பதிவு செய்த நாள்
30
மே
2025
12:05
விவேக் நகர்; விவேக் நகர் வண்ணாரபேட்டை ஸ்ரீவெள்ளேரி அம்மன் கோவிலில் 32ம் ஆண்டு நவ சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று காலையில் ஸ்ரீகணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி பூஜை, மஹாமங்களாரத்தி; பகலில் பக்தர்களுக்கு அன்னதானம்; மாலையில் சண்டி ஹோமம், கலச ஸ்தாபனை, நவசண்டி ஹோமம், மஹா மங்களாரத்தி நடக்கிறது. நாளை காலையில் நவசண்டி ஹோமத்துக்கான யாக பூஜை; மதியம் பக்தர்களுக்கு, சலவை தொழிலாளர்கள் சங்கம், பஞ்சாயத்து போர்டு, கோவில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம்; மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நவசக்தி அர்ச்சனை, அம்மன் பவனி நடக்கிறது. ஜூன் 1ம் தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்; மாலையில் நீலகிரி டெய்ரி பார்ம் சுசீலம்மாள் சுப்பிரமணியன் முன்னிலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மன்னார்குடி சங்கர நாராயணன், வெங்கடேசன், பெங்களூரின் தட்சிணாமூர்த்தி, நாதஸ்வரம், திருப்பத்துார் பழனியின் தவில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீராஜ ராஜேஸ்வரி நகர் ஸ்ரீகைலாச ஆசிரமம் மஹா சமஸ்தானத்தின் சிவஸ்ரீ சபேச சிவாச்சார்யா தலைமையில், வெள்ளேரி அம்மன் கோவில் முதன்மை அர்ச்சகர் தியாகராஜ சிவாச்சார்யார் முன்னிலையில் பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் பங்கேற்கும்படி, கோவில் டிரஸ்டிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.