பதிவு செய்த நாள்
18
மார்
2025
04:03
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான மாசி பெருந்திருவிழா சிறப்புடையதாகும்.இந்த விழாவானது கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. பின்னர் நேர்த்திக்கடனாக பக்தர்கள் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தபட்டது. அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி வகையறாக்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இன்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அலகுவேல் குத்தி வருதல், பால்குடம், மாறுவேடமணிந்து வருதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். மேலும் மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் அம்மன்குளம் வந்தனர். பின்னர் அங்கு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது. பின்னர் காமராஜர் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், பூக்குழியில் பூசாரிகள் இறங்க பின்னர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர். இதில் சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில்கள் எடுத்தல், அங்கப்பிரதட்சனம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவைகளும், பூக்குழியில் விறகு கட்டைகளையும், உப்புமிளகு பொட்டலங்களையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
இந்த விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கீதா, திருக்கோவில் பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் மற்றும் விழாக்குழுவினரும் செய்திருந்தனர். பொதுசுகாதாரம், குடிதண்ணீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாக தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, செயல் அலுவலர் விஜயநாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ரா மேரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மேற்பார்வையில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, நத்தம் பகுதிகளிலிருந்து கூடுதலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. நாளை புதன்கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பாடு நடைபெறும்.