பதிவு செய்த நாள்
03
மார்
2025
10:03
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், 190 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவையொட்டி வித்யாலயா வளாகத்தில் உள்ள புத்தர் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் பேசினார். வித்யாலயா மாணவர்கள் மற்றும் வித்யாலயா குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும், 1500 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராமகிருஷ்ணரின் திருக்கோயிலில் சிறப்பு பூஜை, வேத பாராயணம், பஜனை, ஹோமம் நடந்தன. சுவாமி நாராயணானந்தர், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் புத்தகத்தை வாசித்தார். பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் பஜனை இசை நிகழ்ச்சி நடந்தது. வித்யாலயா சாது பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இதில், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்லக்கு ஊர்வலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழியாக அலுவலக குடியிருப்புகளுக்கு சென்று, இறுதியாக கோவிலில் நிறைவடைந்தது.