பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
09:04
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைகின்றன.
மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி. கோயிலில் 12 நுழைவாயில்கள் இருக்கும். கோயிலின் பெரும்பாலான பகுதிகள் பிங்க் நிற கற்களில் கட்டப்பட்டாலும், நுழைவாயில் மட்டும் வெள்ளை மார்பிளால் அமைக்கப்படுகிறது. ராமர் சிலை அமையும் கருவறை முழுவதும், தாஜ்மஹாலில் உள்ளது போன்ற வெள்ளை மார்பிளால் ஜொலிக்கும். இரும்பு, செங்கல், சிமென்ட் பயன்படுத்தப்படவில்லை. முழுவதும் பாறை கற்களால் கட்டப்படுகிறது. இன்டர்லாக்கிங் சிஸ்டம், காப்பர் வயர் மூலம் கற்கள் இணைக்கப்படுகிறது. ஒட்டுவதற்கு வெள்ளை சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. 1200 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு துாணிலும் 16 சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தரைதளத்தில் மட்டும் 4000 சிலைகள் அமைக்கப்படுகின்றன. முதல்தளம் முடிவு பெற்றுள்ளது. இரண்டு, மூன்றாம் தளங்களின் பணிகள் நடக்கின்றன. இந்த பிங் நிற பாறைகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 4.75 லட்சம் கன அடி கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கற்கள்தான் அக் ஷார்தம் உள்ளிட்ட முக்கிய கோயில் கட்டவும் பயன்படுத்தப்பட்டன. நாகரா கட்டடக்கலையில் வடிவமைக்கப்படுகிறது. சோம்நாத் கோயிலை கட்டிய பிரபாகர் சிங் சோம்புரா பேரன் சந்திரகாந்த் சோம்புரா இக்கோயிலை வடிவமைத்துள்ளார். 2587 புனிதமான இடங்களில் இருந்து மண், 155 புண்ணிய நதிகளில் இருந்து நீரும் கொண்டு வந்து கோயில் கட்டுமான பூஜை செய்யப்பட்டது.நான்கு அடுக்கு பாதுகாப்பில் கட்டுமானப்பணி நடக்கிறது. நேரடியாக, மறைமுகமாக 5000 பேர் பணியாற்றுகின்றனர். ஜனவரியில் மக்களின் தரிசனத்திற்காக ராமர் கோயில் திறக்கப்படும்.
அயோத்தியில் கேட்கும் ராமேஸ்வரம் மணி சத்தம்: கோயிலை சுற்றி ராமர் - சீதா திருமணம், வனவாசம், ராவணனுடன் போர் உள்ளிட்ட ராமாயணத்தை விளக்கும் காட்சிகளை சிலைகளாக வைக்க உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மணி, இக்கோயிலில் பொருத்தப்பட உள்ளது. இது தமிழகத்துக்கு பெருமை.
அனுமன் கோயில்: ராம ஜென்ம பூமிக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது இங்குள்ள அனுமன் கோயில். அனுமன் கோட்டை, ஹனுமான் குன்று எனவும் அழைக்கப்படுகிறது. ராவணனுடனான போர் முடிந்து ராமர், சீதையை மீட்டு அயோத்தி வந்த பின், இக்குன்றின் மேல் இருந்துதான் அனுமன், ராமரை பார்த்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள அனுமன் சிலை 6 அங்குல
உயரம் கொண்டது.
நேபாளத்தில் இருந்து: நேபாளம் - அயோத்திக்கு இடையே பல ஆயிரம் ஆண்டு பந்தம் உள்ளது. அங்கிருந்து இரண்டு சாலிகிராம கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த கற்களில் இருந்து தான் மூலவர் ராமர், சீதை சிலைகள் வடிவமைக்கப்பட உள்ளன. அந்தப் பணி இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் மக்கள் ஆர்வமாக வணங்கி செல்கின்றனர். இன்னும் சில பாறைகளில் இருந்து மஹா விஷ்ணுவின்9 அவதாரங்கள் செதுக்கப்பட உள்ளன.
புனித சரயு நதி: அயோத்தியில் சரயு நதி புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இதற்கு தினமும் ஆரத்தி நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்களின் வேண்டுதலை சொல்லி, விளக்கை நதியில் விடுகின்றனர். வேண்டுதல் நேரடியாக கடவுளுக்கு சென்று சேரும் என்பது நம்பிக்கை.
வீடியோவை காண: லிங்க்: https://youtu.be/H_5BiWKzdJM