புரட்டாசி கார்த்திகை பூஜை; பழநி முருகன் கோவிலில் நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2024 11:09
பழநி; பழநி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் திரண்டனர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோவிலில், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று புரட்டாசி மாத கார்த்திகை நட்சத்திரம், ஞாயிறு விடுமுறை நாள் காரணமாக பக்தர்கள் திரளாக பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகலில் அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மலைக்கோயிலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினர். ரோப் கார், வின்ச் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் கட்டண வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானை பாதை வழியாக மேலே ஏற அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகரித்ததால் கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். அலைபேசி மலைக்கோயில் கொண்டு செல்ல தடை உள்ள நிலையில் பலர் அலைபேசிகளை மலைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்தனர்.
தங்கரத புறப்பாட்டில் கூட்டம்: மாலை சாயரட்சை கால பூஜை வேளையில் வெளிப்பிரகாரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசாமி எழுந்தருளினார். அதன் பின்ர தங்கரத புறப்பாட்டில் சின்னக் குமாரசுவாமி எழுந்தருளினார். தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டு, பலர் தங்கரதத்தை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கார்த்திகை நட்சத்திர தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வெளியூர் பக்தர்கள் திரு ஆவினன்குடி அருகே போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால் சிரமம் அடைந்தனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்காக மாலை நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.