பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
04:04
மண்ணடி; மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, இறையருள் பெற்றனர்.
சென்னை மண்ணடியில் உள்ள, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவில், 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோவிலில், இந்தாண்டு பங்குனி பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி பெருவிழாவின், 7ம் நாளான இன்று மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் உடன் பஞ்சமூர்த்திகள், 36 அடி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘சிவ.. சிவ.. மல்லிகேஸ்வரா..’ என முழக்கமிட்டப்படி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெருவெங்கும் நாதஸ்வரமேளம், சங்க நாதம், கைலாச வாத்தியங்கள் முழங்கின. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பங்குனி பெருவிழா வரும் 16ம் தேதி வரை நடக்க உள்ளது.