பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
10:07
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு, கடந்த மார்ச் 8ம் தேதி முதல் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் துவங்கிய இந்த சேவை வாயிலாக, வயது முதிர்ந்த பக்தர்களும், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் எளிதாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு, 1,000 பக்தர்கள், ரோப்கார் வாயிலாக பயணிக்கின்றனர். இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, இந்த சேவை, வரும் 3 மற்றும் 4ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5ம் தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் செயல்பாட்டிற்கு வரும் என, சோளிங்கர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.