பதிவு செய்த நாள்
23
மே
2024
12:05
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, கடந்த 18ம் தேதி காலையில் பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார் வழியாக கோ.பூவனுாரில் உள்ள தாய் வீட்டிற்கும், 19ம் தேதி கர்னத்தம் கிராமத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கும் மங்களநாயகி அம்மன் சென்று வரும் ஐதீக நிகழ்வு நடந்தது. 9வது நாள் உற்சவமாக, தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:00 மணியளவில் அம்மனுக்கு பலி காணிக்கை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளியதும், மங்களநாயகி உற்சவரை திருத்தேரில் வைத்து, தேர்க்கால் பூஜை நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உட்பட முக்கிய பிரமுகர்கள், வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. தேரடியில் இருந்து கடைவீதி, கர்னத்தம் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்து, மாலை 4:00 மணிக்கு மேல், மீண்டும் தேரடிக்கு வந்தடைந்தது. டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை முகாசபரூர் ஆதீன பரம்பரை அறங்காவலர் ஜமீன் வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயர் அரண்மனை குடும்பத்தினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு, நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.