நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் 18 படிகள் வழியாக வந்து தரிசனம் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 10:00 மணி-க்கு நடை அடைக்கப்பட்டது. சுழற்சி முறையில் தந்திரி பொறுப்பை கவனிக்கும் தாழமண் குடும்பத்தில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரருவின் மகன் பிரம்மதத்தன் நேற்று தந்திரி பொறுப்புகளை மேற்கொண்டார்.
இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கணபதி ஹோமம் நடக்கும். காலையில் உஷ பூஜை, மதியம் உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் தொடர்ந்து இரவு படி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடக்கும். எல்லா நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு, 7:00 -மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜையும் நடக்கும். ஆக., 21 வரை பூஜைகள் நடந்து அன்றிரவு நடை அடைக்கப்படும். ஆவணி மாதம் கேரளாவில் மலையாள ஆண்டு பிறப்பு என்பதால் நேற்று அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இன்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.