பதிவு செய்த நாள்
11
மார்
2025
10:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடக்கின்றன. கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், கோவிலின் நான்காம் பிரகாரத்தில், சீரமைப்பு பணிக்காக, கோவில் ஊழியர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது, மண்ணுக்கு அடியில் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. மேலும், ஆழப்படுத்தி பார்க்கும்போது, அது முருகன் சிலை என்பது தெரியவந்துள்ளது. கல்லினால் செய்யப்பட்ட 4 அடி உயரமுள்ள இச்சிலை, மண்ணுக்கு அடியில் இருந்தது கோவில் ஊழியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் இச்சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கோவிலில் கிடைத்த 16 சிலைகள் ஆவணமின்றி உள்ளன. அத்துடன் இச்சிலையும் ஆவணமின்றி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அறநிலையத் துறை இணை இயக்குநர் குமரதுரை கூறுகையில், ‘‘கோவில் செயல் அலுவலரிடம், சிலை குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். தொல்லியல் துறை அதிகாரிகளையும் வரவழைக்க உள்ளோம். அவர்கள் ஆய்வு செய்தால்தான், இச்சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என தெரியவரும்,’’ என்றார்.