பதிவு செய்த நாள்
04
அக்
2024
01:10
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் வீடுகளில் கொலு பொம்மை வைத்து பெண்கள் வழிபாடு நடத்துவர். ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் இப்பூஜையில் கலந்து கொள்வர். பாடல்கள், சுலோகங்கள் சொல்லி வழிபடுவர். இந்த ஒன்பது நாட்களிலும் அம்மனை ஒன்பது அவதாரங்களில் காணலாம்.
கொலு வைத்து வழிபடுவதன் மூலம், வீட்டில் நல்லது நடக்கும், கெட்டது நீங்கும் என்பது ஐதீகம். வீடுகளில் பல வரிசையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவர். இவை மனித வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது. அதன் விபரத்தை பார்க்கலாம்.
* முதலாம் படி:- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்
* இரண்டாம் படி:- ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்
* மூன்றாம் படி:- மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்
* நான்காம் படி-: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள்
* ஐந்தாம் படி:- ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்
* ஆறாம் படி:- ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள். எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார்
* ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர் நிலைகளை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார், புத்தர், ராகவேந்திரர், அகத்தியர்) போன்றோரின் பொம்மைகள்
* எட்டாம் படி:- தேவர்கள், அஷ்ட திக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதை பொம்மைகள்
* ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதி சக்தி வைக்க வேண்டும்.
இந்த ஒன்பதாம் படியில் முதலில் விக்னங்களை தீர்த்து வைக்கும் விநாயக பொம்மையை வைத்த பின் மற்ற மொம்மைகளை வைக்க வேண்டும் என ஆதிபராசக்தி சொல்லி இருப்பதாக ‘தேவி பாகவதம்’ சொல்கிறது. அடுத்ததாக மூம்மூர்த்திகளையும், தேவியர்களையும் வைக்கலாம். லட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் இடையே சக்தி தேவியை வைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும். கொலுவை வழிபடுவதன் மூலம், வீட்டில் நல்லது நடக்கும், கெட்டது நீங்கும் என்பது ஐதீகம்.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி கொலுவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கும். நவராத்திரி பத்து நாட்களிலும் தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ரநாம, வேத, திருமுறை பாராயணங்கள், மகளிர் கொலு பாட்டு நடக்க உள்ளது.