பதிவு செய்த நாள்
27
மே
2025
01:05
தட்சிணகன்னடா; கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவிலில், பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி வசதி செய்ய கோவில் நிர்வாகம் ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக கமிட்டி வெளியிட்ட அறிக்கை: குக்கே சுப்ரமண்யர் கோவிலுக்கு, புதிய நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த புண்ணிய தலத்தில், ஏற்கனவே பக்தர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு வழங்கப்படுகிறது. தற்போது காலை சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் இது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அன்னதானம் சாப்பிடுகின்றனர். காலை சிற்றுண்டி வழங்கினால், குக்கே சுப்ரமண்யர் கோவிலுக்கு இரவு பூஜையில் பங்கேற்று, இங்கேயே தங்குவோருக்கு உதவியாக இருக்கும். புண்ணிய தலத்தில், ஆஷ்லேஷ பூஜை நடத்த புதிய கட்டடம் கட்ட, இதற்கு முன் நன்கொடையாளர் ஒருவர் முன் வந்துள்ளார். ஆனால் கட்டட பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. இது பற்றியும், கமிட்டி ஆலோசித்தது. விரைவில் கட்டட பணியை துவக்க, முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.