திருப்புல்லாணி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2024 03:09
திருப்புல்லாணி; திருப்புல்லாணி சாலை தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த செப்., 15ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் திருப்புல்லாணி நான்கு ரதவீதியில் வலம் வந்தது. நேர்த்திக்கடன் பக்தர்களால் மாவிளக்கு எடுக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு திருப்புல்லாணி பெரிய மதகுக்குட்டம் ஊருணியில் பாரி கங்கை சேர்க்கப்பட்டது ஏற்பாடுகளை திருப்புல்லாணி சாலை வலசை விழா குழுவினர் செய்திருந்தனர். * களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல் வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. சக்தி கரகம் முன்னே செல்ல நேர்த்திக்கடன் பக்தர்கள் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்தனர். நேற்று பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* களிமண்குண்டு ஊராட்சி வேலாயுதபுரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் 51ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த செப். 15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. கிராமத்தலைவர் முருகேசன், செயலாளர் மாரியப்பன், துணைச் செயலாளர் மலைராஜ், பொருளாளர் முனீஸ்வரன், தண்டல் வேடப்பன், அம்மாடி மாரி செல்வம் பங்கேற்றனர். வேலாயுதபுரம் கடற்கரையில் பாரி கங்கை சேர்க்கப்பட்டது.
* சேதுக்கரை அருகே சின்னக்கோயில் நாடார் குடியிருப்பில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு பின்பு பாரி ஊருணியில் கங்கை சேர்க்கப்பட்டது.