தேர் அலங்கரிப்பில் விபத்து: கும்பம் விழுந்து ஒருவர் பலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 05:06
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாத்துார் ராமசாமிபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடைபெற இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தேரை அலங்கரிக்கும் பணிகள் நேற்று காலை முதல் நடைபெற்றன. அப்போது, தேரின் மீது மரப்பலகையால் செய்யப்பட்ட கும்பத்தை ஏற்றும் பணியின்போது, எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறுந்து, அச்சுப்பகுதிக்கு மேல் உள்ள தேர் அலங்காரம் மற்றும் கும்பம் சரிந்தது. இதில் தேரும் உடைந்தது. சக்கரம் தனியாக கழன்று வந்தது. தேரின் கும்பம் விழுந்ததில், அதே கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், 60, என்பவர் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். செல்லும் வழியிலேயே மகாலிங்கம் இறந்து விட்டார். மற்ற ஐந்து பேருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, அறந்தாங்கி போலீசார் விசாரிக்கின்றனர்.