பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
10:04
இளையான்குடி; தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பங்குனி பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த குவிந்து வருகின்றனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடம் தோறும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.இந்த வருடத்திற்கான விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து அம்மன் சிம்மம்,யானை,கிளி, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.பங்குனி மாதம் பிறந்ததிலிருந்தே தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டிகள்,ஆயிரம்கண் பானை,கரும்பாலை தொட்டில், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர்.இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மதுரை,திண்டுக்கல், அருப்புக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை, இளையான்குடி,மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பக்தன் இயக்கப்பட்டு வருகின்றன.இன்று பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நேற்று முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை நீண்ட வரிசையில் 2மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.நாளை 7ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர் பவனியும், 7ம் தேதி பால்குடம்,ஊஞ்சல் உற்சவம், பூப்பல்லாக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 8ம் தேதி திருக்கோயில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.