பதிவு செய்த நாள்
13
ஜூன்
2023
12:06
அயோத்தி : அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கோவிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள், வரும் அக்டோபரில் நிறைவடையும் என ராமர் கோவில் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில், அவருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. மூன்று தளங்களில் உருவாக்கப்படும் கோவிலில் கோபுரங்கள், துாண்கள், குவிமாடங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தரைத்தளம், கருவறை ஆகியவற்றை அமைக்கும் பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பணிகள் நடக்கும் இடத்தை கோவில் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் ஆய்வு செய்தனர். கட்டுமானப் பணிகள் குழு தலைவர் ரிபேந்திரா மிஸ்ரா தலைமையில் நடந்த ஆய்வுப் பணியின் போது, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து ரிபேந்திர மிஸ்ரா கூறுகையில், பக்தர்கள் மனம் குளிரும் வகையில், எழில் கொஞ்சும் அழகுடன் சீரிய முறையில் கருவறை அமைக்கப்பட்டு வருகிறது. தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் வரும் அக்., மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, என்றார். கோவிலில் 46 தேக்கு மரக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கருவறை கதவு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. எந்த சூழலையும் தாங்கும் தன்மை உடைய துாண்கள் அமைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. தரைத் தளத்தில் பிரதான மண்டபம், கீர்த்தனை மண்டபம் உள்பட ஐந்து மண்டபங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீ ராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைகின்றன. மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. கோயிலின் பெரும்பாலான பகுதிகள் பிங்க் நிற கற்களில் கட்டப்பட்டாலும், நுழைவாயில் மட்டும் வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்படுகிறது.