பதிவு செய்த நாள்
25
ஜூன்
2024
10:06
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின், 25ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம், சுமார் மூன்று ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கும் பிறகு சத்குருவால், 1999ம் ஆண்டு ஜூன், 24ம் தேதி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. யோக அறிவியலின்படி ஏழு சக்கரங்களும் சக்தி ஊட்டப்பட்ட லிங்க வடிவமே தியானலிங்கமாகும். ஆண்டுதோறும், தியானலிங்க பிரதிஷ்டை தினத்தில், உலகில் உள்ள பிரதான மதங்களின் மந்திரம் மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது. இந்தாண்டு, தியானலிங்கம் பிரதிஷ்டை தின விழா கொண்டாட்டம், தியான லிங்கத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் ஆம் நமச்சிவாய மந்திர உச்சாடனையுடன் துவங்கியது. தொடர்ந்து, ஆதிசங்கரர் இயற்றிய, நிர்வாண ஷடகம் என்ற சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது. மாலையில், சத்குருநாதனின் தேவாரமும், செரா மே என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் புத்த மந்திர உச்சாடனமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து, கோவையை சேர்ந்த எப்.எஸ்.பி.எம். சிஸ்டர்ஸ் கிறிஸ்துவ பாடல்களையும், சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் ருத்ர சமக வேத கோஷத்தையும் அர்ப்பணித்தனர். வெறும் இசைக்கருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனை நிகழ்வும், அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபாவின் குருபானி, சத்குரு குருகுலம் சமஸ்கிருதியின் மந்திர உச்சாடனங்கள் நடந்தது. பின்னர், சிறப்பு விருந்தினர்கள் இஸ்லாமிய பாடல்களை அர்ப்பணித்தனர். அதன்பின், ஆசிரமவாசிகள் சூபி பாடல்களையும், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா பாடல்களையும் அர்ப்பணித்தனர். தொடர்ந்து, தீட்சை நிகழ்ச்சியும், இறுதியாக, குண்டேச்சா சகோதரர்களின் இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.