பதிவு செய்த நாள்
23
ஜன
2024
08:01
பல்லாயிரக்கணக்கானோரின் தொலைநோக்கு பார்வையும், முயற்சியும், தியாகமும் உள்ளது. அவர்களில் முக்கியமானவர்களை இங்கு நினைவுகூர்கிறோம்.
கரசேவகர்கள் உறுதி
ராமர் கோவில் கட்டப்பட்டதில் கரசேவகர்கள் பங்கு அதிகம். கடந்த 1992, டிச., 6ல் நாடு முழுவதும் இருந்து இரண்டரை லட்சம் பேர் அயோத்தியில் குவிந்தனர். உறுதியுடன் திரண்ட இவர்களை, 60,000 மத்திய படை போலீசாரால் தடுக்க முடியவில்லை. திட்டமிட்டபடி எல்லாம் முடிய, அங்கு குவிந்த மண்குவியலையும் அகற்றி சுத்தம் செய்தனர். சிங்துவார் எனப்படும் ராமர் கோவிலுக்கான முதன்மை நுழைவு வாயிலுக்காக கரசேவகர்கள் அடிக்கல் நாட்டினர். தற்போது ராமர் கோவில் பிரமாண்டமாய் உயிர்த்தெழுந்துள்ளது.
அத்வானி ரத யாத்திரை
ராம ஜென்மபூமி மீட்பு போராட்டத்தில் அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானி முக்கிய பங்கு வகித்தார். 2.47 ஏக்கர் சரஇடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி 1990 செப்., 25ல் குஜராத்தின் சோம்நாத் கோவிலில் இருந்து அயோத்திக்கு ராம் ரத யாத்திரையை துவங்கினார். இவரது யாத்திரை பீஹாரில் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்வானி கைது செய்யப்பட்டார். 1.50 லட்சம் தொண்டர்களும் கைதாகினர். இந்த யாத்திரை இளைஞர்கள் மத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. அதேபோல அடுத்த சில ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கவும் உதவியது. 1992 டிச., 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நடந்த கரசேவகர்கள் கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் பலருடன் மேடையில் அமர்ந்திருந்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து 2020ல் அத்வானி விடுவிக்கப்பட்டார்.
சொன்னதை செய்தார்
ராமர் கோவில் உருவானதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகிக்கிறார். 1990 ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி நடத்திய ரத யாத்திரையில் பங்கேற்றார். 1991ல் முரளி மனோகர் ஜோஷி அயோத்திக்கு ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இதில் மோடியும் உடன் சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள், அடுத்து எப்போது அயோத்தி வருவீர்கள், என கேட்டனர். இதற்கு மோடி, ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருவேன், என்றார். சொன்னபடி, 2020, ஆக., 5ல் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின் பலமுறை அயோத்தி சென்று, கோவில் பணிகளை விரைவு படுத்தினார். நேற்று ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றார். தஞ்சை பெரிய கோவில் 1010ம் ஆண்டு மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இவரது பெயர் இன்று வரை நிலைத்து நிற்கிறது. இதுபோல அயோத்தி ராமர் கோவில் வரலாற்றில், மோடியின் பெயர் நிலைத்து நிற்கும்.
வாஜ்பாய் அமைத்த அலுவலகம்
ஜன., 2002ல் அயோத்தி பிரச்னைக்கு சத்ருகன் சிங் தலைமையில் ஒரு அலுவலகத்தை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். ஹிந்து- - முஸ்லிம் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
பலே பராசரன்
அயோத்தி வழக்கில் ஹிந்து அமைப்பான ராம் லல்லா மனுவை மட்டுமே உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்த அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞரான தமிழகத்தின் பராசரன் வாதாடினார். ராமர் பிறந்த இடத்தில் 433 ஆண்டுகளுக்கு முன் மசூதி கட்டி பாபர் செய்த தவறை, சரி செய்ய வேண்டும். அயோத்தியில் எந்த மசூதியில் வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம். அங்கு 50 - 60 மசூதிகள் உள்ளன. ஹிந்துக்களுக்கு ராமர் பிறந்த இடம் இது மட்டுமே. இதை மாற்ற முடியாது என வாதாடினார். 40 நாள் விசாரணையில் எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாமல் வாதாடி வெற்றி பெற்றார்.
பேராசிரியர் சம்பத் ராய்
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், 78. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர். உ.பி.,யை சேர்ந்த இவர், வேதியியல் பேராசிரியர். அயோத்தி ராமர் கோவில் ஆவணங்கள் சேகரிப்பது, நீதிமன்ற நடவடிக்கையில் கவனம் செலுத்தினார். ராமர் கோவில் கட்டுமான தலைமை மேற்பார்வையாளரானார். ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களை கொண்டு வந்து துாண்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை உருவாக காரணமாக இருந்தார்.
கல்யாண் சிங்
அத்வானியின் ராம ரத யாத்திரையின் விளைவாக 1991ல் உத்தர பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. 1991 ஜூன் 24ல் முதல்வராக கல்யாண் சிங் பதவியேற்றார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகே கரசேவகர்களை கூட்டம் நடத்த அனுமதித்தது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை தடுக்க முயற்சிக்கவில்லை என இவர் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இவரது அரசை மத்திய அரசு கலைத்தது. 2021ல் காலமானார்.
வினய் கட்யார்
பா.ஜ.,வின் பொதுச்செயலராக இருந்தவர். இளைஞர்களை ஒன்று திரட்டி பஜ்ரங்தள் அமைப்பை நிறுவி, ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கு ஆதரவு அளித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் இளைஞர் அணி தலைவராகவும் இருந்தவர். அயோத்தி தொகுதி எம்.பி.,யாக பா.ஜ., சார்பில் மூன்று முறை தேர்வானார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஸ்ரீராம் பஞ்சு முயற்சி
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக 2019 நவ., 9ல் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்குவதற்கு முன், இப்பிரச்னையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக 2019 மார்ச் 8ல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஆக., 1: சமரச பேச்சு நடத்திய மத்தியஸ்தர் குழு இறுதி அறிக்கையை, சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் சமரச தீர்வு ஏற்படவில்லை என தெரிவித்திருந்தது. இதையடுத்து மத்தியஸ்தர் குழு தோல்வியில் முடிந்தது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சிங்கம் அசோக் சிங்கால்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர், மறைந்த அசோக் சிங்கால் 89. ராமர் கோவில் உருவானதில் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. கடந்த 1984ல் ஹிந்து மதத்திற்கு புத்துயிர் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து, டில்லி விஞ்ஞான் பவனில் நுாற்றுக்கணக்கான சாதுக்களிடம் விவாதித்தார். இங்கு தான் ராமர் கோவிலை மீட்க வேண்டும் என்ற இயக்கம் தோன்றியது. இதையடுத்து ஏற்படுத்தப்பட்ட அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் தலைவர் ஆனார்.
* 1990ல் பீஹாரில் ரத யாத்திரை நுழைந்த போது, அத்வானி கைது செய்யப்பட்டார். அப்போது அரசின் தடைகளை மீறி கர சேவைக்காக ஹிந்து இளைஞர்களை திரட்டி அயோத்தி நோக்கிச் சென்றார்.
* 1992ல் மீண்டும் துணிச்சலாக கரசேவா நடத்தினார். நீண்ட போராட்டத்துக்குப் பின் டிச. 6ல் ராமர் கோவில் கட்டுவதற்கான வழி ஏற்பட்டது.
* வாஜ்பாய் பிரதமராக (1998-2004) இருந்த போது, ராமர் கோவில் கட்ட வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் தலைவராக இருந்த அசோக் சிங்கால் உடல்நலக் குறைவு காரணமாக 2015ல் காலமானார்.
உமா பாரதி
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் பா.ஜ.,வின் உமா பாரதி. ராம ஜென்மபூமி போராட்டத்தில் அடையாளம் காணப்பட்டார். துறவியான இவர், மசூதி இடிக்கப்பட்டதில் எந்த சதியும் இல்லை என கூறினார். அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர், ஆன்மிக பணியில் ஈடுபட்டுள்ளார்.
சட்டப்போராட்டம்
என்ன விலை கொடுத்தாவது ராமர் கோவில் கட்ட வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தார் சுப்ரமணியன் சுவாமி. 2010 அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக 22 பிப்ரவரி, 2016 ல் சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
* பிப்ரவரி 26 ல் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக் கொண்டது. கோவில் கட்ட, 2019ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன், சுப்ரமணியன் சுவாமி, 40 நாள் தினமும் ஆஜராகி வாதாடினார்.
சிக்கிய ஆதாரம்
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மண்டல இயக்குனராக பணியாற்றியவர் முகமது. பூர்வீகம் கேரளா. தொல்லியல் துறையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1976--77ல் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வாளர் பி.பி லால் தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்தார். சர்ச்சைக்குரிய நிலத்தில் அகழாய்வு செய்தபோது பாபர் மசூதிக்குக் கீழே கோவில் இருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
அனுமதி
ராமஜென்ம பூமி, அதை ஒட்டி இருந்த இடங்களை, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என 1986ல் ஆர்.எஸ்.எஸ்., மத்திய அரசை வலியுறுத்தியது. இதுதொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் தலைமையிலான குழு அப்போதைய பிரதமர் ராஜிவ் அரசுடன் பலகட்ட பேச்சவார்த்தை நடத்தியது.
* மூடப்பட்டு இருந்த பாபர் மசூதியை திறக்க வேண்டும் என இக்குழு உறுதியாக இருந்தது.
* 1986, பிப்., 1ல் உள்ளூர் நீதிமன்றம், மசூதியை திறக்க உத்தரவிட்டது. இந்த இடத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்ட செங்கல் கொண்டு கட்டடம் கட்ட ராஜிவ் காந்தி அனுமதித்தார்.
30 ஆண்டு கனவு
குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த சோம்புரா குடும்பத்தினர் ராமர் கோவிலை வடிவமைத்துள்ளனர். இவர்கள் 15 தலைமுறையாக ஸ்தபதியாக உள்ளனர். தற்போது சந்திரகாந்த் சோம்புரா 77, மேற்பார்வையில் அவரது மகன்கள் நிகில் ,55, ஆஷிஷ் 49, இணைந்து அயோத்தி ராமர் கோவிலை புதிதாக வடிவமைத்தனர்.
ஆஷிஷ் கூறுகையில், தந்தை சந்திரகாந்த் இளம் பருவத்தில் இருந்தே கோவில் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். வாஸ்து சாஸ்திரம், சிற்பக்கலை நுணுக்கங்கள் அறிந்தவர். 1989-ல் ராமர் கோவில் மாதிரியை ஆறு மாதத்தில் வடிவமைத்தார். 1989-ல் ராம் ஜென்ம பூமி வளாகத்துக்கு அப்போதைய வி.எச். பி..தலைவர் அசோக் கிங்கால் என் தந்தையை அழைத்து சென்றார். அப்பகுதி ராணுவ பாதுகாப்பில் இருந்தது. இடத்தை அளப்பதற்கு எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை. கால்களால் அளவு எடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின் அவரது கனவு நனவாகியுள்ளது,என்றார்.
அயோத்தி ராம் ஜென்ம பூமி வழக்கில், 2.77 ஏக்கர் நிலம் ஹிந்து அமைப்புக்கே சொந்தம். கோவில் கட்டிக்கொள்ளலாம் என 2019 நவ., 9ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. யார் இவர்கள்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நாட்டின் தலைமை நீதித்துறை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர். 2018ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பஞ்சாப், ஹரியானா, கவுகாத்தி உள்ளிட்ட ஐகோர்ட்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றி முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். தேசிய குடியுரிமை பதிவு தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியவர்
எஸ்.ஏ.பாப்டே
ஷரத் அரவிந்த் பாப்டே என்ற இவர், நவ.,17 தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற பின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளவர். மும்பை, மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐகோர்ட்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2013ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
டி.ஒய்.சந்திரசூட்
நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகனான இவர் 2016ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டார். தனியுரிமை சட்டம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு மும்பை சட்ட பல்கலை மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹாமா சட்ட பல்கலை.,களில் கவுரவ விரிவுரையாளராக உள்ளார்.
அசோக் பூஷண்
1979ல் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக தன் பணியை துவங்கிய இவர், 2001ல் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2016ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
அப்துல் நசீர்
கர்நாடக ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 2003ல் கூடுதல் நீதிபதியாகவும், பின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2017ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான இவர், முத்தலாக் வழக்கில், தனி நபர் உரிமை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்ற கருத்தை கூறினார்.