திருப்புவனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2024 05:04
திருப்புவனம்; திருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி அழகர் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தின் இடையே இறங்கினார். திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் 126 வது ஆண்டு சித்திரை திருவிழா 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டுதலை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார் இன்று 2ம் நாள் திருவிழா நடந்தது. காலை 5:45 மணிக்கு பாலகிருஷ்ண பெருமாள் வீதியுலா வந்து அய்யப்பன் கோயில் அருகே உள்ள மண்டகப்படியல் எழுந்தருளினார். காலை எட்டு மணிக்கு தங்க நிற குதிரை வாகனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் பச்சை பட்டு உடுத்தி அழகர் கோலம் பூண்டு வைகை ஆற்றில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்தின் இடையே இறங்கினார். வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாத நிலையில் வெறும் ஆற்றில் அழகர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விரதம் இருந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் பலரும் சர்க்கரை தீபம் ஏற்றி அழகரை வழிபட்டனர்.பின் பல்வேறு மண்டகப்படிதாரர்களில் எழுந்தருளிய பாலகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாளை ( திங்கள் கிழமை) இரவு ஏழு மணிக்கு வீரபத்திர சுவாமி கோயிலில் இருந்து புஷ்ப பல்லக்கில் பவனி வருகிறார். நாளை செவ்வாய் கிழமை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழக தலைவர் சீனிவாசன், செயலாளர் கோவிந்தராஜன். பொருளாளர் லட்சுமணபிரபு, ஸ்ரீபாலகிருஷ்ண பெருமாள் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.