பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; யாக சாலை பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2024 08:06
திருக்கோஷ்டியூர்,ஜூன்8- திருப்புத்தூர் அருகே பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சமீபவல்லி அம்பாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சுகந்தவனேஸ்வரர், சமீபவல்லி அம்பாள், பரிவார தெய்வங்களில் வயிரவசுவாமி, ஒற்றைச் சனீஸ்வரர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் திருப்பணி நடந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நேற்று காலை காலை 8:30 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் தொடர்ந்து கணபதிஹோமம்,நவக்கிரக ஹோமம் நடந்து யாகசாலை பூஜைகள் துவங்கின.
இரவு 8:00 மணிக்கு சிவாச்சார்யர்களால் கலசங்கள்பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்து இரவு 8:30 மணிக்கு 23 யாக குண்டங்களில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் துவங்குகின்றன. நாளை காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை துவங்குகிறது. தொடர்ந்து கோ பூஜை,லட்சுமி பூஜை நடந்து பூர்ணாகுதிக்கு நடைபெறும். பின்னர் கலசங்கள் புறப்பாடாகி கோபுர,விமானங்களுக்கு காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.