசலையை உடம்பெலாம் போர்த்தாள்; அமருள் ஆனாது ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள் - போரில் அமையாமல் எறிந்த முருகன் ஒரு வேல் இரண்டு ஆனது போன்ற கண்ணினாள் ஆகிய அவள்; மூழ்கிற்று - காமன் அம்பு உடம்பிலே மூழ்கியது; அநங்கன் அப்புத் தூணியை ஆக்கினாள் - (அதனால்) காமனுடைய அம்பறாத் தூணியைத் தன் உடம்பிலே உண்டாக்கினாள்.

விளக்கம் : அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச் - செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது (சிலப். 2 : 512) என்றார் பிறரும்.
( 126 )

வேறு

1292. ஆட்சி யைம்பொறி யாள னுடம்பெனும்
பூட்சி நீள்கொடிப் புற்றி னகத்துறை
வாட்க ணோக்கெனும் வையெயிற் றாரழல்
வேட்கை நாகத்தின் மீட்டுங் கொளப்பட்டாள்.

பொருள் : ஆட்சி ஐம்பொறி ஆளன் உடம்பு எனும் - தாம் ஏவல் கொள்ளும் தொழிலையுடைய ஐம்பொறியை ஆளுதலையுடைய சீவகனது உடம்பு என்னும்; பூட்சி நீள்கொடிப் புற்றின் அகத்து உறை - மேற்கோளாகிய நீண்ட கொடி வளரப்பெற்ற புற்றிலே வாழ்கின்ற; வாள்கண் நோக்கு எனும் வைஎயிற்று ஆரழல் வேட்கை நாகத்தின் - ஒளி பொருந்திய கண்களின் நோக்கம் என்கிற கூரிய பற்களையுடைய வேட்கையாகிய நாகத்தின் நஞ்சாலே; மீட்டும் கொளப்பட்டாள் - திரும்பவும் பற்றப் பட்டாள்.

விளக்கம் : வாட்கண் என்பதைப் பதுமைக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர். நாட்டம் இரண்டும் அறிவுடம்படுத்தற்குக் - கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் (தொல். களவு. 5) என்பதனால், இருவரும் எதிர் நோக்கியவிடத்துக் கூட்டும் குறிப்புரை நிகழ்ந்தும் இயற்கைப் புணர்ச்சி நிகழாமையின், அவட்கு முற்செய்யுளிற் கூறிய வருத்தத்திற்கு இவன் வேட்கை நோக்கமே காரணம் என்று இக் கவியிற் கூறினார். இந் நோக்கம் இன்றேல் இவட்கு இது நிகழாதென்க; பெருமையும் உரனும் ஆடுஉ மேன (தொல். களவு. 7) என்பதனால் இவற்கு வருத்தம்புலப் படாதாயிற்று. வேட்கையை நாகமாகவும், நோக்கினைப் பற்களாகவும், உடம்பினைப் புற்றாகவும் உருவகஞ் செய்தனர். ( 127 )

1293. மாழ்கி வெய்துயிர்த் தாண்மட வாளெனத்
தோழி மார்களுந் தாயருந் தொக்குடன்
சூழி யானையன் னாய்தொடி னஞ்சறும்
வாழி யென்றனர் வம்பலர் கோதையார்.

பொருள் : மடவாள் மாழ்கி வெய்து உயிர்த்தாள் என - பதுமை மயங்கிப் பெருமூச்செறிந்தாள், இனி, இது வேட்கையென்றறிந்து; வம்பு அலர் கோதையார் தோழிமார்களும் தாயரும் உடன்தொக்கு - மணம் விரிந்த மாலையராகிய தோழியரும் செவிலியரும் சேரத்திரண்டு; சூழி யானை அன்னாய்! வாழி! தொடின் நஞ்சு அறும் என்றனர் - முகபடாம் அணிந்த யானை போன்றவனே! வாழ்வாயாக! நீ தீண்டித் தீர்ப்பாயாயின் நஞ்சு நீங்கும் என்றனர்.

விளக்கம் : அன்னான் என்னும் பெயர் தொழிலிற் கூறும் ஆன் என் இறுதி யின் கூறாய் ஆய் ஏற்றது : (தொல். விளி. 16) ( 128 )

1294. கண்ணிற் காணினுங் கட்டுரை கேட்பினு
நண்ணித் தீண்டினு நல்லுயிர் நிற்குமென்
றெண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாந்
தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான்.

பொருள் : கண்ணின் காணினும் - (தான் காதலித்தோரைக்) கண்ணாற் கண்டாலும்; கட்டுரை கேட்பினும் - அவருடைய புனைந்துரையைக் கேட்டாலும்; நண்ணித் தீண்டினும் - நெருங்கியத் தொட்டாலும்; நல்உயிர் நிற்கும் என்று எண்ணி - சிறந்த உயிர்நிலைக்கும் என்று நினைத்து; ஏந்து இழை தன்னை - பதுமையை; தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப - குளிர்ந்த சந்தனம் பூசினாற்போல; உடம்பு எலாம் தைவந்தான் - உடம்பு முற்றும் தடவிக் கொடுத்தான்.

விளக்கம் : காதலித்தோரைக் காணினும் அவர் சொற்கேட்பினும் அவரைத் தீண்டினும் உயிர் நிற்கும் என்பதனை தன்னனுபவத்தாலுணர்ந்து அவள் உயிர் நிற்கும்பொருட்டும் தன்னுயிர் நிற்கும் பொருட்டும் அவளைத் தைவந்தான் என்பது கருத்து. ( 129 )

1295. மற்ற மாதர்தன் வாட்டடங் கண்களா
லுற்ற நோக்க முறாததொர் நோக்கினிற்
சுற்றி வள்ளலைச் சோர்வின்றி யாத்திட்டா
ளற்ற மில்லமிர் தாகிய வஞ்சொலாள்.

பொருள் : அற்றம் இல் அமிர்து ஆகிய அம்சொலாள் - ஒருவன் கைப்படா அமிர்தாகிய அழகிய மொழியினாள்; மாதர் தன் வாள்தடம் கண்களால் - காதலையுடைய தன் வாளனைய பெரிய கண்களாலே; உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில் - தான் அவன்பாற் கொண்ட அன்புற்ற நோக்கத்தை மற்றவர் ஐயுறாத ஒரு நோக்கத்தினாலே; வள்ளலைச் சுற்றிச் சோர்வு இன்றி யாத்திட்டாள் - சீவகனைச் சூழ்ந்து தப்பாமற் கட்டினாள்.

விளக்கம் : அற்றமில் அமிர்து - ஒருவன் கைப்படா அமிழ்தம். உறாதநோக்கு, ஏதின்மைபட நோக்கும் நோக்கமுமாம். அந்நோக்கத்தால் அவன் கட்டுண்டலால் யாத்திட்டாள் என்றார். மாதர் - காதல். ( 130 )

வேறு

1296. விஞ்சையர் வீர னென்பார்
விண்ணவர் குமர னென்பா
ரெஞ்சிய வுயிரை மீட்டா
னிவனலா லில்லை யென்பார்
மஞ்சுசூ ழிஞ்சி மூதூர்
மாமுடிக் குரிசி னாளை
நஞ்சுசூழ் வேலி னாற்கே
நங்கையைக் கொடுக்கு மென்பார்.

பொருள் : விஞ்சையர் வீரன் என்பார் - (இவன்) வித்தியாதர வீரன் என்பார்; விண்ணவர் குமரன் என்பார் - வானவர் மகன் என்பார்; எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் - போன உயிரைத் திரும்பக் கொணர்ந்தவன் இவனல்லது வேறொருவன் இல்லை என்பார்; மஞ்சுசூழ் இஞ்சி மூதூர் மாமுடிக் குரிசில் - முகில் தவழும் மதிலையுடைய இப்பழம்பதியின் முடிமன்னன்; நஞ்சுசூழ் வேலினாற்கே நாளை நங்கையைக் கொடுக்கும் என்பார் - இந்த நஞ்சு கலந்த வேலினானுக்கே நாளைக்கு இந்த நங்கையை நல்குவான் என்பார்.

விளக்கம் : விஞ்சையர் - வித்தியாதரர். எஞ்சிய - இறந்த. மஞ்சு - முகில். இஞ்சி - மதில். மூதூர் - பழைமையான ஊர், சந்திராபம். ( 131 )

1297. விளங்கொளி விசும்பில் வெண்கோட்
டிளம்பிறை சூழ்ந்த மின்போல்
வளங்கெழு வடத்தைச் சூழ்ந்து
வான்பொனாண் டிளைப்பச் சேந்த
விளங்கதிர் முலைக டம்மா
லிவனைமார் பெழுதி வைகிற்
றுளங்குபெண் பிறப்புந் தோழி
யினிதெனச் சொல்லி நிற்பார்.

பொருள் : தோழி! - தோழியே!; விளங்கு ஒளி விசும்பில் - விளங்கும் ஒளியையுடைய வானிலே; வெண்கோட்டு இளம்பிறை சூழ்ந்த மின்போல் - வெண்மையான நுனிகளையுடைய இளம்பிறையைச் சூழ்ந்த மின்கொடிபோல; வளம்கெழு வடத்தைச் சூழ்ந்து வான்பொன் நாண் திளைப்பச் சேந்த - வளம் பொருந்திய முத்து வடத்தைச் சூழ்ந்து பொன்நாண் அசைதலாலே சிவந்த; இளங்கதிர் முலைகள் தம்மால் - இளமை பொருந்திய ஒளியுறு முலைகளாலே; இவனை மார்பு எழுதி வைகின் - இவன் மார்பை எழுதி வாழப் பெறின்; துளங்கு பெண் பிறப்பும் இனிது எனச் சொல்லி நிற்பார் - நிலையற்ற பெண்பிறப்பும் இனிமையுடையதாம் என்று சொல்லி நிற்பார்.

விளக்கம் : நச்சினார்க்கினியர், முன்பு சீவகன், என் கொடிது (1283) என்றதனால், இவர்கள், மார்பெழுதி வைகின் இனிது என்றார் என்பர். ( 132 )

1298. அருந்தவஞ் செய்து வந்த
வாயிழை மகளிர் யார்கொல்
பெருந்தகை மார்பிற் றுஞ்சிப்
பெண்மையாற் பிணிக்கு நீரார்
கருங்கணின் யாமுங் கண்டாங்
காமனை யென்று சொல்லித்
திருந்தொளி முறுவற் செவ்வாய்த்
தீஞ்சொலார் மயங்கி னாரே.

பொருள் : பெருந்தகை மார்பில் துஞ்சிப் பெண்மையால் பிணிக்கும் நீரார் - இப் பெருந்தகையின மார்பிலே துயின்று பெண்மையால் வசப்படுத்தும் இயல்பினாராக; அருந்தவம் செய்து வந்த ஆயிழை மகளிர் யார்கொல்? - அரிய தவம் இழைத்து வந்த அணிகலன் அணிந்த பெண்டிர் யாவரோ?; காமனை யாமுங் கருங்கணின் கண்டாம் என்று சொல்லி - காமனை நாமும் நம் கரிய கண்களாற் காண்பது மட்டும் செய்தோம் என்றுரைத்து; திருந்து ஒளி முறுவல் செவ்வாய்த் தீசொலார் மயங்கினார் - விளங்கும் ஒளியை உடைய முறுவலையுஞ் செவ்வாயையுமுடைய இனிய மொழி மகளிர் மயக்குற்றனர்.

விளக்கம் : ஆயிழை - ஆராய்ந்த அணிகலன் அணிந்த. கொல் : ஐயப் பொருட்டு, பெருந்தகை, அன்மொழி : சீவகன்,. துஞ்சுதல் - துயிலுதல். நீரார் - தன்மையுடையோர். காமன் உருவமற்றவன் என்ப; அவர் கூற்றுப் பொய் யாமும் அவனைக் கண்ணிற் கண்டாம் என்றவாறு. திருந்து - திருத்தமான. முறுவல் - பற்கள் திருத்தமான ஒளியுடைய பற்கள் எனக் கொள்வதும் ஒன்று. ( 133 )

1299. பன்மலர்ப் படலைக் கண்ணிக்
குமரனைப் பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி
வாசநெய் பூசி நன்னீர்
துன்னின ராட்டிச் செம்பொற்
செப்பினுட் டுகிலுஞ் சாந்து
மின்னறும் புகையும் பூவுங்
கலத்தொடு மேந்தி னாரே.

பொருள் : பன்மலர்ப் படலைக் கண்ணிக் குமரனை - பல மலர்களையும் தழைகளையும் கொண்டு தொடுத்த கண்ணியணிந்த சீவகனை; மன்னவன் பணியின் - அரசன் கட்டளைப்படி; பாவை நல்லார் - பணிப்பெண்கள்; வாழ்த்தி - வாழ்த்துக் கூறி அழைத்துச் சென்று; துன்னினர் வாசநெய் பூசி - நெருங்கி மணமிகு நெய்யைப் பூசி; நல்நீர் ஆட்டி - நல்ல நீரைக்கொண்டு முழுக்காட்டி; செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும் இன்நறும் புகையும் பூவும் கலத்தொடும் எந்தினார் - பொற்பேழையில் ஆடையையும் சந்தனத்தையும் இனிய நறிய புகையையும் மலரையும் பூணையும் ஏந்தி அணிந்து கொள்ளச் செய்தனர்.

விளக்கம் : படலைக்கண்ணி - தாமரைக்கொழுமுறியினையும் அதன் மலரினையும் குவளையையும் கழுநீர் மலரினையும் விரவித் தொடுப்ப தொரு மாலை. குமரன் : சீவகன். மன்னவன் : தனபதி. துன்னினர் : முற்றெச்சம். கலம் : அணிகலன். ( 134 )

1300. ஏந்திய வேற்பத் தாங்கி யெரிமணிக் கொட்டை நெற்றி
வாய்ந்தபொன் குயிற்றிச் செய்த மரவடி யூர்ந்து போகி
யாயந்தநன் மாலை வேய்ந்த வரும்பெறற் கூடஞ் சேர்ந்தான்
பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பி னாரே.

பொருள் : ஏந்திய ஏற்பத் தாங்கி - அவர்கள் ஏந்தியவற்றைப் பொருந்த மெய்யில் அணிந்து; எரிமணிக் கொட்டை - ஒளிரும் மாணிக்கக் கொட்டையை; நெற்றி வாய்ந்த பொன்குயிற்றிச் செய்த மரஅடி ஊர்ந்து - நெற்றியிலே அழுத்திப் பொன்னாற் செய்த மர வடியைத் தொட்டுச் சென்று; ஆய்ந்த நல்மாலை வேய்ந்த அரும்பெறல் கூடம் சேர்ந்தான் - ஆராய்ந்த நல்ல மாலைகளைப் புனைந்த பெறற்கரிய கூடத்தை அடைந்தான்; பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பினார் - அழகிய வளையணிந்த மாதர்கள் வாழ்த்துக் கூறிப் பொற்கலங்களைப் பரப்பினர்.

விளக்கம் : ஏற்பத்தாங்கி - பொருந்தும்படி அணிந்து. கொட்டை - குமிழ். மரவடி - மரத்தாற் செய்த அடிக்காப்பு. பொற்கலம் - ஈண்டு உண்கலம். ( 135 )

1301. கன்னியர் கரக நீராற் றாமரை கழீஇய தொப்பப்
பொன்னடி கழீஇய பின்றைப் புரிந்துவாய் நன்கு பூசி
யின்மலர்த் தவிசி னுச்சி யிருந்தமிர் தினிதிற் கொண்டான்
மின்விரிந் திலங்கு பைம்பூண் வேற்கணார் வேனிலானே.

பொருள் : கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்பப் பொன் அடி கழீஇய பின்றை - கன்னிப் பெண்கள் கரகத்திலிருந்த நீராலே தாமரை மலரைக் கழுவியது போலப் பொன் போன்ற அடிகளைக் கழுவிய பிறகு; புரிந்து நன்கு வாய் பூசி - விரும்பி நன்றாக வாய் கழுவி; இன் மலர்த் தவிசின் உச்சி இருந்து - இனிய மலர்த் தவிசின்மீது அமர்ந்து; மின் விரிந்து இலங்கு பைம்பூண் வேல்கணார் வேனிலான் - ஒளி மலர்ந்து விளங்கும் பைண்பூம் அணிந்த வேலனைய கண்ணார்க்குக் காமனைப் போன்ற சீவகன்; அமிர்து இனிதின் கொண்டான் - உணவை இனிய கறியுடன் உண்டான்.

விளக்கம் : நீராடிக் கால்கழுவி வாய்பூசி (19) என்றும், கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப (26) என்றும் ஆசாரக் கோவையிற் கூறினார். ( 136 )

1302. வாசநற் பொடியு நீருங் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
பூசறுத் தங்கை நீரை மும்முறை குடித்து முக்காற்
காசறத் துடைத்த பின்றைக் கைவிர லுறுப்புத் தீட்டி
தூசினா லங்கை நீவி யிருந்தனன் றோற்ற மிக்கான்.

பொருள் : வாசம் நல் பொடியும் நீரும் காட்டிட - மணம் உறு நல்ல பொடியையும் நீரையும் மகளிர் ஏந்த; கொண்டு வாய்ப்பப் பூசு அறுத்து - அவற்றைக் கைக்கொண்டு பூசுந்தொழிலை முடித்து; அங்கை நீரை மும்முறை குடித்து - அங்கையில் ஏந்திய நீரை மூன்று முறை குடித்து; முக்கால் காசு அறத்துடைத்த பின்றை - மும்முறை குற்றம் நீங்கத் துடைத்த பிறகு; கைவிரல் உறுப்பின் தீட்டி - விரலைக் கண் முதலிய உறுப்புக்களிலே தீண்டுவித்து; தூசினால் அங்கை நீவி - மேல் ஆடையினால் அங்கையைத் துடைத்து; தோற்றம் மிக்கான் இருந்தனன் - சிறந்த தோற்றத்துடன் இருந்தான்.

விளக்கம் : முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு - ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல் (ஆசாரக் - 28) என்றார் பிறரும் ( 137 )

1303. சீர்கொளச் செய்த செம்பெர்
னடைப்பையுட் பாகு செல்ல
வார்கழல் குருசிற் கொண்டு
கவுளடுத் திருந்த வாங்கட்
போர்கொள்வேன் மன்ன னெல்லாக்
கலைகளும் புகன்று கேட்டு
நீர்கொண்மாக் கடல னாற்கு
நிகரில்லை நிலத்தி லென்றான்.

பொருள் : சீர் கொளச் செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல - சிறப்புக் கொள்ளச் செய்த பொன் அடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் செல்ல; வார் கழல் குரிசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண் - கட்டப்பட்ட கழலணிந்த சீவகன் அவற்றை யெடுத்து வாயிலிட்டுத் தின்றிருந்த அளவிலே; போர் கொள் வேல் மன்னன் எல்லாக் கலைகளும் புகன்று கேட்டு - போருக்குக் கொண்ட வேலேந்திய தனபதி மன்னன் சீவகன் கற்ற கலைகளையெல்லாம் விரும்பிக் கேட்டு; நீர்கொள்மாக் கடலன்னாற்கு நிகர் நிலத்தில் இல்லை என்றான் - நீர் கொண்ட பெரிய கடலன்ன கலையுடைய இவனுக்கு ஒப்பு இந்நிலவுலகில் இல்லை என்றான்.

விளக்கம் : அடைப்பை - வெற்றிலையிட்டுவைக்கும் பை. பாகு - பாக்கு. குரிசில் : சீவகன். கவுள் - கன்னம் புகன்று - விரும்பி. பல திசைகளினும் இருந்து வரும் பல்வேறு யாறுகளும் கொணரும் நீரும் மேனீரும் கீழ் நீருமாகிய நீரெல்லாம் புகுந்து நிறைந்திருத்தலான், பல்வேறு கலைகளும் நிரம்பிய சீவகனை நீர்கொள் மாக்கடல் அன்னான் என்றார். ( 138 )

வேறு

1304. பரிதி பட்டது பன்மணி நீள்விளக்
கெரிய விட்டன ரின்னிய மார்த்தன
வரிய பொங்கணை யம்மெ னமளிமேற்
குரிசி லேறினன் கூர்ந்தது சிந்தையே.

பொருள் : பரிதி பட்டது - (அப்போது) ஞாயிறு மறைந்தது; பல் மணி நீள விளக்கு எரிய விட்டனர் - பல மணிகளையும் விளக்கையும் ஒளிபெற ஏற்றினர்; இன் இயம் ஆர்த்தன - இனிய இசைக்கருவிகளும் ஒலித்தன; அரிய பொங்கு அணை அம் மென் அமளிமேற் குரிசில் ஏறினன் - தனித்தார்க்குப் பொறுத்தற்கரிய பொங்கும் அணையாகிய அழகிய மென்மையான படுக்கையின்மேற் சீவகன் அமர்ந்தனன்; சீந்தை கூர்ந்தது - (அப்போது) அவன் உள்ளம் காம நினைவிலே மிகுந்தது.

விளக்கம் : அரிய என்றது அதன்கண் துணையின்றித் தனித்துறை வோர் பொறுத்தலரிய என்பது பட நின்றது. சிந்தை கூர்ந்தது என மாறுக. கூர் : மிகுதிப் பொருட்டு. ( 139 )

1305. பூங்க ணவ்வயி னோக்கம் பொறாதபோல்
வீங்கி வெம்மைகொண் டேந்தின வெம்முலை
யீங்கி தென்னென விட்டிடை நைந்தது
பாங்கி லாரிற் பரந்துள தல்குலே.

பொருள் : பூங்கண் அவ்வயின் நோக்கம் பொறாதபோல் - (பதுமையின் மலர்க் கண்கள்) அவ்விடத்து யான் நோக்கிய நோக்கத்தைத் தாங்காமல் நிலத்தை நோக்கி என்னை வருத்தினாற்போலவே; வெம் முலை வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின - பின்னர், முலைகளும் வீங்கிக் கொடுமை கொண்டு ஏந்தி வருத்தின; ஈங்கு இது என் என இட்டிடை நைந்தது -இவ்விடத்திற் பொறாமை என்னே என்று மெல்லிடை வருந்தியது; பாங்கு இலாரின் அல்குல் பரந்துளது - அப்போது பிறரிடுக்கண் கண்டு மகிழ்வாரைப் போல அல்குல் பரந்தது.

விளக்கம் : பரந்துளது : ஒருசொல். இனிக் கண்கள் தமக்கு முற்பட்டு வருத்தியதற்குப் பொறாதன போலப் பின்பு முலைகளும் வருத்தின என்றும் ஆம். ( 140 )

1306. முருகு வார்குழ லாண்முகிழ் மென்முலை
பெருகு நீர்மையிற் பேதுற வெய்திநின்
றுருகு நுண்ணிடை யோவியப் பாவைத
னருகு நோக்கமெ னாவி யலைக்குமே.

பொருள் : முருகு வார்குழலாள் - மணமிகு நெடிய குழலாளாகிய; ஓவியப் பாவை - ஓவியத்தில் எழுதப் பெற்ற பாவை போல்வாளின்; முகிழ் மென்முலை - முகிழ்த்த மென்முலைகளும்; பெருகும் நீர்மையின் பேதுறவு எய்தி நின்று உருகும் நுண் இடை - அவை வளரும் இயல்பாலே துன்பம் அடைந்து வருந்துகின்ற நுண்ணிய இடையும்; அருகும் நோக்கம் - குறிக் கொண்டு நோக்காத நோக்கமும்; என் ஆவி அலைக்கும் - என் உயிரைக் கெடுக்கும் அளவாகா நின்றன.

விளக்கம் : முருகு - மணம். குழலாள் : பதுமை, நீர்மை - தன்மை. முலையும் இடையும் நோக்கமும் என ஆவியலைக்கும் என்க.
( 141 )

1307. புகைய வாவிய பூந்துகி லேந்தல்குல்
வகைய வாமணி மேகலை வார்மது
முகைய வாவிய மொய்குழல் பாவியேன்
பகைய வாய்ப்படர் நோய்பயக் கின்றவே.

பொருள் : புகை அவாவிய பூந்துகில் ஏந்து அல்குல் - நறுமணப் புகை பொருந்திய அழகிய ஆடையும், அந்த ஆடைதாங்கிய அல்குலிலே; வகையவாம் மணிமேகலை - பலவகையான மணிகள் செறிந்த மேகலையும்; வார் மது முகை அவாவிய மொய் குழல் - வழியுந் தேனையுடைய அரும்புகள் அவாவிய செறிந்த குழலும்; பாவியேன் பகையவாய் - பாவியேனுக்குப் பகையாயினவாய்; படர்நோய் பயக்கின்ற - துன்பமாகிய நோயைச் செய்கின்றன.

விளக்கம் : குழலை அவட்குப் பெயராக்கிக் குழலையுடையாளது அல்குலை மறைத்தமையால் ஆடையும் மேகலையும் பகையாயின என்பர் நச்சினார்க்கினியர். ( 142 )

1308. போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோ
மாது லாமொழி யோமட நோக்கமோ
யாது நானறி யேனணங் கன்னவள்
காத லாற்கடை கின்றது காமமே.

பொருள் : அணங்கு அன்னவள் - தெய்வப்பெண் போன்றவளின்; போது உலாம் சிலையோ? - காமன் அம்பாகிய மலர் உலாவும் வில்லோ?; பொரு வேல் கணோ? - பொருதற்குரிய வேலாகிய கண்ணோ?; மாது உலாம் மொழியோ? - காதல் உலாவும் சொல்லோ?; மடநோக்கமோ? - இளமை பொருந்திய பார்வையோ?; காதலால் கடைகின்றது காமம் - காதலினாற் காமத்தை மிகச் செய்கின்றது; யாது நான் அறியேன் - இவற்றில் இன்னதென்று யான் சிறிதும் அறிகிலேன்.

விளக்கம் : சிலை : காமன் வில் : புருவம். இதனால் உறுப்புக்கள் யாவும் ஒக்க வருத்தின என்றானாயிற்று. மொழியோ? என்றதனால் மொழியுங் கேட்டான் என்பது பெற்றாம். அன்றி, அடிகளுக் கிறைஞ்சி (சீவக. 1275) என்னும் கவியிற் கூற்றைத் தானும் பின்பு கேட்டலின், மொழியோ என்றான் என்றலும் ஒன்று. ( 143 )

1309. அண்ண லவ்வழி யாழ்துயர் நோயுற
வண்ண மாமலர்க் கோதையு மவ்வழி
வெண்ணெய் வெங்கனன் மீமிசை வைத்ததொத்
துண்ணை யாவுரு காவுள ளாயினாள்.

பொருள் : அண்ணல் அவ்வழி ஆழ்துயர் நோய் உற - சீவகன் அங்கே அவ்வாறு ஆழுந் துயர் தரும் நோயை அடைய; வண்ணம் மாமலர்க் கோதையும் - அழகிய பெரிய மலர்க் கோதையாளும்; அவ்வழி - அங்கே; வெண்ணெய் வெங்கனல் மீமிசை வைத்தது ஒத்து - வெண்ணெயைக் கொடிய நெருப்பின் மேலே வைத்தாற் போன்று; உள் நையா உருகா உளள் ஆயினாள் - உள்ளம் நைந்து உருகி உயிருடன் இருப்பாளாயினாள்.

விளக்கம் : அவனைக் காணலாம் என்னும் நினைவால், உளள் ஆயினாள். ஆழ்துயர் நோய் - அழுந்துதல் உறுகின்ற வருத்த நோய். ( 144 )

1310. பெயன்ம ழைப்பிற ழுங்கொடி மின்னிடைக்
கயன்ம ணிக்கணி னல்லவர் கைதொழப்
பயனி ழைத்தமென் பள்ளியுட் பைந்தொடி
மயனி ழைத்தவம் பாவையின் வைகினாள்.

பொருள் : பெயல் மழைப் பிறழும் கொடி மின் இடை - பெய்தலை யுடைய முகிலிலே பிறழும், ஒழுங்கற்ற மின் போன்ற இடையும்; கயல் மணிக் கணின் - கயலனைய நீலமணிக் கண்களையும் உடைய; நல்லவர் கை தொழ - மகளிர் கைகுவித்து வணங்க; பயன் இழைத்த மென்பள்ளியுள் - துணையுடையோர்க்குப் பயன் உண்டாகப் பண்ணின மென்மையான படுக்கையிலே; மயன் இழைத்த அம் பாவையின் - மயன் பண்ணின அழகிய பதுமை போல; பைந் தொடி வைகினாள் - பசிய வளையலுடைய பதுமை இருந்தனள்.

விளக்கம் : மழை : ஆகுபெயர்; முகில். கணின் - கண்ணின். நல்லவர் - மகளிர்; பள்ளி - படுக்கை. மயன் - அசுரத்தச்சன். அம்பாவை : அழகிய பதுமை  (145 )

1311. வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ
மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ
நிணந்தெ னெஞ்ச நிறைகொண்ட கள்வனை
யணங்கு காளறி யேனுரை யீர்களே.

பொருள் : அணங்குகாள்! - தெய்வங்களே!; என் நெஞ்சம் நிணந்து நிறை கொண்ட கள்வனை - என் உள்ளத்தைப் பிணித்து நிறையைக் கவர்ந்த அக் கள்வனை; வணங்கும் நோன் சிலைவார்கணைக் காமனோ? - எல்லோரும் மனங் குழைதற்குக் காரணமான வலிய வில்லையும் நீண்ட அம்புகளையும் உடைய காமனோ?; மணம் கொள் பூமிசை மைவரை மைந்தனோ? - மணமுறும் மலரிலே தோன்றிய, கரிய மலைவாழ் வுறும் முருகனோ?; அறியேன் உரையீர்களே ?- அறிந்திலேன், நீயிர் அறிந்தால் உரையீரோ?

விளக்கம் : ஏ : வினா விடைச்சொல். பெரும்பாலும் தெய்வத் தன்மை உடைமையின் மகனோ என்றிலளாம்! வணங்கு நோன்சிலை - எல்லாவுயிர்களுக்கும் மனம் குழைதற்குக் காரணமான வலிய கருப்புவில் என்க. கணை - மலரம்பு. பூமிசை -பதுமப்பாயல்மேல். மைவரை மைந்தன் - மலையிலுறைகின்ற முருகன். நிணந்து - பிணைத்து. கட்டில் நிணக்கும் இழிசினன் (புறநா. 82-3) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. அணங்கு - ஈண்டு இல்லுறை தெய்வம்.( 146 )

1312. கடைகந் தன்னதன் காமரு வீங்குதோ
ளடையப் புல்லினன் போன்றணி வெம்முலை
யுடைய வாகத் துறுதுயர் மீட்டவ
ளிடைய தாகுமெ னாருமி லாவியே.

பொருள் : ஆரும் இல் என் ஆவி - போகாமல் நிறுத்துவார் இல்லாத என் உயிர்; கடை கந்து அன்ன - கடைந்து செய்த தூண் போன்ற; தன் காமரு வீங்கு தோள் - தன் அழகிய பருத்த தோள்களால்; அடையப் புல்லினன் போன்று - என் மெய்ம் முழுதும் தழுவினவன் போல; ஆகத்து அணி வெம்முலை உறு துயர் உடைய மீட்டவன் - மார்பில் அணிந்த வெம்முலை உற்ற பசப்பு உடையும்படி தடவி மீட்டவனின்; இடையது ஆகும் - இடத்தில் உள்ளதாகும்.

விளக்கம் : கடைகந்து : வினைத்தொகை. காமரு - அழகிய; ஆகத்து அணி வெம்முலை உறுதுயர் உடைய மீட்டவன் என மாறுக. ஆருமில் ஆவி - உயக்கொள்வோர் ஒருவருமில்லாததாகிய உயிர். ( 147 )

1313. இறுதி யில்லமிர் தெய்துந ரீண்டியன்
றறிவி னாடிய வம்மலை மத்தமா
நெறியி னின்று கடைந்திடப் பட்டநீர்
மறுகு மாக்கடல் போன்றதென் னெஞ்சமே.

பொருள் : இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி - சாதல் இல்லாமைக்குக் காரணமான அமிர்தத்தைப் பெற விரும்பிய தேவர்கள் திரண்டு; அறிவின் நாடிய - தம் அறிவினாலே அதனை ஆராய வேண்டி; அன்று அம்மலை மத்தமா நின்று - அக் காலத்தில் மந்தரமலை மத்தாக நின்று; நெறியின் கடைந்திடப்பட்ட நீர் மறுகும் மாக்கடல் போன்றது - முறைமையாகக் கடைந்திடப்பட்ட நீர் கலங்குங் கடல் போன்றதாகும்; என் நெஞ்சம் - என் உள்ளம்.

விளக்கம் : எய்துநர் : பெயர் இறுதி - சாக்காடு. சாக்காடின்மைக்குக் காரணமான அமிர்து என்க. அம்மலை : உலகறிசுட்டு. மந்தரம் - மத்தம் : கடைகழி. ( 148 )

1314. நகைவெண் டிங்களு நார்மட லன்றிலுந்
தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும்
பகைகொண் மாலையும் பையுள்செ யாம்பலும்
புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே.

பொருள் : நகைவெண் திங்களும் - ஒளியுறும் வெண்மையான நிலவும்; நார்மடல் அன்றிலும் - நாரையுடைய பனைமடலில் இரு க்கும் அன்றிலும்; தகைவெள் ஏற்று அணல் தாழ்மணி ஓசையும் - பெருமைமிக்க வெள்ளேற்றின் அணலிலே தங்கிய மணியின் ஒலியும்; பகைகொள் மாலையும் - பிரிந்திருப்பவர்க்குப் பகை செய்யும் மாலைபபோதும்; பையுள்செய் ஆம்பலும் -துன்ப மூட்டும் ஆம்பற் பண்ணை யெழும்பும் குழலும்; புகைஇல் பொங்கு அழல்போல் சுடுகின்ற - புகை இல்லாது பொங்கும் நெருப்பைப்போலச் சுடுகின்றன.

விளக்கம் : புகை இல்லாத அழல் : இல்பொருளுவமை. அன்றில் பனைமடலில் உறையும் இயல்புடையதென்ப. மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுணர் அன்றில் (நற்றிணை, 303. 4. 5) என்றார் பிறரும். ( 149 )

1315. பூமென் சேக்கையு ணாற்றிய பூந்திரட்
டாமம் வாட்டுந் தகைய வுயிர்ப்பளைஇக்
காமர் பேதைதன் கண்டரு காமநோ
யாமத் தெல்லையோர் யாண்டொத் திறந்ததே.

பொருள் : பூமென் சேக்கையுள் நாற்றிய பூந்திரள் தாமம் - மலரால் அமைத்த மெல்லிய அணையிலே தூக்கிய மலர்கள் திரண்ட மாலைகளை; வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇ - மெலிவிக்கும் தன்மையவாகிய நெட்டுயிர்ப்பைக் கலந்து; காமர் பேதைதன் கண்தரு காமநோய் - அழகிய அப் பேதைக்குத் தன் கண் தந்த நோயாலே; யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்தது - இராப் பொழுதின் எல்லை ஓராண்டின் அளவையொத்துக் கழிந்தது.

விளக்கம் : நச்சினார்க்கினியர் (144) முதல் - (150) வரை ஒரு தொடராக்கி அண்ணல் நோயுறாநிற்கக், கோதையும் நல்லவர் தொழச்சென்று : பள்ளியிலே வைகினாள்; அங்ஙனம் வைகியவள், திங்கள் முதலியன சுடா நின்றன;அதனால் என் நெஞ்சம் மறுகுகின்றது; இங்ஙனம் நிறைகொண்ட கள்வனை யான் ஐயுற்று அறிகின்றிலேன்; தெய்வங்களே! நீவிரும் உரைத்தலீர்! உரையீராயினும் என் ஆவி துயர்மீட்டவன் இன்னும் அருளுவனோ என்று அவனிடத்தே ஆகா நின்றது, என்று தெய்வத்தை நோக்கிக் கூறி, உயிர்ப்பளைஇ உருகிப் பின்னும் அவன் நெஞ்சிடத்தேயாதலின் இறந்துபடாள் ஆயினாள். அப்பேதைக்குக் கண்தந்த நோயால் இராப்பொழுது கழிந்தது என்று முடிப்பர். ( 150 )

1316. மாதி யாழ்மழ லைம்மொழி மாதரா
டாதி யவ்வையுந் தன்னமர் தோழியும்
போது வேய்குழற் பொன்னவிர் சாயலுக்
கியாது நாஞ்செயற் பாலதென் றெண்ணினார்.

பொருள் : மாதியாழ் மழலைமொழி மாதராள் - காதலையுடைய யாழின் இசை போலும் மழலை மொழியுறு பதுமையின்; தாதி அவ்வையும் தன் அமர் தோழியும் - தாதியாகிய செவிலியும் அவள் விரும்பிய தோழியும்; போதுவேய் குழல்பொன் அவிர் சாயலுக்கு - மலர் வேய்ந்த குழலையுடைய, பொன்னென ஓளிரும் சாயலுடையாட்கு; நாம் செயற்பாலது யாது என்று எண்ணினார் - நாம் செய்தற்குறியது யாது என்று ஆராய்ந்தனர்.

விளக்கம் : மாது - காதல். மழலைம்மொழி என்புழி மகரம் வண்ணநோக்கி விரிந்தது. மாதராள் : பதுமை. தாதியவ்வை - தாதியாகிய செவிலித்தாய். அமர்தோழி : வினைத்தொகை. வேய்குழல் : வினைத்தொகை. பொன்னவிர் சாயல்: இஃது அன்மொழியாய்ச் சாயலையுடையாளை யுணர்த்தியது. ( 151 )

1317. அழுது நுண்ணிடை நைய வலர்முலை
முழுதுங் குங்கும முத்தொ டணிந்தபின்
றொழுது கோதையுங் கண்ணியுஞ் சூட்டினா
ரெழுது கொம்பனை யாரிளை யாளையே

பொருள் : எழுது கொம்பு அளையார் இளையாளை தொழுது - எழுதும் மலர்க்கொடி போன்றவர்கள் பதுமையை வணங்கி; நுண்இடை அழுது நைய - அவளுடைய நுண்ணிய இடை அழுது வருந்துமாறு; அலர்முலை முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின் - அலர்ந்த முலை முழுதும் குங்குமத்தைப் பூசி முத்தை அணிந்த பிறகு; கோதையும் கண்ணியம் சூட்டினார் - மலர்மாலையும் மலர்க்கண்ணியும் அணிந்தனர்.

விளக்கம் : சுமை பொறுக்கலாற்றாமல் நுண்ணிடை அழுது நைந்தது. தன்மைபெற இவற்றை அணிந்தனர். ( 152 )

1318. வேந்து காயினும் வெள்வளை யாயமோ
டேந்து பூம்பொழி லெய்தியங் காடுத
லாய்ந்த தென்றுகொண் டம்மயில் போற் குழீஇப்
போந்த தாயம் பொழிலும் பொலிந்ததே.

பொருள் : வேந்து காயினும் - அரசன் சினந்தாலும்; வெள்வளை ஆயமொடு - வெள்ளிய வளையணிந்த தோழியருடன்; ஏந்து பூம்பொழில் எய்தி - உயர்ந்த மலர்ப்பொழிலை அடைந்து; அங்கு ஆடுதல் ஆய்ந்தது - அங்கே விளையாடுதல் ஆராயப்பட்ட தொழில்; என்று கொண்டு - என முடிவு செய்து; அம் மயில் போல் குழீஇ - அழகிய மயில்களைப்போற் கூடி; ஆயம் போந்தது - ஆயம் அவளுடனே சென்றது; பொழிலும் பொலிந்தது மலர்ப் பொழிலும் அவர்களால் அழகுற்றது.

விளக்கம் : வேந்தன் காய்தல் முன்னர்ப் பதுமையைப் பாம்பு தீண்டிய பொழிலிலே போகவிட்டது கருதி. காயினுஞ் செல்வேம் என்று துணிந்தனர். அங்கே சீவகனைக் கண்ட இடங்கண்டு ஆறுதல் பெறக்கூடும் என்று கருதி.

 நச்சினார்க்கினியர் (151) முதல் (153) வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு : நுண்ணிடையாள் அழுது நையாநிற்கத், தாயும் தோழியும் எண்ணி, அவனை எதிர்ப்பட்ட இடங்காணினும் அவனைக் கண்ட இடங்கண்டாலும் அவனை எதிர்ப்பட்டாற் போறலின், வேந்து காயினும் பொழிலிலே சென்று விளையாடுதலே காரியம் என்று கருதி, அவளைக் கொம்பனையார் அணிந்த பின்பு கோதையையுங் கண்ணியையும் சூட்டினார்; சூட்டி அப் பொழிலிலே போ என்று கூற, ஆயமும் திரண்டு தொழுது கூடப் போந்தது; பொழிலும் பொலிந்தது. அழுது என்பதற்குப் பாம்பு கடித்தவிடத்தே போகவிடா நின்றோம் என்று அழுதார் என்றும் உரைப்ப. ( 153 )

1319. அலங்க றான்றொடுப் பாரலர் பூக்கொய்வார்
சிலம்பு சென்றெதிர் கூவுநர் செய்சுனை
கலங்கப் பாய்ந்துட னாடுநர் காதலி
னிலங்கு பாவை யிருமணஞ் சேர்த்துவார்.

பொருள் : அலங்கல் தான் தொடுப்பார் - (அவ்வாயத்தார்) மாலை தொடுப்பார்கள்; அலர்பூக் கொய்வார் - அலர்ந்த மலர்களைக் கொய்வார்கள்; சிலம்பு சென்று எதிர் கூவுநர் - செய் குன்றோரஞ்சென்று எதிரொலி பிறக்கக் கூவுவார்கள்; செய்சுனை கலங்கப் பாய்ந்து உடன் ஆடுநர் - செயற்கைச் சுனையிலே அது கலங்குமாறு பாய்ந்து ஒருங்கே ஆடுவார்கள்; காதலின் இலங்கு பாவை இருமணம் சேர்த்துவார் - காதலுடன் விளங்கும் பதுமைகளைப் பெருமையாக மணம் புரிவிப்பார்கள்.

விளக்கம் : அலங்கல் - மாலை. தான் : அசை. அலர்பூ : வினைத்தொகை. சிலம்பு - ஈண்டுச் செய்குன்று. கூவுநர் - கூவுவார் . ஆடுநர் - ஆடுவார். பாவை - விளையாட்டுப் பொம்மை. ( 154 )

1320. தூசு லாநெடுந் தோகையி னல்லவ
ரூச லாடுந ரொண்கழங் காடுநர்
பாச மாகிய பந்துகொண் டாடுந
ராகி யெத்திசை யும்மமர்ந் தார்களே.

பொருள் : தூசு உலாம் நெடுந்தோகையின் நல்லவர் - ஆடையிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய அவ்வாயத்தார்; ஊசல் ஆடுநர் - ஊசல் ஆடுவர்; ஒண்கழங்கு ஆடுநர் - ஒளிரும் கழங்கு விளையாடுவர்; பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர் - அன்புடைய பந்தைக் கொண்டு ஆடுவர்; ஆகி - ஆகி; எத்திசையும் அமர்ந்தார்கள் - எல்லாம் பக்கத்தினும் போய் அமர்ந்தனர்.

விளக்கம் : நச்சினார்க்கினியர் இவ்விரு செய்யுட்களையும் ஒரு தொடராக்குவர். தூசுலா நெடுந்தோகை என்றது, புடைவையிலே அசைகின்ற கொய் சகத்தை; தோகை போறலின் அஃதப்பெயர் பெற்றது. பாசமாகிய பந்து தம்பற்றிற்குக் காரணமாகிய பந்து என்க.
( 155 )

1321. முருகு விம்மிய மொய்குழ லேழைத
னுருகு நோக்க முளங்கிழித் துள்சுட
வரிவை யாடிய காவகங் காணிய
வெரிகொள் வேலவ னேகின னென்பவே.

பொருள் : முருகு விம்மிய மொய்குழல் ஏழைதன் - மணம் ததும்பிய நெருங்கிய குழலையுடைய பதுமையின்; உருகும் நோக்கம் உளம் கிழித்து உளசுட - தன் நினைவு மிக்கு வருந்திப் பார்த்த பார்வை உள்ளத்தைப் பிளந்து சுடுதலின்; அரிவை ஆடிய காவகம் காணிய - பதுமை ஆடிய பொழிலைக் காண்பதற்கு; எரிகொள் வேலவன் ஏகினன் என்ப - அனல் ததும்பிய வேலினையுடைய சீவகன் சென்றான்.

விளக்கம் : என்ப : அசை. அவளாடிய இடத்தைக் காண்டலும் அவளைக் காண்பதுபோல இருத்தலின் ஏகினன். முருகு - மணம். மொய்குழலேழை : பதுமை; பன்மொழித் தொடர். அரிவை : பதுமை. காணிய - காண : செய்யியவென் வாய்பாட்டெச்சம். வேலவன் : சீவகன். ( 156 )

1322. மயிலி னாடலு மந்தியி னூடலுங்
குயிலின் பாடலுங் கூடி மலிந்தவண்
வெயிலி னீங்கிய வெண்மணற் றண்ணிழல்
பயிலு மாதவிப் பந்தரொன் றெய்தினான்.

பொருள் : மயிலின் ஆடலும் - மயிலின் ஆட்டமும்; மந்தியின் ஊடலும் - பெண் குரங்கின் பிணக்கும்; குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண் - குயிலின் பாட்டும் கூடி நிறைந்த அப்பொழிலிலே; வெயிலின் நீங்கிய வெண்மணல் தண்ணிழல் - வெயிலினின்றும் நீங்கிய வெண்மையான மணல் பரவிய தண்ணிய நிழலுறும்; மாதவிப் பந்தர் ஒன்று எய்தினான் - மாதவிப் பந்தர் ஒன்றை அடைந்தான்.

விளக்கம் : மந்தி - பெண்குரங்கு. மாதவிப்பந்தர் - குருக்கத்திக் கொடி படர்ந்து பந்தரிட்ட இடம். ( 157 )

1323. காது சேர்ந்த கடிப்பணை கையது
தாது மல்கிய தண்கழு நீர்மல
ரோத நித்தில வட்டமொர் பொன்செய்நாண்
கோதை வெம்முலை மேற்கொண்ட கோலமே.

பொருள் : காது சேர்ந்த கடிப்பிணை - காதைச் சேர்ந்தன கடிப்பிணை என்னும் அணி; கையது தாது மல்கிய தண்கழு நீர்மலர் - கையில் உள்ளது மகரந்தம் நிறைந்த தண்ணிய கழுநீர் மலர்; வெம்முலை ஓத நித்தில வட்டம் ஓர் பொன்செய் நாண் - முலையிடத்தன கடல் முத்துமாலையும் ஒரு பொன்வடமும்; கோதைமேற்கொண்ட கோலம் - இது பதுமை மேற்கொண்ட ஒப்பனை.
 
விளக்கம் : காமநோயினால் ஒப்பனை சிறிதாக இருந்தது. கடிப்பிணை - ஒருவகைக் காதணி : கடிப்பு இணை எனக் கண்ணழித்தல் வேண்டும். கோலவித்தகம் குயின்ற நுட்பத்துத் தோடும் கடிப்பும் துயல்வருங் காதினர் வாலிழை மகளிர் எனப் பெருங்கதையினும் (2 : 7. 37-8) வருதல் காண்க வயிரக்கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி என்னும் பெரியாழ்வார் திருமொழியால் இவ்வணி காதினைத் தாழப் பெருக்குதற் கிடப்படுதல் உணரலாம். ( 158 )

1324. விண்பு தைப்பன வெண்மலர் வேய்ந்துளாற்
கண்பு தைப்பன காரிரும் பூம்பொழில்
சண்ப கத்தணி கோதைநின் றாடனி
நண்ப னைந்நினை யாநறு மேனியே.

பொருள் : சண்பகத்து அணி கோதை நறுமேனி - சண்பகத்தின் கோதையை யொத்த நல்ல மெய்யினாள்; விண் புதைப்பன வெண்மலர் வேய்ந்து - வானை மறைக்கும் வெண்மையான மலர்கள் வேயப்பெற்று; உளால் கண்புதைப்பன கார் இரும்பூம்பொழில் - உள்ளிடம் கண்ணை மறைப்பனவாகிய கரிய பெரிய மலர்ப் பொழிலிலே; நண்பனை நினையா தனி நின்றாள் - நண்பனை நினைத்துப் பொழிலிலே தனியே நின்றாள்.
 
விளக்கம் : அப் பொழில் - அவன் சேர்ந்த மாதவிப் பொழில். விண்ணை மறைப்பனவாகிய பொழில், மலராலே வேயப்பட்டு உள்ளிடம் கண்ணை மறைப்பனவாகிய பொழில் எனத் தனித்தனிகூட்டுக. ( 159 )

1325. கறந்த பாலினுட் காசி றிருமணி
நிறங்கி ளர்ந்துதன் னீர்மைகெட் டாங்கவண்
மறைந்த மாதவி மாமை நிழற்றலிற்
சிறந்த செல்வனுஞ் சிந்தையி னோக்கினான்.

பொருள் : கறந்த பாலினுள் காசு இல் திருமணி - கறந்து வைத்த பாலிலே குற்றமற்ற நீலமணி; நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டாங்கு - நிறம் கிளர அது தன் இயல்பு கெட்டாற் போல; அவள் மறைந்த மாதவி மாமை நிழற்றலின் - பதுமை மறைந்து நின்ற மாதவிப் பூவின் மேலே அவளுடைய மாமை நிறம் ஒளிவிடுதலின்; சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான் - சிறப்புற்ற செல்வனும் தன் மனம் பொருந்த நோக்கினான்.
 
விளக்கம் : மாமை: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் நாருரித் தன்ன மதனின் மாமை (நற். 6:1-2) என்பதனால் அறிக. மாதவி : மலருக்கு ஆகுபெயர். இவ்வொளி யாதென்று கருதினான். ( 160 )

1326. வரையின் மங்கைகொல் வாங்கிருந் தூங்குநீர்த்
திரையின் செல்விகோ றேமலர்ப் பாவைகொ
லுரையின் சாய லியக்கிகொல் யார்கொலிவ்
விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே.

பொருள் : இவ் விரைசெய் கோலத்து வெள்வளைத்தோளி - இந்த மணங்கமழும் ஒப்பனையுடைய வளைத்தோளினாள்; வரையின் மங்கைகொல்? - மலையர மகளோ?; வாங்கு இருந்தூங்கு நீர்த்திரையின் செல்விகொல்? - வளைந்த பெரிய அசையும் நீரையுடைய கடலில் வாழும் அரமங்கையோ?; தேன்மலர்ப் பாவை கொல்? - தேனையுடைய தாமரையில் வாழும் திருமளோ?; உரைஇன் சாயல் இயக்கி கொல்? - புகழப்பெறும் இனிய மென்மையையுடைய இயக்கியோ?; யார்கொல் - யாவளோ?
 
விளக்கம் : பதுமையை முன்பு கண்டவனாயினும் வேட்கை மிகுதியால் ஐயம் நிகழ்ந்தது. வாங்குநீர் இருந்தூங்கு நீர் எனத் தனித்தனி கூட்டுக. வாங்கு - உலகினை வளைந்த. இருந்தூங்கு நீர் - பெரிய அசைகின்ற நீர். ( 161 )

1327. மாலை வாடின வாட்க ணிமைத்தன
காலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப்
பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள்
சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே.

பொருள் : மாலை வாடின - மாலைகள் வாடியுள்ளன; வாள் கண் இமைத்தன - வாளனைய கண்கள் இமைக்கின்றன; காலும் பூமியைத் தோய்ந்தன - கால்களும் நிலமிசைத் தோய்கின்றன; இந் நின்றவள் பால்இன் தீசொல் - (ஆகையால்) இங்கே நின்கின்றவள் பாலனைய இனிய மொழியாளாகிய; சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளி பதுமையே - பொழிலில் உள்ள மூங்கிலை மயக்கும் வளைசூழ்ந்த தோளியாளாகிய பதுமையே.

விளக்கம் : தோளியே என்பதன் ஈற்றிலுள்ள ஏகாரத்தைப் பதுமையின் ஈற்றிற் சேர்க்க. மருள் : உவம உருபு. ( 162 )

1328. தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை
மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலிற்
கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள்
பூவர் சோலை புகுவலென் றெண்ணினான்.

பொருள் : தீ தொடைத் தேவர் பண்ணிய இன்சுவை - இனிய யாழினையுடைய கந்தருவர் அமைத்த இனியமணம்; மேவர்தென் தமிழ் மெய்ப்பொருள் ஆதலின் - பொருந்திய தமிழகப் பொருளில் முதற் கந்தருவமான உண்மை மணமாகும் ஆதலினால்; கோவத்து அன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை - இந்திரகோபம் போன்ற மென்மையான சிற்றடியுடைய மலர்க்கொம்பனாள் நிற்கின்ற மலர் பொருந்திய பொழிலிலே; புகுவல் என்று எண்ணினான் - யானும் சென்று இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபடுவேன் என்று எண்ணினான்.
 
விளக்கம் : முதற் கந்தவரும்: நாடக வழக்கானது. இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படாமல் வருவது. ஈண்டுக் கூறியது சுட்டியொருவர் பெயர் கொள்ளப்படுவதால் இரண்டாங் கந்தருவமான உலகியல் வழக்காகும் மெய்ப்பொருள் என்றார் இதனை. இது ஐந்து நிலம் பெற்றது.தீந்தொடைத் தேவர் என்று இயைக்க. பூவர் : அர் : பகுதிப் பொருள் விகுதி என்பர் நச்சினார்க்கினியர். முதற் கந்தருவம் அன்மையின் எண்ணினான் என்றார். ( 163 )

1329. அல்லி சேரணங் கன்னவட் காயிடைப்
புல்லி நின்றமெய்ந் நாண்புறப் பட்டது
கல்செய் தோளவன் காமரு பேருணர்
வெல்லை நீங்கிற் றியைந்தன ரென்பவே.

பொருள் : அல்லிசேர் அணங்கு அன்னவட்கு - தாமரை மலர்த் திருவனையாட்கு ; ஆயிடைப் புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது - அவன் அங்ஙனம் எண்ணிச் சென்ற பொழுது பொருந்தி நின்ற மெய்ந்நாணம் நீங்கியது - கல்செய் தோளவன் காமரு பேர் உணர்வு எல்லை நீங்கிற்று; கல்செய் தோளவன் காமரு பேர் உணர்வு எல்லை நீங்கிற்று - கல்லாலாகியது போன்ற தோளையுடையானின் அழகிய பேரறிவு அவன் எல்லையைக் கடந்தது; இயைந்தனர் - அப்போது இருவரும் கூடினர்.
 
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். அல்லி - அகவிதழ்; ஈண்டுத் தாமரை மலர்க்கு ஆகுபெயர். அணங்கு ஈண்டுத் திருமகள்; பதுமைக்குவமை, தோளவன் : சீவகன். ( 164 )

1330. களித்த கண்ணிணை காம்பென வீங்குதோட்
டெளிர்த்த வெள்வளை சேர்ந்தது மாமையுந்
தளித்த சுண்ணஞ் சிதைந்தன குங்கும
மளித்த பூம்பட் டணிந்து திகழ்ந்ததே.

பொருள் : கண்இணை களித்த - (அப்போது) கண்களிரண்டும் களித்தன; காம்பு என வீங்குதோள் வள்வளை தெளிர்த்த - மூங்கில் எனப் பருத்த தோள்களில் வெள்வளைகள் ஒலித்தன; மாமையும் சேர்ந்தது - போன மாமைநிறம் வந்து சேர்ந்தது; தளித்த சுண்ணம் குங்குமம் சிதைந்தன - பூசிய சுண்ணப் பொடியும் குங்குமமும் அழிந்தன; அளித்த பூம்பட்டு அணிந்து திகழ்ந்தது - இவனால் அருள் பண்ணப்பட்ட பட்டும் அணியப் பெற்று விளங்கியது.
 
விளக்கம் : புணர்ச்சி நீங்கிப் பட்டணிந்தாளாதலின் அது திகழ்ந்தது. கண்ணிணை களித்த என மாறுக. வெள்வளை - வெள்ளிய சங்கவளையல். மாமையும் சேர்ந்தது என மாறுக. தளித்த - பூசிய. அளித்த - சீவகனால் வழங்கப்பட்ட என்க. ( 165 )

1331. குவளை ஏய்ந்த கொடுங் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர்த் தண் கொடி முல்லையே.

பொருள் : குவளை ஏய்ந்த கொடுங்குழை கூந்தலுள் - குவளை மலர் பொருந்திய, வளைந்த மகரக் குழையை அணிந்தவளின் கூந்தலிலே; திவளும் செம்பொறி வண்டுகாள்! - துவளும் செம்புள்ளி வண்டுகளே!; தவளமெல் இணர்த்தண் கொடிமுல்லை - வெண்மையான மெல்லிய பூங்கொத்துக்களையுடைய தண்ணிய கொடிமுல்லைகள்; இவளகூர் எயிறு ஈனும் தகையவோ? - இவளுடைய கூரிய எயிற்றை ஈனும் தகுதியுடையவோ ? கூறுமின்.
 
விளக்கம் : வாழிய : அசை. இவள : அ : ஆறனுருபு. ஏய்ந்த - இயைந்த. கொடுங்குழை : அன்மொழித்தொகை; பதுமை, திவள்தல் - துவளுதல். தவளமெல்லிணர் - வெள்ளிய மெல்லிய பூங்கொத்தினையுடைய. ( 166 )

1332. பொன் துஞ்சு ஆகத்துப் பூங் கண்கள் போழ்ந்த புண்
இன்று இப் பூண் கொள் இள முலைச் சாந்து அலால்
அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையே
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்.

பொருள் : பொன் - பொன்னனையாய்!; துஞ்சு ஆகத்துப் பூங்கண்கள் போழ்ந்த புண் - நீ தங்கிய மார்பிலே நின் கண்களாகிய வேல்பட்டுப் பிளந்து கிடந்த பழம் புண்களை; இன்று இப் பூண்கொள் இளமுலைச் சாந்து அலால் - இன்று இந்த அணிகலன் தங்கிய இளமுலைகளில் அணிந்த சாந்தல்லது; அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லை - மாறுபட்டுத் தீர்ப்பன வேறொன்றும் இல்லை; என்று மாதர் எழில்நலம் ஏத்தினான் - என்று கூறிப் பதுமையின் அழகுநலத்தைப் போற்றினான்.
 
விளக்கம் : இவையிரண்டும் நயப்பு. பொன்: பதுமை; உவமை யாகுபெயர். இனித் தலைவியின் முன்னாதலின் திருமகள் துஞ்சும் ஆகம் எனத் தன்னைப் புகழ்தலும் ஆம். ஆகம்: நெஞ்சு; இடவாகுபெயர். ( 167 )

1333. கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து
வண்ண மாலை நடுச்சிகை யுள்வளைஇச்
செண்ண வஞ்சிலம் பேறு துகளவித்
தண்ண லின்புறுத் தாற்றலி னாற்றினாள்.

பொருள் : கண்ணி வேய்ந்து - மலர்க்கண்ணியைச் சூடி; கருங்குழல் கைசெய்து - கரிய கூந்தலை ஒழுங்காக அணிந்து; வண்ணமாலை நடுச்சிகை உள் வளைஇ - அழகிய மாலையைக் கொண்டையின் நடுவே வளையமாக வைத்து; செண்ணம் அம் சிலம்பு ஏறு துகள் அவித்து - நுண்ணிய தொழிலையுடைய அழகிய சிலம்பிலேறின பூந்துகளைத் துடைத்து; அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் - சீவகன் இன்பம் ஊட்டி ஆறுதல் செய்தலால்; ஆற்றினாள் - ஆறுதல் கொண்டாள்.
 
விளக்கம் : கூட்டத்தின்போது சிலம்பிலே நிலமிசையுதிர்ந்து கிடந்த பூந்துகள் படிந்தது. கண்ணி - தலையிற் சூடும் மாலை. செண்ணம் - ஒப்பனை; நுண்டொழில் என்பார் நச்சினார்க்கினியர். அண்ணல் : சீவகன். ( 168 )

1334. திங்க ளும்மறு வும்மெனச் சேர்ந்தது
நங்க ளன்பென நாட்டி வலிப்புறீஇ
யிங்கொ ளித்திடு வேனும ரெய்தினார்
கொங்கொ ளிக்குழ லாயெனக் கூறினான்.

பொருள் : நங்கள் அன்பு திங்களும் மறுவும் எனச் சேர்ந்தது - நம்முடைய அன்பு திங்களும் அதிற் பொருந்திய மறுவும் என்னுமாறு பொருந்தியது; என நாட்டி வலிப்பு உறீஇ - என்று கூறி நாட்டி வலியுறுத்தி; கொங்கு ஒளிக் குழலாய்!- தேன் பொருந்திய கூந்தலாய்!; நுமர் எய்தினார் - உன் ஆயத்தார் வந்து விட்டனர் (ஆதலால்); இங்கு ஒளித்திடுவேன் எனக் கூறினான் - இங்கு மறைந்திடுவேன் என்று கூறினான்.
 
விளக்கம் : நங்கள் : கள் : அசை. நாட்டி - பிரிவென்பதொன்றுண்டென நிலைபெறுத்தி. வலிப்பு உறீஇ - பிரிந்தும் உளத்தாற் பிரிவிலேமென்று தெளியும்படி நெஞ்சை வற்புறுத்தி. உடன் தேய்ந்து உடன் வளர்தலின் மறு உவமை. நச்சினார்க்கினியர் இவ்விரண்டு செய்யுளையும் ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு : அண்ணல் வேய்ந்து, கைசெய்து, துகளவித்து, இன்புறுத்தி, நம் அன்பு சேர்ந்ததென்று கூறி நாட்டி. வலிப்புறீஇ ஆற்றுவித்தலின் ஆற்றினாள். ஆற்றின பின்பு, குழலாய்! எய்தினார், ஒளிப்பேன் என்று கூறினான். ( 169 )

1335. மழையி டைக்குளித் திட்டதோர் வாண்மினிற்
றழையி டைக்குளித் தான்றகை வேலினா
னிழையி டைக்குளித் தேந்திய வெம்முலை
வழையி டைக்குளித் தார்வந்து தோன்றினார்.

பொருள் : மழையிடைக் குளித்திட்டது ஓர் வாள்மினின் - மழையிடத்தே மறைந்திட்ட ஒரு மின்னைப்போல்; தகை வேலினான் தழையிடைக் குளித்தான் - தகுதியுற்ற வேலினான் கடிதாகத் தழையிடை மறைந்தனன்; இழையிடைக் குளித்து ஏந்திய வெம்முலை - அணிகலனிடையே மறைந்த ஏந்திய விருப்பூட்டும் முலையினாராகிய; வழையிடைக் குளித்தார் வந்து தோன்றினார் - சுரபுன்னை மரங்களினிடையே மறைந்த ஆயத்தார் வந்து தோன்றினர்.
 
விளக்கம் : மழை: ஆகுபெயர். மின்னல் - ஈண்டுத் தொழில் பற்றிச் சீவகனுக்கு உவமை. குளித்தான் - மறைந்தவன். வழை - சுரபுன்னைமரம். குளித்தார் - மறைந்தார்; தோழியர். ( 170 )

1336. மின்னொர் பூம்பொழின் மேதகச் செல்வதொத்
தன்ன நாண வசைந்து சிலம்படி
மென்மெ லம்மலர் மேன்மிதித் தேகினா
ணன்ன லம்மவற் கேவைத்த நங்கையே.

பொருள் : நல்நலமே அவற்கு வைத்த நங்கை - நல்ல அன்பொன்றுமே அவனுக்குத் துணையாக வைத்த பதுமை; மின்ஒர் பூம்பொழில் மேதகச் செல்வது ஒத்து - மின்னானது ஒரு மலர்ப் பொழிலிலே சிறப்புறச் செல்வதுபோல; சிலம்பு அடி மென்மெலம் மலர்மேல் மிதித்து - சிலம்பணிந்த அடியை மெல்ல மெல்ல மலரின்மேல் எடுத்து வைத்து; அன்னம் நாண அசைந்து ஏகினாள் - அன்னமும் வெள்குற அசைந்து சென்றாள்.

(விளக்கம்.) முற்பிறப்பே தொடங்கி அன்புவைத்தவன் என்றுமாம். மின், பதுமைக்கு உவமை. மே - பெருமை. நன்னலம் - சிறந்த அன்பு. அவற்கு : சீவகனுக்கு. நங்கை : பதுமை. ( 171 )

1337. திங்கள் சூழ்ந்தபன் மீனெனச் சென்றெய்தி
நங்கை தவ்வையுந் தோழியு நண்ணினா
ரங்க வாய மடிப்பணி செய்தபின்
றங்கள் காதலி னாற்றகை பாடினார்.

பொருள் : திங்கள் சூழ்ந்த பல்மீன் எனச் சென்று எய்தி - திங்களைச் சூழ்ந்த பல மீன்கள் என்னுமாறு போய்ச்சேர்ந்து; அங்கு அவ் ஆயம் அடிப்பணி செய்தபின் - அங்கே அந்த ஆயத்தார் குற்றேவல் புரிந்த பிறகு; நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார் - பதுமையின் செவிலியும் தோழியும் அணுகினார்; தங்கள் காதலினால் தகைபாடினார் - (பின்னா) தங்கள் அன்பு மிகுதியால் அவள் நலத்தை எல்லோரும் சேர்ந்து பாராட்டினார்.

விளக்கம் : தவ்வை : செவிலிக்கு மூத்தவள். பாம்பு தீண்டின பொழிலாதலிற் காவலாக வந்தனர். திங்கள் பதுமைக்கும் மீன்கள் தோழியர்க்கும் உவமை. தவ்வை - தாய் ; ஈண்டுச் செவிலி. தகை - அழகு. பாடினார் - பாடிப்பரவினர். ( 172 )

1338. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும்
விழைவ சேர்த்துபு மெல்லென வேகினார்
முழையுண் மூரி முழங்கரி யேறனான்
பழைய நண்பனைப் பண்புளி யெய்தினான்.

பொருள் : தழையும் கண்ணியும் தண்நறு மாலையும் - தழை கண்ணி நல்ல மாலை ஆகியவற்றில்; விழைவ சேர்த்துபு - அவள் விரும்புவனவற்றைச் சேர்த்து; மெல்என ஏகினார் - மெல்லக் கொண்டு சென்றனர்; முழையுள் மூரி முழங்கு அரி ஏறனான் - முழையிலே பெருமையுடன் முழங்கும் சிங்கம் போன்ற சீவகனும்; பழைய நண்பனைப் பண்புஉளி எய்தினான் - பழைய நண்பனாகிய உலோகமாபாலனை, அப்பதுமையின் பண்புகளை எண்ணியவாறு அடைந்தான்.
 
விளக்கம் : பண்பு : கூட்டத்தின்போது கண்ட குணங்கள். விழைவ : வினையாலணையும் பெயர். துசர்த்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சேர்த்துபு - சேர்த்தி. மழை - மலைக்குகை. மூரி - பெருமை. அரியேறு - ஆண் சிங்கம். அன்னான் என்பது அனான் என னகர மெய் குறைந்தது நின்றது. இது தொகுத்தல் விகாரம். அன்னான் - போன்றவன்; இது சீவகனையுணர்த்திற்று. பழைய நண்பன் என்றத உலோகபாலனை - உள்ளி என்பது உளி என இடை குறைந்து நின்றது. உள்ளி - நினைத்து. ( 173 )

வேறு
 
1339. பூமியை யாடற் கொத்த பொறியின னாத லானு
மாமக ளுயிரை மீட்ட வலத்தின னாத லானு
நேமியான் சிறுவ னன்ன நெடுந்தகை நேரு மாயி
னாமவற் கழகி தாக நங்கையைக் கொடுத்து மென்றான்.

பொருள் : மாமகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும் - பதுமையின் உயிரைத் தந்த வெற்றியை உடையோன் ஆகையாலும்; பூமியை ஆள்தற்கு ஒத்த பொறியினன் ஆதலானும் - உலகினை ஆள்வதற்குரிய நல்லிலக்கணம் உடையனாதலானும்; நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேருமாயின் - திருமாலின் மகனான காமனை யொத்த சீவகன் உடன்படுவானாயின்; நாம் அழகிதாக அவற்கு நங்கையைக் கொடுத்தும் என்றான் - நமக்கு நன்றாக நாம் பதுமையை அவனுக்குக் கொடுக்கக் கடவேம் என்று தனபதி மன்னன் கூறினான்.
 
விளக்கம் : ஆடற்கு - ஆள்வதற்கு. பொறி நல்லிலக்கணம். மாமகள்: பெருமை மிக்க பதுமை. வலம் - வெற்றி. நேமியான் சிறுவன்: திருமால் மகனான காமன்; சீவகனுக்குவமை. கொடுத்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று. ( 174 )

1340. மதிதர னென்னு மாசின் மந்திர சொல்லக் கேட்டே
யுதிதர வுணர்வல் யானு மொப்பினு முருவி னானும்
விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி னாளைக்
கொதிதரு வேலி னாற்கே கொடுப்பது கரும மென்றான்.

பொருள் : சொல்லக் கேட்டு - அவ்வாறு அரசன் கூறக்கேட்டு; மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி - மதிதரன் எனும் பெயரை யுடைய குற்றம் அற்ற அமைச்சன்; ஒப்பினும் உருவினானும் - ஒப்பினாலும் உருவுடைமையாலும்; விதிதர வந்தது ஒன்றே - ஊழ்தர வந்தது ஒன்றாம்; விளங்குபூண் முலையினாளைக் கொதிதரு வேலினாற்கே கொடுப்பது கருமமம் - விளங்கும் அணியணிந்த முலையாளைக் கொதியிட்ட வேலினானுக்கே கொடுப்பது கடமை; யானும் உதிதர உணர்வல் என்றான் - யானும் என் உணர்வில் தோன்ற முன்னரே உணர்ந்தேன் என்றான்.

விளக்கம் : பதுமையும் சீவகனும் மணப்பதற்கு ஒப்பானும் உருவானும் ஊழ் கூட்டுவித்தது என்று மந்திரி கூறினான். உரு - அழகு. ஒப்பு : அரசகுடும்பமாதல் முதலான ஒப்புமை. பொறி என முற்செய்யுளில் வந்ததுகாண்க. இனி, உரு உட்காகும் எனக்கொண்டு, பதுமைக்குற்ற நஞ்சை நீக்கினாற்குப் பதுமையைக் கொடுப்பதாக முரசறைந்ததை மாற்றக் கூடாது என்னும் அச்சம் என்பர் நச்சினார்க்கினியர். அது பொருந்துமேற் கொள்க. ஒப்பு பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு - உருவு நிறுத்த காம வாயில் - நிறையே அருளே உணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல் - மெய்ப். 25) என்பதை மேற்கொண்டு, 25 என இவ் வொப்பில் வந்ததால்,உட்கு என இதற்குப் பொருள் கொண்டனர் போலும். ( 175 )

1341. உள்விரித் திதனை யெல்லா
முரைக்கென மொழிந்து விட்டான்
றெள்ளிதிற் றெரியச் சென்றாங்
குரைத்தலுங் குமரன் றேறி
வெள்ளிலை யணிந்த வேலான்
வேண்டிய தாக வென்றா
னள்ளிலை வேல்கொண் மன்னற்
கமைச்சனஃ தமைந்த தென்றான்.

பொருள் : இதனை யெல்லாம் உள்விரித்து உரைக்க என மொழிந்துவிட்டான் - (அதனைக் கேட்ட மன்னன்) இந் நிலைமையெல்லாம் அவனுக்குத் தெளிவாக விளக்கியுரைப்பாயாக என்று, கூறிவிட்டான்; ஆங்குச் சென்று தெள்ளிதின் தெரிய உரைத்தலும் - மந்திரியும் ஆங்குச் சென்று தெளிவாக விளக்கிக் கூறலும்; குமரன் தேறி - சீவகன் தெளிய வுணர்ந்து; வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான் - வெற்றிலை போன்ற முகமுடைய வேலையுடைய மன்னன் விரும்பியவாறே ஆகுக என்றான்; அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான் - (அது கேட்டு) கூரிய வேலணிந்த மன்னனிடம் சென்று மந்திரி அஃது அப்படியே முடிந்த தென்றான்.
 
விளக்கம் : இதனை - இக்கருத்தினை. குமரன் : சீவகன். வேண்டியது - தனபதிமன்னன் விரும்பியது. வெள்ளிலை - வெற்றிலை. அணிந்த : உவமவுருபு. மன்னற்கு : தனபதிக்கு. அமைச்சன் : மதிதரன். அஃது - அக்காரியம். ( 176 )

1342. பொன்றிய வுயிரை மீட்டான்
பூஞ்சிகைப் போது வேய்ந்தா
னன்றியு மாமெய் தீண்டி
யளித்தன னழகின் மிக்கா
னொன்றிய மகளிர் தாமே
யுற்றவர்க் குரிய ரென்னா
வென்றிகொள் வேலி னாற்கே
பான்மையும் விளைந்த தன்றே.

பொருள் : பொன்றிய உயிரை மீட்டான் - நீங்கற் கிருந்த உயிரை மீட்டான்; பூஞ்சிகைப் போது வேய்ந்தான் - அழகிய கூந்தலிலே மலரணிந்தான்; அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் - மேலும், பதுமையின் மெய்யினைத் தொட்டு அளி செய்தான்; அழகின் மிக்கான் - அழகினும் மேம்பட்டவன்; ஒன்றிய மகளிர்தாமே உற்றவர்க்குரியர் என்னா - பொருந்திய மகளிர் தாங்கள் தங்களை உற்றவர்க்கே உரியவர் என்று; வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே! - வெற்றியுடைய வேலினானுக்கே அத்தன்மையும் விளைந்தது அல்லவா?
 
விளக்கம் : உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் (சிற்ற - 225. பேர் - மேற்.) பொன்றிய உயிர் என்றது இறத்தற்கிருந்த உயிர் என்றவாறு. சிகையிற் போது வேய்ந்தான் என்க. மாமெய்யும் எனவேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தான் தொக்கது. (177)
 
1343. கோப்பெருந் தேவி கொற்றக்
கோமக னிவைக ணாடி
யாப்புடைத் தையற் கின்றே
நங்கையை யமைக்க வென்னத்
தூப்புரி முத்த மாலை
தொடக்கொடு தூக்கி யெங்கும்
பூப்பரிந் தணிந்து கோயில்
புதுவது புனைந்த தன்றே.

பொருள் : இவைகள் கோப்பெருந் தேவி கொற்றக் கோமகன் நாடி - இவற்றைத் தனபதியும் திலோத்தமையும் உலோகபாலனும் தம்மிற் கூடி ஆராய்ந்து; இன்றே ஐயற்கு நங்கையை யாப்பு உடைத்து - இன்றைக்கே சீவனுக்குப் பதுமையை நல்கும் பொருத்தம் உளது; அமைக்க என்ன - (நீவிர் மணத்திற்கு வேண்டுவன) அமையுங்கோள் என்று பணியாளரை ஏவ; தூப் புரி முத்தமாலை தொடக்கொடு எங்கும் தூக்கி - தூய வடமான முத்தமாலையைச் சல்லியுந் தூக்குமாக எங்கும் நாற்றி; பூப்புரிந்து அணிந்து - பூவை விரும்பி அணிந்து; கோயில் புதுவது புனைந்தது - ஒரு கோயில் புதுவதாகப் புனையப்பட்டது.
 
விளக்கம் : கோ : தனபதி. பெருந்தேவி - ஈண்டுத் திலோத்தமை. கோமகன் : உலோகபாலன். கோவும் தேவியும் மகனும் என உம்மை விரிக்க. ஐயற்கு : சீவகனுக்கு. கோயில் புதுவழி புனைந்து - அரண்மனை புதியதாக அலங்கரிக்கப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம். ( 178 )

1344. கணிபுனைந் துரைத்த நாளாற் கண்ணிய கோயி றன்னுண்
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
யணியுடைக் கமல மன்ன வங்கைசேர் முன்கை தன்மேற்
றுணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார்.

பொருள் : கணி புனைந்து உரைத்த நாளால் - கணி ஆராய்ந்து கூறிய நாளிலே; கண்ணிய கோயில் தன்னுள் - நன்றென்று கருதிய கோயிலிலே; மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி - மணி புனைந்த மகளிராகிய நல்லார் மங்கல மரபினை உரைத்து; அணியுடைக் கமலம் அன்ன அங்கை சேர் முன்கை தன்மேல் - அழகுறு தாமரை அன்ன அங்கையினையுடைய முன் கையிலே; துணிவுடைக் காப்புக் கட்டி - (இருவர்க்கும்) உறுதியுறு காப்பினை அணிய; சுற்றுபு தொழுது காத்தார் - சுற்றித் தொழுது புறப்படாமற் காத்தார்.

விளக்கம் : கணி - கணிவன். கண்ணிய - கருதிய. கட்டி - கட்ட. சுற்றுபு - சுற்றி. ( 179 )

1345. மழகளிற் றெருத்திற் றந்த
மணிக்குட மண்ணு நீரா
லழகனை மண்ணுப் பெய்தாங்
கருங்கடிக் கொத்த கோலந்
தொழுதகத் தோன்றச் செய்தார்
தூமணிப் பாவை யன்னார்
விழுமணிக் கொடிய னாளும்
விண்ணவர் மடந்தை யொத்தாள்.

பொருள் : தூ மணிப் பாவை அன்னார் - தூய மாணிக்கப் பாவை போன்றவர்; மழ களிற்று எருத்தில் தந்த மணிக்குடம் மண்ணும் நீரால் - மழகளிற்றின் பிடரிலே கொண்ர்ந்த மணிக்குடத்திலிருந்து குளிக்கும் நீரினால்; அழகனை மண்ணுப் பெய்து - சீவகனைக் குளிப்பாட்டி; ஆங்கு அருங்கடிக்கு ஒத்த கோலம் - அவ்விடத்தே திருமணத்திற்குப் பொருந்திய ஒப்பனையை; தொழுதகத் தோன்றச் செய்தார் - நன்கு மதிக்கும்படி விளங்க ஒப்பித்தனர்; விழு மணிக்கொடி அனாளும் - சிறந்த மாணிக்கக்கொடி போன்ற பதுமையும்; விண்ணவர் மடந்தை ஒத்தாள் - (அவ்வொப்பனையாலே) வானவர் மகள் போன்றனள்.
 
விளக்கம் : மழகளிறு - இளைய யானை. எருத்து - பிடர். மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய கடவுள்நீர். அழகனை : சீவகனை. மண்ணுப்பெய்து - (மங்கல) நீராட்டி. கடி - திருமணம். பாவையன்னார் - ஈண்டு வண்ணமகளிர். மணிக்கொடியனாள் : பதுமை.
( 180 )

வேறு
 
1346. கயற்க ணாளையுங் காமனன் னானையு
மியற்றி னார்மண மேத்தருந் தன்மையார்
மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய
வியற்கை யன்புடை யாரியைந் தார்களே.

பொருள் : ஏத்த அருந் தன்மையார் - புகழ்தற்கரிய தன்மையுடையார் ஆகிய தனபதி முதலாயினோர்; கயற்கணாளையும் காமன் அன்னானையும் - பதுமையையிம் சீவகனையும்; மணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்; மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய - குற்றமற்ற கந்தருவரின் மணத்தைப் போல முன்பே பொருந்திய; இயற்கை அன்பு உடையார் இயைந்தார்கள் - இயற்கைப் புணர்ச்சியால் உள்ள அன்புடையார் தம்மிற் கூடினார்.
 
விளக்கம் : கயற்கணாள் : பதுமை. காமனன்னான் : சீவகன். ஏத்தருந்தன்மையார் என்றது தனபதி முதலாயினாரை. மயற்கை - குற்றம். மயற்கை யில்லவர் மன்றல் என்றத குற்றமற்ற தமிழச் சான்றோர் வகுத்த மணம் என்றவாறுமாம். முன்னரே கள்ளப்புணர்ச்சி யுடையாராகலின் இயற்கை யன்புடையார் என்றார். ( 181 )

1347. வாளும் வேலு மலைந்தரி யார்ந்தகண்
ணாளும் வார்கழன் மைந்தனு மாயிடைத்
தோளுந் தாளும் பிணைந்துரு வொன்றெய்தி
நாளு நாகர் நுகர்ச்சி நலத்தரே.

பொருள் : வாளும் வேலும் மலைந்து அரியார்ந்த கண்ணாளும் - வாளையும் வேலையும் வென்று செவ்வரி பரந்த கண்ணாளும்; வார்கழல் மைந்தனும் - கட்டப் பெற்ற கழலையுடைய மைந்தனும்; ஆயிடை - பள்ளியிலே; தோளும் தாளும் பிணைந்து - தோளும் தோளும் தாளும் தாளும் பிணைதலின்; உரு ஒன்று எய்தி - ஒரு வடிவைப் பெற்று; நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தர் - நாள்தோறும் நாகர் நுகர்கின்ற நுகர்ச்சியின்பத்தை உடையராயினர்.
 
விளக்கம் : மலைந்து - வென்று. அரி - செவ்வரி கருவரிகள். கண்ணாள்; பதுமை. மைந்தன் : சீவகன். ஆயிடை என்றது - பள்ளிக்கட்டிலிடத்தே என்பதுபட நின்றது. தோளோடு தோளும் தாளொடு தாளும் பிணைதலானே என்க. நாகர் - பவணலோகத்தார். ( 182 )

1348. தணிக்குந் தாமரை யாணலந் தன்னையும்
பிணிக்கும் பீடினி யென்செயும் பேதைதன்
மணிக்கண் வெம்முலை தாம்பொர வாயவிழ்ந்
தணிக்கந் தன்னவன் றாரங் குடைந்ததே.

பொருள் : தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும் - (பிறரழகைக்) கீழ்ப்படுத்தும் திருமகளின் அழகையும்; பிணிக்கும் பீடு இனி என் செயும் - பிணிக்கும் இவர் தகைமை மேலும் என்ன செயும்!; பேதை தன்மணிக்கண் வெம்முலை தாம் பொர - பதுமையின் மணிக் கண்ணையுடைய முலைகள் ஆகிய யானைகள் பொருதலால்; அணிக்கந்து அன்னவன் தார் அங்கு வாய் அவிழ்ந்து உடைந்தது - அழகிய தூணனையவன் மாலை அங்கே கட்டலர்ந்து மலர்ந்தது.
 
விளக்கம் : வாய் அவிழ்தல் அரும்பின் வாயவிழ்தலும் அவ்விடத்தினின்றும் நிலைகுலைதலுமாம். தார் : மாலையும், தூசிப்படையும். பிணிக்கும் பீடு : இருவருக்கும் பொது. ( 183 )

1349. பரிந்த மாலை பறைந்தன குங்குமங்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியி
னரிந்த மேகலை யார்த்தன வஞ்சிலம்
பிரிந்த வண்டிளை யார்விளை யாடவே.

பொருள் : கலந்த மகிழ்ச்சியின் இளையார் விளையாட - கூடிய மகிழ்ச்சியினாலே இளைஞராகிய அவர்கள் விளையாடுதலினால்; மாலை பரிந்த - மார்பிலுள்ள முத்தமாலைகள் அற்றன; குங்குமம் பறைந்தன - குங்குமச் சாந்து அழிந்தன; கண்ணி கரிந்த - முடியில் அணிந்த கண்ணிகள் கரிந்தன; மேகலை அரிந்த - மேகலையிலுள்ள மணிகள் அற்றன; அம் சிலம்பு ஆர்த்தன - அழகிய சிலம்புகள் ஒலித்தன.

விளக்கம் : இவ்விரண்டு செய்யுட்களையும் ஒரு தொடராக்கிப் பிணிக்கும் பீடினி என் செயும்! என்பதை இறுதியிற் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். ( 184 )

1350. கொழுமெ னின்னகிற் கூட்டுறு மென்புகை
கழுமு சேக்கையும் காலையு மாலையுந்
தழுவு காத றணப்பிலர் செல்பவே
யெழுமை யும்மியைந் தெய்திய வன்பினார்.

பொருள் : எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் - எழு பிறப்பும் பொருந்திப் பெற்ற அன்பினார்; கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென்புகை - கொழுவிய மெல்லிய இனிய அகிலுடன் கூட்டிடும் பொருள்கள் கலந்த மெல்லிய புகை; கழுமு சேக்கையுள் - பொருந்திய அணையிலே; காலையும் மாலையும் தழுவு காதல் தணப்பு இலர் செல்ப - காலையினும் மாலையினும் பொருந்திய காதல் நீங்கலராய்ச் சென்றனர்.
 
விளக்கம் : கூட்டு - நேர்கட்டி முதலிய மணப் பொருள்கள். கொழுவிய புகை இனிய புகை மெல்லிய புகை எனத் தனித்தனிக் கூட்டுக. கழுமுதல் - பொருந்துதல். காலையும் மாலையும் பிரிதற்குரிய பொழுதுகள். அப்பொழுதும் பிரிவிலராய் என்பது கருத்து. தணப்பு - பிரிவு. எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் என்றது, அங்ஙனம் பிரிவிலராயதற்குக் குறிப்பேதுவாகும். ( 185 )

1351. நாறி யுஞ்சுவைத் துந்நரம் பின்னிசை
கூறி யுங்குளிர் நாடக நோக்கியு
மூறின் வெம்முலை யாலுழப் பட்டுமவ்
வேற னான்வைகும் வைகலு மென்பவே.

பொருள் : நாறியும் - நறுமணப் பொருள்கள் அணிந்தும்; சுவைத்தும் - சுவைப் பொருள்களை உண்டும்; நரம்பு இன் இசை கூறியும் - யாழிசையைக் கொண்டாடியும்; குளிர் நாடகம் நோக்கியும் - இனிய நாடகங்களைப் பார்த்தும் (காமத்தைப் பெருக்கி); ஊறு இன் வெம்முலையால் உழப்பட்டும் - ஊற்றினுக்கினிய முலையால் உழப்பட்டும்; அவ் ஏறு அனான் வைகலும் வைகும் - அந்த ஏறு போன்றவன் நாடோறும் தங்குவான்.
 
விளக்கம் : ஐம்பொறி நுகர்ச்சியுங் கூறினார். கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் - ஒண்டொடி கண்ணே உள. என்றார் வள்ளுவர். ( 186 )

வேறு
 
1352. விரிகதிர் விளங்கு பன்மீன்
கதிரொடு மிடைந்து திங்கட்
டெரிகதிர் திரட்டி வல்லான்
றெரிந்துகோத் தணிந்த போலுஞ்
சொரிகதிர் முத்த மின்னுந்
துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான்
புரிகதிர்ப் பொன்செய் மாலைப்
புகைநுதிப் புலவு வேலான்.

பொருள் : புரிகதிர் பொன் செய்மாலைப் புகைநுதிப் புலவு வேலான் - மிகு கதிரை யுடைய பொன்னொளி தரும் மாலையையுடைய, சின மிகும், நுனியிலே புலாலையுடைய வேலான்; விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து - விரிகின்ற கதிர்கள் விளங்கும் பல விண் மீன்களின் கதிர்களுடன் கலக்குமாறு; திங்கள் தெரி கதிர் திரட்டி - திங்களின் விளங்குங் கதிர்கையும் சேர்த்து; வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும் - வல்லவன் ஆராய்ந்து கோத்து அணிந்தன போன்ற; சொரி கதிர் முத்தம் மின்னும் - பெய்யும் ஒளியுடைய முத்து மாலை மின்னுகின்ற; துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான் - இரு முலைகளினிடத்தே அமிழ்ந்துவிட்டான்.
 
விளக்கம் : மிடைந்து - மிடைய. அணிந்த : பெயர். புரிகதிர் - மிக்க கதிர். கதிர் விளங்கு மீன்களின் கதிரோடே மிடையும்படி திங்களின் கதிரைத் திரட்டி வல்லவன் கோத்தணிந்தவற்றை யொக்கும் கதிரையுடைய முத்தமின்னும் முலையென்க. ( 187 )

வேறு
 
1353. எழின்மாலை யென்னுயிரை யான்கண்டே
னித்துணையே முலையிற் றாகிக்
குழன்மாலைக் கொம்பாகிக் கூரெயிறு
நான்போழ்த லஞ்சி யஞ்சி
யுழன்மாலைத் தீங்கிளவி யொன்றிரண்டு
தான்மிழற்று மொருநாட் காறு
நிழன்மாலை வேனாண நீண்டகண்ணே
நெய்தோய்ந்த தளிரே மேனி.

பொருள் : எழில்மாலை என் உயிரை யான் கண்டேன். - அழகினை இயல்பாக வுடைய என் உயிரை யான் கண்டேன்; இத்துணையே - அது இவ் வளவினதே; முலையிற்று ஆகி - முலையினை உடைத்தாய்; நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே - ஒளியையியல்பாக வுடைய வேல் வெள்க, நீண்ட கண்களையும்; நெய் தோய்ந்த தளிர் மேனியே - நெய்ப்பை யுடைய தளிரனைய மேனியையும்; குழல் மாலைக் கொம்பு ஆகி - குழலையும் மாலையையும் உடையதொரு கொம்பாய், கூர் எயிறு நாப் போழ்தல் அஞ்சி அஞ்சி - கூரிய பற்கள் நாவைப் பிளக்குமென்று அஞ்சி அஞ்சி; உழல் மாலைத் தீ கிளவி - உழலும் இயல்புடைய நாவானது இனிய மொழியை; ஒரு நாள் காறும் ஒன்று இரண்டுதான் மிழற்றும் - ஒருநா ளெல்லாம் ஒன்றிரண்டே மொழியும்.
 
விளக்கம் : எழில்மாலை என் உயிர் : முதல் சினை வினையொடு முடிந்தது. இது நயப்பு. என்உயிர் யான் கண்டேன் என்றது காணாமரபிற்று உயிர் என மொழிவோர் பொய்ம்மொழிந்தனர் யான் கண்டேன் என்பது பட நின்றது. இச் செய்யுளொடு,
 
காணா மரபிற் றுயிரென மொழிவோர்.
நாணிலர் மன்றபொய்ம் மொழிந் தனரே
யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே
சொல்லு மாடும் மென்மெல இயலும்

கணைக்கா னுணுகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.

(தொல்.கள.10. மேற்.)  எனவரும் பழம்பாட்டை ஒப்புக் காண்க. ( 188 )

1354. மாநீர் மணிமுகிலின் மின்னுக்
கொடிநுசுப்பின் மயிலஞ் சாய
லேநீ ரிருபுருவ மேறி
யிடைமுரிந்து நுடங்கப் புல்லித்
தூநீர் மலர்மார்பன் றொன்னலந்
தான்பருகித் துளும்புந் தேறற்
றெனீர் மலர்மாலை தேன்றுளித்து
மட்டுயிர்ப்பச் சூட்டி னானே.

பொருள் : மாநீர் மணி முகிலின் மின்னுக்கொடி நுசுப்பின் மயில் அம் சாயல் - மிகு நீரையுடைய, மணிபோன்ற முகிலினிடத்து மின் கொடிபோலும் இடையினையுடைய மயில்போன்ற சாயலாளை; ஏ நீர் இரு புருவம் ஏறி - தன்னைக் கூட்டத்திற்கு ஏவும் இயல்புடைய இரு புருவமும் நெற்றியில் ஏறி; இடைமுரிந்து நுடங்க - இடை ஒசிந்து அசைய; தூநீர் மலர் மார்பன் - தூய தன்மையுற்ற மலர்ந்த மார்பனான சீவகன்; புல்லி - (அவளைத்) தழுவி; தொல் நலம் பருகி - பழமையான அழகை நுகர்ந்து; துளும்பும் தேறல் தேன் நீர் மலர் மாலை - ததும்பும் மதுவினைப் பருகும் வண்டின் இயல்பினையுடைய மலர் மாலையை; தேன் துளித்து மட்டு உயிர்ப்பச் சூட்டினான் - இனிமை துளிர்த்து மதுவைச் சிந்த அணிவித்தான்
 
விளக்கம் : மணி முகிலின் : இன் : சாரியை; ஏழனுருபு என்பர் நச்சினார்க்கினியர். மேலும் மட்டுத் தேறல் என மாறிக் காம பானத்தின் தெளிவைப் பருகி என்பர். உயிர்த்தல் - சுமை போக்குதல்.( 189 )

வேறு
 
1355. தேனடைந் திருந்த கண்ணித்
தென்மட்டுத் துவலை மாலை
யூனடைந் திருந்த வேற்க
ணொண்டொடி யுருவ வீணை
தானடைந் திருந்த காவிற்
பாடினா டனிமை தீர்வான்
கூனடைந் திருந்த திங்கட்
குளிர்முத்த முலையி னாளே.

பொருள் : தேன் அடைந்து இருந்த கண்ணி - வண்டுகள் பொருந்திய கண்ணியினையும்; தெள் மட்டுத் துவலை மாலை - தெளிந்த தேன் துளியையுடைய மாலையையும்; ஊன் அடைந்திருந்த வேல்கண் - ஊன் தங்கிய வேலனைய கண்களையும்; ஒண்தொடி - ஒளிரும் வளையையும்; கூன் அடைந்திருந்த திங்கள் குளிர்முத்த முலையினாள் - பிறைத் திங்கள் போலக் குளிர்ந்த முத்துமாலையணிந்த முலையையும் உடைய தேசிகப் பாவை; தான் அடைந்திருந்த காவில் - தான் தங்கிய பொழிலிலே; தனிமை தீர்வான் - தனிமையின் வெறுப்பு நீங்க; உருவ வீணை பாடினாள் - அழகிய யாழை யிசைத்துத் தன் குரலையும் இயைத்துப் பாடினாள்.
 
விளக்கம் : தேன் - வண்டினம். வீணை : யாழும் மிடறும் கலந்தது. தேன் - வண்டு. மட்டு - தேன். துவலை - துளி. ஒண்டொடி : தேசிகப் பாவை. உருவவீணை - அழகிய யாழ். திங்கள்போலக் குளிர் முத்த முலையினாள் என்க. ( 190 )

1356. வார்தளிர் ததைந்து போது
மல்கிவண் டுறங்குங் காவிற்
சீர்கெழு குருசில் புக்கான்
றேசிகப் பாவை யென்னுங்
கார்கெழு மின்னு வென்ற
நுடங்கிடைக் கமழ்தண் கோதை
யேர்கெழு மயில னாளை
யிடைவயி னெதிர்ப்பட் டானே.

பொருள் : வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில் - நீண்ட தளிர்கள் நெருங்கி மலர்கள் நிறைந்து வண்டுகள் துயிலும் பொழிலிலே; சீர்கெழு குருசில் புக்கான் - சிறப்புப் பொருந்திய சீவகன் புகுந்தான்; தேசிகப் பாவையென்னும் - தேசிகப் பாவை யென்று அழைக்கப் பெறும்; கார்கெழு மின்னு வென்ற நுடங்கு இடை - முகிலிற் பொருந்திய மின்னை வென்ற அசையும் இடையையும்; கமழ் தண் கோதை - மணங் கமழும் குளிர்ந்த மாலையையும் உடைய; ஏர் கெழு மயிலனாளை - அழகு பொருந்திய மயில் போன்றவளை; இடைவயின் எதிர்ப்பட்டான் - அவ்விடத்தே கண்டான்.
 
விளக்கம் : ததைந்து - நெருங்கி. குருசில் : சீவகன். மின்னு - மின்னல். ஏர்கெழு - அழகு பொருந்திய. மயிலன்ன தேசிகப்பாவையை எதிர்ப்பட்டான் என்பது கருத்து. ( 191 )

1357. சிலம்பெனும் வண்டு பாட மேகலைத் தேன்க ளார்ப்ப
நலங்கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக்
கலந்தனன் காம மாலை கலையின தியல்பிற் சூட்டப்
புலம்புபோய்ச் சாய லென்னும் புதுத்தளி ரீன்ற தன்றே.

பொருள் : சிலம்பு எனும் வண்டு பாட - சிலம்பாகிய வண்டுகள் முரல; மேகலைத் தேன்கள் ஆர்ப்ப - மேகலை யென்னும் தேனினம் ஆரவாரிக்க; நலம் கவின் போது பூத்த - உறுப்புக்களின் இயற்கை அழகும் செயற்கை அழகும் ஆகிய மலர்கள் மலர்ந்த; பூங்கொடி நடுங்கி நாண - தேசிகப் பாவை நடுங்கி வெள்க; கலந்தனன் - கூடினான்; காம மாலை கலையினது இயல்பில் சூட்ட - காமமாகிய மாலையைக் (காந்தருவ மணங் கூறிய) நூலின் இயல்பாலே அணிவித்தானாக; புலம்பு போய்ச் சாயல் என்னும் புதுத்தளிர் ஈன்றது - அக்கொடி தனிமை நீங்கி மென்மை யென்னும் புதிய தளிரை ஈன்றது.
 
விளக்கம் : நலம், இயற்கை அழகு என்றும் கவின் என்றது ஒப்பனை யழகென்றும்கொள்க. பூங்கொடி போல்வாளாகிய தேசிகப்பாவை என்க. கலையினதியல்பு - நூல்கூறுமுறை. என்றது, யாழோர் மணத்தை. ( 192 )

1358. சாந்திடைக் குளித்த வெங்கட் பணைமுலைத் தாம மாலைப்
பூந்தொடி யரிவை பொய்கைப் பூமக ளனைய பொற்பின்
வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை யிவர்க ணாளு
மாய்ந்தடி பரவ வைகு மரிவையர்க் கநங்க னன்னான்.

பொருள் : அரிவையர்க்கு அநங்கன் அன்னான் - பெண்களுக்குக் காமன் போன்ற சீவகன்; சாந்திடைக் குளித்த வெங்கண் பணை முலைத்தாம மாலைப் பூந்தொடி அரிவை - சந்தனத்தின் இடையே முழுகிய விருப்பூட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும் ஒழுங்காகிய மாலையினையும் உடைய தேசிகப் பாவையும்; பொய்கைப் பூமகள் அனைய பொற்பின் - பொய்கையிலே மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அழகினையும்; வேந்து அடு குருதி வேற்கண் விளங்கு இழை - பகையரசை அடுகின்ற குருதியையுடைய வேலனைய கண்களையும் உடைய, விளக்கமான அணிகலன் புனைந்த பதுமையும்; இவர்கள் - (ஆகிய) இவர்கள்; நாளும் ஆய்ந்து அடிபரவ வைகும் - எப்போதும் ஆராய்ந்து தன் அடிகளை வணங்கத் தங்கினான்.
 
விளக்கம் : முலையினையும் மாலையினையும் பூமகளனைய பொற்பினையும் உடைய அரிவை எனக் கூட்டிப் பதுமைக் காக்கி, வேந்து தனபதி யெனக் கொண்டு, விளங்கிழை திலோத்தமை யென்று கொண்டு, அநங்கன் அன்னான் வேந்து விளங்கிழை யென்ற இவர்கள் நாளும் ஆராய்ந்து தன்னைப் பரவுதலாலே, தான் அரிவை யடியிலே தங்கா நிற்கும் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறு கூறுதற்குப், பதுமையையும் பரத்தையையும் ஒக்கக் கூறலாகாமை உணர்க என்று காரணமுங் காட்டுவர். ( 193 )

1359. இங்ஙன மிரண்டு திங்க ளேகலு மேக வேலா
னங்ஙனம் புணர்ந்த வன்பி னவண்முலைப் போக நீக்கி
யெங்ஙன மெழுந்த துள்ள மிருளிடை யேக லுற்றான்
றங்கிய பொறியி னாக்கந் தனக்கொர்தே ராக நின்றான்.

பொருள் : இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் - இவ்வாறு இரண்டு திங்கள் கழிந்தவுடன்; ஏக வேலான் - தனி வேலானும்; தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கு ஒர் தேராக நின்றான் - நிலை பெற்ற நல்வினையின் ஆக்கத்தைத் தனக்கு ஒரு தேராகக் கொண்டு நின்றவனுமாகிய சீவகன்; அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் - அவ்வாறு உழுவலான் வந்த அன்பினையுடையவளின்; முலைப் போகம் நீக்கி - முலையின்பத்தை விட்டு; இருளிடை ஏகல் உற்றான் - இருளிலே செல்லத் தொடங்கினான்; எங்ஙனம் எழுந்தது உள்ளம்? - எவ்வாறு உள்ளம் அதற்கு எழுந்ததோ?
 
விளக்கம் : கொண்டு போதலின் நல்வினை தேர் ஆயிற்று; பிரிவிற்கு நூலாசிரியர் வருந்தினர். ( 194 )

1360. தயங்கிணர்க் கோதை தன்மேற்
றண்ணென வைத்த மென்றோள்
வயங்கிணர் மலிந்த தாரான்
வருந்துறா வகையி னீக்கி
நயங்கிள ருடம்பு நீங்கி
நல்லுயிர் போவ தேபோ
லியங்கிடை யறுத்த கங்கு
லிருளிடை யேகி னானே.

பொருள் : வயங்கு இணர் மலிந்த தாரான் - விளங்கும் பூங்கொத்துக்கள் நிறைந்த மலர்த்தாரினான்; தயங்கு இணர்க்கோதை - விளங்கும் இணரையுடைய கோதையளான பதுமை; தன்மேல் தண் என வைத்த மென் தோள் - தன்மேல் குளிர்ச்சியாக வைத்திருந்த கையை; வருந்துறா வகையின் நீக்கி - வருந்தா வண்ணம் எடுத்து வைத்துவிட்டு; நயம் கிளர் உடம்பு நீங்கி - விருப்பம் பொருந்திய உடம்பை விட்டு; நல் உயிர் போவதே போல் - நல்ல உயிர் செல்வதைப் போல; இயங்கு இடை அறுத்த கங்குல் இருளிடை ஏகலுற்றான் - யாவரும் செல்லும் செலவை நடுவறுத்த இரவில் இருளிலே செல்லத் தொடங்கினான்.
 
விளக்கம் : நல் உயிர் ஆன்மா. அது கனவிடைப் போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறு போல இவனும் பல மகளிரையும் நுகர்ந்து பின்பு கூடுவன். இனி, உடம்பு நல்லுயிரை நீங்கிப் போனாற்போல் என்றும் உரைப்பர். ( 195 )

வேறு
 
1361. நீனி றக்குழ னேர்வளைத் தோளியைத்
தானு றக்கிடை நீத்தலுந் தன்பினே
வேனி றக்கண் விழித்தன ளென்பவே
பானி றத்துகிற் பையர வல்குலாள்.

பொருள் : நீல் நிறக் குழல் நேர் வளைத் தோளியை - நீல நிறக் கூந்தலையும் அழகிய வளையணிந்த தோளையும் உடையாளை; தான் உறக்கிடை நீத்தலும் - சீவகன் துயிலிடைப் பிரிந்தனனாக; தன் பினே - அவன் பிரிவிற்குப் பின்னே; பால் நிறத் துகில் வை அரவு அல்குலாள் - வெண்ணிறத் துகிலையும் பாம்பின் படமனைய அல்குலையும் உடையாள்; வேல் நிறக் கண் விழித்தனள் - வேலனைய ஒளி பொருந்திய கண்ணை விழித்தனள்.
 
விளக்கம் : என்ப ஏ : அசைகள். நீலநிறம் - நீல்நிறம் என அகரங்கெட்டு நின்றது. தோளி : பதுமை. உறக்கு - துயில். அல்குலாள் கண் விழித்தனள் என்க. ( 196 )

1362. ஆக்கை யுள்ளுறை யாவி கெடுத்தவண்
யாக்கை நாடி யயர்வது போலவுஞ்
சேக்கை நாடித்தன் சேவலைக் காணிய
பூக்க ணாடுமொர் புள்ளுமொத் தாளரோ.

பொருள் : ஆக்கை யுள் உறை ஆவி கெடுத்து - உடம்பு தன் உள்ளே இருக்கும் உயிரைக் கெடுத்து; யாக்கை நாடி அயர்வது போலவும் - திரும்பவும் பிணித்தலை நினைத்து வருந்துவது உண்டாயின் அதனைப் போலவும்; தன் சேவலைக் காணிய - தன் சேவலைக் காணவேண்டி; சேக்கை நாடி - கூட்டிலே தேடி (அங்குக் காணாமையின்); பூக்கண் நாடும் - மலர்களிலே தேடுகின்ற; ஒர் புள்ளும் ஒத்தாள் - ஓர் அன்னப் பேட்டினைப் போலவும் ஆயினாள்.
 
விளக்கம் : ஆக்கை - உடல். யாக்கை - கட்டுதல். சேக்கை : தங்குமிடம்; உறையுள். சேவல் புள் என்பன பூக்கண் நாடும் என்றதனான் அன்னச் சேவலும் அதன் பெடையும் என்பது பெற்றாம். ( 197 )

1363. புல்லும் போழ்தினும் பூணுறி னோமென
மல்லற் காளையை வைது மிழற்றுவா
யில்லி னீக்க முரைத்திலை நீயெனச்
செல்வப் பைங்கிளி தன்னையுஞ் சீறினாள்.

பொருள் : புல்லும் போழ்தினும் பூண் உறின் நோம் என - சீவகன் என்னைத் தழுவும் போதும் அணிகலன் உறின் வருந்தும் என்று; மல்லல் காளையை வைது மிழற்றுவாய் - வளமுறு காளையன்னானை வைது என் மென்மையை மிழற்றினையே; நீ இல்லின் நீக்கம் உரைத்திலை என - நீ அவன் இந்த மனையினின்றும் நீங்கிப் போதலை உரைத்திலையே என்று; செல்வப்பைங்கிளி தன்னையும் சீறினாள் - தன் காதற் கிளியையும் சீறினாள்.

விளக்கம் : பூண் உறின் - முயக்கம் இறுகின் என்றுமாம். சீவகன் என்னைப் புல்லும் போழ்தினும் என்க. பூண் - அணிகலன். மல்லல் - ஈண்டு ஆண்மைப் பண்புகளின் மிகுதி. இல்லினின்றும் நீங்கிய நீக்கம் என்க. ( 198 )

1364. ஓவி யக்கொடி யொப்பருந் தன்மையெம்
பாவை பேதுறப் பாயிலி னீங்கிநீ
போவ தோபொரு ளென்றிலை நீயெனப்
பூவை யோடும் புலம்பி மிழற்றினாள்.

பொருள் : ஓவியக் கொடி ஒப்பு அருந் தன்மை - ஓவியத்தில் எழுதிய பூங்கொடி உவமை யாகாத் தன்மையுடைய; எம் பாவை பேதுற - எங்கள் பாவையாள் வருந்தும்படி; நீ பாயலின் நீங்கிப் போவதோ பொருள்? - நீ பாயலினின்றும் பிரிந்து போவதோ செய்யத் தகுவது?; என்றிலை நீ - என்று கூறிலை நீ; என - என்றுரைத்து; பூவையோடும் புலம்பி மிழற்றினாள் - பூவையுடன் வருந்திக் கூறினாள்.
 
விளக்கம் : பாவை யென்றது, பட்டாங்கு கூறுதற்கண் வந்தது; அம்பலம் போற் - கோலத்தினாள் பொருட்டாக (சிற் - 27) என்றாற் போல. பாயலின் நின்றும் என்பதோர் இடைச்சொல் ஐந்தாவதற்கு விரிக்க. ( 199 )

1365. தன்னொப் பாரையில் லானைத் தலைச்சென்றெம்
பொன்னொப் பாளொடும் போகெனப் போகடாய்
துன்னித் தந்திலை நீயெனத் தூச்சிறை
யன்னப் பேடையொ டாற்றக் கழறினாள்.

பொருள் : தன் ஒப்பாரை இல்லானைத் தலைச் சென்று - தனக்கு நிகராவார் இல்லாதவனிடத்தே சென்று; என் பொன் ஒப்பாளொடும் போக என - என் திருவனையாளொடும் போவாயாக என்று; போகடாய் துன்னித் தந்திலை நீ என - அவனைச் செல்ல விடாயாய் என்னிடத்தே பொருந்தக் கொணர்ந்திலை நீ என்று; தூச் சிறை அன்னப் பேடையோடு ஆற்றக் கழறினாள் - தூய சிறகுகளையுடைய அன்னப் பேடையுடன் மிகவும் சினந்துரைத்தாள்.
 
விளக்கம் : போக விடாய் : போகடாய் என விகாரப்பட்டது. தன்னொப்பாரையில்லான் : சீவகன். பொன் : திருமகள். தூச்சிறை - வெள்ளை நிறமுடைய சிறகுமாம். ஆற்ற - மிகவும். கழறுதல் - இடித்துரைத்தல். ( 200 )

1366. மையில் வாணெடுங் கண்வள ராதன
மெய்யெ லாமுடை யாய்மெய்ம்மை காண்டிநீ
யையன் சென்றுழிக் கூறுகென் றாய்மயில்
கையி னாற்றொழு தாள்கயற் கண்ணினாள்.

பொருள் : வளராதன - துயிலாதனவாகிய; மை இல்வாள் நெடுங்கண் - மைதீட்டப் பெறாத ஒளியுறும் நீண்ட கண்களை; மெய்யெலாம் உடையாய் - உடலெலாம் உடைய மயிலே!; மெய்ம்மை காண்டி நீ - உண்மை உணர்வாய் நீ; ஐயன் சென்றுழிக் கூறுக என்று - என் தலைவன் சென்ற இடத்தைக் கூறுக என்று; கயல் கண்ணினாள் - கயலனைய கண்ணினாள்; ஆய் மயில் கையினால் தொழுதாள் - ஆராய்ந்த மயிலைக் கைகளால் தொழுதாள்.
 
விளக்கம் : கண் : பீலிக் கண். துயிலாத கண்களையுடைமையின், அவனைக் காட்டும் என்று தொழுதாள். வாள் என அடை கூறினார் கண்ணென்பதற் கேற்ப. வளராதன மையில் வாள் நெடுங்கண் மெய்யெலாம் உடையாய் என மாறுக. கண் உடையாய் என்றது மெய்ம்மை காண்டற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஐயன் : சீவகன். ஆய் - அழகிய. கண்ணினாள் : பதுமை. இச்செய்யுளோடு, ஓடா நின்ற களிமயிலே ...... ஆயிரங் கண்ணுடையாய்க்கு ஒளிக்குமாறுண்டோ எனவரும் கம்பர் செய்யுளை (பம்பை - 27) ஒப்பு நோக்குக. ( 201 )

1367. வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள்
விளக்கு வாய்விளக் கேவிளக் காயிவ
ணளித்த காதலொ டாடுமென் னாருயி
ரொளித்த தெங்கென வொண்சுடர் நண்ணினாள்.

பொருள் : விளக்கே! - விளக்கே!; வான் பொருள் விளக்கு வாய் - நல்ல பொருள்களை விளக்கிக் காட்டுவாய்; வளர்த்த செம்மையை - எங்களை வளர்த்த மனக் கோட்டமிலாதாய்; வாலியை - தூய தன்மையுடையாய் (ஆதலால்); இவண் அளித்த காதலொடு ஆடும் என் ஆருயிர் - இங்கே அருளிய காதலுடன் நடந்து திரியும் என் சிறந்த உயிர்; ஒளித்தது எங்கு - ஒளித்த இடம் எங்கே?; விளக்காய் - எனக்கு விளக்கிக் கூறுவாய்; என ஒண்சுடர் நண்ணினாள் - என்று வேண்டி ஒள்ளிய விளக்கினிடம் சென்றாள்.

விளக்கம் : குழந்தைகட்கு விளக்கைக் காவலாக இடுதலின், எங்களை வளர்த்த மனக்கோட்டமிலாதாய் என்றாள். செம்மையை - செப்பமுடையை, அஃதாவது மனக்கோட்ட மின்மையை உடையயை. சொற்கோட்ட மில்லது செப்பம் ஒரு தலையா உட்கோட்ட மின்மை பெறின் என்பது திருக்குறள். விளக்கிற்குச் செம்மை - செந்நிறமுடைமை என்க. வாலியை - தூயை: முன்னிலை ஒருமை. என் ஆருயிர் என்றது சீவகனை. ( 202 )

1368. பருகிப் பாயிரு ணிற்பி னறாதெனக்
கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலா
மெரிய நின்று நடுங்குகின் றாயெனக்
குரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள்.

பொருள் : பாயிருள் பருகி - (அவாவின் மிகுதியால் அறாதென்று பாராமல்) பரவிய இருளைப் பருகி; நிற்பின் அறாது என - வயிற்றில் இருப்பின் நீங்காதென்று கருதி; கருகி அவ் இருள் கான்று - முகம் கருகி அந்த இருளை உமிழ்ந்து; நின் மெய் எலாம் எரிய நின்று நடுங்குகின்றாய் - பின்னும் தங்கி வருத்துமோ என்று உன் உடம்பெல்லாம் எரியும்படி நின்று நடுங்குகின்றனை; எனக்கு உரியது ஒன்று உரைக்கிற்றி - நீ எனக்குத் தக்கதையறிந்து உரைப்பாய்; என்று ஊடினாள் - என்று வெறுத்தாள்.
 
விளக்கம் : விளக்காமையின், அதனை இழித்துக் கூறுகின்றாள். உரைக்கிற்றி : இகழ்ச்சி. பாய் இருள் - பரவிய இருள். கருகி என்றது - திரி கருகுவதனை. விளக்கு அசைதல் பற்றி நடுங்குகின்றாய் என்றாள். உரைக்கிற்றி என்றது உரைப்பாய் என்னும் பொருட்டு; அஃது உரையாய் என்னும் எதிர்மறைப் பொருள் குறித்து நின்றது. ( 203 )

1369. கோடி நுண்டுகி லுங்குழை யுந்நினக்
காடு சாந்தமு மல்லவு நல்குவேன்
மாட மேநெடி யாய்மழை தோய்யந்துளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்றரோ.

பொருள் : மாடமே! நெடியாய்! மழை தோய்ந்துளாய்! - மாடமே! நீண்டுளாய்! முகில் பொருந்தியுளாய்!; கோடி நுண்துகிலும் குழையும் ஆடு சாந்தமும் அல்லவும் நினக்கு நல்குவேன் - கொடிகளிலே கோடியும் நுண்ணிய ஆடையும் கொடி நாட்டுதற்குப் பண்ணும் துளைகளும் பூசும் வெண்சுதையும் பிறவும் நினக்குத் தருவேன்; நண்பனை நாடி நண்ணுக - நம் நண்பனைத் தேடிக் கண்டு வருவாயாக; நன்று - அது நினக்கு நன்றாகும்!
 
விளக்கம் : அரோ : அசை. நெடியாய் என்பதனால் எப்பொருளையுங் காண வல்லாய் என்பதும், மழை என்பதனால் ஈரம் எனும் இரக்கத்தையும் உடையாய் என்ற பொருளும் தோன்ற நின்றன. மற்றும் கோடிப்புடைவையும் மகரக் குழையும் சந்தனமும் நல்குவேன் என்பதூ உம் தோன்றின. நன்று என்றாள் அவனும் பல தருவன் என்னுங் கருத்துப்பட. ( 204 )

1370. ஆட கக்கொழும் பொன்வரை மார்பனைக்
கூடப் புல்லிவை யாக்குற்ற முண்டெனா
நீடெ ரித்திர ணீண்மணித் தூணொடு
சூட கத்திர டோளணி வாடடினாள்.

பொருள் : ஆடகக் கொழும் பொன் வரை மார்பனை - ஆடகம் எனும் வளமுறு பொன்மலை போலும் மார்பனை; கூடப்புல்லி வையாக் குற்றம் உண்டு எனா - கூடும்படி தழுவி வையாத குற்றம் நுமக்கு உண்டென உரைத்து; நீடு எரித்திரள் நீள் மணித் தூணொடு - நீண்ட நெருப்புத் திரள் போலும் நீண்ட மாணிக்கத் தூணுடன் (எற்றி); சூடகத் திரள் தோளணி வாட்டினாள் - சூடகத்தையும் திரண்ட தோளணியையும் போக்கினாள்.
 
விளக்கம் : சூடகம் : ஒருவகைக் கைவளையல் சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொடு (பெருங். 3 : 6 : 91) தோளணி : தொடி. எனா : இறந்தகால வினையெச்சம். ( 205 )

1371. கொலைகொள் வேலவன் கூடல னேகினா
னிலைகொள் பூணுமனக் கென்செயு மீங்கெனா
மலைகொள் சந்தனம் வாய்மெழுக் கிட்டதன்
முலைகொள் பேரணி முற்றிழை சிந்தினாள்.

பொருள் : கொலைகொள் வேலவன் கூடலன் ஏகினான் - கொலைத் தன்மைகொண்ட வேலினன் கூடாமற் சென்றுவிட்டான்; நுமக்கு ஈங்கு இலை கொள் பூண் என் செயும் - உங்கட்கு இங்கே இலைவடிவங் கொண்ட இப்பூண்கள் என்ன பயனைச் செய்யும்?; எனா - என்றுரைத்து; மலைகொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட - பொதிய மலைச் சந்தனத்தை மெழுகியிட்ட; முலை கொள் பேரணி முற்றிழை சிந்தினாள் - தன் முலைகளிற் கொண்ட பெரிய அணிகளை முற்றிழையுடையாள் சிந்தினாள்.
 
விளக்கம் : வேலவன் : சீவகன். கூடலன் : முற்றெச்சம். இப்பூண் எனச் சுட்டுச்சொல் வருவித்தோதுக. மலை - ஈண்டுப் பொதியின்மலை. முற்றிழை : அன்மொழித் தொகை; ஈண்டுப் பதுமை. ( 206 )

1372. அருங்க லக்கொடி யன்னவ னேகினா
னிருந்திவ் வாகத் தெவன்செய்விர் நீரெனா
மருங்கு னோவ வளர்ந்த வனமுலைக்
கருங்கண் சேந்து கலங்க வதுக்கினாள்.

பொருள் : அருங்கலம் கொடி அன்னவன் ஏகினான் - நுமக்கு அருங்கலத்தையும் எழுது கொடியையும் போன்று நீங்காதவன் சென்று விட்டான்; நீர் இவ் ஆகத்து இருந்து எவன் செய்விர் எனா - இனி நீவிர் இம் மார்பிலே இருந்து என்ன செய்வீர் என்று; மருங்குல் நோவ வளர்ந்த வன முலைக் கருங்கண் சேந்து கலங்க அதுக்கினாள் - இடை வருந்த வளர்ந்த அழகிய முலையிற் கரிய கண் சிவந்து கலங்கும்படி அடித்துக்கொண்டாள்.

விளக்கம் : அருங்கலக் கொடி : அதுக்கினாள் என்றுமாம். அதற்கு அன்னவன் என்பதைச் சுட்டாக்குக. அருங்கலம் - பெறலரிய அணிகலன். கலமும் கொடியும் அன்னவன் என உம்மை விரித்தோதுக. கொடி - ஈண்டு முலைமேல் எழுதும் தொய்யிற் கொடி. ஆகம் - மார்பு இருந்து எவன் செய்வீர் என்றது நும்மால் இனிப் பயனில்லை என்றவாறு.  (207 )

1373. மஞ்சு சூழ்வரை மார்பனைக் காணிய
துஞ்ச லோம்புமி னெனவுந் துஞ்சினீ
ரஞ்ச னத்தொடு மையணி மின்னென
நெஞ்சி னீணெடுங் கண்மலர் சீறினாள்.

பொருள் : மஞ்சு சூழ் வரை மார்பனைக் காணிய - முகில் உலவும் மலையனைய மார்பனைக் காண்பதற்கு; துஞ்சல் ஓம்புமின் என்னவும் துஞ்சினீர் - துயில்வதை நீக்குமின் என்றுரைக்கவும் துயின்றீர்கள்; அஞ்சனத்தொடு மை அணிமின் என - (இனி) அஞ்சனத்தையும் மையையும் அணிந்து கொள்ளுமின் என்று; நீள் நெடுங் கண்மலர் நெஞ்சின் சீறினாள் - நீண்ட கண் மலர்களை நெஞ்சினாலே சீறினாள்.
 
விளக்கம் : அணிமின் : அணியாதீர் என்னுங் குறிப்பு. பின்னும் அவை காட்ட வேண்டுதலின் அவை கேளாமற் சீறினாள். ( 208 )

1374. அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇக்கொலோ
வருத்த முற்றன ளென்றுகொன் மேகலை
குரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே.

பொருள் : அரக்கு உண் தாமரை அன்ன தன் கண்மலர் - அரக்கின் நிறத்தைக் கொண்ட தாமரை மலர் போன்ற தன் கண் மலர்களின்; விருத்தி மாதர் விலக்க வெரீஇக் கொலோ? - அஞ்சனத்தையும் மையையும் பதுமை விலக்குதலாலே நமக்கும் துன்பம் வருமென்று அஞ்சியோ?; வருத்தம் உற்றனள் என்று கொல்? - இவள் வருந்தினாள் என்றோ?; மேகலை குலுங்கி குரல் கொடாது குறைந்தது - மேகலை அசைந்து ஆரவாரியாமல் ஓசை அடங்கியது.
 
விளக்கம் : விருத்தி - வாழ்வு. குலுங்கல் - அசைதல். மெய் யசையாமற் சோர்ந்ததை இங்ஙனங் கூறினார். ( 209 )

வேறு
 
1375. துனிவா யினதுன் னுபுசெய் தறியேன்
றனியே னொருபெண் ணுயிரென் னொடுதா
னினியா னிஙனே யுளனே யுரையீர்
பனியார் மலர்மேற் படுவண் டினமே.

பொருள் : பனி ஆர் மலர்மேல் படு வண்டினமே! - தண்மை நிறை மலரின்மேல் மெல்லிய வண்டினமே!; துன்னுபு துனிவு ஆயின செய்து அறியேன் - நான் அவனைப் பொருந்தி நின்று அவற்கு வெறுப்பானவற்றைச் செய்தறிபேன், தனியேன், ஒரு பெண் உயிர் - நான் தனித்தறியேன்; என் உயிரே ஒரு பெண்ணுயிர்; என்னொடுதான் இனியான் - என்னிடம் இனிய னாகிய அவன்; இஙனே உளனே? உரையீர் - இவ்விடங்களிலே உளனோ? உரைப்பீர்.
 
விளக்கம் : அவன் எனக்கு இனிய னாகையால் உரைத்தீர் என்று முனியான் எனற்கு; இனியான் எனவும், பெண்ணுயிர் நீங்கிற் கண்டிருத்தல் பாவம் எனற்குப், பெண்ணுயிர் எனவும் கூறினார். ( 210 )

1376. நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரிவெண் ணிலவே
யுரையீ ருயிர்கா வலனுள் வழியே.

பொருள் : வீழ் அருவி நிரை நிமிர் பொன் சொரியும் வரையே! - வீழும் அருவி நிரைகளையுடைய உயர்ந்த பொன் விளங்கும் செய்குன்றே!; புனலே! - நீர் நிலையே!; வழையே! - சுர புன்னையே!; தழையே! - தழையே!; விரை ஆர் பொழிலே! - மணம்நிறை மலர்க் காவே!; விரி வெண்ணிலவே! - மலர்ந்த வெண் திங்களே!; உயிர் காவலன் உள் வழி உரையீர் - என் உயிர் முதல்வன் இருக்கும் இடத்தை உரைப்பீராக!

விளக்கம் : நிரைவீழ் அருவி - வரிசையாக வீழ்கின்ற அருவி. செய்குன்றாகலின் நிரைவீழ் அருவி என்றார். நிமிர்பொன் - உயர்ந்த பொன். பொன்சொரிதல் - பொன்னொளி வீசுதல். வழை - சுரபுன்னை. விரை - மணம். காவலன் : சீவகன். ( 211 )

1377. எரிபொன் னுலகின் னுறைவீ ர்தனைத்
தெரிவீர் தெரிவில் சிறுமா னிடார்ற்
பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமா
லரிதா லுயிர்காப் பமரீ ரருளீர்.

பொருள் : எரி பொன் உலகின் உறைவீர்! - ஒளிரும் பொன் உலகிலே வாழ்வீர்!; இதனைத் தெரிவீர் - (ஆதலின்) என் காதலன் போன வழியை அறிந்திருப்பீர்; தெரிவு இல் சிறு மானிடரின் பரிவு ஒன்றிலிர் - (தெரிந்திருப்பவும்) தெரியாத சிறு மனிதரைப்போல அருளிலிரா யிராநின்றீர்; படர்நோய் மிகும் - துன்ப நோய் மிகும்; உயிர் காப்பு அரிது - (அதனால்) உயிர்காத்தல் இனி அரிது; அமரீர்! - வானவரே!; அருளீர் - உயிரைக் காக்க அவனை அருள்வீராக.
 
விளக்கம் : பொன்னுலகின் னுறைவீர் என்றது இதனைத் தெரிவீர் என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. தேவர் உலகினிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தவிடத்திருந்தே உணரவல்லார் ஆகலின் இங்ஙனம் கூறினள். தெரிவில் மானிடர் என்பது நும்போன்ற அறியமாட்டாத இயல்புடைய மானிடர் என்றவாறு. படர் - துன்பம் அமரீர் : அமரர் என்பது விளியுருபேற்று நின்றது. ( 212 )

1378. புணார்வின் னினிய புலவிப் பொழுதுங்
கணவன் னகலின் னுயிர்கை யகற
லுணார்வீ ரமரார் மகளீ ரருளிக்
கொணார்வீர் கொடியே னுயிரைக் கொணர்வீர்.

பொருள் : அமரர் மகளீர்! - வானவர் மகளிரே!; புணர்வின் இனிய புலவிப் பொழுதும் - கூட்டத்தினும் இனிமையையுடைய புலவிக் காலத்தும்; கணவன் அகலின் உயிர் கையகல்தல் உணர்வீர் - கணவன் தழுவுதல் நீங்கின் உயிர் நீங்குதலை அறிவீராகலின்; கொடியேன் உயிரை அருளிக் கொணர்வீர்! கொணர்வீர் - கொடியவளாகிய என் உயிரை அருள் செய்து கொண்டு தருவீர்! கொண்டுதருவீர்!

விளக்கம் : நீயிரும் மகளிரே ஆதலின் கணவன் அகலின் உயிர் கையகறல் உணர்வீர் என்பது கருத்து. பிறபெண்டிர்க்கிரங்குதல் மகளிர்க்கியல்பாகலின் எனக் கிரங்கிக் கொணர்வீர் என்பது கருத்து. புணர்வின் இனிய புலவி என்றதனை, புணர்தலின் ஊடல் இனிது என்னும் வள்ளுவர் மொழியோடு ஒப்புக் காண்க. ( 213 )

1379. நகைமா மணிமா லைநடைக் கொடிநின்
வகைமா மணிமே கலையா யினதே
லகையா தெனதா விதழைக் குமெனத்
தகைபா டவலாய் ளர்கோ தளர்கோ.

பொருள் : நகை மாமணி மாலை நடைக்கொடி! - ஒளியுறும் மணிகளாலாகிய மாலையணிந்த நடந்து திரியுங் கொடியே!; நின் வகை மாமணி மேகலை ஆயினதேல் - நின் வகைப்பட்ட பெரிய மணிமேகலை ஆயிற்றேல்; எனது ஆவி அகையாது தழைக்கும் என - என் உயிர் தாழ்தலின்றித் தளிர்க்கும் என்று; தகை பாடவலாய்! தளர்கோ! தளர்கோ!! - என் நலம் பாராட்ட வல்லாய்! தளர்வேனோ! தளர்வேனோ!!
 
விளக்கம் : இது முதல் எதிர் பெய்து பரிதல். எதிர் பெய்து பரிதலாவது தலைமகனையும் அவன் தேர் முதலியவற்றையும் தன் எதிர் பெய்துகொண்டு பரிந்து கையறல் : (தொல். மேய்ப். 22. பேர்.) ஓகாரம் : எதிர்மறை இறந்துபடுவேன் என்பது கருத்து. தளர்கு : தன்மையொருமை வினைமுற்று. வல்லாய் என்பது பொய்யுரைக்க வல்லவன் என்பதைக் குறிக்கின்றது. ( 214 )

1380. புனைதார் பொராநொந் துபொதிர்ந் தவென
வினையா ரெரிபூண் முலைகண் குளிர
வுன்கண் மலரா லுழுதோம் பவலாய்
நினையா துநெடுந் தகைநீத் தனையே.

பொருள் : புனைதார் பொரா நொந்து பொதிர்ந்த என - நீ புனைந்த மாலைகள் பொருதலால் நொந்து வீங்கின என்றுகூறி; வினையார் எரிபூண் முலைகண் குளிர - தொழிலமைந்த விளங்குகின்ற பூண் அணிந்த முலைகளின் கண்குளிரும்படி; உன் கண்மலரால் உழுது ஓம்ப வலாய் - உன்னுடைய கண்மலர்களால் உழுது பொய்யை மெய்யாகப் போற்ற வல்லவனே!; நெடுந்தகை! - பெருந்தகையே!; நினையாது நீத்தனையே - பிரியின் வாழாள் என்று நினையாமல் நீத்தாயே.
 
விளக்கம் : கண்மலரால் உழுதலாவது இவைசாலவும் அழகுடையன என்று கூர்ந்து நெடிது நோக்கிப் பாராட்டுதல். இங்ஙனம் நோக்கிப் பாராட்டுங்கால் தன்னெஞ்சங் குளிர்ந்ததனை முலைமேலேற்றி முலை கண் குளிர என்றாள். நினையாது என்றது யாம் பிரிந்துழி இவள் நிலை என்னாம் என்று கருதாதே என்றவாறு. ( 215 )

1381. அருடேர் வழிநின் றறனே மொழிவாய்
பொருடேர் புலனெய் தியபூங் கழலா
யிருடேர் வழிநின் றினைவேற் கருளா
யுருடே ருயர்கொற் றவன்மைத் துனனே.

பொருள் : பொருள் தேர் புலன் எய்திய பூங்கழலாய் - பொருளைத் தேடும் அறிவிலே சென்ற பூங்கழ லணிந்தவனே!; உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே! - ஆழிபூண்ட தேரையுடைய மேம்பட்ட அரசன் உலோகமாபாலனின் மைத்துனனே!; அருள் தேர் வழிநின்று அறனே மொழிவாய் - அருளை ஆராயும் வழியிலே நின்று அறமே கூறுவாய்; (எனினும்); இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய் - இருள் நிறைந்த இடத்தே நின்று வருந்தும் எனக்கு அருள்கின்றிலை.
 
விளக்கம் : நினக்குச் சொல்லும் எளிது, சொல்லிய வண்ணஞ் செய்தல் அரிதாக இருந்தது என்று கூறுகிறாள். கொற்றவனும் மைத்துனனும் என உம்மைத் தொகையாக்கியும் எய்திய என்பதை வினையெச்சமாக்கியும் சொற்களைப் பல விடங்களினின்றும் பிரித்துக் கூட்டி நச்சினார்க்கினியர் கூறும் பொருள் : கழலாய்! தனபதியும், உலோக பாலனும் நின்னுடன் அருள் இருக்கும்படியை ஆராயுமிடத்து, அவர்கள் தத்துவத்தை ஆராயும் அறிவைப் பெறவேண்டி நின்று, அவர்கட்கு அறனே மொழிகின்ற நீ, இருள் செறிந் இடத்திலே நின்று வருந்துகின்ற எனக்கு அருளுகின்றிலை. ஆதலால், நினக்கு முற்படச் சொல்லுதல் எளிதாய்ச் சொல்லிய வண்ணஞ் செய்தல் அரிதாய் இருந்தது என்றாள். இவ்வாறு மாட்டேற்றுப் பொருள் கூறினும் கருத்து வேறுபாடில்லையாதல் காண்க. ( 216 )

1382. மிகவா யதொர்மீ ளிமைசெய் தனனோ
வுகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ
விகவா விடரென் வயினீத் திடநீ
தகவா தகவல் லதுசெய் தனையே.

பொருள் : தகவா! - தக்கோனே!; இகவா இடர் என் வயின் நீ ஈத்திட - நீங்காத இடரை என்னிடத்தே நீ கொடுத்திடற்கு; மிக ஆயதொர் மீளிமை செய்தனனோ? யான்தான் அறிவின்மையான் மிகையாயதொரு வன்மை செய்தேனோ?; உனது உள்ளம் உகவா உவர்த்ததுவோ? - உன் மனந்தான் ஒரு கால் அன்பு மிக்குப் பின்பு வெறுத்ததோ?; தகவு அல்லது செய்தனையே - தகுதியல்லாத காரியத்தைச் செய்தனையே!
 
விளக்கம் : தகவா என்பதற்குத் தகும்படி வந்து முயங்குவாயாக என்றும் பொருள் உரைப்பர் நச்சினார்க்கினியர். யான் வன்மை செய்தேனோ? நின் உள்ளந்தான் உவர்த்ததோ? என்று உருவெளியை நோக்கி உரைத்தாளாக, அது மாற்றந் தராததால் மேலும் அதனை நோக்கித் தகவல்லது செய்தனை என்றாள். ( 217 )

1383. குளிர்துன் னியபொன் னிலமே குதலாற்
றளரன் னநடை யவடாங் கலளா
யொளிர்பொன் னரிமா லையொசிந் திஙனே
மிளிர்மின் னெனமின் னிலமெய் தினளே.

பொருள் : ஒளிர் பொன் அரி மாலை - விளங்கும் பொன்னரி மாலை போன்றவள்; குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால் - குளிர்ச்சி பொருந்திய பொன் நிலத்தே உலாவுதலால்; தளர் அன்ன நடையவள் தாங்கலளாய் - தளர்ந்த அன்னம்போலும் நடையையும் பொறதவளாய்; ஒசிந்து இஙனே மிளிர் மின் என மின் நிலம் எய்தினள் - துவண்டு இந்நிலத்தே பிறழும் மின் என ஒளிரும் நிலத்தே விழுந்தாள்.

விளக்கம் : மீநிலம் என்றும் பாடம். தக வா எனப் பிரித்துத் தகவுற வந்து முயங்கு என முற்செய்யுளிற் பொருள் கூறிய நச்சினார்க்கினியர் இச் செய்யுளிலும் அதற்கேற்ப, அவ்வுருவம் வந்து முயங்காது நிற்றலின் தன் மேனியிற் காமத் தீயாறிக் குளிர்ச்சி நெருங்க வேண்டி முயங்குதற்குப் பொன்னிலத்தே அவள்தான் சேறலின், அப்பொழுது அவசத்தாலே தளர்ந்த அன்னம்போலு நடையைத் தாங்கமாட்டாதவளாய், ஒசிந்து இந்நிலத்தே பிறழும் மின்னென நிலத்தே வீழ்ந்தான் என்றுரைப்பர். ( 218 )

1384. தழுமா வலிமைந் தவெனத் தளரா
வெழுமே ழடியூக் கிநடந் துசெலா
விழுமீ நிலமெய் திமிளிர்ந் துருகா
வழுமா லவலித் தவணங் கிழையே.

பொருள் : அ அணங்கு இழை - அந்த அழகிய அணியணிந்த பதுமை; அவலித்து - வருந்தி; தளரா எழும் - தளர்ந்து எழுவாள்; ஏழடி ஊக்கி நடந்து செலா - ஏழடி வரை முயற்சித்து நடந்து சென்று; மா வலி மைந்த எனத் தழும் - மாவலியுடைய மைந்தனே! என்று (உருவெளியைத்) தழுவுவாள்; விழும் - (அவ்வுருவம் கைக்குப் பற்ற வியலாமையின்) விழுவாள்; மீநிலம் எய்தி மிளிர்ந்து உருகா அழும் - (விழுந்து) மேலாம் நிலத்தை அடைந்து புரண்டு உருகி அழுவாள்.
 
விளக்கம் : தளரா, உருகா, செலா : செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள். ஏழடி செல்வது மரபு. தழும், எழும், விழும், அழும் என்பன செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுக்கள். ( 219 )

வேறு
 
1385. கரப்புநீர்க் கங்கை யங்கட்
கடிமலர்க் கமலப் பள்ளித்
திருத்தகு திரைக டாக்கச்
சேப்புழிச் சேவ னீங்கப்
பரற்றலை முரம்பிற் சின்னீர்
வறுஞ்சுனைப் பற்று விட்ட
வரத்தவாய்ப் பவளச் செந்தாட்
பெடையன்ன மழுவ தொத்தாள்.

பொருள் : பரல்தலை முரம்பின் சின்னீர் வறுஞ்சுனைப் பற்றுவிட்ட - பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே சிறிதே நீரையுடைய வறிய சுனையிலே கொண்ட பற்றைவிட்ட; அரத்த வாய்ப் பவளச் செந்தாள் பெடை அன்னம் - சிவந்த வாயையும் பவளமனைய சிவந்த கால்களையும் உடைய பெட்டை அன்னம்; கரப்பு நீர்க் கங்கை அங்கண் - சிவன் சடையிற் கரத்தலையுடைய கங்கையின் அழகிய இடத்திலுள்ள; கடி மலர்க் கமலப் பள்ளி - மணமிகு மலராகிய தாமரை யணையிலே; திருத்தகு திரைகள் தாக்கச் சேப்புழி - அழகு பொருந்திய அலைகள் அலைத்துத் துயிற்றச் சேவலோடு துயிலும்போது; சேவல் நீங்க - சேவல் நீங்குதலால்; அழுவது ஒத்தாள் - முன்னிருந்த வறிய சுனையிலே இருந்து அழுவதைப் போன்றாள்.
 
விளக்கம் : கரப்பு நீர்க் கங்கை - பாதாள கங்கையெனினும் ஆம். அவனைக் கூடிய பின்பு தந்தையில்லம் கங்கையாய், அவன் நீங்குதலால் அச் சுனையின் தன்மைய தாயிற்று. அன்னம் சுனையில் தங்குதல் இல் பொருளுவமை. ( 220 )

1386. மெழுகினாற் புனைந்த பாவை
வெய்துறுத் தாங்கு மோவா
தழுதுநைந் துருகு கின்ற
வாயிடைத் தோழி துன்னிக்
கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க்
கிளைநரம் பனைய சொல்லாள்
கழிபெருங் கவலை நீங்கக்
காரண நீர சொன்னாள்.

பொருள் : மெழுகினால் புனைந்த பாவை வெய்துறுத் தாங்கு - மெழுகாற் செய்த பாவையைத் தீயுறுத்தாற்போல; ஓவாது அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை - ஓய்வின்றி அழுது நைந்து உருகுகின்ற அக்காலத்தே; கெழீஇயினாள் - நெருங்கியவளாகய; கேள்வி நல்யாழ்க் கிளை நரம்பு அனைய சொல்லாள் தோழி துன்னி - கேள்விக்குரிய நல்ல யாழின் கிளையென்னும் நரம்பினது இசையைப் போன்ற சொல்லாளாகிய தோழி ஆங்குவந்து; கழி பெருங் கவலை நீங்க - மிகப் பெருங் கவலை தவிர; காரண நீர சொன்னாள் - காரணமான தன்மையை உடைய சொற்களைக் கூறினாள்.
 
விளக்கம் : ஆங்கும் : உம் : இசை நிறை. காமமும், இருவினையும், நிலையாமையும் முதலியவற்றைக், காரண நீர என்றார். பிரிவுணர்த்தி ஆற்றுவித்துச்சீவகன் பிரியாமையின் தோழி ஆற்றுவிக்கின்றாள். ( 221 )

1387. தெள்ளறல் யாறு பாய்ந்த திரைதவழ் கடலின் வெஃகி
யள்ளுற வளிந்த காம மகமுறப் பிணித்த தேனு
முள்ளுற வெந்த செம்பொ னுற்றநீர்ப் புள்ளி யற்றாற்
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காத லென்றாள்.

பொருள் : கள் உற மலர்ந்த கோதாய் - தேன் பொருந்த மலர்ந்த மாலையாய்!; தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி - தெளிந்த நீரையுடைய ஆறுகள் பாய்ந்த அலை தவழும் கடலினும் மிகுந்து; அள் உற அளிந்த காமம் அகம் உறப் பிணித்த தேனும் - நுகரும் தன்மை உறும்படி பழுத்த காமம் உள்ளம் இறுகப் பிணித்த தாயினும்; காதலர் காதல் - காதலித்தோர் காதல்; உள்உற வெந்த செம்பொன் உற்ற நீர்ப் புள்ளி அற்று - உள்ளத்தே அடங்கிப் பிறர்க்குத் தோன்றாதிருக்க வேண்டின் வெந்த செம்பொன்னிற் பொருந்திய நீர்த்துளி போலத் தோன்றாது.
 
விளக்கம் : அற்று : குறிப்பு வினைமுற்று. வெஃகி - ஆசை மிகுந்து. கையால் அள்ளிக்கொள்ளலாம்படி கனிந்த காமம் எனினுமாம் அகம் - நெஞ்சம். உள்ளுறவேண்டின் என்க; நெஞ்சத்துள்ளேயே பொருந்திப் புறத்தார்க்குப் புலப்படாதிருக்க விரும்பின் என்பது கருத்து கள் - தேன். ( 222 )

1388. ஓடரி யொழுகி நீண்ட வொளிமலர் நெடுங்க ணாரைக்
கூடரி யுழுவை போல முயக்கிடைக் குழையப் புல்லி
யாடவ ரழுந்தி வீழ்ந்தும் பிரிவிடை யழுங்கல் செல்லார்
பீடழிந் துருகும் பெண்ணிற் பேதைய ரில்லை யென்றாள்.

பொருள் : ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளிமலர் நெடுங்கண்ணாரை - ஓடுகின்ற செவ்வரியுடன் மிகவும் நீண்ட ஒளி பொருந்திய மலரனைய நீண்ட கண்ணாரை; கூடு அரி உழுவை போல ஆடவர் முயக்கிடைக் குழையப் புல்லி - தம் தம் பெடையுடன் கூடும் சிங்கமும் புலியும் போல ஆடவர் கூடற் காலத்தே குழையு மாறு தழுவி; அழுந்தி வீழ்ந்ததும் - இன்பத்தில் அழுந்தி வீழ்ந்தாலும்; பிரிவிடை அழுங்கல் செல்லார் - பிரிவுக் காலத்து வருந்த மாட்டார்; பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையர் இல்லை என்றாள் - (அங்ஙனமின்றிப்) பிரிவிடத்துப் பெருமை கெட்டு உருகும் பெண்களைக் காட்டினும் பேதையர் இவ்வுலகத்தில் இல்லை என்று தோழி கூறினாள்.
 
விளக்கம் : ஆடவர் நுகர்ச்சிக்காலத்தே மகளிரினும் மிக்கு இன்பத்திலழுந்துகின்றார், பிரிவிடை வருந்துகின்றிலர்; மகளிரோ பிரிவுக் காலத்தே துன்பத்திற் பெரிதும் அழுந்துகின்றனர். ஆதலின் மகளிரிற் காட்டிற் பேதையரில்லை என்றவாறு. ( 223 )

1389. பேதைமை யென்னும் வித்திற்
பிறந்துபின் வினைக ளென்னும்
வேதனை மரங்க ணாறி
வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்
காதலுங் களிப்பு மென்னுங்
கவடுவிட் டவலம் பூத்து
மாதுய ரிடும்பை காய்த்து
மரணமே கனிந்து நிற்கும்.

பொருள் : பேதைமை யென்னும் வித்தில் - அறியாமையென்னும் வித்தினிடமாக; வினைகள் என்னும் வேதனை மரங்கள் பிறந்து பின் நாறி - தீவினைகள் என்கிற துன்பந்தரும் மரங்கள் முளைத்துப் பின் வளர்ந்து; வேட்கை வேர் வீழ்த்து முற்றி - ஆசையாகிய வேரை வீழ இறக்கி முதிர்ந்து; காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு - காதல் களிப்பு என்னும் கிளைகளை விட்டு; அவலம் பூத்து - வருத்தம் மலர்ந்து; மாதுயர் இடும்பை காய்த்து - பெருந்துயரந்தரும் கவலை காய்த்து; மரணமே கனிந்து நிற்கும் - மரணந் தருகின்ற கையாற்றை இவ்வுடம்பு நுகரப் பழுத்துத் தந்து, பின்னும் அவ்வாறு காய்க்க அம் மரம் நிற்கும்.
 
விளக்கம் : பழுத்தல் - உடம்பு போதல். தீவினை நிற்றலின் நிற்கும் என்றார். மரணமே: ஏ: தேற்றம். பெறாததன்மேற் செல்வது காதல். பெற்றதன்மேற் செல்வது களிப்பு. வேதனை மரங்கள் பிறந்துபின் நாறி என மாறுக பிறந்து என்றது முறைத்து என்றவாறு. நாறுதல் - தோன்றுதல்; ஈண்டு வளர்ந்து என்னும் பொருள்பட நின்றது. வேதனைமரம் : பண்புத்தொகை. கவடு - கிளை. அவலம் - துன்பம். மாதுயர் இடும்பை : இருபெயரொட்டு; மிகப்பெருந் துன்பம் என்பது கருத்து. ( 224 )

1390. தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச்
சிறுதிரைப் போர்வை போர்த்து
மீன்சென்ற நெறியும் போல
விழித்திமைப் பவர்க்குந் தோன்றா
மான்சென்ற நோக்கின் மாதே
மாய்ந்துபோ மக்கள் யாக்கை
யூன்சென்று தேயச் சிந்தித்
துகுவதோ தகுவ தென்றாள்.

பொருள் : மான் சென்ற நோக்கின் மாதே! - மான் கண் போன்று செல்லும் பார்வையுடைய மாதே!; தேன் சென்ற நெறியும் - வண்டுகள் மலரைத் தேடிச் செல்கின்ற வழியும்; சிறுதிரைப் போர்வை போர்த்து மீன் சென்ற நெறியும் போல - சிற்றலையாகிய போர்வையைப் போர்த்துக் கொண்டு மீன் செல்கின்ற வழியும் போல; மக்கள் யாக்கை - மக்களின் உடம்பு; விழித்து இமைப்பவர்க்கும் தோன்றா மாய்ந்துபோம் - விழித்து இமைப்பவர்கட்குந் தெரியாதனவாய் மடிந்து போகும்; ஊன் சென்று தேயச் சிந்தித்து உகுவதோ தகுவது? என்றாள் - மெய் சிறிது சிறிதாகத் தேயுமாறு நினைந்து கெடுதலோ தகுதியாகும்! என்றாள்.
 
விளக்கம் : தேன் - வண்டு. நெறி - வழி. தேனும் மீனும் போனவழி அறியமுடியாததுபோல் மக்கள் யாக்கை அழிந்துபோம் வழியும் அறிய முடியாது என்றவாறு விழித்திமைப்பவர் - மக்கள் என்றார் நச்சினார்க்கினியர். சிந்தித்துகுவதோ தகுவது என்றது சிந்தித்து உகாமையே தகுவது என்னும் பொருள் குறித்து நின்றது. ( 225 )

1391. பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்
றழுதநங் கண்ணி னீர்கள்
சொரிந்தவை தொகுந்து நோக்கிற்
றொடுகடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவி மேனாண்
முற்றிழை யின்னு நோக்காய்
பரிந்தழு வதற்குப் பாவா
யடியிட்ட வாறு கண்டாய்.

பொருள் : முற்றிழை இன்னும் நோக்காய் - முற்றிழையே! இன்னும் மனத்தாலே நோக்குவாயாக; மேல்நாள் முரிந்த நம் பிறவி - மேல் நாட்களில் இற்ற நம் பிறவிகளிலே; பிரிந்தவற்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள் - அப்பொழுது பிரிந்தவனே கணவனாக அவற்றே பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்; சொரிந்தவை தொகுத்து நோக்கின் - சொரிந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால்; தொடுகடல் வெள்ளம் ஆற்றா - தொட்ட கடலின் பெருக்கும் உறையிடவும் போதாது; பாவாய்! பரிந்து அழுவதற்கு அடியிட்ட ஆறு கண்டாய் - பாவையே! பரிவுற்று மேலும் அழுதற்கு இந்நாள் அடியிட்டபடியென்றறிவாய்.
 
விளக்கம் : இப்பொழுது பிரிந்த இவனுக்கே என்பது படப் பிரிந்தவற்கு என ஒருமையாற் கூறினர். அன்புடைக்காதலர் பிறவிகடோறும் கணவனும் மனைவியுமாகப் பிறப்பர் என்பது ஒரு கொள்கை. இதனை,
 
நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம்.
மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம்.
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால். (மணி. 21. 29 - 31).

என வரும் மணிமேகலையானும் உணர்க. பரிந்தழுவதற்கு அடியிட்டவாறு என்றது இங்ஙனம் அழும் அழுகைக்கு முடிவில்லை என்றவாறு. ( 226 )

1392. அன்பினி னவலித் தாற்றா
தழுவது மெளிது நங்க
ளென்பினி னாவி நீங்க
விறுவது மெளிது சேர்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார்
துகைத்தவத் துன்பந் தாங்கி
யின்பமென் றிருத்தல் போலு
மரியதிவ் வுலகி லென்றாள்.

பொருள் : அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது - நம் காதலரிடம் அன்பினாலே வருந்தி ஆற்றவியலாமல் அழுவதும் எளிது; நங்கள் என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது - நம் உடம்பிலிருந்து உயிர்போம்படி இறத்தலும் எளிது; சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பப்பட்டார் - தம் காதலர் சேர்ந்து பிரிந்ததனால் பிறந்த துன்பத்தாலே வருத்தப்பட்ட மகளிர்; துகைத்த அத் துன்பம் தாங்கி - அங்ஙனம் வருத்தின அவ்வருத்தத்தைப் பொறுத்து; இன்பம் என்று இருத்தல் இவ்வுலகில் அரியது போலும் என்றாள் - இது நமக்கு இன்பம் என்று இருப்பதே இவ்வுலகில் அரியதாகும் என்றாள்.

விளக்கம் : நங்கள் : கள் : அசை. போலும் : ஒப்பில் போலி. அவலித்து - வருந்தி. எல்லோரும் செய்வதொன்றாகலின் அழுவது எளிது என்றாள். இறுவதும் - இறந்து படலும். மெய்யுணர்வுடையார்க்குத் துன்பம் வீடுபேற்றிற்குக் காரணமாதல் பற்றி இத்துன்பமே நமக்கின்பம் என்று அவலியாதிருத்தல் கூடும் ஆயின் அங்ஙனம் இருத்தல் செயற்கரிய செயலென்பாள் துகைத்த அத்துன்பந்தாங்கி இன்பம் என்றிருத்தல் போலும் அரியது இவ்வுலகில் என்றாள். ( 227 )

1393. மயற்கையிம் மக்கள் யோனிப்
பிறத்தலும் பிறந்து வந்தீங்
கியற்கையே பிரிவு சாத
லிமைப்பிடைப் படாத தொன்றாற்
கயற்கணி னளவுங் கொள்ளார்
கவற்சியுட் கவற்சி கொண்டார்
செயற்கையம் பிறவி நச்சுக்
கடலகத் தழுந்து கின்றார்.

பொருள் : மயற்கை இம் மக்கள் யோனிப் பிறத்தலும் - குற்றமுடைய இம் மக்கட் பிறப்பிற் பிறத்தலும்; பிறந்து வந்து ஈங்குப் பிரிவு சாதல் இயற்கை - பிறந்து வந்து இவ்வுலகிற் பிரிதலும் இறத்தலும் இயற்கை; இமைப்பிடைப் படாதது ஒன்றால் - இமைப்பளவும் நடுவில் தங்காதது ஒன்று, ஆதலால்; கவற்சி கயற்கணின் அளவும் கொள்ளார் - அறிஞர் கவலை மீன்கண்ணளவாயினும் கொள்ளார்; உள் கவற்சி கொண்டார் செயற்கை அம்பிறவி நச்சுக் கடலகத்து அழுந்துகின்றார் - மனக்கவலை கொண்டவர்கள் பற்றுள்ளத்தால் உண்டாகும் பிறவியாகிய நச்சுக் கடலிலே அழுந்துகின்றவர்கள்.

விளக்கம் : (பலபிறப்பிலும்) பிறந்து வந்து இம்மக்கள் யோனியிற் பிறத்தலும் மயற்கை என்பர் நச்சினார்க்கினயர். கயற்கணின் அளவு : அளவின் சிறுமை குறிப்பது; ஒரு மாத்திரையளவு. ( 228 )

1394. இளமையின் மூப்புஞ் செல்வத்
திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற்
கிளைநரிற் பிரிவு நோயில்
காலத்து நோயு நோக்கி
விளைமதுக் கமழுங் கோதை
வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுய ரவலம் வேண்டா
கண்ணிமைப் பளவு மென்றாள்

பொருள் : இளமையில் மூப்பும் - இளமைக் காலத்தே மூப்பு வருமென்பதையும்; செல்வத்து இடும்பையும் - செல்வமுள்ள போதே வறுமைத் துன்பம் வருமென்பதையும்; கிளைநரில் புணர்ச்சிப் போழ்தில் பிரிவும் - கணவருடன் கூடியிருக்கும் போதே பிரிவு வருமென்பதையும்; நோய்இல் காலத்து நோயும் - நலமுள்ள காலத்திலேயே நோய் வருமென்பதையும்; நோக்கி - எதிர்பார்த் துணர்ந்து; விளைமதுக் கமழும் கோதை! - விளைந்த தேன் மணக்கும் மாலையாய்!; வேலினும் வெய்ய கண்ணாய்! - வேலினும் கொடிய கண்களையுடையாய்!; துயர் களை - துயரத்தை நீக்குவாயாக; கண் இமைப்பளவும் அவலம் வேண்டா என்றாள் - கண்ணிமைக்கும் போதளவேனும் இந்த அவலம் வேண்டா என்றுரைத்தாள்.
 
விளக்கம் : இளமைக்காலத்தே இனி மூப்பு வரும் என்று எதிர்பார்த்திருப்போர் இளமையழி விற்கும் மூப்பிற்கும் வருந்தமாட்டார்; இங்ஙனமே செல்வக்காலத்தே வறுமையையும் புணர்ச்சிக்காலத்தே பிரிவினையும் வரும் என்று எதிர்பார்த்திருப்போர் வருந்த மாட்டார். நீயும் அங்ஙனம் இஃதுலகியல் என்றுணர்ந்து இமைப்பளவும் அவலியாதிரு என்றவாறு. வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையார் உள்ளத்தின் உள்ளக்கெடும் என்பது பற்றிக் கண்ணிமைப்பளவும் அவலம் வேண்டா என்றாள். ( 229 )

1395. முத்திலங் காகந் தோய்ந்த
மொய்ம்மலர்த் தாரி னானங்
கைத்தலத் தகன்ற பந்திற்
கைப்படுங் கவல வேண்டா
பொத்திலத் துறையு மாந்தை
புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே
நித்தில முறுவ லுண்டா
னீங்கினா னல்லன் கண்டாய்.

பொருள் : பொன்னே! - திருவனையாய்!; பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் - மரப்பொந்தாகிய இல்லத்தே வாழும் ஆந்தை பேடும் சேவலுமாகக் கூடியிருந்து அவன் வரவைக் கூறும்; நித்திலம் முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் - (ஆதலால்) முத்தனைய நின்பற்களின் ஊறிய நீரைப்பருகினவன் நின்னைப் பிரிந்தான் அல்லன்; முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய்ம்மலர்த் தாரினான் - முத்துக்கள் விளங்கும் நின் மார்பினைத் தழுவிய மலர்மாலையான்; நம் கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் - நம் கையிலிருந்து நீங்கிய பந்து போலக் கைப்படுவான்; கவல வேண்டா - கவலையுறல் வேண்டா.

விளக்கம் : தாரினான் : சீவகன். கைத்தலத்து அகன்ற பந்து மீண்டும் நம் கைக்கே வருமாறுபோல என்க. பொத்து - பொந்து. இல்லம், இலம் என லகரமெய் கெட்டு நின்றது. பொன்னே : விளி. நித்தில முறுவலுண்டான் என்றது நீங்கினான் ஆகாமைக்குக் குறிப்பேதுவாகும். ( 230 )

1396. வடிமலர்க் காவி னன்று
வண்டளிர்ப் பிண்டி நீழன்
முடிபொருள் பறவை கூற
முற்றிழை நின்னை நோக்கிக்
கடியதோர் கௌவை செய்யுங்
கட்டெயிற் றரவி னென்றேன்
கொடியனாய் பிழைப்புக் கூறேன்
குழையலென் றெடுத்துக் கொண்டாள்.

பொருள் : முற்றிழை! - முற்றிய இழைகளையுடையாய்!; அன்று வடிமலர்க் காவின் வண்தளிர்ப் பிண்டி நீழல் - அன்றைக்கு ஆராயும் மலர்ப் பொழிலிலே வளவிய தளிரையுடைய பிண்டியின் நீழலிலே; பறவை முடிபொருள் கூற - அப்பறவை முடியும் பொருளைக் கூறுதலின்; நின்னை நோக்கிக் கட்டு எயிற்று அரவின் கடியது ஓர் கௌவை செய்யும் என்றேன் - உன்னைப் பார்த்து இக் கூற்றுக் கட்டிய நஞ்சுடைய அரவினாலே கொடியதாகிய ஒரு துன்பத்தை உண்டாக்குவதைக் காட்டும் என்றேன்; கொடியனாய்! - கொடி போன்றவளே!; பிழைப்புக் கூறேன் - தவறுரையேன்; குழையல் என்று எடுத்துக்கொண்டாள் - வருந்தற்க என்று தழுவியெடுத்துக் கொண்டாள்.
 
விளக்கம் : வடிமலர்க்கா : வினைத்தொகை; தழைத்துத் தாழ்ந்த காவுமாம். பிண்டி - அசோகமரம். பறவை முடிபொருள் கூறக் கடியதோர் கௌவை செய்யும் என்றேன் என்றது மேலைச் செய்யுளில் தாரினான் கைப்படும் என்றதற்கு எடுத்துக்காட்டு. ( 231 )

1397. அலங்கலுங் குழலுந் தோழி
யங்கையி னடைச்சி யம்பூம்
பொலங்கலக் கொடிய னாடன்
கண்பொழி கலுழி யொற்றிக்
கலந்தகி னாறு மல்குற்
கவான்மிசைக் கொண்டி ருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லா
ணெஞ்சமும் புலர்ந்த தன்றே.

பொருள் : தோழி - தோழியானவள்; அம் கையின் - அழகிய தன் கையினால்; அம் பொலம் கலம் பூங்கொடியன்னாள் தன் - அழகிய பொன்னாலாகிய கலம் அணிந்த பூங்கொடி போன்றவளின்; அலங்கலும் குழலும் அடைச்சி - மாலையையும் குழலையும் செருகி; கண்பொழி கலுழி ஒற்றி - கண்ணிலிருந்து வடியும் நீரையுந் துடைத்து; அகில் கலந்து நாறும் அல்குல் கவான் மிசைக்கொண்டிருந்தாள் - அகில் மணம் கலந்து கமழும் அல்குலையுடைய தன் துடையின் மேலே கொண்டிருந்தாள்; பொழுது புலர்ந்தது - அப்பொழுது இரவும் விடிந்தது; நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது - பதுமையின் உள்ளமும் தெளிந்தது.
 
விளக்கம் : அலங்கல் - மாலை. குழல் - கூந்தல். பொலங்கலம் - பொன்னாலியற்றிய அணிகலம். கொடியனாள் : பதுமை. கவான் - துடை. ( 232 )

1398. பண்கனிந் தினிய பாடற் படுநரம் பிளகி யாங்குக்
கண்கனிந் தினிய காமச் செவ்வியுட் காளை நீங்கத்
தெண்பனி யனைய கண்ணீர்ச் சேயிழை தாய ரெல்லாந்
தண்பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார்.

பொருள் : பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி யாங்கு - பண் முற்றுப்பெற்று இனிய பாட்டையுடைய ஒலிக்கின்ற நரம்பு பாடலிலே நெகிழ்ந்தாற்போலே; கண் கனிந்த இனிய காமச் செவ்வியுள் - பதுமையின் மெய்யிடங் குழைந்த இனிய காமச் செவ்வியிலே; காளை நீங்க - சீவகன் நீங்கினான் ஆதலின்; தெண் பனி அனைய கண்ணீர்ச் சேயிழை தாயர் எல்லாம் - தெளிந்த பனித்துளி போன்ற கண்ணீரையுடைய பதுமையின் தாயரெல்லாரும்; தண்பனி முருக்கப்பட்ட தாமரைக் காடு போன்றார் - குளிர்ந்த பனியினால் வெதும்பப்பெற்ற தாமரைக் காடுபோல முகம் கருகினர்.
 
விளக்கம் : பண்கனிந்து படுநரம்பு இனிய பாடல் படுநரம்பு எனத் தனித்தனி கூட்டுக. கண்கனிந்து என்புழி, கண் இடம் என்னும் பொருட்டு. காளை : சீவகன். சேயிழை : பதுமை. தாயர் : நற்றாயும் செவிலித்தாயரும் என்க. ( 233 )

1399. சில்லரிச் சிலம்பு சூழ்ந்த
சீறடித் திருவி னற்றாய்
முல்லையங் குழலி னாய்நின்
முலைமுதற் கொழுநன் மேனாட்
சொல்லியு மறிவ துண்டோ
வெனக்குழைந் துருகி நைந்து
மெல்லியல் கங்குல் சொல்லிற்
றிற்றென மிழற்று கின்றாள்.

பொருள் : சில் அரிச் சிலம்பு சூழ்ந்த சீறடித்திருவின் நற்றாய் - சில பரல்களையுடைய சிலம்பு அணிந்த சிற்றடியாள் பதுமையின் நற்றாய்; முல்லை அம் குழலினாய் - முல்லைப்போது அணிந்த கூந்தலாய்!; நின்முலை முதற்கொழுநன் - நின் கொங்கையிற் றோய்ந்த கணவன்; மேல் நாள் சொல்லியும் அறிவது உண்டோ என - முன்னாளிலே தன் பிரிவு தோன்றச்சொல்லி நீ அறிந்தது உண்டோ? என்று வினவ; மெல்லியள் குழைந்து உருகி நைந்து - பதுமை அதுகேட்டு நெகிழ்ந்து உருகி வருந்தி; கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் - இரவு கூறியது இஃது என்று கூறுகின்றாள்.
 
விளக்கம் : சில் அரி - சிலவாகிய பரல்கள். நற்றாய் : திலோத்தமை. கற்புக் கடம்பூண்டமை தோன்ற முல்லையங் குழலினாய், என்று விளித்தாள். முலைக்கு முதல்வனாகிய கொழுநன் என்க. கொழுநன் - கணவன். மெல்லியல் : பதுமை. இற்று - இத்தன்மைத்து. ( 234 )

வேறு
 
1400. வினைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுர
நினைத்து நீங்குத லாண்கட னீங்கினாற்
கனைத்து வண்டுணுங் கோதையர் தங்கடன்
மனைக்கண் வைகுதன் மாண்பொ டெனச்சொனான்.

பொருள் : நினைத்து - தன் மனைவியை நினைத்து வருத்தினாலும்; வினைக்கும் செய்பொருட்கும் - போர்த்தொழிலுக்கும் ஈட்டும் பொருட்கும்; வெயில் வெஞ்சுரம் - கோடையிலே கொடிய காட்டு நெறியிலே; நீங்குதல் ஆண் கடன் - பிரிந்து செல்லுதல் ஆடவர் தொழில்; நீங்கினால் - அவ்வாறு நீங்கினால்; கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன் - முரன்று வண்டுகள் தேனைப் பருகும் மாலையணிந்த மனைவியர் தொழில்; மாண்பொடு மனைக்கண் வைகுதல் எனச் சொனான் - இறந்து படாமல் இல்லிலே தங்கியிருந்தலாகும் என்று கூறினான்.
 
விளக்கம் : வினை : ஈண்டுப் போர்த்தொழில். செய்பொருள் : வினைத்தொகை. ஆண்கடன் : ஆடவனுக்குரிய கடமை. கனைத்து - முரன்று. கோதையர் - ஈண்டு மகளிர் என்னும் பொருட்டு. வைகுதல் - ஈண்டு ஆற்றியிருத்தல் என்பதுபட நின்றது. இச்செய்யுட் கருத்தோடு.
 
ஆண்கடன் அகறல் அதுநோன் றொழுகுதல்.
மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற்.
கற்புடை மகளிர் கடன். (பெருங். 3. 7 : 7 - 9).

எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்புக் காண்க. ( 235 )

1401. விரைசெய் தாமரை மேல்விளை யாடிய
வரைச வன்ன மமர்ந்துள வாயினு
நிரைசெய் நீல நினைப்பில வென்றனன்
வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான்.

பொருள் : வரை செய் கோலம் மணங்கமழ் மார்பினான் - மலைபோன்று அழகிய மணம் பொருந்திய மார்புடையான்; விரைசெய் தாமரைமேல் விளையாடிய அரச அன்னம் - மணம் கமழும் தாமரைமேல் விளையாடி அரச அன்னங்கள்; நிரை செய் நீலம் அமர்ந்துள ஆயினும் - திரளாகிய நீல மலர்களிடையே பயின்றுளவானாலும்; நினைப்பில என்றனன் - அந்த நீலத்தை நினையா என்றும் கூறினான். (என்று பதுமை கூறினாள்)
 
விளக்கம் : நீலம் - பரத்தை. தாமரை - குலமகளிர். எனவே குலமகளிரையே இனி நுகர்வேனென்றான்.( 236 )

1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல
வின்ன ளிக்குரல் கேட்ட வசுணமா
வன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.

பொருள் : பொன் விளைத்த புணர்முலையாள் சொல - தேமலைத் தோற்றுவித்த புணர்முலையுடையாள் பதுமை இங்ஙனம் கூற; மின்விளைத்தன மேகலை அல்குலாள் - ஒளியைப் பரப்பிய மேகலை அணிந்த அல்குலையுடையாள் ஆகிய நற்றாய்; இன் அளிக்குரல் கேட்ட அசுணமா அன்னளாய் - இனிய அளிக்கத்தக்க குரல் நரம்பின் இசை கேட்ட அசுணமாவைப் போன்றவளாகி; மகிழ்வு எய்துவித்தாள் - பதுமையையும் களிப்படையச் செய்தாள்.
 
விளக்கம் : அசுணமா : இசையறிவதொரு விலங்கு. சிலர் அசுணத்தைப் பறவை யென்பர். அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும், தீயவிசை கேட்டால் துன்புறும் என்பர். அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் (நற். 304) என்றார். ( 237 )

1403. அன்னந் தானவன் றாமரைப் போதுநீ
நின்னை நீங்கின னீங்கலன் காதலா
னின்ன தாலவன் கூறிற் றெனச்சொனாண்
மன்ன னாருயிர் மாபெருந் தேவியே.

பொருள் : மன்னன் ஆருயிர் மாபெருந் தேவி - தனபதி மன்னனின் உயிராகிய பேரரசி; அவன் அன்னந்தான் - சீவகன் அன்னமாவான்; நீ தாமரைப்போது - நீ தாமரை மலராவாய்; நின்னை நீங்கினன் - அவன் வினைமேற் செலவே இப்போது நின்னைப் பிரிந்தான்; காதலான் நீங்கலான் - காதலுடையவனாகையால் நின்னை முழுக்கப் பிரிந்தானலன்; அவன் கூறிற்று இன்னது எனச் சொனாள் - அவன் கூறியதன் கருத்து இதுவே என்று நற்றாய் நவின்றாள்.

விளக்கம் : நீலம் அமர்ந்துளவாயினும் என்பதன் கருத்தைக் கூறிற்றிலள் பதுமை கேட்பின் இறந்துபடுவள் என்று கருதி. நின்னின் நீங்கினன் என்றும் பாடம். ( 238 )

வேறு
 
1404. சொரிபனி முருக்க நைந்து
சுடர்முகம் பெற்ற போதே
பரிவுறு நலத்த வன்றே
பங்கய மன்ன தேபோல்
வரிவளைத் தோளி கேள்வன்
வருமென வலித்த சொல்லாற்
றிருநலம் பிறந்து சொன்னா
டேனினு மினிய சொல்லாள்.

பொருள் : சொரி பனி முருக்க நைந்து - பெய்யும் பனி வெதுப்புதலிற் கெட்டு; சுடர்முகம் பெற்றபோதே - ஞாயிறு தோன்றும் நிலைமையை அடைந்தபொழுதே; பங்கயம் பரிவுறும் நலத்த அன்றே - தாமரை அன்புறும் பண்பினையுடையவன்றே?; அன்னதேபோல் - அதனைப் போலவே; வரிவளைத் தோளி தேனினும் இனிய சொல்லாள் - வரி வளையணிந்த தோளியாகிய தேனினும் இனிமையான சொல்லையுடையவள்; கேள்வன் வரும் என வலித்த சொல்லால் - கணவன் வருவான் என்று தாய் கூறிய உறுதிமொழியால்; திருநலம் பிறந்து சொன்னாள் - அழகிய நலத்தைப் பெற்று ஒருமொழி கூறினாள்.
 
விளக்கம் : சொரிபனி : வினைத்தொகை. முருக்குதல் - அழித்தல். சுடர் - ஞாயிறு. பங்கயம் - தாமரை. தோளி : பதுமை. வலித்தசொல் - துணிந்துரைத்த சொல். ( 239 )

1405. நஞ்சினை யமுத மென்று நக்கினு மமுத மாகா
தஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனு
மஞ்சிறைக் கலுழ னாகு மாட்சியொன் றானு மின்றே
வஞ்சனுக் கினைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள்.

பொருள் : நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது - கண்ணுக்கினிய தோற்றத்தால் நஞ்சை அமுதென்று எண்ணி நக்கினாலும் அமுதம் ஆகாது; அம்சிறைக் கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும் - அழகிய சிறகினையும் கலவத்தையும் உடைய மயில் வருத்தம் பாம்பைக் கொல்லுந் தகையதேனும்; அம் சிறைக் கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்று - அழகிய சிறகினையுடைய கருடனைப்போலத் தொலைவிலிருந்தாலும் நினைப்பித்துப் பாம்பை அச்சுறுத்தும் பெருமை சிறிதும் மயிலுக்கில்லை; மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள் - ஆண்மையுடைய அவனுக்கு நஞ்சும் மயிலும் போலும் நீர்மையுடையேன் அமுதமும் கருடனும் போன்ற மகளிரைப்போல வருந்துவது யாது பயனுடையது என்றாள்.
 
விளக்கம் : அவன் கூடிய பின்பு நீங்கும் இயல்பைத் தானுடைமையால் தன்னை நஞ்சு என்றாள். நீக்கம் இல்லாத இன்பந் தருதலிற் பிறரை அமுதம் என்றாள். அட்டது என்றார் பாம்பு பல்லுயிரையும் வருத்துந் தன்மையை மயில் கொன்று அஞ்சுவித்தலை உட்கொண்டு; செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள். 110) என்றாற்போல. இதனால் தன் வீறின்மையையும் பிரிவின்கண் வருத்துந் தன்மையின்மையையும் கூறினாள். வீறு : தனியழகு. ( 240 )

வேறு
 
1406. பொய்கையுட் கமலத் தங்கட்
புள்ளெனு முரச மார்ப்ப
வெய்யவன் கதிர்க ளென்னும்
விளங்கொளித் தடக்கை நீட்டி
மையிருட் போர்வை நீக்கி
மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கிப்
பனிவரை நெற்றி சேர்ந்தான்.

பொருள் : பொய்கையுள் கமலத்தங்கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப - பொய்கைகளிலே தாமரை மலராகிய அழகிய இடத்திலிருந்து வண்டுகள் என்னும் பள்ளியெழுச்சி முரசம் ஆரவாரிக்க; கதிர்கள் என்னும் விளங்கு ஒளித் தடக்கை நீட்டி - கதிர்களாகிய விளக்கம் பொருந்திய ஒளியுறும் பெருங்கையினை நீட்டி; மைஇருள் போர்வை நீக்கி - காரிருளாகிய போர்வையை எடுத்துவிட்டு; மண்ணக மடந்தை கோலம் - நிலமகளின் ஒப்பனையை; பையவே பரந்து நோக்கி - மெல்ல விழிகளைப் பரப்பிப் பார்க்க; வெய்யவன் பனிவரை நெற்றி சேர்ந்தான் - ஞாயிறு குளிர்ந்த உதயகிரியின் முகட்டிலே வந்து சேர்ந்தான்.
 
விளக்கம் : நோக்கி - நோக்க : எச்சத்திரிபு. நிலமகள் கோலத்தைப் பையப்பரவி மனத்தாலே நோக்கி என்பர் நச்சினார்க்கினியர்.
( 241 )

1407. செவ்வழி யாழி னூறுந் தீஞ்சொலாட் குற்ற தெல்லா
மவ்வழி யரசற் குய்த்தார்க் கரசனு மவல மெய்தி
யெவ்வழி யானு நாடி யிமைப்பின தெல்லை யுள்ளே
யிவ்வழித் தம்மினென்றா னிவுளித்தேர்த் தானை யானே.

பொருள் : செவ்வழி யாழின் ஊறும் தீஞ்சொலாட்கு உற்றது எல்லாம் - மகர யாழைப்போல இனிமையூறும் சொல்லாளாகிய பதுமைக்கு நேர்ந்ததை யெல்லாம்; அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு - அந் நிலையிலே அரசனுக்கு அறிவித்தவர்கட்டு; இவுளித்தேர்த் தானையான் அரசனும் - குதிரைகள் பூட்டிய தேர்ப் படையை உடைய அரசனும்; அவலம் எய்தி - வருந்தி; எவ்வழியானும் நாடி - எல்லா நெறியினுஞ் சென்று தேடி; இமைப்பினது எல்லையுள்ளே இவ்வழித் தம்மின் என்றான் - ஒரு நொடியளவிலே இங்குக் கொண்டு வருக என்று பணித்தான்.
 
விளக்கம் : செவ்வழியாழ் - செவ்வழிப்பண்ணுமாம். தீஞ்சொலாள் : பதுமை. அரசன் - ஈண்டுத் தனபதி. இமைப்பினதெல்லை - ஒரு நொடிப்பொழுதில். இவுளி - குதிரை. தானையான் : தனபதி. ( 242 )

வேறு
 
1408. மின்னுளே பிறந்ததோர் மின்னின் மேதகத்
தன்னுளே பிறந்ததோர் வடிவு தாங்குபு
முன்னினான் வடதிசை முகஞ்செய் தென்பவே
பொன்னுளே பிறந்தபொன் னனைய பொற்பினான்.

பொருள் : பொன்னுளே பிறந்த பொன் அனைய பொற்பினான் - பொன்னிலே தோன்றிய பொன்னைப் போன்ற அழகினான் ஆகிய சீவகன்; மின்னுளே பிறந்தது ஓர் மின்னின் - மின் முகிலாக அதற்குள்ளே பிறந்த ஒரு மின்னைப்போல; மேதகத்தன்னுளே பிறந்தது ஓர் வடிவம் தாங்குபு - பொருந்துவதற்குத் தகுதியாகிய தன்னிடத்திலே உண்டாகியதொரு வடிவை (பிறர் அறியாமலிருக்க) தான் தாங்கி; வடதிசை முகம் செய்து முன்னினான் - வடதிசையை நோக்கிப்போகக் கருதினான்.
 
விளக்கம் : விரைவுக்கும் வடிவிற்கும் மின் உவமை. இஃது இல் பொருளுவமை. இதனால் தூர கமனஞ் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பொன்னுளே பிறந்தபொன் - மாசகன்ற பொன். ( 243 )

1409. வீக்கினான் பைங்கழ னரல வெண்டுகி
லாக்கினா னிருதுணி யணிந்த பல்கல
னீக்கினா னொருமகற் கருளி நீணெறி
யூக்கினா னுவவுறு மதியி னொண்மையான்.

பொருள் : உவவு உறும் மதியின் ஒண்மையான் - முழுத் திங்களைப் போன்ற கலைகளையுடையவனும்; பைங்கழல் நரல வீக்கினான் - முன்பு புதிய கழலை ஒலிக்கக் கட்டியவனுமாகிய சீவகன்; வெண்துகில் இருதுணி ஆக்கினான் - கடிதுசெல்ல வெண்மையான ஆடையை இரண்டு துண்டாகக் கிழித்தணிந்தான்; பல்கலன் ஒருமகற்கு அருளி நீக்கினான் - பலவகைப் பூண்களையும் எதிர்ப்பட்ட ஒருவனுக்குக் கொடுத்துப் போக்கினான்; நீள்நெறி ஊக்கினான் - நீண்ட நெறியிலே செல்ல முயன்றான்.
 
விளக்கம் : வீக்கினான் : வினையாலணையும் பெயர். துகில் இருதுணி ஆக்கினான் என மாறுக. கடிதிற் செல்லுதற்பொருட்டு நொய்தாக என்றது எதிர்ப்பட்ட ஆடையை இரண்டாகக் கிழித்தனன் என்பது கருத்து. ஒரு மகற்கு ஓர் ஏதிலனுக்கு என்பதுபடநின்றது. ஊக்கினான் - முயன்றான். உவவுறுமதி - கலைகணிரம்பிய முழுமதி. ( 244 )

வேறு
 
1410. வேந்தனால் விடுக்கப் பட்டார்
விடலையைக் கண்டு சொன்னா
ரேந்தலே பெரிது மொக்கு
மிளமையும் வடிவு மிஃதே
போந்ததும் போய கங்குல்
போம்வழிக் கண்ட துண்டேல்
யாந்தலைப் படுது மைய
வறியினீங் குரைக்க வென்றார்.

பொருள் : வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையைக் கண்டு சொன்னார் - தனபதி மன்னனால் ஏவப்பட்டோர் (வடிவை மாற்றிப் போதற்கு முயன்ற) சீவகனைக் கண்டு கூறினார்; ஏந்தலே பெரிதும் ஒக்கும் - ஏந்தலாகிய நின்னையே பெரிதும் ஒப்பான்; இளமையும் வடிவும் இஃதே - அவனுடைய இளமைப் பருவமும் வடிவமும் இத் தன்மையே; போந்ததும் போய கங்குல் - அவன் வெளிவந்ததும் சென்ற இரவிலேயே; போம் வழிக் கண்டது உண்டேல் யாம் தலைப்படுதும் - நீ போந்த நெறியிலே அவனைக் கண்டிருந்தால் (அவ்விடத்தைக் கூறினால்) யாங்கள் கண்டு கொள்வோம்; ஐய! அறியின் ஈங்கு உரைக்க என்றார் - ஐயனே! அறிந்திருந்தாற் கூறுக என்று வினவினர்.
 
விளக்கம் : போகின்ற இடத்து யாங்கள் அவனைக் கண்டதுண்டாயின் அப் பொழுதே சென்று தலைப்படுவேம் என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் அது வறுங்கூற்றாய் முடிதல் காண்க. அற்றேல், கண்டதுண்டேல் எனவும், அறியின்  எனவும் இருமுறை ஒரு பொருளையே தருஞ்சொற்கள் வந்தனவால் எனின், கண்டிருந்தால் அவ்விடஞ் சென்று தலைப்படுகிறோம்; ஆகவே, அறியின் உரைத்திடுக என்றாராதலின் பயன் கருதியே இருமுறை வந்தன என்க.  இளமையும் இஃதே வடிவும் இஃதே எனச் சுட்டுச்சொல்லை ஈரிடத்தும் ஒட்டுக. ( 245 )

1411. நெய்கனிந் திருண்ட வைம்பா
னெடுங்கணாள் காத லானை
யையிரு திங்க ளெல்லை
யகப்படக் காண்பி ரிப்பாற்
பொய்யுரை யன்று காணீர்
போமினம் போகி நுங்கண்
மையலங் களிற்று வேந்தன்
மைந்தனுக் குரைமி னென்றான்.

பொருள் : நெய்கனிந்து இருண்ட ஐம்பால் நெடுங்கணாள் காதலானை - நெய் நிறைந்து கறுத்த ஐம்பாலையும் நெடுஞ்கண்களையும் உடையவளின் கணவனை; ஐயிரு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் - பத்துத் திங்களின் அளவிலே அகப்படக் காண்பீர்; இப்பால் காணீர் - இவ் வெல்லைக்குள்ளே காணீர்; பொய் உரை அன்று - யான் கூறுவது பொய்ம்மொழி யன்று; போமின் - ஆகவே, இனித் திரும்பிச் செல்லுமின்; போகி நுங்கள் மையல்அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரைமின் என்றான் - சென்று நுங்கள், மயக்கமுற்ற களிற்றையுடைய வேந்தனுக்கும் அவன் மைந்தனுக்கும் உரைப்பீராக என்றான்.

விளக்கம் : ஏவலாளர், நும்போன்ற ஒருவன் என்றே கூறினாராக, இவன், நெடுங்கணாள் காதலானை எனவும், வேந்தனுக்கும் மைந்தனுக்கும் எனவும் கணியொருவன் கூறுவதுபோலக் கூறினான், தான்கூறும் மொழி உண்மையென அவர்களுணர்ந்துபோய்க் கூறுதற்கு. ஐயிரு திங்கள் எல்லை அகப்பட என்றது, பத்தாகிய எல்லைக்குள்ளே ஒரு திங்கள் குறைய என்றவாறு. எனவே. ஒன்பதாந் திங்களாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். போமினம் : அம் : அசை. ( 246 )

பதுமையார் இலம்பகம் முற்றிற்று.

 
மேலும் சீவக சிந்தாமணி »
temple news
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக ... மேலும்
 

கடவுள் வாழ்த்து நவம்பர் 14,2011

சித்தர் வணக்கம் 1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்திஓவாது நின்ற ... மேலும்
 
கதைச் சுருக்கம்: இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. ... மேலும்
 
கதைச்சுருக்கம்: சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; ... மேலும்
 
கதைச் சுருக்கம்: சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar