புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி விவசாயி ஒருவர் தன் நிலத்தை குரங்குகள் சேதப்படுத்துவதாக கூறி, 15 ஆண்டுகளுக்கு முன், 53 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்றார்.
மதுரை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி அருகே ஒரே இடத்தில் 53 குரங்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. அந்த இடத்தில், ஹிந்து அமைப்பினர் ஆஞ்சநேயர் கோவில் கட்டினர். மதுரை – தஞ்சை சாலை வழியாக செல்வோர் இந்தக் கோவிலில் வழிபடுவர். அது மட்டுமின்றி, ஹனுமன் ஜெயந்தி, புத்தாண்டு உள்ளிட்ட விழாக்களின் போது இங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் கை, வால் பகுதிகளை சிலர் நேற்று முன் தினம் சேதப்படுத்தினர். விஷமிகளை கணேஷ் நகர் போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.