பதிவு செய்த நாள்
02
செப்
2024
12:09
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், வார விடுமுறை நாளான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் தேர்வீதியில் குவிந்தனர். கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் பொதுவழியில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காலணிகளை விடுவதற்கு, ஆர்.சி.மண்டபம் அருகே இடவசதி மற்றும் காலணிகள் வைப்பதற்கு ரேக் வைக்கப்பட்டிருந்தது. தேங்காய், பூ மாலைகள் விற்பனை செய்வதற்கு, அந்த இடத்தை கோவில் நிர்வாகம், மூன்று நாட்களுக்கு முன் ஏலம் விட்டது. அங்கிருந்த காலணி ரேக்கை இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போடப்பட்டுள்ளன. எனவே கோவில் நிர்வாகம் காலணிகள் வைப்பதற்கு கோவில் ரேக் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.