பதிவு செய்த நாள்
20
மார்
2025
11:03
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
கோவில் குண்டம் தேர் திருவிழா அடுத்த மாதம் ஏப் 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 8 ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டமும் நடக்கிறது. கோவில் குண்டம் திருவிழாவிற்கு, திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். அதிக பக்தர்கள் வந்து செல்வதால், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில் உள் வளாகத்திலும், நுழைவு வாயில் பகுதியில் முதல் கோவில் முன் பகுதிவரை பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி, 40 இடங்களில் மொபைல் டாய்லெட் அமைத்தல், சுமார் 70 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், நீர் மோர் பந்தல் அமைத்தல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்கள் வரிசையாக சென்று குண்டம் இறங்க தடுப்பு அமைத்தல், குண்டம் இறங்குபவர்கள் மற்றும் பக்தர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி உள்ளிட்டவை பணிகள் மேற்கொள்ள உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 35 ரூபாய்க்கு லட்டு விற்பனை செய்ய கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.