பதிவு செய்த நாள்
31
ஜூலை
2024
11:07
மானாமதுரை அருகே ரோடு வசதி இல்லாத காரணத்தினால் ஊரை காலி செய்யும் கிராம மக்கள், ரோடு வசதி இல்லாததால் புதுமையான முறையில் டிராக்டரில் எழுந்தருளிய நவநீத பெருமாளை வழிபட்ட கிராம மக்கள்.
மானாமதுரை; மானாமதுரை அருகே குன்றாமணியேந்தல் கிராமத்தில் ரோடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் கிராம மக்கள் ஊரை காலி செய்து வருகிற நிலையில் சீர் பாதங்கள் சுவாமியை தூக்கி நடக்க முடியாத சூழ்நிலையால் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் புதுமையான முறையில் டிராக்டரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாகுடி அருகே உள்ள கிராமம் குன்றாமணியேந்தல். இக்கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வந்த நிலையில் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.இந் நிலையில் ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த ஊரில் வசித்து வருகின்றனர். வருடம் தோறும் ஆடி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் சுவாமி இக்கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு எழுந்தருளி விதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இந்நிலையில் இந்த வருடம் குன்றாமணியேந்தல் கிராமத்திற்கு நவநீத பெருமாள் எழுந்தருளிய நிலையில் இக்கிராமத்தில் ரோடு வசதி இல்லாத காரணத்தினால் எப்போதும் பூப்பல்லக்கு மற்றும் குதிரை வாகனத்தில் செல்லும் சுவாமியை இம்முறை சீர் பாதங்கள் எனப்படும் சுவாமி பல்லக்கு மற்றும் வாகனங்களை தூங்குபவர்கள் புதுமையான முறையில் டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கை ஏற்றி அங்குள்ள கோயில்களுக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து குன்றாமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் கூறியதாவது, இக்கிராமத்தில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வந்த நிலையில் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே உள்ள நிலையில் வருடம் தோறும் இக்கிராமத்திற்கு எழுந்தருளும் நவநீத பெருமாளை வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வரவேற்று சுவாமியை வழிபட்டு வருகிறோம்.இந்நிலையில் இந்த வருடம் சுவாமியை தூக்கிக்கொண்டு சீர் பாதங்கள் நடக்க முடியாத நிலையில் டிராக்டரில் பூப்பல்லக்கை தூக்கி வைத்து சுவாமி வீதியுலா நடைபெறுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் இங்கிருந்து காலி செய்த கிராம மக்கள் மீண்டும் இக்கிராமத்திற்கு வருவதற்கு தயாராக உள்ளதால் உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.