வீரபாண்டி கவுமாரிம்மன் சித்திரை திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சி கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2026 11:04
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. திருவிழா மே 12 முதல் மே 19 வரை நடக்கிறது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா புகழ் பெற்றதாகும். இவ்விழாவிற்கு தேனி மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்கள், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தவர்கள் வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அம்மன் கோயில் வீட்டில் இருந்து ஊர்வலமாக சென்று கோயிலில் அம்மன் எழுந்தருளினார். அம்மன் உத்தரவில் கம்பம் தேர்வு செய்து கண்ணீஸ்வர மூடையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று கம்பம் அலங்கரிக்கப்பட்டு முல்லைபெரியாற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் கம்பத்திற்கு ஊற்றினர். தினமும் மண்டகபடிதாரர்களால் அபிஷேகம், அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மே 11 வரை நடக்கிறது. அம்மன் விரதம் இருப்பதால் நைவேத்தியமாக தெள்ளு மாவு மட்டும் படைக்கப்படும். மே 12ல் கோயில் வீட்டில் இருந்து ஆபரணபெட்டி கோயிலுக்கு வீதி உலா வருவதுடன் திருவிழா துவங்குகிறது. மே 15 மாலை தேர்திருவிழா நடக்கிறது.மே19ல் திருவிழா முடிகிறது. மே 20ல் அம்மன் கோயில் வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சுபிதா தலைமையில் மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்காளர் பழனியப்பன், மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.