மானாமதுரை நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 05:06
மானாமதுரை; மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம மக்கள் ஒற்றுமைக்காகவும் நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருகிற புரவி எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேள, தாளங்கள், டிரம்செட் முழங்க புரவிகளை தூக்கி சென்றனர்.
மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆனி மாதம் நடைபெறும் புரவி எடுப்பு திருவிழா வழக்கம்.இந்த வருடம் திருவிழாற்காக ஏராளமானோர் கடந்த வாரம் முதல் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர்.மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களால் ஏராளமான புரவிகள் மற்றும் சுவாமி சிலைகள், மனித உருவங்கள் செய்யும் பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து இன்று காலை ஏ.விளாக்குளம் கிராமத்திலிருந்து கிராம மக்கள் ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்து புரவிகளுக்கு பூஜை செய்த பின்னர் மாலை 4:45 மணிக்கு மேளதாளங்கள்,ட்ரம் செட் முழங்க ஏராளமானோர் மானாமதுரையிலிருந்து புரவிகளையும், சுவாமி சிலைகளையும் தலைச்சுமையாக சுமந்து ஊர்வலமாக நடந்து சென்று நிறைகுளத்தை அய்யனார் கோயிலில் செலுத்திய பிறகு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது.புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பாக தினம்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.வருகிற 27ம் தேதி அய்யனார் கோயில் திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும், 28ம் தேதி காலை 6:00 மணிக்கு மாட்டுவண்டி எல்கை பந்தயமும் நடைபெற உள்ளது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.