பதிவு செய்த நாள்
08
அக்
2024
05:10
உளுந்தூர்பேட்டை; பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று ஸ்ரீ செல்வர் மேனாவில் புறப்பாடு நடந்தது. 3ம் தேதி இரவு ஹம்ச வாகனத்திலும், 4ம் தேதி இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 5ம் தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் தேதி காலை திருப்பல்லாக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம் நடந்தது. இரு விசேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை விசேஷத் திருமஞ்சனம் ததியாராதனம் நடந்தது. இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் தீபாராதனை வழிபாடும் நடந்தது.
இன்று காலை 8 மணி அளவில் ஸ்ரீமத்அஹோபிலம் மடம் ஸ்ரீமத் ஆதிவன் சடகோப யதிந்திர மஹா தேசிகன் திருவீதி புறப்பாடு, திருபல்லக்கு விசேஷ திருமஞ்சனம் ததியாராதனம், விசேஷ சாற்றுமுறை நடந்தது. நாளை (9ம் தேதி) மாலை 5 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடக்கிறது. 10ம் தேதி இரவு வேடுபரி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி 7 மணியளவில் ரதோற்சவம் நடக்கிறது. வரும் 14ம் தேதி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் திருவீதி புறப்பாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவா அய்யங்கார் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.