பதிவு செய்த நாள்
27
மே
2025
12:05
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள புராதான ஜோதிர் லிங்கங்களை, பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில், பெங்களூரு சீனிவாசபுரத்தில் கட்டப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரில், கடல் மட்டத்தில் இருந்து 2,800 அடி உயரத்தில் அமைந்து உள்ள மலையில் இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான பணியை, 2002ல் ஸ்ரீசிவபுரி மஹா சுவாமிகள் துவக்கி வைத்தார். 2007ல் அவரது வாரிசான ஸ்ரீ மதுசூதனானந்த பூரி சுவாமிகள் திறந்து வைத்தார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களை குறிக்கும் வகையில் 12 ஜோதிர்லிங்கங்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஒவ்வொரு லிங்கத்துக்கும் தனித்தனி சன்னதிகள், விமான கோபுரங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஓம்காரேஸ்வர ஜோதிர்லிங்கம் 6 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலின் மத்திய பகுதியில் ஸ்படிக ஸ்ரீ யந்திரம் உள்ளது. ஸ்ரீ வைத்தியநாதா, ஸ்ரீ விஸ்வநாதா, ஸ்ரீ பீமசங்கரா, ஸ்ரீ திரியம்பகேஸ்வரா, ஸ்ரீ குஷ்மேஸ்வரா, ஸ்ரீ நாகேஸ்வரா, ஸ்ரீ ராமேஸ்வரா, ஸ்ரீ மல்லிகார்ஜுனா, ஸ்ரீ மஹாகாலேஸ்வரா, ஸ்ரீ சண்டிகேஸ்வரா, ஸ்ரீகால பைரேஸ்வரா ஆகிய 11 ஜோதிர் லிங்கங்கள் உள்ளன. நர்மதா ஆற்றில் உள்ள கற்கள் மூலம், இந்த லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீ ஓம்காரேஸ்வரா லிங்கத்தின் கீழ் பகுதியில், ஒரு அங்குலம் அளவில், 2,000 சிறிய லிங்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மற்ற 11 ஜோதிர்லிங்கத்தின் கீழ் தலா 1,000 சிறிய லிங்கங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
தியானம் செய்வதற்காக சர்வ தர்ம சமன்வியாய மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வருவோர், இங்கு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடலாம். அதுதவிர மத்சய நாராயணா கோவிலும் அமைந்து உள்ளது.
இங்குள்ள மணிக்கூண்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து முறை ‘ஓம்’ என்று ஒலி எழுப்பும். 1,200 கிலோ எடை கொண்ட வெண்கல கோவில் மணி வைக்கப்பட்டு உள்ளது.
நாகதேவதை, வன துர்கை, கணபதி, முனீஸ்வரருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. விஸ்வாமித்ர வேத வித்யாலயா சார்பில் சமஸ்கிருதம், வேதம், ஆகம பாடம் கற்றுத் தரப்படுகின்றன.
கோ சாலையும் உள்ளது. இங்குள்ள பசுக்கள் பராமரிப்பதுடன், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரையிலும்; ஞாயிறு, விடுமுறை நாட்களில் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும்; அதுபோன்று கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள், தீப உத்சவம், ஹோமம் நடத்தப்படும். இம்மாதத்தில் நான்கு சோமவாரத்திலும், 12 ஜோதிர்லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.