பரமக்குடி பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருநாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2026 11:04
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் நடந்தது.
ராமானுஜரின் 1009 வது அவதார திருநாள் நேற்று பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கொண்டாடப்பட்டது. இங்கு ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபெரும்புதுாரில் கி.பி., 1017 ல் அவதரித்த ராமானுஜர் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை திருக்கோஷ்டியூரில் உலகறியச் செய்தார். சித்திரை மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அப்போது உற்சவர் திருமேனி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வீதிவலம் சென்றனர். *இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
*ராமானுஜரின் ஜென்ம நட்சத்திரம் நேற்று திருப்புல்லாணியில் கொண்டாடப்பட்டது. சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜரின் ஜெயந்தி விழா நேற்று திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நடந்தது. ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. உற்ஸவர் மற்றும் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் ஆதிஜெகநாதபெருமாள், பத்மாஸ்னி தாயார், பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட ஒவ்வொரு சன்னதியிலும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், ராமானுஜர் இயற்றிய பாடல்களும் பாடப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், தயிர் சாதம் வெண் பொங்கல் வழங்கப்பட்டது. இரவில் உற்ஸவர் ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு ரத வீதியில் உலா வந்தார்.