பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, மாலையில், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. சரஸ்வதி பூஜையையொட்டி, நேற்று காலை 7.00 மணிக்கு விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 6.00 மணி முதல் விஜயதசமியையொட்டி, வித்யாரம்பம் நடைபெறுகிறது.உடுமலை குறிஞ்சேரி பூமிலட்சுமி அம்மன் கோவிலில், 18ம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, தினசரி அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று சரஸ்வதி பூஜையையொட்டி, மதியம் 11.30 மணிக்கு உச்சி கால பூஜையும், தீபாரதனையும், மாலை 6.00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஹோமம், கன்யா பூஜை, மங்கள ஆரத்தியும் நடந்தது. உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.