பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
11:07
மதுராந்தகம்; மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரிபுத்துார் ஊராட்சியில், தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா, நேற்று, விமரிசையாக நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம், தண்டுமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி துவங்கி, விழா பந்தக்கால் நடப்பட்டது. பின், அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்தை சுமந்தபடி, விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், வீதிகளில் உலா வந்தனர். முக்கிய நிகழ்வான நேற்று, காலை அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணி அளவில், அம்மன் வீதி உலா நடந்தது. பின், மாலை 3:00 மணிக்கு, தண்டுமாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், தண்டு மாரியம்மன் வீதி உலா நடந்தது. வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். இரவு வாண வேடிக்கை நடந்தது.