பரமக்குடி பெருமாள் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 11:12
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்த நிலையில், கைசிக புராணம் வாசிக்கப்பட்டது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி பரமஸ்வாமி அருள் பாலிக்கின்றனர். ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் தனி சன்னதியில் உள்ளார். இக்கோயிலில் லட்சார்ச்சனை விழா குழுவினரால் 49 வது ஆண்டு விழா நடந்தது. நேற்று காலை 9:00 மணி தொடங்கி இரவு 9:00 மணி வரை பெருமாளுக்கு துளசி மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு கைசிக ஏகாதசியை ஒட்டி கைசிக புராணம் வாசிப்பு நடந்தது. இதன்படி வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் வரும் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் யோக நித்திரையில் இருந்து கண் விழிக்கிறார் என்றும், அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் 108 ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஷ்டிகள் செய்தனர்.