நாகர்கோவில்; மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் தேவி வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மூன்று கால பூஜைகளும் நடைபெற்றது. எட்டாம் தேதி ஆறாம் நாள் விழாவில் பெரிய படுக்கை என்ற மகா பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம ஒன்பதாம் நாள் விழாவில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. வட்ட வடிவமான வளையத்தில் 60க்கும் மேற்பட்ட தீ பந்தங்கள் ஏற்றப்பட்டு அதன் நடுவில் பக்தர் நிற்க ,அதை பிற பக்தர்கள் தேர் போல் இழுத்து சென்றனர் .அதன் பின்னால் தேவியின் பல்லக்கு வாகனம் சென்றது. நிறைவு நாள் விழாவான நேற்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெற்றது . ஒன்பது பானைகளில் உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு அதை வெள்ளை துணியால் மூடி பூஜாரிகள் அதை சுமந்து வந்து அம்மனுக்கு படைத்து இந்த பூஜை நடைபெற்றது. இந்த நேரத்தில் நிலவிய நிசப்தம் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாகும். விழாவையொட்டி நேற்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.