பதிவு செய்த நாள்
19
அக்
2024
05:10
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் நடக்கும், மயான பூஜை, குண்டம் திருவிழாவுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் கடந்த, 2010ம் ஆண்டு டிச., 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழா நிறைவடைந்து, 14 ஆண்டுகளானதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. இதை தொடர்ந்து, 65 அடி உயரமுள்ள ராஜகோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. மேலும், சிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கோவில் உதவி ஆணயைர் கைலாசமூர்த்தி உடன் இருந்தார். வரும், 2025ம் ஆண்டு ஜன., மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.