பதிவு செய்த நாள்
25
ஜூன்
2024
04:06
தங்கவயல் மாரிகுப்பம் ஆர்.டி., பிளாக் வட்டத்தில் 113 ஆண்டுகள் பழமையான வேங்கட கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற, நமது பாரம்பரியத்தை விளக்கும் இடமாகவும், ஆன்மிகத்துக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இங்கு 100 வீடுகள் மட்டுமே உள்ளன. இக்கோவிலின் நிறுவனர் ராஜகோபால ஏகாங்கி. கோவிலில் தஞ்சாவூர் ஓவியர் வரைந்த சுவாமி படத்தை வைத்து தான் பூஜைகள் நடத்தி வந்துள்ளனர்.
மணவாள மாமுனி சன்னிதி; மாரிகுப்பம் பகுதியில் உள்ள பல வைணவ பக்தர்கள் இக்கோவிலுக்கு வர துவங்கினர். இக்கோவிலில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம், ஆண்டாளை போற்றி வணங்கும் திருப்பாவை, பக்தி பஜனைகள், ராமாயணம், மகாபாரத கதைகள், பகவத் கீதை பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி, பக்தி மார்க்கத்தை வளர்த்து வந்தனர். இங்கு மணவாள மாமுனி சன்னிதி தனியாக உள்ளது. தனிமனித ஒழுக்கம், கல்வி, பொது அறிவு, வளர்த்து கொள்ளவும் மனத் துாய்மைக்கு தலை சிறந்த இடமாக திகழ்ந்தது. மனநிறைவுக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது. பக்தர்கள் ஒருங்கிணைந்து கோவிலை புதுப்பிக்க, 2009ல் திட்டமிட்டனர். துவஜ ஸ்தம்பம், கருட மண்டபம், பலிபீடம், கருவறையில் ஐந்தரை அடி உயரத்தில் ஸ்ரீ தேவி பூதேவியுடன் பெருமாள் பிரதிஷ்டைசெய்தனர். 2016ல் கோவில் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. மன்னார்குடி செண்டலங்கார செம்பக மன்னார் ஜீயர் மங்கள ஸ்தாபனம் செய்தார்.
பிரம்மோற்சவம்; தை மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ராமநவமி, ராமானுஜர் ஜெயந்தி, ஆடியில் ஸ்தாபன திருமஞ்சனம், ஆண்டாள் திருநட்சத்திரம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, உறியடி உற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், திருவேங்கடமுடையான் அலங்காரம், ஐப்பசியில் மணவாள மாமுனி அவதார அலங்காரம், உற்சவம், மாடவீதி புறப்பாடு, மார்கழியில் 30 நாட்களும் ஆண்டாள் திருப்பாசுரம் ஓதுதல், ஆகியவைகளை நடத்தி வருகின்றனர். தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.