பதிவு செய்த நாள்
11
பிப்
2025
11:02
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடந்தது.
இக்கோயில் தை தெப்பத்திருவிழா ஜன.,31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். பிப்.,5ல் திருஞானசம்பந்தர் சைவ சமய வரலாற்று லீலை, பிப்.,7 வலைவீசி அருளிய லீலை, பிப்.,8ல் இரவு சப்தாவரணம், பிப்.,9ல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவை தொடர்ந்து, இன்று (பிப்.11) தெப்பத்திருவிழா நடைபெற்றது, இன்று அதிகாலை அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் வந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை எழுந்தருள தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை இரு முறை நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு புறப்படுவர். சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.