பதிவு செய்த நாள்
21
டிச
2023
04:12
பல்லடம்; சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது.
நேற்று மாலை 5.20 மணிக்கு, சனிபகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு, பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், வச்சாச்சனை விழா நடந்தது. முன்னதாக, டிச., 19 அன்று மாலை 5.00 மணிக்கு வாஸ்து சாந்தி, விநாயகர் வேள்வியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, துர்கா, லட்சுமி சரஸ்வதி பூஜை, முதல் கால வேள்வி, சனிபகவான் மூல மந்திர வேள்வி ஆகியவை நடந்தன. நேற்று காலை, இரண்டாம் கால வேள்வி, லட்சார்ச்சனை, 108 குண்டங்களில் சனி பகவான் மூல மந்திர வேள்வி, திரவிய வேள்வி, மூன்றாம் கால வேள்வி ஆகியவை நடந்தன. இதையடுத்து, மாலை, 5.20க்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனிபகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, காக வாகனத்தில் சனிபகவான் எழுந்தருளினார். 1008 தீர்த்த கலச அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சனி பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரிகார பூஜைகளை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.