நவராத்திரி பண்டிகை தசரா திருவிழா பக்தர்கள் வேடப்பொருட்கள் புதுவரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2024 01:09
திருநெல்வேலி; நவராத்திரி பண்டிகை தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வேடம் அணிவதற்கான பொருட்கள் விற்பனை நெல்லை டவுனில் களை கட்டியுள்ளது. நவராத்திரி பண்டிகை தசரா திருவிழா அக்.3ம் தேதி புரட்டாசி அமாவாசையன்று துவங்குகிறது. தசரா பண்டிகைக்காக நெல்லை டவுன், பாளை பகுதி அம்மன் கோயில்களில் பக்தர்கள் விரதம் துவக்கியுள்ளனர். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வேடங்களில் பக்தர்கள் விரதம் இருந்து காணிக்கைகளை வசூலித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர். இந்நிலையில் பக்தர்கள் அணியும் மாலை, உடைகள், காளிவேடத்திற்கான முகங்கள், கை, கால்கள் உட்பட ஏராளமான வேடப்பொருட்கள் புதுப்புது மாடல்களில் நெல்லையப்பர் கோயில் முன்புள்ள மண்டப கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன. காளிவேடம் செட் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை, அம்மன் செட் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை, அனுமன் செட் ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை, சுடலைமாடன் சுவாமி செட் ரூ.850 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரி ஈஸ்வரன் தெரிவித்தார்.