கோவை; ‘மனிதருக்கு தன்னறிவு மிக முக்கியம்’ என சுவாமி பரமார்த்தானந்தா பேசினார். ஆனைக்கட்டி அர்ஷ வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரா சார்பில், ‘உத்தவ கீதா’ எனும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், சுவாமி பரமார்த்தானந்தா பேசியதாவது: மனிதர்களுக்கு தன்னறிவு மிக முக்கியம். தன்னறிவு பெறுவதற்கு, தங்களை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஞான யோகா, மனிதரை ஞானி ஆக மாற்றும். இங்கு நம்மில் பலர், மனதுக்கும், உலகுக்கும் நடுவில் சிக்கி தவிக்கிறோம். இந்த உலக வாழ்வு மற்றும் மனம் இரண்டுக்கும் நடுவில் இருந்து, விலகி ஆன்மிகத்தை அடைய வேண்டும். ஒரு சிலர் மட்டுமே, இதற்கான வழியை கண்டறிந்து, ஆன்மிகவாதிகளாகின்றனர். மனிதர்கள் ஆன்மிக நிலைக்கு செல்வதற்கு தன்னறிவு, தியானம் வழிவகுக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.