பதிவு செய்த நாள்
31
மே
2025
11:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பர நாதர் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேம் முடிந்து, 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அன்னதானகூடம்: இதையடுத்து, தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, கடந்த 2023 ஜூன் 28ல் பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 28.48 கோடி ரூபாய் செலவில், 20க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் அலுவலகம், அன்னதான கூடம், குளியல் அறை கட்டுமானம் என, உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகளில் பல்லவ கோபுரம், சிவகங்கை தீர்த்தம், கம்பா நதி தீர்த்தம், 1,000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல், கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் வடி கால்வாய் அமைத்தல் பணி நிறைவு பெற்றுள்ளது. இதில், தெற்கு ராஜகோபுரம் திருப்பணி முடியும் தருவாயில் உள்ளது, முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் மேல்தளம் பழுது பார்த்தல், மூன்றாம் பிரகாரம் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணி, இரண்டு, மூன்று, நான்காம் பிரகாரம் மதில்சுவர் பழுது பார்த்தல் பணி, நடராஜர் சன்னிதி உள்ளிட்ட பணிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
கும்பாபிஷேகம்; தற்போது மூலவர் சன்னிதி திருப்பணிக்கான பாலாலயம் ஜூன் 6ம் தேதி காலை நடக்கிறது. இதனால், முதல் நாள் 5ம் தேதி முதல் திருப்பணி முடிந்து அக்., அல்லது நவம்பர் மாதத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் வரை, பக்தர்கள் மூலவர் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்ய இயலாது. பாலாலயத்தையொட்டி, அத்திமர பால லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலவருக்கு மாற்றாக அத்திமர பாலலிங்கத்தை வழிபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.