பதிவு செய்த நாள்
13
மார்
2024
10:03
அவிநாசி; அவிநாசியில், 15 அடி உயரம், 15 டன் எடையில் கருப்பராயன் சிலை, முனியப்பன் சிலை செதுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அவிநாசி அடுத்த திருமுருகன் பூண்டி நகராட்சியில், ஸ்ரீ திருமுருகன் பழனிவேல் சிற்பக் கலைக்கூடத்தில் 15 அடி உயரம், 15 டன் எடை கொண்ட கருப்பராயன் மற்றும் முனியப்பன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலிருந்து தலா 27 டன் எடை கொண்ட இரண்டு கற்கள் எடுத்துவரப்பட்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலமாக 5 பேர் கொண்ட குழுவினர் இச்சிலையை வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு சிலையும் ஆதார பீடத்துடன் 15 அடி உயரத்தில், 15 டன் எடை கொண்டதாக உள்ளது.
இது குறித்து ஸ்தபதி வைத்தீஸ்வரன் தெரிவித்த போது; திருமுருகன் பழனிவேல் சிற்பக் கலைக்கூடத்தில், 5 சிற்பிகள் 6 மாத காலமாக சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபட்டு இச்சிலைகளை வடிவமைத்துள்ளனர். வைகாசி மாதம், செங்கம் பகுதியில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக இச்சிலைகளை இன்று எடுத்துச் செல்கின்றனர் என்றார். பின்னர் முறையாக ஜல வாசம். தானிய வாசம், சைனாதி வாசம் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.