பதிவு செய்த நாள்
23
அக்
2024
04:10
பெ.நா.பாளையம்; மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேல்முடி ரங்கநாதர் கோவில் மலை பாதையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பக்தர்கள் அகற்றினர்.
கோவை வடக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் மட்டும் மேல்முடி ரங்கநாதரை வழிபட பக்தர்கள் சென்று வர, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அனுமதி வழங்குகிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தடாகம் வழியாகவும், பாலமலை வழியாகவும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலைப்பாதையில் சென்று, இறைவனை வழிபட்டு, வீடு திரும்பினர். கடைசி சனிக்கிழமையான கடந்த , 19ம் தேதி குருவரிஷி மலை மேல்முடி ஸ்ரீ ரங்கநாதர் அறக்கட்டளை சார்பில், பக்தர்கள் மேல்முடி செல்லும் வழியில் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகள், மக்காத கழிவுகளை சேகரித்து மலை அடிவாரம் கொண்டு வந்து, அதை பத்திரமாக அழித்தனர். இப்பணியை இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர்.