பதிவு செய்த நாள்
11
அக்
2024
04:10
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் ‘மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை ‘ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது ‘பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது ‘மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது ‘காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது ‘துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.
முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் ‘தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு ‘சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.