செம்பை வைத்தியநாத பாகவதர் ஜெயந்தி: சங்கீத உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2024 04:09
பாலக்காடு; செம்பை வைத்தியநாத பாகவதரின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு, இரு நாட்களாக நடந்த சங்கீத உற்சவம் நிறைவடைந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை கிராமம். இங்கு வாழ்ந்த செம்பை வைத்தியநாத பாகவதர், தன் வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்தவர். அவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் சங்கீத உற்சவத்துடன் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, இரு நாட்கள் சங்கீத உற்சவம் துவங்கியது. விழாவை கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து இளம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று காலை 8:15 மணி முதல் இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 11:45 மணிக்கு, செம்பை வித்யாபீடத்தின் 38வது ஆண்டு மாநாட்டை ஆலத்தூர் தொகுதி எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுமோத் தலைமை வகித்தார். பாலக்காடு தொகுதி எம்.பி., ஸ்ரீகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் செண்டை மேளம் வித்வான் கல்லூர் ராமன்குட்டி மாரார் கவுரவிக்கப்பட்டார். உற்சவ கமிட்டி தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகன் ஆகியோர் பேசினர்.
துவக்கவுரையில் எம்.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: செம்பை வைத்தியநாத பாகவதர் சாதி, மத எல்லையின்றி இசையைக் கற்று கொடுத்த மாபெரும் மனிதர். இசை மற்றும் இலக்கியம் உள்ளவர்களால் தான் நல்லது செய்ய முடியும். அவர்கள் தங்கள் சொந்த லாபத்தை விட சமூகத்தின் நன்மைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாலை மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் நிறைவு சங்கீதக் கச்சேரி நடந்து. வினோத் பழயன்னூர் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), நாராயணன் (கடம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.