நிரதலமுடைய அய்யனார், சோணையா கோயிலில் வைகாசி உற்சவ பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2024 08:06
மானாமதுரை; மானாமதுரை நிரதலமுடைய அய்யனார், சோணையா சுவாமி கோயிலில் வைகாசி உற்சவ பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை ஐந்து கரை குலாலர்கள்சமூக சங்கத்தின் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதம் உற்சவ பொங்கல் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த முறை பொங்கல் விழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு விழா துவங்கப்பட்டதையடுத்து ஏராளமானோர் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவினை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதற்கான பொருட்களை ஓலைப் பெட்டிகளில் வைத்து மேள,தாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் பொங்கல் வைத்தனர். இதனைத்தொடர்ந்து பூசாரிகள்,சாமியாடிகள் தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்திற்கு சென்று கரகம் வளர்த்து பூஜை பெட்டிகளுன் அங்கிருந்து ஊர்வலமாக குலாலர் தெருவில் உள்ள கோயில் வீடுகளுக்கு சென்று வழிபட்ட பின்னர் சோணையா கோயில் முன்பாக பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமியை வழிபட்டனர்.விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐந்து கரை குலாலர் சமூக சங்கத்தினர் செய்திருந்தனர்.