அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலில் கோபுர சிலைகள் சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 03:03
வாலாஜாபாத்; வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது அவளூர் கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காமாட்சி அம்மன் உடனுறை சமேத சிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு செய்வதால் திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் சிறந்த வழிபாட்டு தளம் என ஐதீகம் உள்ளது. கோவிலில் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் மற்றும் மாதந்தோறும் சனி பிரேதாஷம், அன்னதானம் போன்றவை அப்பகுதியினர் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில், இக்கோவிலின் கோபுர பகுதியை சுற்றி உள்ள சுவாமி உருவ படங்கள் சிதிலம் அடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. எனவே, இக்கோவிலை புனரமைத்து வழிபாட்டிற்கு விட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.