பதிவு செய்த நாள்
10
மே
2024
12:05
திருப்பூர், ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு புனித நீர் ஊற்றினார்.
திருப்பூரின் சபரிமலை ஐயப்பன் என்று போற்றப்படும், காலேஜ் ரோடு ஸ்ரீஐயப்பன் கோவிலில், சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் இருப்பது போல், கேரள தாந்திரீக முறைப்படி பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது. ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம், 65 ஆண்டுகளாகவும், ஐயப்பன் கோவில், 55 ஆண்டுகளாகவும் இயங்கி வருகிறது. கேரளாவில், ஐயப்ப சுவாமி பிரதிஷ்டை செய்த பரசுராமர் வழிவந்த வம்சாவழியினர், திருப்பூர் ஐயப்ப சுவாமியின் பஞ்சலோக சிலையை பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில், மையமாக கிழக்கு நோக்கிய படி ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. கன்னிமூல கணபதி, நாகராஜா, பத்ரகாளியம்மன், மாளிகைபுரத்தம்மன், சுப்பிரமணியர் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், கைலாசநாதர், நவக்கிரஹ சன்னதிகள் மேற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
கேரளாவில், தேவபிரசன்னம் பார்த்ததில், கோவில் வளாகத்தின் தென்கிழக்கில், ஸ்ரீகிருஷ்ணனர் சன்னதி அமைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கேரள பாரம்பரிய வழக்கப்படி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி மேற்கு நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சங்கனுார் சிற்பிகள் வாயிலாக, வலது கையில், வெண்ணெய் உருண்டையும், இடது கையில் புல்லாங்குழலும் வைத்தபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் வண்ணம், 1.75 அடி உயரத்தில், ஸ்ரீகிருஷ்ணர் கற்சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, மகா கணபதி ஹோமம், பிம்ம சுத்தி கிரியா, ஜது சுத்தி, தாதா, பஞ்சகம், பஞ்சகவ்யம், 25 கலசம் மற்றும் உஷ்டி பூஜைகள் நடைபெற்றது. காலை, 10:30 மணிக்கு விக்ரக கலசம் எழுந்தளிப்பு செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, குப்பேஷ கற்கறி பூஜா, சய்யா பூஜா, கலச பூஜை, ஜீவா கலச பூஜை, அதிவாச ஹோமம், அதிவாச பூஜை, அத்தாழ பூஜைகளை தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை, 5:30 மணி முதல், 9:15 மணிக்குள், மகா கணபதி ஹோமம், உஷா பூஜை, மகப்பாணி நடைபெற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு புனித நீர் ஊற்றினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.