பதிவு செய்த நாள்
26
ஜூன்
2024
11:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பவானி ஆற்றின் கரையில், 57 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் செலவில், புதிதாக படித்துறை கட்டப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்களில் பெரும்பாலானவர்கள், கோவிலின் அருகே உள்ள பவானி ஆற்றில் குளித்து, பின் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர். பக்தர்கள் ஆற்றில் வசதியாக குளிக்க, கரையில், சிமென்ட் தரைதளம் மற்றும் படிகள் அமைக்கப்பட்டன. இது பக்தர்களுக்கு போதுமான அளவில் வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக, பழைய படித்துறை அருகே, 57 லட்சத்து, 35 ஆயிரத்து, 250 ரூபாய் செலவில், புதிய படித்துறை கட்டப்பட்டுள்ளது.