பதிவு செய்த நாள்
23
ஜன
2024
10:01
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க வேண்டி துர்காபரியில் யாகம் நடத்தினார். அதே போல், மத்திய இணை அமைச்சர் பிரதிமா பவுமிக்கும் சிறப்பு யாகம் நடத்தினார். திரிபுரா சட்டசபை துணை சபாநாயகர் ராம் பிரசாத் பால், சூர்யமணிநகரில் ஊர்வலம் நடத்தினார்.
பீஹார்; பீஹாரில் உள்ள பெரும்பாலான கோவில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மாலையில் கோவில்களில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன. ராம பக்தைகள் 108 பேர், பாட்னாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு கலசங்களுடன் ஊர்வலம் சென்றனர். அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி பாட்னாவின் தக் பங்களா சவுக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பாட்னாவில் உள்ள இஸ்கான் கோவில், 8,000 கிலோ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலையில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
ஹிமாச்சல பிரதேசம்; ஹிமாச்சல பிரதேசத்தில், தீபாவளி பண்டிகையை போல் மக்கள் விமரிசையாக கொண்டாடினர். மாநிலம் முழுதும் கலாசார, சமய நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானங்கள் வழங்கப்பட்டன. மாநிலம் முழுதும் 4,000 இடங்களில் எல்.இ.டி., திரைகள் நிறுவப்பட்டு, அயோத்தி கும்பாபிஷேகம் ஒளிபரப்பப்பட்டது. லட்சக்கணக்கானோர் பார்த்தனர். சிம்லா ராமர் கோவிலில் ராமாயண சொற்பொழிவு நடந்தது.
மத்திய பிரதேசம்; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று காலை ஊர்வலங்கள் நடந்தன. பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் காவி கொடிகளை ஏந்தியபடி, மேள தாளங்கள் முழங்க ராமரைப் புகழ்ந்து பாடியபடி ஊர்வலம் சென்றனர். மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள் பண்டிகை கொண்டாட்டத்தால் களை கட்டியது. அயோத்தியில் கும்பாபிஷேகம் முடிந்த உடன் மாநிலம் முழுவதும் பக்தர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.